search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    151 எம்.பி -எம்.எல்.ஏக்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள்.. அதிகம் எந்த கட்சியினர் தெரியுமா?
    X

    151 எம்.பி -எம்.எல்.ஏக்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள்.. அதிகம் எந்த கட்சியினர் தெரியுமா?

    • பதவியில் உள்ள 16 எம்.பிக்கள் மீதும் 135 எம்.எல்.ஏக்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்புடைய வழக்குகள் உள்ளன.
    • 151 பேரில் அதிகப்படியாக பாஜகவை சேர்ந்த 54 எம்.பி-எம்.எல்.ஏக்கள் மீது இந்த வகை வழக்குகள் உள்ளன.

    இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் சக பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு எதிராக நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் கொதித்தெழுந்தனர். ஆனால் இந்தியாவில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 86 பாலியல் குற்ற வழக்குகள் பதிவாகின்றன. ஒரு மணி நேரத்துக்கு 4 வழக்குகள். அதேசமயம் வெளிச்சத்துக்கு வராமலேயே இருக்கும் பாலியல் குற்றங்கள் பதிவாகும் குற்றங்களை விட பலமடங்கு அதிகம் ஆகும்.

    இந்த நிலையில் இதுபோன்ற குற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டிய ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் 151 எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. ஜனநாயக சீர்திருத்தச் சங்கம் Association for Democratic Reforms (ADR) மற்றும் National Election Watch (NEW) ஆகிய அமைப்புகள் இணைந்து ஆய்வு நடத்தி வெளியிட்டுள்ள அறிக்கையின்மூலம் இது தெரியவந்துள்ளது. தற்போது பதவியில் உள்ள எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் 2019 முதல் 2024 வரை இந்திய தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்த ஆவணங்களை ஆராய்ந்ததன் மூலம் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி தற்போது பதவியில் உள்ள 16 எம்.பிக்கள் மீதும் 135 எம்.எல்.ஏக்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்புடைய வழக்குகள் உள்ளன. இந்த 151 பேரில் 2 எம்.பிக்கள் மற்றும் 14 எம்.எல்.ஏக்கள் என 16 பேர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குகள் உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களே மீண்டும் மீண்டும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதும் தெரியவந்துள்ளது.

    151 பேரில் அதிகப்படியாக பாரதிய ஜனதா காட்சியை [பாஜகவை] சேர்ந்த 54 எம்.பி-எம்.எல்.ஏக்கள் மீது இந்த வகை வழக்குகள் உள்ளன. அதைத்தொடர்ந்து காங்கிரசில் 23 பேர் மீதும், தெலுங்கு தேசம் கட்சியில் 17 பேர் மீதும் இந்த வகை வழக்குகள் உள்ளன.மாநில வாரியாக அதிகபட்சமாக மேற்கு வங்காளத்தில் மொத்தமாக 25 எம்.பி-எம்எல்.ஏக்கள் மீது இவ்வகை வழக்குகள் உள்ளன. அதற்கடுத்ததாக ஆந்திராவில் 21 பேர் மீதும், ஒடிசாவில் 17 பேர் மீதும் இவ்வகை வழக்குகள் உள்ளன.

    Next Story
    ×