search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊர்க்காவல் படை"

    ஊர்க்காவல்படையில் காலியாக உள்ள 63 பணியிடங்களுக்கு வருகிற 23 மற்றும் 24-ந் தேதிகளில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா தெரிவித்துள்ளார்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 55 ஆண்கள், 8 பெண்கள் என 63 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் நாளை (15-ந் தேதி) முதல் 21-ந் தேதி வரை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், சீதக்காதி- சேதுபதி விளையாட்டு அரங்கம் பின்புறமுள்ள மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படும்.

    வருகிற 23,24-ந் தேதிகளில் காலை 9 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஊர்காவல் படை வீரர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்பவர்கள் 18 வயதுக்கு மேல் 50 வயதிற்குள் நல்ல உடல் தகுதி பெற்றவராக இருக்க வேண்டும்.

    ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிப்பவராக இருக்க வேண்டும். விளையாட்டு வீரர், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்போருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    10-ம் வகுப்பு தேர்ச்சி, தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் 21-ந் தேதி மாலை 5 மணிக்கு முன், மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

    ஆதார் அட்டை, ரே‌ஷன் கார்டு. மாற்று சான்றிதழ், இரண்டு போட்டோ (பாஸ்போர்ட் சைஸ்)மதிப்பெண் பட்டியல் அசல் சான்று தேர்வு மையத்திற்கு கொண்டு வர வேண்டும். ஊர்க்காவல் படை வீரராக தேர்வு செய்யப்படுவோருக்கு காவல்துறை மூலம் 45 நாள் பயிற்சி அளிக்கப்படும். மாதத்திற்கு 5 நாள் மட்டும் பணி வழங்கப்படும். பணிபுரிந்த நாளுக்கு 560 வீதம் 5 நாட்களுக்கு மாதம் ரூ.2800 ஊதியம் வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #tamilnews
    தலைவாசல் அருகே ஊர்க்காவல் படையை சேர்ந்த இளம்பெண் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரை அடித்துக்கொன்று தூக்கில் தொங்கவிட்டதாக பாட்டி போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள காமக்காப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கவியரசன். ஆட்டோ டிரைவர். இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி செல்வமீனா (வயது 26). இவர்களுக்கு 6 வயதில் பெண் குழந்தை உள்ளது.

    தற்போது செல்வமீனா 2-மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் கரு எதிர்பாராதவிதமாக கலைந்து விட்டது. இதனால் கோபம் அடைந்த கவியரசன், மனைவியை அடித்ததாக கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த செல்வமீனா வலி தாங்க முடியாமல் கதறி அழுதார்.

    நேற்று இரவு வீட்டில் செல்வமீனா திடீரென தூக்கில் பிணமாக தொங்கினார். தலைவாசல் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையறிந்த அவரது பாட்டி வெள்ளையம்மான், தனது பேத்தி உடலை பார்த்து கதறி அழுதார். பின்னர் வெள்ளையம்மாள் தலைவாசல் போலீஸ் நிலையத்திற்கு சென்று, தனது பேத்தியை அடித்துக் கொன்று தூக்கில் தொங்க விட்டு இருக்கலாம். அவருடைய சாவில் சந்தேகம் உள்ளது.

    எனவே செல்வமீனா சாவில் இருக்கும் மர்மத்தை கண்டுபிடித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார், முதற்கட்டமாக மர்ம சாவு என்று வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் செல்வமீனா பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

    செல்வமீனா சிறு வயதாக இருக்கும்போது, அவரது தாய் இறந்து விட்டார். இதனால் செல்வமீனா தனது பாட்டி வெள்ளையம்மாளின் அரவணைப்பில் வாழ்ந்து வந்தார்.

    பள்ளிப்படிப்பை முடித்த பின் அவர் சேலம் மாவட்ட ஊர்க்காவல் படையில் சேர்ந்து பணியாற்றி வந்தார். கவியரசனும் அதே ஊர்க்காவல் படையில் தான் வேலை பார்த்து வந்தார். அப்போது தான் 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. ஒரே இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும்போது 2 பேரும் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

    இதையறிந்த ஊர்க்காவல் படை அதிகாரிகள், கவியரசனை பணியில் இருந்து நீக்கம் செய்தனர். இதனை தொடர்ந்து கவியரசன், செல்வமீனாவை திருமணம் செய்து கொண்டார்.

    இந்த நிலையில் செல்வமீனா திடீரென மர்மமான முறையில் இறந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

    காலமுறை ஊதியம் வழங்கி ஊர்க்காவல் படையினரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #AnbumaniRamadoss

    சென்னை:

    பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் ஊர்க் காவல்படை 1963-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போதிலிருந்து கடந்த 55 ஆண்டுகளாக காவல் துறையினருடன் இணைந்து போக்குவரத்து ஒழுங்கு படுத்துதல், திருவிழாக்களின் போது பாதுகாப்புப் பணி, அஞ்சல் பணி, காவல் வாகனங்கள் ஓட்டும் பணி உள்ளிட்டவற்றை ஊர்க் காவல் படையினர் சிரத்தையுடன் மேற்கொண்டு வருகின்றனர்.

    ஊர்க்காவல் படையினருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.152 வீதம் மாதத்திற்கு அதிகபட்சமாக ரூ.2800 ஊதியமாக வழங்கப்பட்டு வந்தது. ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று ஊர்க்காவல் படையினர் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவர்களின் ஊதியத்தை நாள் ஒன்றுக்கு ரூ.560 ஆக உயர்த்தி ஆணையிட்டது.

    இதன்மூலம் ஊர்க் காவல் படை வீரர்கள் அனுபவித்து வந்த பொருளாதார நெருக்கடிகள் அகலும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை கடந்த ஆண்டு நாள் ஒன்றுக்கு ரூ.560 ஆக உயர்த்திய தமிழக அரசு, அவர்களுக்கு அதிகாரப்பூர்வமாக வழங்கப்படும் பணி நாட்களின் எண்ணிக்கையை 25-லிருந்து 5 ஆக குறைந்து விட்டது.

    இதனால் அவர்களுக்கான தினக்கூலி 3 மடங்குக்கும் மேல் அதிகரித்தாலும் கூட மாத ஊதியம் ரூ.2800 என்ற அளவைத் தாண்டவில்லை. ஊர்க்காவல் படையினருக்கு அதிகாரப்பூர்வ பணி நாட்கள் 5 தான் என்றாலும் மாதத்தின் அனைத்து நாட்களும் பணிக்கு வரும்படி கட்டாயப்படுத்தப் படுகின்றனர்.

    கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஊர்க்காவல் படையினருக்கு ரூ.18,000 வரை மாத ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் அதில் ஆறில் ஒரு பங்கு கூட ஊதியமாக வழங்கப்படுவதில்லை.

    ஊர்க்காவல்படையை தமிழக காவல்துறையின் ஓர் அங்கமாக அறிவித்து, அதில் பணியாற்றும் அனைவரையும் காலமுறை ஊதியத்துடன் பணி நிலைப்பு செய்ய வேண்டும். அவர்களின் பணி அனுபவத்தைப் பொறுத்து பதவி உயர்வும் வழங்கப்பட வேண்டும்.

    தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படையைச் சேர்ந்தவர்கள் படிப்படியாக காவல்துறையில் சேர்க்கப்படுவதைப் போல ஊர்க் காவல்படை வீரர்களையும் குறிப்பிட்ட விகிதத்தில் காவல்துறையில் சேர்க்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

    இது குறித்த அறிவிப்புகளை இம்மாதம் 26-ந்தேதி நடைபெறவுள்ள காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளிக்கும் போது முதல்- அமைச்சர் வெளியிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    ×