search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    வில் வீரன் நடுகல் கண்டுபிடிப்பு
    X

    வில் வீரன் நடுகல் 

    வில் வீரன் நடுகல் கண்டுபிடிப்பு

    • 16-ம் நூற்றாண்டை சேர்ந்தது
    • சுமார் 500 ஆண்டுகளுக்கு முந்தையது

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே பொம்மிக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட வேடி வட்டம் பகுதியில் திருப்பத்தூர் தனியார் கல்லூரி பேராசிரியர் பிரபு மற்றும் சமூக ஆர்வலர்கள் ராதாகிருஷ்ணன், நாராயணன், அன்புசெல்வம் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது சுமார் 500 ஆண்டுகளுக்கு முந்தைய வில்வீரனின் நடுகல் உள் ளதைக் கண்டறிந்தனர். இதுகுறித்து பேராசிரியர் பிரபு கூறியதாவது:-

    திருப்பத்தூரில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள பொம்மிக்குப்பம் ஊராட்சியில் ஜவ்வாது மலையில் இருந்து வரும் பாம்பாற்றின் கரையில் அமைந்துள்ள பகுதி வேடி வட்டமாகும். அப்பகுதியில் பழமையான மரங்கள் அடர்ந்த பகுதியில் வில் வீரனின் உருவம் உள்ள நடுகல் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

    வீரனின் வலது கரத்தில் அம்பும், இடதுகரத்தில் வில்லினையும் ஏந்திய நிலையில் வடிக்கப்பட்டுள்ளது. வீரன் அலங்கரிக்கப்பட்ட நேரான கொண்டையினை முடிந்துள்ளார்.

    கழுத்தில் 3 அடுக்குகளைக் கொண்ட கழுத்தணியினை அணிந்துள்ளனர். முதுகில் அம்புகள் தாங்கிய கூட்டினையும், இடைக்கச்சையுடன் நீண்ட குறுவாளும், காதுகளில் குண்டலமும், புயங்களில் பூண்களும், கால்களில் வீரக்கழலும் அணிந்துள்ளார்.

    இந்த நடுகல்லானது உறுதியான கரும்பாறை கல்லால் செதுக்கப்பட் டுள்ளது. நான்கரை அடி உயரமும் மூன்றரை அடி அகலமும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.

    இப்பகுதி மக்கள் இவ்வில் வீரனை 'வேடியப்பன்' என்று அழைத்து வழிபட்டு வருகின்றனர். வரலாற்றின் சாட்சிகளாக நிற்கும் இந்த நடுகல் ஒருகாலத்தில் தான் சார்ந்துள்ள மக்கள் கூட்டத்தின் பிரதிநிதியாகப் போர்க்களத்தில் பங்கேற்று உயிர்துறந்த ஒப்பற்ற வீரனின் நினைவைப் போற்றும் வகையில் அமைக்கப்பட்டதாகும்.

    இந்த நடுகல் நாயக்க மன்னர்கள் ஆட்சிக்காலத்தைச் சேர்ந்தவையாக ருக்கக்கூடும். அதாவது கி.பி. 16-ம் நூற்றாண்டு கலைப்பாணியைக் கொண்டதாக இருக்கக் கூடும்.

    பொதுவாக, நடுகற்களை வேடியப்பன் என்று அழைக்கும் வழக்கம் வட தமிழகத்தில் பரவலாகக் காணப்படுகின்றது.

    அவ்வகையில் இந்த நடுகல் அமைந்துள்ள பகுதி 'வேடி வட்டம்' என்றும் நடுகல் 'வேடியப்பன்' என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×