search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    pawan kalyan
    X

    திருப்பதி லட்டு விவகாரம்: 11 நாட்களுக்கு பரிகார விரத தீட்சை எடுக்கவுள்ளேன் - பவன் கல்யாண்

    • லட்டு பிரசாதத்தில் மிருக எச்சங்கள் இருந்ததை அறிந்த நொடியில் எனது மனம் உடைந்துவிட்டது.
    • இதற்கு பிராயச்சித்தமாக ஒரு தவம் செய்ய முடிவெடுத்துள்ளேன்.

    திருப்பதி லட்டு பிரசாதம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து ஆந்திர அரசிடம் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது. இதனிடையே நெய்யில் மாட்டுக் கொழுப்பு இருந்தது உண்மைதான் என்று தேவஸ்தானம் ஒப்புதல் அளித்துள்ளதால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

    இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "புனிதமாக கருதப்படும் திருமலை லட்டு பிரசாதம், கடந்த ஆட்சியாளர்களின் கேடுகெட்ட போக்கின் விளைவாக தூய்மையற்றதாகிவிட்டது. விலங்கு எச்சங்களால் மாசுபட்டுள்ளது. இந்தப் பாவத்தை ஆரம்பத்திலேயே கண்டு பிடிக்க முடியாமல் போனது இந்து மக்களின் மீதான கறையாக பதிந்துவிட்டது.

    லட்டு பிரசாதத்தில் விலங்கு எச்சங்கள் இருந்ததை அறிந்த அடுத்த நொடியே குற்ற உணர்வால் மனம் உடைந்து விட்டது. மக்கள் நலனுக்காகப் போராடி வரும் எனக்கு, இதுபோன்ற பிரச்னைகள் ஆரம்பத்திலேயே கவனத்திற்கு வராதது வேதனை அளிக்கிறது. கலியுகத்தின் கடவுளான பாலாஜிக்கு இழைக்கப்பட்ட இந்த பயங்கரமான அநீதிக்கு சனாதன தர்மத்தில் நம்பிக்கை உள்ள அனைவரும் பிராயச்சித்தம் செய்ய வேண்டும். அதன் ஒரு பகுதியாக நான் ஒரு தவம் செய்ய முடிவு செய்துள்ளேன்.

    நாளை (செப்டம்பர் 22) காலை குண்டூர் மாவட்டம், நம்பூரில் உள்ள ஸ்ரீ தசாவதார வெங்கடேஸ்வர ஸ்வாமி கோயிலில் நான் தீட்சை எடுப்பேன். 11 நாட்கள் தீட்சை தொடர்ந்த பிறகு திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியை தரிசிக்கிறேன். 'கடவுளே... கடந்த ஆட்சியாளர்கள் உமக்கு எதிராக செய்த பாவங்களைக் கழுவும் சக்தியை எனக்குக் கொடுங்கள்' என்று நான் மன்றாடுகிறேன்.

    கடவுள் நம்பிக்கையும், பாவ பயமும் இல்லாதவர்களே இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். திருமலை திருப்பதி தேவஸ்தான அமைப்பில் அங்கம் வகிக்கும் நிர்வாகக் குழு உறுப்பினர்களும், ஊழியர்களும் கூட அங்குள்ள தவறுகளை கண்டு பிடிக்க முடியாமலும், கண்டு பிடித்தாலும் பேசுவதில்லை என்பதுதான் எனக்கு வேதனையை அளிக்கிறது. முந்தைய பேய் ஆட்சியாளர்களுக்கு அவர்கள் பயந்ததாகத் தெரிகிறது.

    திருமாலின் புனிதத்தை இழிவுபடுத்தும் செயல்களைச் செய்த கடந்த ஆட்சியாளர்களின் செயல் இந்து தர்மத்தைப் பின்பற்றும் அனைவரையும் காயப்படுத்தியுள்ளது. மேலும் லட்டு பிரசாதம் தயாரிப்பில் விலங்கு எச்சங்கள் அடங்கிய நெய் பயன்படுத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தர்மத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்று பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×