search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது: 23-ந்தேதி மத்திய பட்ஜெட் தாக்கல்
    X

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது: 23-ந்தேதி மத்திய பட்ஜெட் தாக்கல்

    • பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் குறித்து எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
    • குறிப்பாக வருமானவரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படுமா என மிகுந்த எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவையில் ஆண்டுதோறும் பிப்ரவரி 1-ந்தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருந்ததால், கடந்த பிப்ரவரி 1-ந்தேதி இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்யப்பட்டது.

    தேர்தலுக்கு பிறகு அமையும் புதிய அரசு முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும் என்று அறிவிக்கப்பட்டது. 7 கட்டங்களாக நடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிப் பெற்று 3-வது முறையாக ஆட்சி அமைத்தது.

    அதை தொடர்ந்து கடந்த மாதம் புதிய மக்களவையின் முதலாவது கூட்டத்தொடர் நடந்தது. புதிய எம்.பி.க்கள் பதவியேற்றனர். பாராளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அதன் மீது நடந்த விவாதத்துக்கு பிரதமர் மோடி பதில் அளித்து பேசினார். அதன் பின்னர் பாராளுமன்ற கூட்டத் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

    இந்த நிலையில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 22-ந் தேதி தொடங்கும் எனவும், ஜூலை 23-ந் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எனவும் மத்திய அரசு கடந்த 6-ந் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

    அதன்படி நாளை (திங்கட்கிழமை) பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கிறது.

    நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடப்பு நிதியாண்டுக்கான (2024-2025) மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பிரதமர் மோடியின் 3-வது ஆட்சிக்காலத்தின் முதலாவது பட்ஜெட் இதுவாகும்.

    பட்ஜெட்டில் வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கைகள் அறிவிக்கப்படும் என்றும், பெரிய அளவிலான சமூக, பொருளாதார முடிவுகள் இடம் பெறும் என்றும் ஜனாதிபதி உரையில் கூறப்பட்டு இருந்தது.

    எனவே, பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் குறித்து எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. குறிப்பாக வருமானவரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படுமா என மிகுந்த எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

    இதற்கிடையில் மழைக்கால கூட்டத் தொடரில் 6 புதிய மசோதாக்களை தாக்கல் செய்து, அவற்றை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    அதே வேளையில் இந்த கூட்டத் தொடரில் நீட் வினாத்தாள் கசிவு விவகாரம், ரெயில்வே பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

    ஒடிசா முன்னாள் முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம், வலுவான எதிர்க்கட்சியாக செயல்படும் என்றும், மாநிலத்தின் நலன் சார்ந்த பிரச்சனைகளை பாராளுமன்றத்தில் ஆக்ரோஷமாக எழுப்புவோம் என்றும் அறிவித்துள்ளது.

    அதேபோல் பொதுத்துறை வங்கிகளில் 51 சதவீதத்திற்கும் குறைவான பங்குகளை குறைக்கும் எந்தவொரு அரசாங்க நடவடிக்கையையும் எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்க்கும் என காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

    Next Story
    ×