search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    டேங்கர் லாரி-பைக் மோதி விபத்து: 4 பேர் உயிரிழப்பு
    X

    விபத்து நடந்த இடத்தில் போலீசார் விசாரணை நடத்திய காட்சி.

    டேங்கர் லாரி-பைக் மோதி விபத்து: 4 பேர் உயிரிழப்பு

    • மோட்டார் சைக்கிள் நெல்லை தச்சநல்லூர் வடக்கு பைபாஸ் சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலம் பகுதியில் வந்து கொண்டிருந்தது.
    • விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் ராமையன்பட்டியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 40).

    இவருக்கு மனைவி மற்றும் மாரீஸ்வரி (12), சமீரா (7) என்ற 2 மகள்கள் உள்ளனர். இவர் தற்போது தனது குடும்பத்தினருடன் கங்கைகொண்டான் அருகே உள்ள ராஜபதி பகுதியில் குடியிருந்து வருகிறார்.

    கண்ணன் இன்று காலை தனது 2 மகள்கள் மற்றும் மாமியார் ஆண்டாள் (67) ஆகியோரை மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு நெல்லைக்கு புறப்பட்டார்.

    மோட்டார் சைக்கிள் நெல்லை தச்சநல்லூர் வடக்கு பைபாஸ் சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலம் பகுதியில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது சேரன்மகாதேவியில் இருந்து நெல்லை தச்சநல்லூர் பகுதியில் உள்ள பெட்ரோல் கிடங்கில் டீசல் ஏற்றுவதற்காக ஒரு டேங்கர் லாரி வந்து கொண்டிருந்தது. இந்த லாரி வடக்கு பைபாஸ் சாலையில் உலகம்மன் கோவில் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த கண்ணன், மாரீஸ்வரி, சமீரா, ஆண்டாள் ஆகியோர் மீது மோதியது.

    இதில் கண்ணன் உள்பட 4 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர்.

    இதை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் விபத்தில் பலியான கண்ணன் உள்பட 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

    சம்பவ இடத்திற்கு மாநகர போலீஸ் கமிஷனர் ரூபேஷ் குமார் மீனா, துணை கமிஷனர் கீதா, உதவி கமிஷனர் செந்தில் குமார் ஆகியோரும் வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் விபத்து தொடர்பாக டேங்கர் லாரியை ஓட்டி வந்த நெல்லை பத்தமடையை சேர்ந்த கணேசன் என்ற டிரைவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விபத்தில் பலியான இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×