search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வருகிற சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமான்
    X

    வருகிற சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமான்

    • டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் ஒலிம்பிக் சங்க தலைவராக இருந்தபோது, பல்லாயிரக்கணக்கான விளையாட்டு வீரர்களை உருவாக்கி வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தார்.
    • தமிழகத்தில் போதைப்பொருட்கள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.

    தூத்துக்குடி:

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தூத்துக்குடி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

    பைபிள், கந்தசஷ்டி கவசம் உள்ளிட்ட பல்வேறு நூல்களில் 'சண்டாளன்' என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. இந்த வார்த்தையை கூறியதற்காக என் மீது வழக்கு தொடுக்கப்பட்டது அநியாயம். என்னுடைய அரசியலை சமாளிக்க முடியாத காரணத்தால் என் மீது ஏதாவது ஒரு வழக்கை தொடுத்து வருகின்றனர். ஆனால் நான் ஜாலியாக இருக்கிறேன்.

    பார்முலா4 பந்தயத்தில் கார் ஓட்டுபவர்கள் மேல்தட்டு மக்கள்தான். இது அவர்களுக்கான விளையாட்டு. சிற்றூர்களில் சிறிய விளையாட்டு திடல்கள்தான் உள்ளன. அங்கு ஓடி விளையாடுவதற்கு வழியில்லை. அதுபோன்ற சிற்றூர்களில் திறமையான குழந்தைகளை தேர்வு செய்து பயிற்சி அளித்து விளையாட்டு வீரர்களாக மாற்றலாம்.

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் ஒலிம்பிக் சங்க தலைவராக இருந்தபோது, பல்லாயிரக்கணக்கான விளையாட்டு வீரர்களை உருவாக்கி வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தார். அவர் இறந்தபோது, விளையாட்டு வீரர்களும், இஸ்லாமிய மக்களும் அதிகமாக வந்தனர். அந்த அளவுக்கு அவர் விளையாட்டுக்காக பல்வேறு பணிகளை செய்துள்ளார். அதுபோன்று தி.மு.க.வினர் ஏதாவது செய்தார்களா?. பொதுமக்கள் செல்லும் இடத்தில், 2 அரசு ஆஸ்பத்திரிகள் உள்ள பகுதியில் கார் பந்தயம் நடத்துகிறார்கள். இந்த விளையாட்டுக்கு பதிலாக சாலை, பள்ளிக்கூடங்களை சீரமையுங்கள். ஆசிரியர்களுக்கு பணம் கொடுக்க முடியவில்லை. ஆனால் பந்தயம் நடத்த எப்படி பணம் வருகிறது?. டோல்கேட்டில் கட்டணம் உயர்வை போராடி தடுப்போம்.

    தமிழகத்தில் போதைப்பொருட்கள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதுதான் பாலியல் சீண்டலுக்கு காரணமாக அமைகிறது. அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து அவரிடம் வருகிற சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைப்பீர்களா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சீமான் கூறுகையில், '2026-ம் ஆண்டு நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. தற்போது 60 வேட்பாளர்களை தேர்வு செய்து விட்டேன்' என்றார்.

    Next Story
    ×