search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    மதுரையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்த அமைச்சர்கள்
    X

    மதுரையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்த அமைச்சர்கள்

    • மதுரை கூடல் நகர் பொதிகை நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் மழைநீர் புகுந்ததால் அங்கிருந்த முதியோர்கள் கடும் அவதியடைந்தனர்.
    • குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ள தண்ணீரை அகற்றுவதற்கு தொடர்ச்சியாக பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    மதுரை:

    மதுரையில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவும் பலத்த மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. குறிப்பாக, செல்லூர், புதூர், கூடல்புதூர், ஆனையூர் உள்ளிட்ட பகுதிகளில், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால், மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    நேற்று மதியம் 2½ மணி முதல் மாலை 5½ மணி வரை பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக புறநகர் பகுதிகளில் 3 மணி முதல் 3.15 மணி வரை 15 நிமிடத்தில் மட்டும் 4.5 சென்டிமீட்டர் (44.5 மில்லி மீட்டர்) மழைப்பொழிவு இருந்ததாகவும், காலை முதல் மாலை வரை 9.8 சென்டிமீட்டர் மழைப்பொழிவு பதிவானது.

    புறநகர் பகுதிகளான புதூர், சர்வேயர் காலனி, பனங்காடி, பாரத நகர்,பி.பி.குளம், முல்லை நகர் பகுதியில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. மதுரை கூடல் நகர் பொதிகை நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் மழைநீர் புகுந்ததால் அங்கிருந்த முதியோர்கள் கடும் அவதியடைந்தனர்.

    உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தொட்டப்பநாயக்கணூர், செட்டியபட்டி, வி.பெருமாள்பட்டி, பண்ணைப்பட்டி, அல்லிகுண்டம், வாலாந்தூர், செல்லம்பட்டி, உத்தப்பநாயக்கணூர், வெள்ளைமலைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. கனமழை காரணமாக வி.பெருமாள்பட்டி, பண்ணைப்பட்டி மற்றும் சடையாண்டிபட்டி பகுதிகளில் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர்நிலைகள் உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. கொங்கபட்டி, உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 4-வது வார்டு நீராவி மேட்டுத்தெரு பகுதிகளிலும் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் மக்கள் கடும் அவதியடைந்தனர்.

    இந்நிலையில் மதுரையில் தொடர்ந்து மழை பெய்த நிலையில், வைகை ஆற்றில் அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆய்வு செய்தனர். அவருடன் மாவட்ட கலெக்டர், கண்காணிப்பு அலுவலர் ஆகியோரும் ஆய்வு மேற்கொண்டனர்.

    ஆய்வு மேற்கொண்ட பின்னர் அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * மதுரையில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    * குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ள தண்ணீரை அகற்றுவதற்கு தொடர்ச்சியாக பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    * பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    * மதுரையில் பல்வேறு இடங்களில் சூழ்ந்துள்ள தண்ணீரை வெளியேற்ற இன்னும் 3 நாட்கள் ஆகும் என்று கூறினார்.

    Next Story
    ×