search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    ஒடிசா சம்பல்புரி பாடகி 27 வயதில் மரணம்
    X

    ஒடிசா சம்பல்புரி பாடகி 27 வயதில் மரணம்

    • கடந்த மாதம் ருக்சானா, போலங்கிர் பகுதியில் நடந்த படப்பிடிப்பின் போது குளிர்பானம் குடித்தார்.
    • உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தோம்.

    புவனேஸ்வர்:

    ஒடிசாவை சேர்ந்த பிரபல சம்பல்புரி பாடகி ருக்சானா பானோ (வயது 27). இவர் புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் திடீரென்று மரணம் அடைந்தார். பாக்டீரியா தொற்று நோய் காரணமாக அவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியது. ஆனால் அவர் இறந்ததற்கான காரணத்தை மருத்துவமனை நிர்வாகம் வெளியிடவில்லை.

    இந்த நிலையில் பாடகி ருக்சானா பானோ விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டதாக அவரது தாயும், சகோதரியும் குற்றம் சாட்டினார்கள். மேற்கு ஒடிசாவை சேர்ந்த அவரது போட்டி பாடகர் ஒருவரால் அவர் விஷம் கொடுத்து கொல்லப்பட்டதாக கூறினார்கள். ஆனால் அந்த பாடகர் பற்றிய விவரங்களை அவர்கள் வெளியிடவில்லை. பாடகி ருக்சானாவுக்கு ஏற்கனவே மிரட்டல்கள் வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவரது சகோதரி கூறியதாவது:-

    கடந்த மாதம் ருக்சானா, போலங்கிர் பகுதியில் நடந்த படப்பிடிப்பின் போது குளிர்பானம் குடித்தார். அதன்பிறகு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கடந்த மாதம் 27-ந்தேதி அவர் பவானிபட்னா பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு முதல் கட்ட சிகிச்சைக்கு பிறகு அவரை மேல் சிகிச்சைக்காக போலங்கிர் பகுதியில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவ

    மனையில் அனுமதித்தோம். அங்கு அவரது உடல்நிலை மோசமடைந்ததால் பர்கர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால் அதன் பிறகும் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தோம். அவர் குடித்த குளிர்பானத்தில் விஷம் கலக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பாடகி ருக்சானாவின் தாயாரும் இதே கருத்தை தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங் களில் வைரலாகி வருகிறது.

    Next Story
    ×