search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஒட்டன்சத்திரத்தில் முதியவரை வெட்டி கொன்று நகை-பணம் கொள்ளை
    X

    கொலை நடந்த வீட்டில் எஸ்.பி சீனிவாசன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர்


    ஒட்டன்சத்திரத்தில் முதியவரை வெட்டி கொன்று நகை-பணம் கொள்ளை

    • கொலை செய்யப்பட்ட முத்துச்சாமியின் உடலை கைப்பற்றி ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • முத்துச்சாமி கொலை செய்யப்பட்ட விபரம் குறித்து அவரது மகள்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகே முதியவரை வெட்டிகொன்று நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள அம்பிளிக்கை போல்நாயக்கன்வலசு பகுதியை சேர்ந்தவர் முத்துச்சாமி(76). விவசாயி. இவருக்கு திருமணமாகி மனைவி இறந்துவிட்டார். 3 மகள்களுக்கும் திருமணம் செய்து கொடுத்து வெவ்வேறு ஊர்களில் வசித்து வருகின்றனர்.

    முத்துச்சாமி எலுமிச்சை, முருங்கை, புளி உள்ளிட்ட விவசாயம் செய்து வந்தார். நேற்று இரவு வீட்டை பூட்டிவிட்டு வெளியில் கட்டிலில் தூங்கிகொண்டிருந்தார். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீட்டின் மேற்கூரையை பிரித்து உள்ளே புகுந்துள்ளனர்.

    பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து முத்துச்சாமியையும் சரமாரியாக வெட்டி கொன்றுவிட்டு சென்றுள்ளனர்.

    இன்று காலையில் அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது முத்துச்சாமி ரத்தவெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அம்பிளிக்கை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு எஸ்.பி சீனிவாசன், டி.எஸ்.பி முருகேசன், இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர்.

    கொலை செய்யப்பட்ட முத்துச்சாமியின் உடலை கைப்பற்றி ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. முத்துச்சாமி வீட்டில் நகை மற்றும் பணம் இருப்பதை அறிந்த நபர்கள்தான் இச்செயலில் ஈடுபட்டிருக்ககூடும் என போலீசார் சந்தேகமடைந்துள்ளனர். இருந்தபோதும் சாதாரணமாக வீட்டின் சுவற்றை தாண்டி செல்ல முடியும் நிலையில் எதற்காக மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கினார்கள் என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    முத்துச்சாமி கொலை செய்யப்பட்ட விபரம் குறித்து அவரது மகள்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்தபிறகுதான் வீட்டில் இருந்த நகை மற்றும் பணம் எவ்வளவு என்பது தெரியவரும். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×