search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    போதைப்பொருள் வழக்கில் ஒருவரை சிக்கவைக்க முயன்ற 4 போலீசார்- வீடியோ வெளியானதால் சஸ்பெண்ட்
    X

    போதைப்பொருள் வழக்கில் ஒருவரை சிக்கவைக்க முயன்ற 4 போலீசார்- வீடியோ வெளியானதால் சஸ்பெண்ட்

    • போலீசாரின் செயல்கள் கண்காணிப்பு கேமராவில் பதிவானது.
    • நில பிரச்சினையில் கட்டுமான அதிபர் ஒருவரின் அறிவுறுத்தலின் பேரில் போலீசார் அவரை பொய் வழக்கில் சிக்கவைக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டது.

    மும்பை:

    மும்பை கார் பகுதி போலீஸ் நிலையத்தில் பயங்கரவாத தடுப்பு படை பிரிவை சேர்ந்த ஒரு சப்- இன்ஸ்பெக்டர் மற்றும் 3 போலீசார் நேற்று முன்தினம் மாலை கலினா பகுதியில் சோதனை நடத்தினர். பின்னர் போதைப்பொருள் வைத்திருந்த வழக்கில் டேனியல் என்பவரை கைது செய்தனர்.

    இந்த சோதனை நடவடிக்கை தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இதில் சோதனைக்கு வந்த போலீசாரே டேனியலின் பாக்கெட்டில் போதைப்பொருளை வைப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்று இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கைது செய்யப்பட்ட டேனியல் விடுவிக்கப்பட்டார்.

    இதைதொடர்ந்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்த டேனியல் கூறுகையில், "போலீசார் முதலில் என்னை போதைபொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய போவதாக மிரட்டினர். ஆனால் அவர்களின் செயல்கள் கண்காணிப்பு கேமராவில் பதிவானது தெரிந்தவுடன் என்னை விடுவித்துவிட்டனர்" என்றார்.

    இதேபோல டேனியலின் நண்பர் கூறுகையில், "நில பிரச்சினையில் கட்டுமான அதிபர் ஒருவரின் அறிவுறுத்தலின் பேரில் போலீசார் அவரை பொய் வழக்கில் சிக்கவைக்க முயன்றனர்" என குற்றம் சாட்டினார்.

    இந்த பரபரப்பு அடங்குவதற்குள் வழக்கில் தொடர்புடைய 4 போலீசாரும் இடைநீக்கம் செய்யப்பட்டதாக துணை போலீஸ் கமிஷனர் ராஜ்திலக் ரோஷன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், "முறையான சோதனை நடைமுறையை பின்பற்றாததற்காகவும், வீடியோவில் இருப்பதுபோல சந்தேகத்திற்கு இடமான நடவடிக்கைகள் காரணமாகவும் 4 போலீசார் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விசாரணையை முறையாக நடத்த அவர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்" என்றார்.

    Next Story
    ×