search icon
என் மலர்tooltip icon

    பிரிட்டன்

    • மது அருந்துதல் உள்ளிட்ட எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர்.
    • இந்து மத பற்றாளர். அதன்படி வாழ்க்கையை அமைத்துக்கொண்டிருப்பவர்.

    இங்கிலாந்து நாட்டின் பிரதமராகி, முதல் இந்திய வம்சாவளி பிரதமர் என்ற புதிய சரித்திரத்தைப் படைத்திருக்கிறார், 42 வயதே ஆன ரிஷி சுனக்.

    இவர் 1980-ம் ஆண்டு, மே மாதம் 12-ந்தேதி இங்கிலாந்து நாட்டின் சவுதாம்ப்டன் நகரில் பிறந்தார்.

    இவரது தந்தை கென்யாவில் பிறந்த யஷ்விர் சுனக், தாய் தான்சானியாவில் பிறந்த உஷா சுனக். இந்த தம்பதியரின் 3 குழந்தைகளில் மூத்தவர் ரிஷி சுனக். தம்பி சஞ்சய், மனநல டாக்டர், தங்கை ராக்கி, கல்விக்கான ஐ.நா.உலகளாவிய நிதியத்தில் பணி.

    இவரது பெற்றோரின் பூர்வீகம், இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் ஆகும். யஷ்விர் சுனக், இங்கிலாந்து அரசின் என்.எச்.எஸ். டாக்டர். உஷா சுனக், சொந்தமாக மருந்துக்கடை நடத்துகிறார்.

    ரஷி சுனக், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் லிங்கன் கல்லூரியில் தத்துவம், அரசியல், பொருளாதாரம் (பிபிஇ) படித்து பட்டம் பெற்றார். அதையடுத்து ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்து எம்.பி.ஏ. பட்டம் பெற்றார்.

    ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம்தான் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அங்குதான் அவர் தனது காதல் மனைவி அக்‌ஷதாவை முதன் முதலாக சந்தித்தார். ரிஷியை போன்று அவரும் எம்.பி.ஏ. தான் படித்துக்கொண்டிருந்தார்.

    அங்கே அவர்கள் இருவர் இடையே காதல் மலர்ந்தது. தனது காதலரை அறிமுகம் செய்து தந்தையான 'இன்போசிஸ்' தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர் என்.ஆர்.நாராயணமூர்த்திக்கு அக்‌ஷதா எழுதிய கடிதத்தில், "உங்களுக்கு அவரைப்பற்றி விவரிக்க வேண்டுமென்றால் அவர் புத்திசாலி, அழகானவர், மிக முக்கியமாக அவர் நேர்மையானவர்" என உருகி இருக்கிறார்.

    இந்த தம்பதியரின் திருமணம், 2009-ம் ஆண்டு பெங்களூருவில் நடந்தேறியது. 2 நாள் நடந்த மண விழாவில் 'விப்ரோ' நிறுவனர் அசீம் பிரேம்ஜி, கிரிக்கெட் வீரர் அனில்கும்ப்ளே, தொழில் அதிபர் நந்தன் நிலகேணி, பேட்மிண்டன் வீரர் பிரகாஷ் படுகோனே என பல பிரபலங்கள் பங்கேற்று வாழ்த்தி இருக்கிறார்கள்.

    இந்த தம்பதியருக்கு கிருஷ்ணா, அனுஷ்கா என 2 செல்ல மகள்கள்.

    ரிஷி சுனக் அரசியலுக்கு வருவதற்கு முன்னால் முதலீட்டு வங்கியான கோல்டுமேன் சாக்ஸில் 2001-04 இடையே பணியாற்றி இருக்கிறார். அதையடுத்து சில்ட்ரன்ஸ் முதலீட்டு நிதி நிர்வாகத்தில் பணியாற்றி உள்ளார். அமெரிக்காவில் கலிபோர்னியாவில் தனது முன்னாள் சகாக்களின் நிதி நிறுவனத்தில் சேர்ந்துள்ளார்.

    2013-2015 இடையேயான காலத்தில் தனது மாமனார் என்.ஆர்.நாராயணமூர்த்தியின் கேட்டமரன் வெஞ்சர்ஸ் முதலீட்டு நிறுவனத்தின் இயக்குனராக இருந்துள்ளார்.

    மது அருந்துதல் உள்ளிட்ட எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர், தனி மனித வாழ்வில் ஒழுக்கமானவர் என்பது ரிஷியின் குறிப்பிடத்தக்க நற்பண்புகள்.

    தினந்தோறும் காலையில் உடற்பயிற்சி செய்வது இவருக்கு பிடித்தமானது.

    இந்து மத பற்றாளர். அதன்படி வாழ்க்கையை அமைத்துக்கொண்டிருப்பவர்.

    2015-ம் ஆண்டு ரிச்மாண்ட் தொகுதியில் இருந்து கன்சர்வேடிவ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தொகுதியை அந்த கட்சி 100 ஆண்டுகளுக்கு மேலாக தன் வசம் வைத்திருக்கிறது என்பது சிறப்பு தகவல்.

    2017-ம் ஆண்டு, 2019-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று தொகுதியை தக்கவைத்தார்.

    2019-ல் அப்போதைய நிதி மந்திரி சாஜித் ஜாவித்தின் கீழ் கருவூல தலைமைச்செயலாளர் பதவி வகித்தார்.

    2020-ம் ஆண்டு போரிஸ் ஜான்சன் அரசில் நிதி மந்திரியாக பதவி வகித்தார். இந்த ஆண்டு போரிஸ் ஜான்சன் சர்ச்சைகளில் சிக்கியபோது, ரிஷி சுனக் நிதி மந்திரி பதவியை விட்டு விலகினார்.

    போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவியை விட்டு விலகியபோது, பிரதமர் பதவி போட்டியில் ரிஷி சுனக் குதித்தார். 'நீயா, நானா?' என்கிற அளவுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தினார். ஆனால் இறுதி வாக்கெடுப்பில் அவர் லிஸ் டிரஸிடம் வெற்றிவாய்ப்பை இழந்தார்.

    இங்கிலாந்தில் 'மினி பட்ஜெட்' தாக்கல் செய்து அந்த நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பின்னடைவுகள் ஏற்பட்டு லிஸ் டிரஸ், வெறும் 45 நாட்களே பதவி வகித்த நிலையில், கடந்த 20-ந் தேதி ராஜினாமாவை அறிவித்தார்.

    மீண்டும் பிரதமர் பதவிக்கு குறிவைத்து, கன்சர்வேடிவ் கட்சி தலைவர் பதவி போட்டியில் இறங்கினார், ரிஷி சுனக். போட்டியில் குதிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட போரிஸ் ஜான்சன் கடைசி நேரத்தில் பின்வாங்க, இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் மக்கள் சபை தலைவர் பென்னி மார்டண்ட் போட்டியிடத்தேவையான 100 எம்.பி.க்கள் ஆதரவை திரட்ட முடியாமல் போக, ரிஷி சுனக் வெற்றிக்கனியைப் பறித்தார்.

    இந்த ஆண்டின் தீபாவளி பரிசு, அவருக்கு கன்சர்வேடிவ் கட்சி தலைவர் பதவி.

    அப்போது அவர் சொன்னது- "இங்கிலாந்து மாபெரும் நாடு. ஆனால் நாம் மிகப்பெரிய பொருளாதார சவாலை சந்தித்து வருகிறோம் என்பதில் சந்தேகம் இல்லை. நமக்கு இப்போது தேவை ஸ்திரத்தன்மையும், ஒற்றுமையும்தான். நமது கட்சியையும், நாட்டையும் ஒன்றிணைத்து அழைத்துச்செல்வதற்கு நான் அதிக முக்கியத்துவம் தருவேன். ஏன் என்றால் நாம் தற்போதைய சவால்களை சந்தித்து, நம் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளுக்கு சிறந்த, வளமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு ஒரே வழி இதுதான்" என்பதாகும்.

    நேற்று லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னர் சார்லசை லிஸ் டிரஸ் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். அதையடுத்து ரிஷி சுனக், மன்னரை சந்தித்து பேசினார். அப்போது அவரை நாட்டின் பிரதமராக நியமிக்கும் உத்தரவை மன்னர் சார்லஸ் வழங்கினார். அவர் நியமித்துள்ள முதல் பிரதமர் ரிஷி சுனக்தான். இங்கிலாந்தின் புதிய பிரதமர் ஆகி இருக்கிறார் ரிஷி சுனக்.

    1783-ம் ஆண்டு அந்த நாட்டில் வில்லியம் பிட் மிக இளம் வயது பிரதமர் என்ற பெயரைப்பெற்றிருந்தார். அதன் பின் இந்த ஆண்டு நமது ரிஷி சுனக் மிக இளைய வயது பிரதமர் ஆகி வரலாற்றைத் திருப்பிப்போட்டிருக்கிறார். வில்லியம் பிட்டின் வயதையும் திருப்பிப்போட்டிருக்கிறார். ஆமாம் அவருக்கு வயது 24. இவருக்கு வயது '42'.

    தனது மருமகன் ரிஷி சுனக் பிரதமராகிறார் என அறிந்த உடன் அவரை வாழ்த்தி மாமனார் என்.ஆர்.நாராயணமூர்த்தி சொன்ன வார்த்தைகள் இவை-

    "வாழ்த்துகள் ரிஷி. நாங்கள் உங்களால் பெருமிதம் அடைகிறோம். நீங்கள் வெற்றி பெற வாழ்த்துகிறோம். நீங்கள் இங்கிலாந்து மக்களுக்கு தன்னாலான ஆகச்சிறந்ததை செய்வீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது."

    ஆமாம், அந்த நம்பிக்கையில்தான் ரிஷி சுனக்கை இங்கிலாந்து தனது பிரதமர் ஆக்கி அழகு பார்க்கிறது.

    • ரிஷி சுனக் பொறுப்பேற்ற சில மணி நேரங்களிலேயே அதிரடி நடவடிக்கைகள் எடுக்க தொடங்கினார்.
    • இங்கிலாந்து துணைப் பிரதமர் மற்றும் நீதித்துறை செயலாளராக டொமினிக் ராப் நியமிக்கப்பட்டார்.

    லண்டன்:

    இங்கிலாந்தின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற சில மணி நேரங்கள் ரிஷி சுனக் அதிரடி நடவடிக்கைகளை ஆரம்பித்தார்.

    முன்னாள் பிரதமர் லிஸ் டிரஸ்ஸின் மந்திரி சபையில் பதவியில் இருந்த பலரை ராஜினாமா செய்யுமாறு புதிய பிரதமர் ரிஷி சுனக் கேட்டுள்ளார்.

    இங்கிலாந்து துணைப் பிரதமர் மற்றும் நீதித்துறை செயலாளராக டொமினிக் ராப் நியமிக்கப்பட்டுள்ளார்.டொமினிக் ராப் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் மந்திரி சபையில் துணைப் பிரதமர் பதவியில் இருந்தவர்.

    அதன்படி, வணிக செயலாளர் ஜேக்கப் ரீஸ்-மோக், நீதித்துறை செயலாளர் பிராண்டன் லூயிஸ், வேலை மற்றும் ஓய்வூதிய செயலாளர் க்ளோ ஸ்மித் மற்றும் மேம்பாட்டு அமைச்சர் விக்கி போர்ட் ஆகியோர் ராஜினாமா செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அலோக் சர்மா மந்திரி பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

    இங்கிலாந்தின் நிதி மந்திரியாக ஜெர்மி ஹன்ட் நீடிக்கிறார். நாதிம் ஜஹாவிக்கு புதிதாக மந்திரி சபையில் பதவி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவருக்கான துறை ஒதுக்கப்படவில்லை.

    பென் வாலஸ் மீண்டும் வெளியுறவுத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜேம்ஸ் கிளெவர் வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு விவகாரங்களுக்கான செயலாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

    பாராளுமன்ற கருவூலத்தின் செயலாளராக சைமன் ஹார்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், சமீபத்தில் பதவி விலகிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுவெல்லா பிரேவர்மெனை உள்துறை மந்திரியாக மீண்டும் நியமனம் செய்து ரிஷி சுனக் உத்தரவிட்டுள்ளார்.

    • பிரதமர் ரிஷி சுனக் நாட்டு மக்களுக்கு முதல் முறையாக உரையாற்றினார்.
    • புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க இந்த அரசு உறுதி எடுத்துள்ளது என்றார்.

    லண்டன்:

    பிரிட்டன் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரிஷி சுனக் இன்று மன்னர் மூன்றாம் சார்லசை சந்தித்தார். அப்போது அவரை பிரதமராக நியமனம் செய்து, புதிய அரசை அமைக்கும்படி கேட்டுக் கொண்டார். புதிய பிரதமராக தேர்வான ரிஷி சுனக்குக்கு உலக தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், பிரதமர் ரிஷி சுனக் நாட்டு மக்களுக்கு முதல் முறையாக உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    இங்கிலாந்து பொருளாதாரத்தை மீட்க முழு முயற்சி எடுப்பேன். எனது செயல்களால் நாட்டைப் பெருமைப்படுத்துவேன்.

    கடினமான முடிவுகள் வர உள்ளன. இரவு பகல் பாராமல் உழைப்பேன். எனது நடவடிக்கைகள் மூலம் நாட்டை ஒருங்கிணைப்பேன். எனது பணி மூலம் மக்களின் நம்பிக்கையை பெறுவேன்.

    கொரோனா சமயத்தில் மக்கள் மற்றும் வணிகங்களைப் பாதுகாக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வதைப் பார்த்தீர்கள்.

    நான் வழிநடத்தும் அரசாங்கம் அடுத்த தலைமுறையினரையும், உங்கள் பிள்ளைகளையும், பேரக்குழந்தைகளையும் கடனாகச் செலுத்திவிடாது.

    பிரதமர் பதவிக்கான பொறுப்பு கடமைகளை உணர்ந்து கன்சர்வேடிவ் கட்சியின் முக்கிய கோட்பாடுகளைச் செயல்படுத்துவேன் என தெரிவித்தார்.

    • மன்னர் மூன்றாம் சார்லஸ் ரிஷி சுனக்கை பிரிட்டிஷ் பிரதமராக நியமினம் செய்து உத்தரவிட்டார்.
    • இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் முதல் முறையாக இங்கிலாந்து பிரதமராக தேர்வானார்.

    லண்டன்:

    பிரிட்டனில் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு பிரதமராக பதவியேற்ற லிஸ் டிரஸ் கடந்த 20-ந்தேதி ராஜினாமா செய்தார். பொருளாதார நெருக்கடியை தீர்க்க அவர் எடுத்த நடவடிக்கைகளுக்கு சொந்த கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பதவி விலகினார். இதையடுத்து புதிய பிரதமரை தேர்வு செய்யும் நடவடிக்கைகள் தொடங்கின.

    இங்கிலாந்தில் ஆளும் கட்சித் தலைவர் தான் பிரதமர் பதவியை வகிக்கமுடியும். இதையடுத்து ஆளும் கன்சர்வேடிவ் கட்சி தலைவர் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், பெண் தலைவரான பென்னி மார்டண்ட் ஆகியோர் போட்டியிட முடிவு செய்து எம்.பி.க்களின் ஆதரவை திரட்டினர்.

    357 எம்.பி.க்கள் கொண்ட கன்சர்வேடிவ் கட்சியில் ரிஷி சுனக்குக்கு அமோக ஆதரவு கிடைத்தது. அவருக்கு 140-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் ஆதரவு அளித்தனர்.

    இதற்கிடையே கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக ரிஷி சுனக் அதிகாரப்பூர்வமாக அறித்தார். அதே வேளையில் வேட்பு மனுதாக்கல் கால அவகாசம் முடிய சில மணி நேரங்களுக்கு முன்பு போரிஸ் ஜான்சன், தான் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதே போல் 100 எம்.பி.க்களின் ஆதரவை திரட்ட முடியாததால் பென்னி மார்டண்ட்டும் போட்டியில் இருந்து விலகினார்.

    இதையடுத்து, ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக ரிஷி சுனக் அறிவிக்கப்பட்டார். இதன்மூலம் அவர் இங்கிலாந்தின் புதிய பிரதமர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் முதல் முறையாக இங்கிலாந்து பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் ரிஷிசுனக் புதிய வரலாற்று சாதனை படைத்தார்.

    இந்நிலையில், பிரிட்டன் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரிஷி சுனக் இன்று மன்னர் மூன்றாம் சார்லசை சந்தித்தார். அப்போது அவரை பிரதமராக நியமினம் செய்து, புதிய அரசை அமைக்கும்படி கேட்டுக் கொண்டார்.

    புதிய பிரதமராக தேர்வான ரிஷி சுனக்குக்கு உலக தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முக்கிய பதவியில் உள்ளவர்கள் அடுத்தடுத்து பதவி விலகியதால் பிரதமர் லிஸ் டிரஸ்சுக்கு நெருக்கடி ஏற்பட்டது.
    • பதவியேற்ற 45 நாட்களில் லிஸ் டிரஸ் பதவி விலகியது பரபரப்பை ஏற்படுத்தியது.

    லண்டன்:

    இங்கிலாந்து பிரதமராக கடந்த மாதம் பதவியேற்ற லிஸ் டிரஸ், வரி குறைப்புகளை ஆதரிக்கும் வகையில் திட்டங்களை வெளியிட்டார். மினி பட்ஜெட்டில் வரி குறைப்பு அறிவிக்கப்பட்டது. கடன் வாங்கி இதை சரிக்கட்டலாம் என தெரிவிக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு பிரதமரின் சொந்தக் கட்சி எம்.பி.க்கள் சிலர் அதிருப்தி தெரிவித்தனர்.

    முக்கிய பதவியில் உள்ளவர்கள் அடுத்தடுத்து பதவி விலகியதால் பிரதமர் லிஸ் டிரஸ்சுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. அரசியல் மற்றும் பொருளாதார குழப்பம் நீடிக்கும் சூழ்நிலையில், பிரதமர் லிஸ் டிரஸ் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். பதவியேற்ற 45 நாட்களில் அவர் பதவி விலகியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், பிரதமர் லிஸ் டிரஸ் தனது கடைசி அமைச்சரவை கூட்டத்தில் இன்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    அவசரமாகவும் தீர்க்கமாகவும் கடினமாக உழைக்கும் குடும்பங்களுக்கு உதவுவதோடு, திவால் நிலையைத் தவிர்க்க ஆயிரக்கணக்கான வணிகங்களுக்கு உதவியும் வழங்கியது.

    நமது நாடு புயலால் தொடர்ந்து போராடி வருகிறது. நான் பிரிட்டன் மற்றும் பிரிட்டிஷ் மக்களை நம்புகிறேன். மேலும் பிரகாசமான நாட்கள் வரப்போகிறது என்பதை நான் அறிவேன்.

    புதினின் ஆக்கிரமிப்புக்கு எதிராக உக்ரைனின் துணிச்சலான போராட்டத்தை நாம் ஆதரிக்க வேண்டும். உக்ரைன் மேலோங்க வேண்டும். நம் நாட்டின் பாதுகாப்பை நாம் தொடர்ந்து பலப்படுத்த வேண்டும். அதைத்தான் நான் சாதிக்க பாடுபட்டு வருகிறேன்.

    ரிஷி சுனக் நம் நாட்டின் நன்மைக்காக எல்லா வெற்றிகளையும் பெற வாழ்த்துகிறேன் என தெரிவித்தார்.

    • ஆளும் கன்சர்வேடிவ் கட்சி அலுவலகத்துக்கு ரிஷி சுனக் சென்றார். அப்போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • இங்கிலாந்து மக்களுக்காக தொடர்ந்து ஒவ்வொரு நாளும் உழைப்பேன்.


    ஆளும் கன்சர்வேடிவ் கட்சி அலுவலகத்துக்கு ரிஷி சுனக் சென்றார். அப்போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு கட்சியினர் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நான் விரும்பும் கட்சிக்கும் என் நாட்டுக்கும் சேவையாற்றுவது எனது வாழ்வின் மிகப்பெரிய பாக்கியம்.

    எம்.பி.க்களின் ஆதரவை பெற்றதற்காகவும், கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டதற்காகவும் பெருமை அடைகிறேன்.

    இங்கிலாந்து மக்களுக்காக தொடர்ந்து ஒவ்வொரு நாளும் உழைப்பேன். நேர்மையுடனும் பணிவுடனும் உங்களுக்கு சேவை செய்வேன் என்று உறுதியளிக்கிறேன். இங்கிலாந்து ஒரு சிறந்த நாடு. ஆனால் நாம் ஆழமான பொருளாதார சவாலை எதிர்கொள்கிறோம். நமக்கு தற்போது ஸ்திரத்தன்மையும் ஒற்றுமையும் தேவை என்றார்.

    • பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்து விலகுவதாக போரிஸ் ஜான்சன் அறிவித்தார்.
    • ரிஷி சுனக் பிரிட்டனின் 57வது பிரதமராக பதவியேற்க உள்ளார்.

    லண்டன்:

    பிரிட்டனில் பொருளாதார நெருக்கடி, எரிபொருள் விலையை உயர்த்த திட்டம் மினி - பட்ஜெட் சர்ச்சை போன்ற காரணங்களால் பிரதமர் லிஸ் டிரஸ் கடந்த 20ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவர் மற்றும் நாட்டின் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகள் தொடங்கின.

    பிரதமர் பதவிக்கான போட்டியில் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்திய வம்சாவளி எம்.பி. ரிஷி சுனக் மற்றும் பென்னி மோர்டன்ட் ஆகியோர் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. பிரதமர் பதவிக்கான போட்டியில் களமிறங்குவதாக ரிஷி சுனக் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ரிஷி சுனக்கிற்கு கன்சர்வேட்டிவ் கட்சியில் 140க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் ஆதரவு அளித்தனர். இதேபோன்று போரிஸ் ஜான்சனும் போட்டியிடுவது குறித்து முறைப்படி அறிவிப்பார் என என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், பிரதமர் பதவிக்கு போட்டியிடப்போவதில்லை என்று போரிஸ் ஜான்சன் இன்று திடீரென அறிவித்தார். அதன்பின்னர், போதுமான எம்.பி.க்கள் ஆதரவு இல்லாத நிலையில், பென்னி மோர்டன்டும் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவர் ரிஷி சுனக்கிற்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறியிருந்தார்.

    இதையடுத்து கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும், பிரதமராகவும் ரிஷி சுனக் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு 190க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் ஆதரவு அளித்துள்ளனர். இதன்மூலம் பிரிட்டன் வரலாற்றில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் முதல் முறையாக பிரதமர் ஆகிறார். ரிஷி சுனக் பிரிட்டனின் 57வது பிரதமராக பதவியேற்க உள்ளார். 42 வயது நிரம்பிய ரிஷி சுனக், நாட்டின் இளம் வயது பிரதமர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். 

    • இங்கிலாந்து பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதாக ரிஷி சுனக் இன்று அறிவித்தார்.
    • ரிஷி சுனக் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி. என்பது குறிப்பிடத்தக்கது.

    லண்டன்:

    பொருளாதார நெருக்கடி, எரிபொருள் விலையை உயர்த்த திட்டம், மினி பட்ஜெட் சர்ச்சை போன்ற காரணங்களால் இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் கடந்த 20-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இதையடுத்து, ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவர் மற்றும் நாட்டின் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகள் தொடங்கி உள்ளன. பிரதமர் பதவிக்கான போட்டியில் இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், முன்னாள் நிதி மந்திரி ரிஷி சுனக் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ரிஷி சுனக்கிற்கு கன்சர்வேட்டிவ் கட்சியின் 100-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் ஆதரவளித்துள்ளனர்.

    இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான போட்டியில் களமிறங்கியுள்ள ரிஷி சுனக் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி. என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான போட்டியில் களமிறங்கியுள்ளதாக ரிஷி சுனக் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். பிரதமர் பதவி மற்றும் கன்சர்வேடிவ் கட்சி தலைவர் பதவிக்கு ரிஷி சுனக் போட்டியிடுகிறார்.

    பெரும்பாலான எம்.பி.க்களின் ஆதரவு ரிஷி சுனக்கிற்கு உள்ளதால் அவர் இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக அதிக வாய்ப்புள்ளது.

    • ரிஷி சுனக்கிற்கு தற்போது 55% வெற்றி வாய்ப்பு இருப்பதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
    • கட்சியை தன்னால் மட்டுமே காப்பாற்ற முடியும் என போரிஸ் ஜான்சன், கட்சி எம்.பி.க்களிடம் கூறியிருக்கிறார்.

    லண்டன்:

    பிரிட்டனில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பம் காரணமாக, பிரதமர் லிஸ் டிரஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இன்னும் ஒரு வாரத்தில் அடுத்த பிரதமர் தேர்வு செய்யப்பட உள்ளார். ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரே பிரதமராக நியமிக்கப்படுவார். தலைவர் பதவிக்கான போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், மக்களவை தலைவர் பென்னி மார்டண்ட் ஆகியோர் உள்ளனர். அநேகமாக அடுத்த வெள்ளிக்கிழமை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தற்போதைய சூழலில் அடுத்த பிரதமராக ரிஷி சுனக் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. ஏற்கனவே தேர்தலில் போட்டியிட்டு, லிஸ் டிரசிடம் தோல்வியைத் தழுவிய ரிஷி சுனக்கிற்கு தற்போது 55% வெற்றி வாய்ப்பு இருப்பதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

    ஆனால், ரிஷி சுனக்கை போட்டியில் இருந்து ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என்றும், லிஸ் டிரசுக்கு பதிலாக மீண்டும் தான் பிரதமர் ஆவதற்கு அனுமதிக்கவேண்டும் என்றும் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தி வருவதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. கட்சியை காப்பாற்றுவதற்காக இவ்வாறு அவர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    டிசம்பர் 2024-ல் நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலில் பின்னடைவை சந்திக்க உள்ள கட்சியை தன்னால் மட்டுமே காப்பாற்ற முடியும் என போரிஸ் ஜான்சன், கட்சி எம்.பி.க்களிடம் கூறியிருக்கிறார்.

    பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்துடன் இருக்கும் ஆளுங்கட்சிக்கு மக்கள் செல்வாக்கு குறைந்துவிட்டதாகக் கூறி எதிர்க்கட்சிகள், முன்கூட்டியே தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    • ரிஷி சுனக்கிற்கு தற்போது 55% வெற்றி வாய்ப்பு இருப்பதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
    • முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனும் தேர்தலில் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது.

    லண்டன்:

    பிரிட்டனில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பம் காரணமாக, பிரதமர் லிஸ் டிரஸ் இன்று தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். என்னை தேர்வு செய்ததற்கான இலக்கை அடைய முடியாததால் ராஜினாமா செய்கிறேன் என லிஸ் டிரஸ் கூறியிருக்கிறார். பதவியேற்ற 45 நாட்களில் தனது பதவியை ராஜினாமா செய்ததால், இங்கிலாந்தின் வரலாற்றில் மிகக்குறுகிய காலம் பதவியில் இருந்த பிரதமர் என்ற பெயரை லிஸ் டிரஸ் பெற்றுள்ளார். மேலும் இன்னும் ஒரு வாரத்தில் அடுத்த பிரதமர் தேர்வு செய்யப்படுவார் என லிஸ் டிரஸ் தெரிவித்துள்ளார்.

    இந்த சூழலில் தற்போது அடுத்த பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் தேர்வு செய்யப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த ஜெரேமி ஹண்ட், தான் தேர்தலில் போடியிடப் போவதில்லை என தெரிவித்துள்ளார். இன்னும் ஒரு வாரத்தில் பிரதமர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே தேர்தலில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கிற்கு தற்போது 55% வெற்றி வாய்ப்பு இருப்பதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

    லிஸ் ட்ரஸ் ராஜினாமா செய்வதற்கு முன்பு YouGov எனும் அமைப்பு கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது. அப்போது தற்போதைய நிலையில் பிரதமராக யாருக்கு ஆதரவு தெரிவிப்பீர்கள் என கன்சர்வேட்டிவ் கட்சியினரிடம் கேட்டனர். லிஸ் ட்ரஸ் மற்றும் ரிஷி சுனக் ஆகியோரை அடிப்படையாக கொண்டு கேட்கப்பட்ட இந்த கேள்விக்கு கருத்து தெரிவித்தவர்களில் 55 சதவீதம் பேர் ரிஷி சுனக்கிற்கு ஆதரவு தெரிவித்தனர். 25 சதவீதம் பேர் மட்டும் லிஸ் ட்ரசுக்கு ஆதரவாக இருந்தனர். இதனால் பிரிட்டனின் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு ரிஷி சுனக்கிற்கு உள்ளதாக அந்த கருத்து கணிப்பு தெரிவித்தது.

    அதே சமயம் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனும் தேர்தலில் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது. இவர்கள் தவிர கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த பென்னி மார்டண்ட், பாதுகாப்புத்துறை செயலாளர் பென் வாலஸ் ஆகியோரும் பிரதமர் தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளது. எனவே வேட்பாளர்கள் தொடர்பான அறிவிப்பு வெளியான பிறகே, வெற்றி வாய்ப்புகளை கணிக்கும் சாத்தியங்கள் ஏற்படும்.

    இருப்பினும் இந்த தேர்தலில் ரிஷி சுனக் வெற்றி பெற்றால், பிரிட்டனின் பிரதமராக பதவியேற்கும் முதல் இந்திய வம்சாவளி நபர் என்ற பெருமையை அவர் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பதவியேற்ற 45 நாட்களில் லிஸ் டிரஸ் பதவி விலகியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • இன்னும் ஒரு வாரத்தில் அடுத்த பிரதமர் தேர்வு செய்யப்படுவார் என லிஸ் டிரஸ் தெரிவித்தார்.

    லண்டன்:

    பிரிட்டனின் பிரதமராக கடந்த மாதம் பதவியேற்ற லிஸ் டிரஸ், வரி குறைப்புகளை ஆதரிக்கும் வகையில் திட்டங்களை வெளியிட்டார். மினி பட்ஜெட்டில் வரி குறைப்பு அறிவிக்கப்பட்டது. கடன் வாங்கி இதை சரிக்கட்டலாம் என தெரிவிக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு பிரதமரின் சொந்தக் கட்சி எம்.பி.க்கள் சிலர் அதிருப்தி தெரிவித்தனர்.

    நாட்டின் பொருளாதாரம் மோசமாக இருக்கும் நிலையில், இந்த திட்டத்தை பிரதமர் மறுபரிசீலனை செய்யவேண்டும் என கருத்து தெரிவித்தது பிரதமர் லிஸ் டிரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. அதன்பின்னர் நிதி மந்திரி குவாஸி குவார்டங்கை பதவியிலிருந்து அதிரடியாக நீக்கி பிரதமர் லிஸ் டிரஸ் உத்தரவிட்டார். ஜெரேமி ஹன்ட் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார்.

    இதையடுத்து இந்திய வம்சாவளி பெண்ணான சுவெல்லா பிரேவர்மென் உள்துறை மந்திரி பதவியில் இருந்து விலகினார். தான் ஒரு தவறு செய்து விட்டதாகவும், அரசு விதிகளை மீறி விட்டதாகவும் கூறிய அவர், பிரதமர் டிரஸ்சின் உத்தரவின் பேரிலேயே செயல்பட்டதாக கூறினார். அதன்பின்னர் முக்கிய பதவியில் உள்ளவர்கள் அடுத்தடுத்து பதவி விலகியுள்ளனர். இதனால் பிரதமர் லிஸ் டிரஸ்சுக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டது.

    இவ்வாறு அரசியல் மற்றும் பொருளாதார குழப்பம் நீடிக்கும் சூழ்நிலையில், பிரதமர் லிஸ் டிரஸ் இன்று தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். பதவியேற்ற 45 நாட்களில் அவர் பதவி விலகியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    என்னை தேர்வு செய்ததற்கான இலக்கை அடைய முடியாததால் ராஜினாமா செய்கிறேன் என லிஸ் டிரஸ் கூறியிருக்கிறார். இன்னும் ஒரு வாரத்தில் அடுத்த பிரதமர் தேர்வு செய்யப்படுவார் எனவும் தெரிவித்தார்.

    கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் போது தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என்பதை ஏற்றுக்கொண்ட டிரஸ், கட்சியின் நம்பிக்கையை இழந்துவிட்டதாக கூறினார். கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதை அறிவிப்பதற்காக மன்னரிடம் பேசியதாகவும் தெரிவித்தார்.

    • இந்திய வம்சாவளியான இங்கிலாந்து பெண் மந்திரி சுவெல்லா பிரேவர்மென் பதவி விலகியுள்ளார்.
    • ஒரு வாரத்திற்குள் லிஸ் டிரஸ்சின் அமைச்சரவையில் இருந்து பதவி விலகியுள்ள 2-வது மந்திரி இவர்.

    லண்டன்:

    இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட லிஸ் டிரஸ் அமைச்சரவையில், இந்திய வம்சாவளி பெண்ணான சுவெல்லா பிரேவர்மென் (42), உள்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டார். இவரது பெற்றோர் இருவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்.

    இந்நிலையில், ஒரு தவறு செய்து விட்டேன். அரசு விதிகளை மீறிவிட்டேன் எனக்கூறி அவர் மந்திரி பதவியில் இருந்து விலகியுள்ளார்.

    தனது பதவி விலகல் கடிதம் ஒன்றை லிஸ் டிரஸ்சுக்கு அனுப்பியுள்ளார். எனினும், பிரதமர் டிரஸ்சின் உத்தரவின் பேரிலேயே செயல்பட்டேன் என அவர் கூறியுள்ளார்.

    கடந்த 14-ம் தேதி நிதி மந்திரி பதவியில் இருந்து குவாசி வார்தெங் நீக்கப்பட்டு, ஜெரேமி ஹன்ட் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார்.

    ஒரு வாரத்திற்குள் லிஸ் டிரஸ்சின் அமைச்சரவையில் 2-வது மந்திரி பதவியில் இருந்து விலகி சென்றுள்ளார். அரசியல் மற்றும் பொருளாதார குழப்பம் நீடித்து வரும் சூழலில் அமைச்சரவையில் இருந்து பெண் மந்திரி வெளியேறி உள்ளார்.

    ×