search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அமித் ஷா, ஜெய்ராம் ரமேஷ்
    X

    வயநாடு நிலச்சரிவு எச்சரிக்கை சர்ச்சை: அமித் ஷாவுக்கு எதிராக உரிமை மீறல் புகார்

    • 20 செ.மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்து நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு என எச்சரிக்கை கொடுத்தோம்- அமித் ஷா
    • மாநிலங்களவையில் அமித் ஷா சொன்னது தவறு என்பது நிரூபணமாகியுள்ளது- ஜெய்ராம் ரமேஷ்

    கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த மாதம் 29-ந்தேதி நள்ளிரவு கனமழை மற்றும் மேக வெடிப்பு காரணமாக மழை கொட்டித்தீர்த்தது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன் மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது.

    இதனால் சில கிராமங்கள் மண்ணில் புதைந்தன. தற்போது வரை பலி எண்ணிக்கை 340-ஐ தாண்டியுள்ளது. இதற்கிடையே வயநாடு நிலச்சரிவு தொடர்பாக நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசும்போது, கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் கேரள அரசு எச்சரிக்கையை செயல்படுத்தவில்லைத் தெரிவித்திருந்தார்.

    இதை கேரள மாநில முதல்வர் பினராயி விஜய் மறுத்திருந்தார். 30-ந்தேதி காலையில்தான் எச்சரிக்கை விடுக்கப்பட்டது எனத் தெரிவித்திருந்தார்.

    அந்த நிலையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக கூறியதை மறுத்து காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

    ஜெய்ராம் ரமேஷ் வழங்கிய நோட்டீஸில் "மத்திய அரசின் முன்னெச்சரிக்கை குறித்த மத்திய உள்துறை மந்திரியின் அறிக்கைகள் பொய் என நிரூபிக்கப்பட்டதன் மூலம் ராஜ்யசபாவை தவறாக வழி நடத்தியது தெளிவாகிறது. ஒரு அமைச்சர் அல்லது உறுப்பினர் சபையை தவறாக வழி நடத்துவது சிறப்புரிமையை மீறுவதாகவும், அவையை அவமதிப்பதாகவும் அமைகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

    கடந்த புதன்கிழமை அமித் ஷா மாநிலங்களவையில் "நிலச்சரிவு ஏற்படுவதற்கு ஏழு நாட்களுக்கு முன்பாக ஜூலை 23-ந்தேதி மத்திய அரசு முன்னெச்சரிக்கை கொடுத்தது. ஜூலை 24 மற்றும் 25-ந்தேதி மீண்டும் எச்சரித்தோம். ஜூலை 26-ந்தேதி 20 செ.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. மேலும் நிலச்சரிவுக்கு வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டது" என அமித் ஷா தெரிவித்தார்.

    Next Story
    ×