search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வயநாடு நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களில் 24 பேர் தமிழர்கள்
    X

    வயநாடு நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களில் 24 பேர் தமிழர்கள்

    • தமிழகத்தை சேர்ந்த 25 பேர் மாயமாகி இருப்பதும் தெரிய வந்துள்ளது.
    • வயநாடு மாவட்டத்தில் சாலியாறு சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவுக்கு செல்கிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை கொட்டியதன் காரணமாக கடந்த 30-ந்தேதி முண்டகை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட 3 இடங்களில் அடுத்தடுத்து மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது.

    இதில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர். இவர்களில் சுமார் 10 ஆயிரம் பேர் 94 நிவாரண முகாம்களில் உள்ளனர்.

    600-க்கும் மேற்பட்டவர்கள் மண்ணில் புதைந்ததும், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதும் தெரிய வந்தது. அவர்களை மீட்பதற்கான பணிகள் இன்று (சனிக்கிழமை) 5-வது நாளாக நடந்தது. இதுவரை 340 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

    சுமார் 295 பேர் இதுவரை காணவில்லை. அவர்களில் 250 பேர் மண்ணில் புதைந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. மொத்தம் 640 குழுக்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டு உள்ளன. நவீன எந்திரங்கள், மேம்படுத்தப்பட்ட சென்சார் கருவிகள் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி சேறு மற்றும் இடிபாடுகள் குவிந்து கிடக்கும் பகுதிகளில் தேடுதல் தொடர்கிறது.

    இன்றைய தேடுதலில் மண்ணுக்குள் புதைந்து கிடந்த மேலும் சிலரது உடல்களும் மீட்கப்பட்டன. இதனால் இன்று காலை பலி எண்ணிக்கை 340 ஆக உயர்ந்தது.

    நிலச்சரிவில் உயிர்தப்பியவர்கள் மற்றும் அரசு பராமரித்து வரும் ஆவணங்களின் அடிப்படையில் மாயமானவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்னும் 250 பேரை காணவில்லை என்று கூறப்படுகிறது.

    சம்பவம் நடந்து 4 நாட்களுக்கு மேல் ஆவதால் மாயமானவர்கள் நிலை என்ன ஆகியிருக்கும் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றே கருதப்படுகிறது. எது எப்படியென்றாலும் கடைசி நபர் மீட்கப்படும் வரை தேடுதல் பணியை தொடர கேரள அரசு முடிவு செய்திருக்கிறது.


    இதற்கிடையே வயநாடு நிலச்சரிவில் 24 தமிழர்கள் உயிரிழந்து இருப்பது தெரிய வந்துள்ளது. தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட பலர் வயநாட்டில் நிரந்தரமாக தங்கி வேலை செய்து வருகிறார்கள். பலர் வேலை நிமித்தமாக சென்று தற்காலிகமாக குடியேறியுள்ளனர்.

    இவர்களில் நிரந்தரமாக அங்கு குடியேறிய தமிழர்கள் 21 பேரும், வேலைக்கு சென்று தங்கிய காளிதாஸ், கல்யாண், சிராபுதீன் ஆகிய 3 பேரும் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தை சேர்ந்த 24 பேர் பலியாகி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    தமிழகத்தில் இருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரி சமீரன் தலைமையிலான மீட்பு குழுவினர் வயநாடு சென்று அங்கு பாதிப்புக்குள்ளான தமிழர்கள் பற்றிய தகவல்களை சேகரித்து வருகிறார்கள். இதில்தான் 24 தமிழர்கள் உயிரிழந்துள்ள விவரம் தெரிய வந்துள்ளது.

    இவர்களை தவிர தமிழகத்தை சேர்ந்த 25 பேர் மாயமாகி இருப்பதும் தெரிய வந்துள்ளது. இவர்களில் நிரந்தரமாக வயநாட்டில் தங்கியவர்கள் 22 பேர் ஆவர். வேலைக்காக சென்ற 3 பேரும் நிலச்சரிவில் சிக்கி காணாமல் போயிருக்கிறார்கள். இவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில் முகாம்களில் 130 தமிழர்கள் பத்திரமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மாயமான 250-க்கும் மேற்பட்டவர்களில் பலர் 3 கிராமங்களில் மண்ணுக்கு அடியில் புதைந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவர்களின் உடல்களை மீட்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இதற்காக ஆளில்லாத விமானம் மூலம் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

    இந்த புகைப்படங்களை 640 குழுக்களிடமும் கொடுத்துள்ளனர். இந்த 640 குழுவினரும் 6 மண்டலங்களாக பிரிந்து மாயமான சுமார் 250 பேரையும் தேடி வருகிறார்கள். மாயமானவர்களின் செல்போன் எண்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அந்த செல்போன் எண்களை இயக்கி ஜி.பி.எஸ். சிக்னல் வாயிலான அவர்களது கடைசி இருப்பிடத்தை கண்டறிய முயற்சிகள் நடக்கிறது.

    இதில் வெற்றி கிடைத்தால் மாயமான 250 பேரில் கணிசமானவர்களின் நிலை தெரிய வரும். ஒருவேளை அவர்கள் ஆழமான பகுதியில் மணலில் புதைந்து கிடந்தாலும் அதை உறுதிப்படுத்த முடியும்.

    நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் வசித்தவர்களில் கணிசமானவர்கள் சாலியாறு பாய்ந்தோடும் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். வயநாடு மாவட்டத்தில் சாலியாறு சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவுக்கு செல்கிறது. அந்த ஆற்றின் கரையோரங்களில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

    ராணுவம் மற்றும் காவல் துறை ஹெலிகாப்டர்களும் தாழ்வாக பறந்து சென்று தேடும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சாலியாற்றில் அடித்து செல்லப்பட்ட உடல்கள் சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவுக்கு கடந்து சென்றுள்ளன. எனவே உடல்களை மீட்பதில் தொடர்ந்து கடும் சிக்கல் நிலவுகிறது.

    Next Story
    ×