search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "aadi amavasai"

    • முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தும், அதன்பின் சுவாமி தரிசனம் செய்தும் வழிபட்டனர்.
    • கோவிலில் அதிகளவில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.

    திருச்செந்தூர்:

    தமிழ் மாதங்களில் ஆடி மற்றும் தை மாதம் வரும் அமாவாசையானது முக்கிய விரத நாட்களாகும். இந்நாட்களில் இந்துக்கள் நதிக்கரை மற்றும் கடற்கரையில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவது வழக்கமாகும்.

    இந்த ஆண்டுக்கான ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து கால சந்தி பூஜையாகி தீர்த்தவாரி நடைபெற்றது.

    ஆடி அமாவாசையை முன்னிட்டு, அதிகாலையில் இருந்து ஏராளமானோர் கடலில் புனித நீராடி, தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தும், அதன்பின் சுவாமி தரிசனம் செய்தும் வழிபட்டனர். இதனால் கோவிலில் அதிகளவில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.

    • பக்தர்கள் அதிகாலையிலேயே அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடினர்.
    • அதிகாலை 3 மணிக்கே கோவில் நடை திறக்கப்பட்டது.

    ராமேசுவரம்:

    ஆடி மாத அமாவாசை நாள் என்பது முன்னோர்களை நினைத்து வழிபட உகந்த நாளாக கருதப்படுகிறது. ஆண்டின் அனைத்து மாதங்களிலும் அமாவாசை நாட்கள் வந்தாலும் தை அமாவாசை, புரட்டாசி மாதத்தில் வரும் மகாளாய அமாவாசை, ஆடி அமாவாசை போன்ற நாட்கள் இந்து சமயத்தை பொறுத் தவரை முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

    குறிப்பாக ஆடி மாதம் வரும் ஆடி அமாவாசை தினத்தில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது விசேஷமானதாக கருதப்படுகிறது.

    குறிப்பாக ஆற்றின் கரையிலோ, கடற்கரையிலோ முன்னோர்களை நினைத்து சிறிது எள்ளும், தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் செய்தாலே அவர்களது தாகமும், பசியும் அடங்கிவிடும் என்று புராணங்கள் கூறுகின்றன. அவ்வாறு வழிபாடு நடத் துவதால் முன்னோர்களின் அருளாசி கிடைப்பதுடன், நம் தலைமுறைகள் செழிக்கும் என்பதும் ஐதீகம்.

    அந்த வகையில் இந்த ஆண்டு இன்று ஆடி அமா வாசையாகும். அதாவது அமாவாசை திதியானது நேற்று மாலை 3.50 மணிக்கு தொடங்கி, இன்று மாலை 4.42 மணிக்கு முடிவடைகிறது. இதையொட்டி இன்று நீர்நிலை மற்றும் பல்வேறு கோவில்களில் பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    ஆடி அமாவாசையை முன்னிட்டு தென்னகத்து காசி என்று போற்றப்படும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். நேற்று முதலே பஸ், வேன், கார் உள்ளிட்ட வாகனங்களில் திரண்டனர். அவர்கள் இன்று அதிகாலையிலேயே அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடினர்.

    பின்னர் அவர்கள் மறைந்த தங்களுடைய தந்தை, தாயார், தாத்தா, பாட்டி, பாட்டனார், முப் பாட்டனார் உள்ளிட்டோ ரின் பெயர்களை கூறியும், நினைவில் இருந்த முன் னோர்களுக்கு புரோகிதர்கள் மூலம் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடி ராமநாத சுவாமி, பர்வத வர்த்தினி அம்பாளை வழி பட்டனர். முன்னதாக இன்று அதிகாலை 3 மணிக்கே கோவில் நடை திறக்கப்பட்டது.

    4 மணி வரை ஸ்படிக லிங்க தரிசனம் நடைபெற்று தொடர்ந்து வழக்கமான பூஜை நடைபெற்றது. வழக் கமாக பகல் 1 மணிக்கு நடை சாத்தப்படும். ஆடி அமாவாசையான இன்று நடை சாத்தப்படாது. இரவு 9 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும் என்றும், இன்று அதிகாலை முதல் இரவு வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்யவும், தீர்த்த நீராடவும் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கோவில் இணை ஆணையர் சிவராம் குமார் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே தற்போது ராமேசுவரம் கோவிலில் நடைபெற்று வரும் ஆடி திருக்கல்யாண திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக 7-வது நாளான இன்று (4-ந்தேதி, ஞாயிற்றுக்கிழமை) ஆடி அமாவாசையை முன்னிட்டு காலை 9 மணிக்கு அம்பாள் தங்கப்பல்லக்கிலும், பகல் 11 மணிக்கு ஸ்ரீ ராமபிரான் தங்க கருட வாகனத்தில் அக்னி தீர்த்த கடற்கரையில் தீர்த்தவாரி பூஜைக்கு எழுந் தருளும் நிகழ்ச்சியும் நடை பெற்றது.

    • ஆடி அமாவாசையும் ஆடி பெருக்கும் பூச நட்சத்திர தினத்தன்று வந்ததால், வழக்கத்தை விட திரளான பக்தர்கள் ஜோதி தரிசனத்தில் பங்கேற்றனர்.
    • வள்ளலார் சித்திபெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாக திருமாளிகையில், நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு வழிபாடும், மவுன தியானமும் நடைபெற்றது.

    வடலூர்:

    கடலூர் மாவட்டம் வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபை உள்ளது. இங்கு மாதந்தோறும் பூச நட்சத்திரத்தில் ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுவது வழக்கம். அதன்படி ஆடி மாத பூச நட்சத்திர தினத்தையொட்டி நேற்று இரவு 7.45 மணிக்கு 6 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் திரளானோர் கலந்து கொண்டு அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை, அருட்பெருஞ்ஜோதி என்ற வள்ளலாரின் மகாமந்திரத்தை உச்சரித்தவாறு ஜோதி தரிசனம் மேற்கொண்டனர்.

    ஆடி அமாவாசையும் ஆடி பெருக்கும் பூச நட்சத்திர தினத்தன்று வந்ததால், வழக்கத்தை விட திரளான பக்தர்கள் ஜோதி தரிசனத்தில் பங்கேற்றனர். தொடர்ந்து வள்ளலார் சித்திபெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாக திருமாளிகையில், நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு வழிபாடும், மவுன தியானமும் நடைபெற்றது.

    • அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1400 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
    • லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் 126 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    கூடலூர்:

    கேரளாவில் பருவமழை தீவிரம் அடைந்ததால் இடுக்கி மாவட்டத்தில் கனமழை பெய்தது. நீர்பிடிப்பு பகுதியில் பெய்த தொடர் மழையால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்தது.

    இந்த நிலையில் தற்போது மழை குறைந்துள்ளதால், அணைக்கு நீர்வரத்தும் சரிந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 131.55 அடியாக உள்ள நிலையில் வரத்து 2483 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1400 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 5059 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

    கனமழை பெய்ததால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடி வரை உயரும் என விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர். தற்போது கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நெல் சாகுபடி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மழை குறைந்ததால் அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழக பகுதிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் மூலம் லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் 126 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சுருளி அருவிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். மேலும் அமாவாசை உள்ளிட்ட தினங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.

    கடந்த 3 நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுருளி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து யானைகள் நடமாட்டம் காரணமாக 2 நாட்கள் தடை நீட்டிக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்தனர். இன்று ஆடி பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுருளி அருவியில் புனித நீராட வந்தனர்.

    ஆனால் தடை விதிக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். நாளை ஆடி அமாவாசை என்பதால் ஏராளமான பக்தர்கள் சுருளி அருவி மற்றும் முல்லைப்பெரியாற்றங்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள். எனவே நாளை சுருளி அருவிக்கு செல்ல அனுமதி வழங்கப்படுமா? என அவர்கள் எதிர்ப்பார்ப்புடன் உள்ளனர்.

    • 900 மீட்டர் உயரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது.
    • 3 நாட்களுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அருகில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் திருமூர்த்தி மலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய கடவுள்கள் ஒரே குன்றில் ஒன்றாக அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.

    அமணலிங்கேஸ்வரர் கோவிலின் அடிவாரத்தில் இருந்து சுமார் 900 மீட்டர் உயரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது. அருவியில் குளித்து மகிழவும் மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்யவும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் திருமூர்த்தி மலைக்கு வருகை தருகின்றனர்.

    அமணலிங்கேஸ்வரர் கோவிலில் அமாவாசை, கிருத்திகை, பிரதோஷம், மகாசிவராத்திரி உள்ளிட்ட விசேஷ நாட்களில் மும்மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. ஆனால் தை மற்றும் ஆடி மாதங்களில் வருகின்ற அமாவாசை நாட்கள் மிகவும் விசேஷமானது என்பதால் அன்றைய தினங்களில் பக்தர்கள் அதிகளவில் வருகை தருவார்கள்.

    அத்துடன் அமாவாசை விழாவில் கலந்து கொள்வதற்காக சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மற்றும் வெளிமாவட்ட பக்தர்கள் குதிரை மற்றும் மாட்டு வண்டிகளில் வருவதை பாரம்பரிய வழக்கமாக கொண்டு உள்ளார்கள்.

    அதுமட்டுமின்றி அமாவாசைக்கு முன்தினம் திருமூர்த்தி மலைக்கு மாட்டு வண்டிகளில் வருகின்ற பக்தர்கள் இரவு முழுவதும் கோவில் மற்றும் அணைப்பகுதியில் தங்கி கொள்கின்றனர். பின்னர் காலையில் எழுந்து அருவிக்கு சென்று குளித்துவிட்டு மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்கின்றனர். அதன் பின்னர் மறைந்த தங்களது முன்னோர்களுக்கு பாலாற்றின் கரையில் அமர்ந்து தர்ப்பணம் கொடுத்து விட்டு திரும்பிச் செல்வார்கள்.

    அந்த வகையில் இன்று திருமூர்த்தி மலையில் நடைபெற்ற ஆடிப்பெருக்கு வழிபாடு மற்றும் நாளை நடைபெற உள்ள ஆடி அமாவாசை விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று முதல் பக்தர்கள் மாட்டு வண்டிகளில் வந்து குவிந்தனர். களைப்படைந்த மாடுகளுக்கு பெருமாள் கோவில் அருகில் வண்டிகளுடன் ஓய்வு அளிக்கப்பட்டது. இதனால் திருமூர்த்தி மலை பகுதியில் மாட்டு வண்டிகள் அதிக அளவில் காணப்படுகிறது.

    ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு இன்று மற்றும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பக்தர்கள் அதிக அளவில் திருமூர்த்திமலைக்கு வருகை தருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இதனால் திருமூர்த்திமலை பகுதியில் 3 நாட்களுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான பணியில் உடுமலை சப்-டிவிஷனுக்கு உட்பட்ட போலீசாரும், ஊர்க்காவல் படையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

    • லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
    • மணிமுத்தாறு, அகஸ்தியர் அருவி செல்ல தடை.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் பிரசித்திபெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப் படும். இந்த ஆண்டு திருவிழா நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

    இதில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    ஆலங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் தங்களது குடும்பத்துடன், திருவிழாவை யொட்டி வனப்பகுதியில் குடில் அமைத்து அங்கேயே தங்குவார்கள். அப்போது பூக்குழி இறங்குதல், கிடா வெட்டு என பல்வேறு நேர்த்தி கடன்களை செலுத்தி வழிபடுவார்கள்.

    திருவிழாவையொட்டி கடந்த 31-ந் தேதி முதல் வருகிற 8-ந் தேதி வரை மணிமுத்தாறு, அகஸ்தியர் அருவி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் குடிலில் தங்குவதற்கு தேவையான பொருட்களை பக்தர்கள் எடுத்து செல்வதற்காக இன்று மட்டும் தனியார் வாகனங்களில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இதையொட்டி இன்று அதிகாலை 6 மணி முதலே வாகனங்களில் பொதுமக்கள் படையெடுக்கத் தொடங்கினர். இன்று 8 மணி அளவில் சுமார் 200 வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் பாபநாசம்-நெல்லை சாலையில் டானா பகுதியில் 2 கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தொடர்ந்து பக்தர்கள் வாகனங்களில் கோவிலுக்கு சென்ற வண்ணம் உள்ளனர். எனவே இன்னும் அதிக அளவிலான வாகனங்கள் செல்லும் என கூறப்படுகிறது. இந்த வாகனங்கள் இன்று மாலை 5 மணிக்குள் அங்கிருந்து வெளியேற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நாளை முதல் அரசு பஸ்களில் பக்தர்கள் செல்ல வனத்துறையும், மாவட்ட நிர்வாகமும் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கி உள்ளது.

    இதற்கிடையே திருவிழாவையொட்டி கோவில் வளாகத்தில் பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம், வனத்துறை, சிங்கை, கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர், மின்விளக்கு, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அங்கு செய்யப்பட்டுள்ளது.மேலும் தூய்மை பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் குடில்கள் அமைக்கப்படுகிறது. இதில் கோவில் நிர்வாகத்திடம் பக்தர்கள் பணம் செலுத்தி குடிலை வாடகைக்கு எடுத்து தங்கி கொள்ளலாம்.

    மேலும் 97 நிரந்தர கழிப்பறைகளும், 130 மொபைல் கழிப்பறைகளும் அமைக்கப்பட்டுள்ளது. 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 குடிநீர் தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் மின்விளக்கு வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

    • 12 மாத அமாவாசைகளுள் மிகச் சிறந்ததாக கருதப்படுகிறது.
    • ஏழைகளுக்கு உணவு, உடை, தானம் செய்யலாம்.

    ஒவ்வொரு மாதமும் சூரியனும், சந்திரனும் ஒரே நட்சத்திரத்தில் ஒன்று கூடி இருப்பதே அமாவாசை எனப்படுகிறது. வருகிற ஞாயிற்றுக்கிழமை (4-ந்தேதி) ஆடி அமாவாசை தினம்.

    சந்திரனின் சொந்த வீடான கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் ஆடி மாத அமாவாசை 12 மாத அமாவாசைகளுள் மிகச் சிறந்ததாக கருதப்படுகிறது. எனவே வருகிற ஞாயிற்றுக்கிழமை கோவிலுக்கு சென்று வழிபடுவது மிகவும் நல்லது.


    பொதுவாக ஆடி அமாவாசை தினத்தன்று மூன்று விஷயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. அவை....

    1. புனித நீராடல்

    2. தானம்

    3. தர்ப்பணம்

    இந்த மூன்றையும் ஒவ்வொருவரும் செய்ய வேண்டும்.

    தமிழ்நாட்டின் பல பகுதிகளில் புனித நதிகள், புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. தங்கள் சந்ததிகள் நலமுடனும், வளமுடனும் வாழ சிறப்பு மிக்க தீர்த்தங்களை நமது முன்னோர்கள் பல இடங்களில் கண்டுபிடித்து நமக்கு அளித்துள்ளார்கள்.

    இந்த தீர்த்தங்களின் சிறப்பை உணர்ந்து, நாம் அங்கு புனித நீராட வேண்டும் என்பதற்காகவே, இந்த தீர்த்தங்கள் உள்ள இடங்களில் ஆலயங்களை கட்டினார்கள். ஆலயத்தையும் தீர்த்தத்தையும் ஒன்றுபடுத்தியதன் மூலம் பல நூற்றாண்டுகளாக தீர்த்தங்களின் புனிதம் போற்றப்பட்டு வருகிறது.

    தீர்த்தங்கள் என்பது வெறும் தண்ணீர் மட்டுமல்ல. அதில் மகத்துவம் நிறைந்துள்ளது. நமது நாகரிகத்தின் ஒட்டுமொத்த பண்பாடும் அதில் அடங்கியுள்ளது.

    பஞ்ச பூதங்களில் ஒன்றான இந்த தீர்த்தங்கள் அமாவாசை தினத்தில் இரட்டிப்பு சக்தி பெற்றதாக இருக்கும். எனவே 4-ந்தேதி நாம் புனித நதியிலும், புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடி இறைவழிபாடு செய்தால் அளவற்ற பலன்களை நிச்சயம் பெறலாம். இந்த தீர்த்தக்கரைகளில் பித்ருதர்ப்பணம் செய்வது மேலும் சிறப்பைத் தரும்.


    அடுத்து, தானம்...

    உங்களால் என்ன தானம் செய்ய முடிகிறதோ அதை வருகிற ஞாயிற்றுக்கிழமை செய்யுங்கள். நாட்டில் எத்தனையோபேர் அத்தியாவசியப் பொருட்கள் இல்லாமல் ஏக்கத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உங்கள் சக்திக்கு ஏற்ப அவர்களுக்கு உதவலாம்.

    ஏழைகளுக்கு உணவு, உடை, தானம் செய்யலாம். நீங்கள் செய்யும் தானம் ஏழை - எளிய மக்களின் மனதில் மகிழ்ச்சியையும், குளிர்ச்சியையும் ஏற்படுத்த வேண்டும். அந்த மகிழ்ச்சி உங்கள் குடும்பத்தில் அமைதியை ஏற்படுத்தும். குலம் செழிக்க கைக் கொடுக்கும்.


    இதையடுத்து தர்ப்பணம்...

    நாம் ஒவ்வொருவரும் மறக்காமல் மறைந்த நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். ஆண்டுக்கு ஒரு தடவை திதி கொடுத்தாலும் வருகிற ஞாயிற்றுக்கிழமை மறக்காமல் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

    இந்த ஆண்டு ஆடி அமாவாசை நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாலை 4.56 மணிக்கு தொடங்குகிறது. ஞாயிற்றுக்கிழமை 5.32 மணி வரை அமாவாசை திதி நேரம் தான். எனவே ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலேயே தர்ப்பணம் செய்து கடமைகளை நிறைவேற்றலாம்.

    நாம் கொடுக்கும் எள்ளும் தண்ணீரும் தான் அவர்களுக்கு உணவு, நம்மை சீராட்டி, பாராட்டி வளர்த்த நம் முன்னோர்களை நாம் பட்டினி போடலாமா? அது எவ்வளவு பெரிய பாவம்? இந்த பாவ மூட்டைகளை நீக்க 4-ந்தேதி மறக்காமல் தர்ப்பணம் கொடுங்கள்.

    சீரும் சிறப்பும் பெற்று நாம் வாழ்வதிலும் நோய் நொடி இன்றி சுகத்துடன் இருப்பதற்கும் எத்துறையிலும் முன்னேற்றம் காண்பதற்கும் ஆடி அமாவாசை தினத்தன்று ஆத்ம தர்ப்பணம் செய்து அவர்களை நினைவு கூற வேண்டும்.

    முக்கியமாக தாய் தந்தையர்களை இழந்தவர்கள் இதில் பெரும் பங்கெடுத்து கடமைகளை செய்ய வேண்டும் மற்றும் தாத்தா, பாட்டி, மாமனார், மாமியார் சுற்றத்தவர்கள் என நம்மை விட்டு அமரர்களாகிய அனைவருக்கும் இதுபோற்றி வணங்கத்தக்க நாளாகும்.

    அப்பா, அம்மா, உறவு என அனைவருக்கும் நீத்தார் கடன் செய்யத் தவறியவர்கள் சந்தர்ப்ப சூழ்நிலையால் செய்ய முடியாதவர்கள் இறந்த காலங்களில் ஒருமாத கால முடிவில் தீட்டு துடக்கு முடிந்த பின் பிதுர் கடன் செய்ய முடியாதவர்கள் இந்த ஆடி அமாவாசை நாளில் ஒவ்வொரு வருடமும் தர்ப்பணம் செய்தல் அவசியமாகும்.

    • மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் மட்டும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
    • மலையடிவாரத்திலும் கோவில் பகுதியிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு அகஸ்தியர் உட்பட 18 சித்தர்களும் வாழ்ந்து வழிபட்டதாக பக்தர்களால் நம்பப்படுகிறது.

    சதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்கமும், இரட்டை லிங்கமும் சுயம்பு லிங்கமாகவும், சுந்தரமூர்த்தி ஆரிட லிங்கமாகவும், சந்தன மகாலிங்கம் தைவீக லிங்கமாகவும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

    பல்வேறு சிறப்புகளை கொண்ட இக்கோவிலுக்கு பக்தர்கள் செல்ல மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் மட்டும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    வருகிற 4-ந்தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று (1-ந்தேதி) முதல் வருகிற 5-ந்தேதி வரை சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    ஆடி பிரதோஷமான இன்று சதுரகிரி மலை ஏறி சாமி தரிசனம் செய்ய நேற்று இரவு முதல் விருதுநகர், மதுரை, நெல்லை, திருச்சி, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் இருந்து ஏராளமான பஸ், வேன், கார்களில் வந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் நேற்று இரவு மலையடிவாரத்தில் அமைக்கப்பட்டிருந்த கொட்டகையில் தங்கினார்.

    இன்று அதிகாலை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மலை ஏறுவதற்காக தாணிப்பாறை கேட் முன்பு கூடினர். காலை 5.30 மணி அளவில் பக்தர்களின் உடைமைகள் தீவிர சோதனை செய்யப்பட்டு மலையேற அனுமதிக்கப்பட்டனர். சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பக்தி கோஷமிட்டு ஆர்வத்துடன் மலை ஏறினர். சுமார் 3 மணி நேரம் மலையேறி சுந்தர சந்தன மகாலிங்கத்தை தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.

    மலைப்பாதைகளில் வனச்சரகர் பிரபாகரன் தலைமையில் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கோவில் மற்றும் மலை அடிவாரப் பகுதிகளில் ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி. முகேஷ் ஜெயக்குமார், வத்திராயிருப்பு இன்ஸ்பெக்டர் மாரியப்பன், சப்-இன்ஸ்பெக்டர் விஜய் சண்முகநாதன் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    மலையடிவாரத்திலும் கோவில் பகுதியிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது. ஆடி அமாவாசை முன்னிட்டு முதல் நாளான இன்று வழக்கத்தை விட ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரிக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். இன்னும் 4 நாட்கள் இருப்பதால் பக்தர்கள் கூட்டம் பன்மடங்கு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை விதித்துள்ளது.
    • பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. சித்தர்களின் பூமி சிவகிரி என அழைக்கப்படும் சதுரகிரிக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    சதுரகிரி கோவிலில் வருடந்தோறும் ஆடி அமாவாசை திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு வருகிற 4-ந்தேதி ஆடி அமாவாசை ஆகும். இதனை முன்னிட்டு வருகிற 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை பக்தர்கள் சதுரகிரி மலையேறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

    வழக்கமாக 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் தரிசனம் செய்ய ஏதுவாக இந்த முறை 5 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலைமேல் உள்ள கோவில் மற்றும் அடிவார பகுதிகளில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் தாணிப்பாறைக்கு மதுரை, விருதுநகர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, திருமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

    இதற்காக தாணிப்பாறையில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மலைஏறும் பக்தர்கள் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை எடுத்து செல்ல கூடாது. 10 வயதிற்கு மேற்பட்டவர்கள், 60 வயதிற்குட்பட்டவர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை விதித்துள்ளது. ஆடி அமாவாசைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்ப்பார்ப்பதால் அதற்கேற்ப போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    • ஆடி மாதம் பௌர்ணமி அன்று அம்மன் ஆலயங்களில் விசேஷ வழிபாடுகள் நடக்கும்.
    • ஹயக்ரீவரை வழிபட்டால், பிள்ளைகள் கல்வியில் ஜொலிப்பார்கள்.

    ஆடி அமாவாசை

    தட்சிணாயண புண்ணிய காலத்தில் வரும் முதல் அமாவாசை ஆடி அமாவாசையாகும்.

    எனவே இந்த அமாவாசை மிக முக்கியம்.

    சிறப்பான இந்த ஆடி அமாவாசை தினத்தில் பெண்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷமானது.

    பெண்கள் அன்று கடலில் புனித நீராடி பித்ரு வழிபாடுகள் செய்தால் அதிக பலன்களைப் பெற முடியும்.

    ஆடி அமாவாசை தர்ப்பணத்தை ஆண்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்றில்லை.

    பெண்களும் இந்த வழிபாட்டை செய்யலாம்.

    கல்வியில் ஜொலிப்பார்கள்

    ஆடி பவுர்ணமி

    ஆடி மாதம் பௌர்ணமி தினமும் விசேஷமானதுதான்.

    அன்று அம்மன் ஆலயங்களில் விசேஷ வழிபாடுகள் நடக்கும்.

    ஞானக் கடவுளாம் ஹயக்ரீவர் அவதரித்தது ஆடி பவுர்ணமி என்பதால், அன்று அவரை வழிபடுவதால் அஞ்ஞானம் நீங்கும்

    பிள்ளைகள் கல்வியில் ஜொலிப்பார்கள்.

    • ஆடி அமாவாசை தினத்தையொட்டி குலசேகரநாதர் சுவாமி கோவிலில் பத்திரதீப விழா நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் செங்கோட்டை சுற்று வட்டார பகுதி மக்கள் கலந்து கொண்டு தீபங்கள் ஏற்றி வழிப்பட்டனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை குலசேகரநாதர் சுவாமி கோவிலில் ஆடி அமாவாசை தினத்தையொட்டி பத்திரதீப விழா நடைபெற்றது. காலையில் மகா கணபதி ஹோமம், மூலஸ்தானத்தில் ருத்திர ஜெபம், சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் நடந்தது. மாலையில் கோவில் உள்வளாகத்தில் பத்திரதீபம் விளக்கு தீபம் ஏற்றப்பட்டது. சுவாமி சன்னதி, அம்மன் சன்னதியில் பக்தி உலா நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் செங்கோட்டை சுற்று வட்டார பகுதி மக்கள் கலந்து கொண்டு தீபங்கள் ஏற்றி வழிப்பட்டனர். இரவில் சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் 4 ரதவீதி களிலும் உலா வந்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப் பட்டது. ஏற்பாடு களை மண்டகப் படிதாரர்கள் செய்திருந்த னர்.

    • ஊஞ்சல் உற்சவத்தை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    மேல்மலையனூர்:

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது.

    இங்கு ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று ஊஞ்சல் உற்சவம் நடந்து வருகிறது. நேற்று இரவு ஆடி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

    இதை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கும் சிவபெருமானுக்கும் பால், தயிர், சந்தனம், மஞ்சள், விபூதி, இளநீர், பஞ்சாமிர்தம், தேன், பன்னீர் உள்ளிட்ட பூஜைப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.

    உற்சவர் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு பலவித மலர்களை கொண்டு மகா சர்வ ராஜ்ய தாயினி அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் காட்சி அளித்தார். இரவு 10.30 மணிக்கு மேளதாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக உற்சவர் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். அப்போது ஊஞ்சல் மண்டபம் எதிரில் இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அங்காளம்மா... அங்காளம்மா... என கரகோஷத்துடன தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர்.

    தொடர்ந்து கோவில் பூசாரிகள் பக்திப் பாடல்களைப் பாடினர். இரவு 11.30 மணியளவில் தாலாட்டுப் பாடல்கள் பாடி அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. பின்னர் பூக்கள் மற்றும் குங்குமத்தால் அர்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதையடுத்து உற்சவர் அங்காள பரமேஸ்வரி அம்மனை கோவில் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். ஊஞ்சல் உற்சவத்தில் மாவட்ட கலெக்ட பழனி, திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவிதேஜா மற்றும் விழுப்புரம், கடலூர், சேலம், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, ஆகிய மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மேல்மலையனூர் ஜீவானந்தம், அறங்காவலர் குழுத்தலைவர் செந்தில்குமார், பூசாரி, அறங்காவலர்கள் தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி, சந்தானம் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    ஊஞ்சல் உற்சவத்தை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    ×