search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    • கால்வாய்களை முறையாக தூர்வாராததால் மழைநீர் சூழ்ந்தது.
    • மழைநீர் வடிகால்களை அமைப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

    ஊட்டி:

    தமிழக பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    சென்னையில் கடந்த ஆண்டு பெய்த கனமழையின் போது மழைநீர் வடிகால் கால்வாய்களை முறையாக தூர்வாராததால் மழைநீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

    அப்போது தமிழக அரசு மழை நீர் வடிகால்களை அமைக்க ரூ.4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு 90 சதவீத பணி முடிந்ததாக கூறியது. அதன்பின்னர் 40 சதவீத பணிகள் முடிந்ததாக கூறினர்.

    தற்போது சென்னையில் மழை பெய்து வருகிறது. கடந்த ஆண்டு ஏற்பட்ட அதே நிலைமை தான் தற்போதும் அங்கு ஏற்பட்டுள்ளது.

    எனவே தமிழக அரசு மெத்தனபோக்கு காட்டாமல், மக்களின் நலனை கருத்தில் கொண்டு மழைநீர் வடிகால்களை அமைப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

    ஏனென்றால் சென்னையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்தனர். 250-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கடந்தாண்டு இதேபோன்று உத்தரபிரதேசத்தில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. ஆனால் அங்கு இதுபோன்ற எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை.

    மத்திய அரசுக்கு எதிராக தவறான கருத்துக்களை கூறினால் தான் மக்கள் துணை முதல்வர் என ஏற்றுக்கொள்வார்கள் என உதயநிதி ஸ்டாலின் நினைக்கிறார்.

    சென்னை கவரப்பேட்டையில் நடைபெற்ற ரெயில் விபத்தில் மனித தவறா அல்லது தொழில்நுட்ப கோளாறா என விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் சதி வேலைகளுக்கும் வாய்ப்பு இருக்கிறது. இது தொடர்பாகவும் விசாரணை நடக்கிறது.

    துணை முதல்வராக பொறுப்பேற்ற பின்பு உதயநிதி, மத்திய ரெயில்வே மந்திரி பற்றியும், அவர் மத்திய அமைச்சராக பொறுப்பேற்ற பின்பு தான் கூடுதலாக ரெயில் விபத்துக்கள் நடப்பது மாதிரியும், மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதது மாதிரியும் பேசுகிறார்.

    அவர் அரசியலை பற்றி தெரியாமல் ஒரு விளையாட்டு மந்திரியாக, விளையாட்டுத் தனமாக, அரசியல் அனுபவமின்றி பேசி வருகிறார்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை நேற்று சவரன் ரூ.56 ஆயிரத்துக்கு 760-க்கு விற்பனையானது.
    • வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.

    சென்னை:

    சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில், தங்கம் விலை இதுவரை இல்லாத அளவுக்கு தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்கிறது. இதனால் சுப நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்க நினைப்போர் கவலை அடைந்துள்ளனர். தங்கம் விலை நேற்று குறைந்து இருந்தது.

    இந்த நிலையில் சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று இதுவரை காணாத அளவிற்கு உச்சம் தொட்டது.

    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை நேற்று சவரன் ரூ.56 ஆயிரத்துக்கு 760-க்கு விற்பனையானது.

    இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.57 ஆயிரத்து 120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.7,140-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.103-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    15-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,760

    14-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,960

    13-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,960

    12-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,960

    11-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,760

     

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    15-10-2024- ஒரு கிராம் ரூ. 103

    14-10-2024- ஒரு கிராம் ரூ. 103

    13-10-2024- ஒரு பவுன் ரூ. 103

    12-10-2024- ஒரு பவுன் ரூ. 103

    11-10-2024- ஒரு பவுன் ரூ. 102

    • நீர்வரத்து இன்று காலை 16,196 கன அடியாக அதிகரித்துள்ளது.
    • இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 92 அடியாக உயர்ந்தது.

    மேட்டூர்:

    கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிந்து அங்குள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளில் தண்ணீர் போதுமான அளவு நிரம்பிய பிறகே உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்படுகிறது.

    இந்த உபரி நீர் காவிரி ஆறு வழியாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்தடைகிறது.

    தற்போது கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    அதுேபால் கர்நாடக-தமிழக எல்லையில் வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது. நேற்று மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 15,531 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 16,196 கன அடியாக அதிகரித்துள்ளது.

    மேட்டூர் அணையில் இருந்து தமிழக காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வந்தது. தற்போது தொடர் மழை பெய்து வருவதால் நீர் திறப்பு 500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

    அதுபோல் கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 500 கன அடியில் இருந்து நீர் திறப்பு 300 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 92 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 54.96 டி.எம்.சி. உள்ளது.

    • காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.
    • தொடர்ந்து மேற்கு வடமேற்கு நோக்கி காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வருகிறது.

    இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையிலிருந்து கிழக்கு தென்கிழக்கு திசையில் 360 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.

    புதுச்சேரியிலிருந்து கிழக்கே 390 கி.மீ. தொலைவிலும், நெல்லூரிலிருந்து தென்கிழக்கு திசையில் 450 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. தொடர்ந்து மேற்கு வடமேற்கு நோக்கி காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வருகிறது.

    வட தமிழ்நாடு, தெற்கு ஆந்திர கடற்கரையோரம் புதுச்சேரிக்கும் - நல்லூருக்கும் இடையே நாளை காலை கரையை கடக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

    • நேற்று பெய்த கனமழை காரணமாக சில விமானங்களின் சேவை ரத்தானது.
    • காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திரா நோக்கி நகர்வதால் சென்னைக்கு ஆபத்து இல்லை.

    சென்னை:

    வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதாகவும், சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு இன்று (புதன்கிழமை) அதி கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனால் இன்று அரசு பொதுவிடுமுறை அறிவித்துள்ளது. இதனிடையே நேற்று பெய்த கனமழை காரணமாக சில விமானங்களின் சேவை ரத்தானது.

    இந்த நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திரா நோக்கி நகர்வதால் சென்னைக்கு ஆபத்து இல்லை என்று தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், விமான பயணிகளுக்கு சென்னை விமான நிலையம் ஓர் வேண்டுகோள் விடுத்துள்ளது.

    அதாவது, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் கனமழை எச்சரிக்கை எதிரொலியாக, பயணிகள் அந்தந்த விமான நிறுவனங்களிடம் சேவைப்பற்றி சரிபார்த்து அதற்கேற்ப தங்கள் பயணத்தை திட்டமிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. 

    • குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்காக 277 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
    • வீராணம் ஏரிக்கு வரும் 1,423 கன அடியில் 502 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று காலை முதல் மழை வெளுத்து வாங்கியது. சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை, செம்பரம்பாக்கம் ஏரிகளின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது.

    இதனால் பூண்டி, செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். குறிப்பாக கிருஷ்ணா நதி நீர் திட்டத்தின் கீழ் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறக்கப்பட்ட நீரில் 410 கன அடியுடன், வரத்து கால்வாய் மூலம் 240 கன அடி மழை நீர் உட்பட 650 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. இதில் குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்காக 277 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

    அதேபோல், சோழவரம் ஏரிக்கு வரும் 160 கன அடிநீரில் 21 கன அடி நீரும், புழல் ஏரிக்கு வரும் 277 கன அடியில் 219 கன அடியும், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகைக்கு 60 கன அடியில் 25 கன அடியும், செம்பரம்பாக்கத்திற்கு வரும் 260 கன அடியில் 134 கன அடியும், வீராணம் ஏரிக்கு வரும் 1,423 கன அடியில் 502 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    செம்பரம்பாக்கத்தை பொறுத்தவரையில் நேற்று மாலை 1380 கன அடி நீர் வர தொடங்கியது. ஏரிகளுக்கு வரும் நீர்வரத்தை நீர்வளத்துறை அதிகாரிகள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.

    • மேச்சேரியில் நெசவாளர்களை சந்தித்து பேசியது மறக்க முடியாத அனுபவமாக அமைந்துள்ளது.
    • கைத்தறி நெசவாளர்களின் திறமை மிகவும் வியப்பளிக்கிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேச்சேரியில் நெசவாளர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். அங்கு கவர்னர் ஆர்.என்.ரவி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மேச்சேரியில் நெசவாளர்களை சந்தித்து பேசியது மறக்க முடியாத அனுபவமாக அமைந்துள்ளது. நெசவாளர்கள் மீது பிரதமர் மோடி மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். நெசவாளர்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய தீர்வு காணப்படும். கைத்தறி நெசவாளர்களின் திறமை மிகவும் வியப்பளிக்கிறது. வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்ததை விட அதிகமாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதற்கு ஏற்ற வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு சிறப்பாக செய்துள்ளது.

    எதிர்பார்த்ததைப் போல அடுத்த 2 நாட்களுக்கு மழைப்பொழிவு இருக்கும் என நினைக்கிறேன். மழை பாதிப்புகளை அரசு உரிய முறையில் கையாளும் என நம்புகிறேன்.

    இவ்வாறு கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.

    • தங்கள் பகுதியில் உள்ள கழகத் தன்னார்வலர்களை எந்நேரமும் தொடர்பு கொள்ளலாம்.
    • இந்த செயலற்ற விடியா திமுக அரசைப் போல் அன்றி மக்கள் மீது அக்கறையோடு என்றைக்கும் அ.தி.மு.க. உழைக்கும்!

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மழை வெள்ளத்தால் தலைநகர் சென்னை தத்தளித்ததையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த விடியா திமுக அரசு மக்களை கைவிட்ட அவலத்தையும் சென்ற ஆண்டே பார்த்தோம். எனவே தான், உதவ அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் #RapidReponseTeam அமைத்து, #களத்தில்_அஇஅதிமுக பாதிக்கப்பட்ட மக்களுடன் தோளோடு தோள்நின்றது.

    தற்போது தலைநகர் சென்னையில் கனமழை பெய்துவரும் நிலையில், எனது அறிவுறுத்தலின்படி, அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் மீண்டும் #RapidResponseTeam அமைக்கப்பட்டுள்ளது.

    சென்னைவாழ் பொதுமக்கள் இந்த கடுமையான தருணத்தில் தங்களுக்கு தேவையான உதவிகளைப் பெற தங்கள் பகுதியில் உள்ள கழகத் தன்னார்வலர்களை எந்நேரமும் தொடர்பு கொள்ளலாம்.

    இந்த செயலற்ற விடியா திமுக அரசைப் போல் அன்றி மக்கள் மீது அக்கறையோடு என்றைக்கும் அ.தி.மு.க. உழைக்கும்!

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

    • பேசின்பிரிட்ஜ், வியாசர்பாடி இடையே தண்டவாளத்தில் தேங்கியிருந்த வெள்ள நீர் முழுமையாக அகற்றப்பட்டது.
    • தண்டவாளங்களில் தண்ணீர் வடிந்ததால் வழக்கம்போல் சென்ட்ரலில் இருந்தே ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னையிலும் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதலே இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

    சென்னையில் காற்றுடன் தொடர்ச்சியாக மழை பெய்து வந்ததால் சில பகுதிகளில் சாலையின் அருகில் உள்ள மரங்கள் சரிந்து விழுந்தது. இதனை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்களும், தீயணைப்பு வீரர்களும் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தொடர்ந்து பெய்த கனமழையால் எழும்பூர், தாம்பரம், பேசின்பிரிட்ஜ் மற்றும் வியாசர்பாடி உள்ளிட்ட சில ரெயில் நிலையங்களில் தண்டவாளங்களில் மழைநீர் தேங்கியது. மழைநீரை மோட்டார் பம்புகள் மூலம் ரெயில்வே ஊழியர்கள் அகற்றினர்.

    இந்நிலையில் பேசின்பிரிட்ஜ் மற்றும் வியாசர்பாடி இடையே தண்டவாளத்தில் தேங்கியிருந்த வெள்ள நீர் முழுமையாக அகற்றப்பட்டது.

    சென்ட்ரலில் இருந்து இயக்கப்படும் ரெயில்கள் மாற்று ரெயில் நிலையங்களில் இருந்து இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

    தண்டவாளங்களில் தேங்கியிருந்த மழைநீர் வடிந்ததால் சென்னையில் ரெயில் இயக்கம் சீரானது. வழக்கம்போல் சென்ட்ரலில் இருந்தே ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • மழை குறைந்ததால் வடசென்னையின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் வடிந்துள்ளது.
    • சில பகுதிகளில் தண்ணீர் வடியவில்லை.

    தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதனால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டது.

    இதனால் நேற்று முன்தினம் முதல் நேற்று மாலை வரை கனமழை பெய்தது. இதனால் சாலைகள் மற்றும் சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியது.

    இதனிடையே நேற்று இரவு முதல் மழை குறைந்ததால் வடசென்னையின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் வடிந்துள்ளது.

    ஸ்டீபன்சன் சாலை, புளியந்தோப்பு நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் தண்ணீர் வடியவில்லை.

    இன்று காலை வரை CB சாலை சுரங்கப்பாதை, கணேசபுரம், சுந்தரம் பாயிண்ட், ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை, MRTS சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மூடப்பட்டுள்ளது. 

    • காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திரா நோக்கி நகர்வதால் சென்னைக்கு ஆபத்து விலகியது.
    • இன்று மழை பெய்யும். ஆனால் அதீத கனமழை இருக்காது.

    தென்மேற்கு வங்கக்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே 440 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் 10 கி.மீ. வேகத்தில் வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.

    புதுச்சேரிக்கு கிழக்கு தென்கிழக்கே 460 கி.மீ. தொலைவிலும், ஆந்திர மாநிலத்தின் நெல்லூருக்கு கிழக்கு தென்கிழக்கே 530 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

    வடக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை, சென்னைக்கு அருகாமையில் நாளை கரையை கடக்கும்.

    காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திரா நோக்கி நகர்வதால் சென்னைக்கு ஆபத்து விலகியது.

    இந்நிலையில் தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கூறியிருப்பதாவது:

    சென்னையில் நேற்று பெய்த மிக கனமழை இன்று இருக்காது. மேகக்கூட்டங்கள் வடக்கு நோக்கி நகர்ந்ததால், மழை குறைந்தது.

    இன்று மழை பெய்யும். ஆனால் அதீத கனமழை இருக்காது. சென்னையில் மழை விட்டு விட்டு தொடரும். மிக கனமழை இருக்காது.

    நாளை, நாளை மறுநாளும் மழை தொடரும். ஆனால் அதீத மழை இருக்காது என்று தெரிவித்துள்ளார்.

    • தமிழகத்தில் காலை 10 மணி வரை 10 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
    • பொன்னேரி, தாமரைப்பாக்கத்தில் தலா 16 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

    சென்னை:

    வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. சென்னைக்கு தென்கிழக்கில் 440 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.

    தமிழகத்தில் காலை 10 மணி வரை 10 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களிலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், தேனி ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    திருவள்ளூரில் கடந்த 24 மணி நேரத்தில் சோழவரத்தில் 30 செ.மீ., செங்குன்றம் 28 செ.மீ., பொன்னேரி, தாமரைப்பாக்கத்தில் தலா 16 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

    ×