search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வெங்காயம், பாசுமதி அரிசி ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு நீக்கம்- மத்திய அரசு
    X

    வெங்காயம், பாசுமதி அரிசி ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு நீக்கம்- மத்திய அரசு

    • கடந்த நிதியாண்டில் மட்டும் சுமார் ரூ.5 லட்சம் கோடி அளவுக்கு இந்த அரிசி ஏற்றுமதி நடந்து உள்ளது.
    • பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் பாசுமதி அரிசி அதிகமாக விளைவிக்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    உலக அளவில் பாசுமதி அரிசி ஏற்றுமதியில் இந்தியா முன்னணியில் இருக்கிறது. கடந்த நிதியாண்டில் மட்டும் சுமார் ரூ.5 லட்சம் கோடி அளவுக்கு இந்த அரிசி ஏற்றுமதி நடந்து உள்ளது.

    அதேநேரம் பாசுமதி ஏற்றுமதிக்காக கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை மத்திய அரசு நிர்ணயித்தது. அதன்படி ஒரு டன் பாசுமதி அரிசிக்கு 1200 அமெரிக்க டாலர் (சுமார் ரூ.1 லட்சம்) என நிர்ணயிக்கப்பட்டது.

    இதற்கு ஏற்றுமதியாளர்கள் மற்றும் விவசாயிகள் கவலை வெளியிட்டதால் அக்டோபர் மாதம் இது 950 அமெரிக்க டாலர் (சுமார் ரூ.80,000) என குறைக்கப்பட்டது.

    இந்த விலைக்கு ஏற்றுமதி செய்தால் மட்டுமே ஏற்றுமதி பதிவு மற்றும் அனுமதி சான்றிதழ் வழங்கப்பட்டது. இதற்கு குறைவாக பாசுமதியை ஏற்றுமதி செய்ய முடியாதவாறு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

    வெங்காயம் ஏற்றுமதிக்கும் டன் ஒன்றுக்கு 550 அமெரிக்க டாலர் (சுமார் ரூ.46,000) என குறைந்தபட்ச ஏற்றுமதி நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்த விலைக்கு குறைவாக வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய முடியாதவாறு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது.

    பாசுமதி அரிசி மற்றும் வெங்காயம் மீதான இந்த ஏற்றுமதி கட்டுப்பாட்டை நீக்குமாறு விவசாயிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதைத்தொடர்ந்து இந்த குறைந்தபட்ச ஏற்றுமதி விலை கட்டுப்பாட்டை மத்திய அரசு நேற்று நீக்கியது.

    மத்திய அரசின் இந்த நடவடிக்கை மூலம் ஏற்றுமதி அதிகரிப்பதுடன், விவசாயிகளின் வருவாயும் அதிகரிக்கும் என மத்திய வர்த்தக மந்திரி பியூஸ் கோயல் தெரிவித்து உள்ளார்.

    இதைப்போல விவசாயிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களும் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.

    இந்தியாவில் பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் பாசுமதி அரிசி அதிகமாக விளைவிக்கப்படுகிறது. இதைப்போல வெங்காய உற்பத்தியில் மகாராஷ்டிர மாநிலம் முன்னணியில் இருக்கிறது.

    அரியானா மற்றும் மகாராஷ்டிரத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×