search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cauvery water issue"

    • சட்டசபை கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
    • தமிழகத்துக்கு காவிரி நீரை பெற்றுத்தர தேவைப்பட்டால் சுப்ரீம் கோர்ட்டை அணுகுவது என முடிவு செய்யப்பட்டது.

    சென்னை:

    காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரையின்படி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடகா அரசு அறிவித்துள்ளது. இது குறித்து விவாதிக்க அனைத்து தமிழக சட்டசபை கட்சித்தலைவர்கள் கூட்டம் ஜூலை 16-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், காவிரி நீரைப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டசபை கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.

    இதில் அ.தி.மு.க. சார்பில் எஸ்.பி.வேலுமணி, ஓ.எஸ்.மணியன் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் செல்வப் பெருத்தகை, பா.ஜ.க. சார்பில் கரு.நாகராஜன், கருப்பு முருகானந்தம், பா.ம.க. சார்பில் ஜி.கே.மணி, மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஜவாஹிருல்லா, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் வேல்முருகன் மற்றும் ம.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

    இந்தக் கூட்டத்தில் கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கர்நாடக அரசு உரிய நீரை திறந்து விடாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திற்கு நீரை திறந்து விடாத கர்நாடக அரசின் முடிவை ஏற்க முடியாது. காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டை நாடி சட்டப்போராட்டம் நடத்தப்படும் என்றார்.

    இதையடுத்து, கர்நாடகாவிடம் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீரை பெற்றுத் தருவதற்கு தேவைப்பட்டால் சுப்ரீம் கோர்ட்டை அணுகுவது என முடிவு செய்யப்பட்டது.

    மேலும், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவுப்படி தினமும் ஒரு டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    காவிரி நடுவர்மன்றம் மற்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவுகளுக்கு இணங்க கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட வேண்டும் என மற்றொரு தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது.

    • கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.
    • அடுத்த கட்டமாக எந்த மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு காவிரி நீரை பெறலாம்? என்பது பற்றி கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது

    சென்னை:

    காவிரியில் இருந்து கர்நாடக அரசு தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரை முறையாக வழங்குவதை முறைப்படுத்துவதற்காக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

    கடந்த 2018-ம் ஆண்டு முதல் இந்த அமைப்புகள் செயல்பட்டு வரும் நிலையில் தமிழகத்துக்கு காவிரி தண்ணீரை திறந்து விடுவது தொடர்பாக மேற்கண்ட அமைப்புகள் பிறப்பிக்கும் உத்தரவை கர்நாடக அரசு மதிக்காமலேயே இருந்து வருகிறது.

    தென்மேற்கு பருவமழை காலத்தில் கர்நாடக அணைகளில் உள்ள நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தை கருத்தில் கொண்டு தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும். இது தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு ஆகிய 2 அமைப்புகளும் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரை கணக்கிட்டு கடந்த 12.7.2024 முதல் 31.7.2024 வரையில் நாள் ஒன்றுக்கு ஒரு டி.எம்.சி. என்ற கணக்கில் விடுவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளன.

    ஆனால் இதனை கர்நாடக அரசு ஏற்க மறுத்து விட்டது. இது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறும் வகையில் அமைந்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். காவிரியில் தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை திறந்து விடாத கர்நாடக அரசின் செயல் தமிழக விவசாயிகளை வஞ்சிப்பதாகும் என்று தமிழக அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

    இதைத் தொடர்ந்து காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை பெறுவதற்கு தமிழக அரசு அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

    இதன்படி அனைத்து கட்சிகளின் சட்டமன்ற கட்சி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தை நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை அனைத்து கட்சிகளின் சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் தொடங்கியது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.

    இந்த கூட்டத்தில் அ.தி. மு.க. சார்பில் எஸ்.பி. வேலுமணி, ஓ.எஸ்.மணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் ராஜேஸ் குமார், பா.ஜ.க. சார்பில் கரு. நாகராஜன், கருப்பு முருகானந்தம், பா.ம.க. சார்பில் ஜி.கே.மணி, மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஜவாஹிருல்லா, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் வேல்முருகன் மற்றும் ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

    அடுத்த கட்டமாக எந்த மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு காவிரி நீரை பெறலாம்? என்பது பற்றி கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

    இது தொடர்பாக உரிய முடிவுகளை எடுத்து அதனை தமிழக அரசு விரைவில் செயல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • நாளொன்றுக்கு ஒரு டிஎம்சி நீரை தமிழ்நாட்டுக்கு விடுவிக்க வேண்டும் என்று CWRC அமைப்பு ஆணையிட்டது.
    • தமிழ்நாட்டிற்கு விடுவிக்க வேண்டிய நீரை விடுவிக்க இயலாது என்று கர்நாடக அரசு தெரிவித்தது.

    சென்னை:

    காவிரி நடுவர் மன்றம் 05.02.2007 அன்று அளித்த இறுதி ஆணையினையும், உச்சநீதிமன்றத்தின் 16.02.2018 தேதியிட்ட தீர்ப்பினையும், செயல்படுத்த, CWMA மற்றும் CWRC ஆகிய அமைப்புகளை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, 2018 ஆம் ஆண்டு ஜூன் முதல் இவ்வமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த தீர்ப்புகளின் படி தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய நீரை சென்ற ஆண்டில் கர்நாடக அரசு விடுவிக்காததால், வேளாண் பெருமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை நாடி நீரைப் பெற்றது.

    தற்போதைய தென்மேற்குப் பருவமழைக் காலத்தில், கர்நாடக அணைகளின் நீர்வரத்தை கணக்கில் கொண்டு காவிரி நீர் ஒழுங்காற்று குழு (CWRC) மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) ஆகிய அமைப்புகள் தமிழ்நாட்டிற்கு பில்லிகுண்டுலுவில் கிடைக்க வேண்டிய நீரினை கணக்கிட்டு 12.07.2024 முதல் 31.07.2024 வரை நாளொன்றுக்கு ஒரு டிஎம்சி நீரை விடுவிக்க வேண்டும் என்று CWRC அமைப்பு ஆணையிட்டது. இந்த நிலையில், தமிழ்நாட்டிற்கு விடுவிக்க வேண்டிய நீரை விடுவிக்க இயலாது என்று கர்நாடக அரசு தெரிவித்தது.

    தமிழ்நாட்டிற்கு நீர் வழங்க முடியாது என்று கர்நாடக அரசு கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என முக ஸ்டாலின் கூறினார். மேலும் தமிழக விவசாயிகளின் நலனை பாதிக்கக்கூடிய இத்தகைய செயல்களை தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.

    காவிரி நீரைப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தை நாளை (16.07.2024) காலை 11.00 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெறும்.

    இக்கூட்டத்தில் அனைவரையும் கலந்தாலோசித்து, சட்ட வல்லுநர்களின் கருத்துக்களைப் பெற்று, தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும் என முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் இந்த அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அதிமுக கலந்து கொள்ளும் என எதிர்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    அதிமுக தரப்பில் டெல்டாவைச் சேர்ந்த எம்.எல்.ஏ., முக்கிய நிர்வாகி கலந்துகொள்வார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

    • CWRC ஆணையின்படி நீரை விடுவிக்காத கர்நாடகத்தின் செயல் உச்சநீதிமன்றத்தின் ஆணையை மீறுவதாகும்.
    • CWRC அமைப்பின் ஆணையின்படி வரையறுக்கப்பட்டுள்ள நீரை கர்நாடகா நீர் தர மறுப்பது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    காவிரி நடுவர் மன்றம் 05.02.2007 அன்று அளித்த இறுதி ஆணையினையும், உச்சநீதிமன்றத்தின் 16.02.2018 தேதியிட்ட தீர்ப்பினையும், செயல்படுத்த, CWMA மற்றும் CWRC ஆகிய அமைப்புகளை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, 2018 ஆம் ஆண்டு ஜூன் முதல் இவ்வமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த தீர்ப்புகளின் படி தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய நீரை சென்ற ஆண்டில் கர்நாடக அரசு விடுவிக்காததால், வேளாண் பெருமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை நாடி நீரைப் பெற்றது.

    தற்போதைய தென்மேற்குப் பருவமழைக் காலத்தில், கர்நாடக அணைகளின் நீர்வரத்தை கணக்கில் கொண்டு காவிரி நீர் ஒழுங்காற்று குழு (CWRC) மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) ஆகிய அமைப்புகள் தமிழ்நாட்டிற்கு பில்லிகுண்டுலுவில் கிடைக்க வேண்டிய நீரினை கணக்கிட்டு 12.07.2024 முதல் 31.07.2024 வரை நாளொன்றுக்கு ஒரு டிஎம்சி நீரை விடுவிக்க வேண்டும் என்று CWRC அமைப்பு ஆணையிட்டுள்ளது.

    இந்த நிலையில், இந்த ஆணைப்படி தமிழ்நாட்டிற்கு விடுவிக்க வேண்டிய நீரை விடுவிக்க இயலாது என்று கர்நாடக அரசு தெரிவித்து இருப்பது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. இந்த ஆணையை உடனடியாக செயல்படுத்திட தமிழ்நாடு அரசு CWMA அமைப்பிற்கு கடிதம் எழுதியுள்ளது. இவ்வாறு CWRC ஆணையின்படி நீரை விடுவிக்காத கர்நாடகத்தின் செயல் உச்சநீதிமன்றத்தின் ஆணையை மீறுவதாகும்.

    இன்றைய அளவில் (15.07.2024) கர்நாடகாவின் 4 முக்கிய அணைகளின் நீர் இருப்பு 75.586 டி.எம்.சி. ஆகும். மேலும், IMD யின்

    அறிக்கையின்படி மழை சரியான அளவில் பெய்ய வாய்ப்புள்ளது. மேட்டூர் அணையில் வெறும் 13.808 டிஎம்சி அளவிற்கு மட்டுமே நீர் உள்ளது. இந்தச் சூழலில், CWRC அமைப்பின் ஆணையின்படி வரையறுக்கப்பட்டுள்ள நீரை கர்நாடகா நீர் தர மறுப்பது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும்.

    இவ்வாறு, தமிழ்நாட்டிற்கு நீர் வழங்க முடியாது என்று கர்நாடக அரசு கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக விவசாயிகளின் நலனை பாதிக்கக்கூடிய இத்தகைய செயல்களை தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. காவிரி நீரைப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தை நாளை (16.07.2024) காலை 11.00 மணிக்கு தலைமைச் செயலகத்தில் கூட்டிட ஆணையிட்டுள்ளேன்.

    இக்கூட்டத்தில் அனைவரையும் கலந்தாலோசித்து, சட்ட வல்லுநர்களின் கருத்துக்களைப் பெற்று, தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும் என கூறியுள்ளார்.

    • கர்நாடக அணைகளில் 77 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. தினமும் 3.15 டி.எம்.சி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
    • கர்நாடகத்தின் அநீதியை தமிழக அரசு இனியும் கைகட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக தினமும் ஒரு டி.எம்.சி (வினாடிக்கு 11,500 கன அடி) தண்ணீரை திறந்து விடும்படி காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு ஆணையிட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு காவிரியில் வினாடிக்கு 8000 கன அடி மட்டுமே தண்ணீர் திறக்கப்படும் என்று பெங்களூருவில் நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு பிறகு கர்நாடக முதல்-அமைச்சர் சித்தராமையா அறிவித்திருக்கிறார். கர்நாடக அரசின் இந்த நியாயமற்ற முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது.

    கபினி அணைக்கு வரும் தண்ணீரை இனி ஒரு மணி நேரம் கூட அணையில் தேக்கி வைக்க முடியாது என்பதால் தான் அணைக்கு வரும் தண்ணீரில் வினாடிக்கு 8000 கன அடி தண்ணீரை திறந்து விட்டு, மீதமுள்ள நீரை தனது பாசனத் தேவைக்காக கர்நாடகம் பயன்படுத்திக் கொள்கிறது. இப்போதும் தமிழ்நாட்டை தனது வடிகாலாகத்தான் கர்நாடகம் பயன்படுத்திக் கொள்கிறதே தவிர, தமிழகத்திற்கு மனமுவந்து தண்ணீர் வழங்கவில்லை.

    கர்நாடக அணைகளில் 77 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. தினமும் 3.15 டி.எம்.சி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஆனாலும், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வழங்க கர்நாடக அரசு மறுக்கிறது. இதைக் கண்டிக்க வேண்டும் என்ற குறைந்தபட்ச அக்கறை கூட இல்லாமல் தமிழக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. காவிரியில் தமிழ்நாட்டிற்கு உரிய உரிமைகளை தி.மு.க. அரசு எந்த அளவுக்கு தாரை வார்த்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு இது தான் வருந்தத்தக்க எடுத்துக்காட்டு ஆகும்.

    கர்நாடகத்தின் அநீதியை தமிழக அரசு இனியும் கைகட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தை அடுத்த இரு நாட்களுக்குள் கூட்டி, தமிழகத்திற்கு கர்நாடக அரசு திறந்து விட வேண்டிய தண்ணீரின் அளவை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்த வேண்டும். அதையும் கர்நாடகம் மதிக்காவிட்டால், தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 20,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க ஆணையிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • கர்நாடக அரசிடம் பேசவோ அல்லது அழுத்தம் கொடுக்கவோ தி.மு.க. முன்வராதது கடும் கண்டனத்திற்குரியது.
    • உரிமைக்கு குரல் கொடுக்காமல் மவுனம் சாதிப்பது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயல்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு டெல்டா விவசாயிகள் குறுவை, சம்பா, தாளடி பருவ நெல் சாகுபடியினை மேற்கொள்ளும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப்படுவதும், ஜனவரி 28-ந்தேதி நீர்திறப்பு நிறுத்தப்படுவதும் வழக்கம். மேட்டூர் அணையின் நீர் இருப்பு குறைந்தபட்சம் 90 டி.எம்.சி. இருந்தால், ஜூன் மாதம் 12-ந்தேதி நீர் திறக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது.

    இந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற காவேரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில், ஜூலை 31-ந் தேதி வரை தினமும் ஒரு டி.எம்.சி. நீரை தமிழ்நாட்டிற்கு திறந்துவிட உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டிற்கு ஒரு டி.எம்.சி. நீரைக்கூட திறந்துவிட முடியாது என்று கர்நாடக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இது கடும் கண்டனத்திற்குரியது. கர்நாடக முதலமைச்சரின் இந்தப் பேச்சு உச்சநீதிமன்றத்தினை அவமதிப்பதாகும்.

    இருப்பினும், இது குறித்து கர்நாடக அரசிடம் பேசவோ அல்லது அழுத்தம் கொடுக்கவோ தி.மு.க. முன்வராதது கடும் கண்டனத்திற்குரியது. 'உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம்' என்று சொல்லிக் கொண்டு, உரிமைக்கு குரல் கொடுக்காமல் மவுனம் சாதிப்பது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயல்.

    தமிழக விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, முதலமைச்சர் கர்நாடக முதலமைச்சருடன் உடனடியாக பேசி, காவேரி ஒழுங்காற்றுக் குழு வினுடைய உத்தரவினை நடைமுறைப்படுத்த வேண்டுமென்று கேட்டுக கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • குஜராத் கடற்பகுதியில் அதிகமான அளவில் போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
    • இந்தியாவில் மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் போதைப் பொருளால் பாழடைவதற்கு பா.ஜ.க. தான் காரணம்.

    சென்னை:

    சென்னை தேனாம் பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது :-

    ரூ.5 லட்சம் கோடி மதிப்புள்ள போதைப் பொருள் மாயமாகி இருக்கிறது. இதுகுறித்து உள்துறை அமைச்சகம் 4 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இதுகுறித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழ்நாட்டில் உள்ள பாஜக தலைவர்களும் ஏன் வாய் திறக்கவில்லை.

    குஜராத் கடற்பகுதியில் அதிகமான அளவில் போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.


    இந்தியாவில் மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் போதைப் பொருளால் பாழடைவதற்கு பா.ஜ.க. தான் காரணம். தமிழ்நாட்டில் உள்ள ஒருவர் போதைப்பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்டதை மட்டும் பேசும் பா.ஜ.க. இதுகுறித்தும் பேசவேண்டும்.

    காவிரி விவகாரத்தை அரசியலுக்காக கர்நாடக காங்கிரஸ் பேசி வருகிறது. கர்நாடகா காங்கிரஸ் கட்சிக்கு எதிராக நாங்கள் போராட தயாராக இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக, காமராஜர் அரங்கத்தின் முகப்பில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் பொருளாளர் ரூபி மனோகரன், துணைத் தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன், பொதுச்செயலாளர் தளபதி பாஸ்கர், எஸ்.ஏ.வாசு, மாவட்ட தலைவர்கள் சிவ ராஜசேகரன், எம்.ஏ.முத்தழகன், எம்.எஸ்.திரவியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குடிநீர் தட்டுப்பாட்டை போக்க எந்த விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் காங்கிரஸ் அரசு எடுக்கவில்லை.
    • பெங்களூருவில் இப்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடி முழுக்க முழுக்க கர்நாடக காங்கிரஸ் அரசின் நிர்வாகத் தோல்வி.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,

    உலகின் முன்னணி பெரு நகரங்களில் ஒன்றான பெங்களூருவில் தற்போது கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    தண்ணீர் இல்லாததால் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை, வீட்டில் இருந்தே பணி செய்ய அறிவுறுத்தியுள்ளது. ஆனால், வீட்டிலும் தண்ணீர் இல்லாததால், வேலை செய்ய முடியாமல் ஊழியர்கள் தவித்து வருகின்றனர். கார்களை கழுவினால் ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படும் என்று கர்நாடக காங்கிரஸ் அரசு அறிவித்துள்ளது. இதிலிருந்து நிலைமை எந்த அளவுக்கு மோசமடைந்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

    கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு பதவியேற்று ஓராண்டு ஆகப்போகிறது. குடிநீர் தட்டுப்பாடு என்பது ஒரு சில நாட்களில் ஏற்பட்டுவிடும் இயற்கை பேரிடர் அல்ல. போதுமான மழை இல்லை என்பதும், அதனால் அதிகமான மக்கள் தொகை கொண்ட பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு வரும் என்பதும் தெரிந்த விஷயம் தான்.

    ஆனாலும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க எந்த விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் காங்கிரஸ் அரசு எடுக்கவில்லை. பெங்களூருவில் இப்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடி முழுக்க முழுக்க கர்நாடக காங்கிரஸ் அரசின் நிர்வாகத் தோல்வி.

    கர்நாடக முதல்வர் சித்தராமையா - துணை முதல்வர் டி. கே.சிவகுமார் - காங்கிரஸ் அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே என முக்கோண அரசியலில் சிக்கி கர்நாடக மக்கள் தவிக்கின்றனர். இவர்கள் மூவரும் தங்களுக்குள் ஒருவரையொருவர் வீழ்த்த போட்டி போடுகின்றனரே தவிர, மக்களைப் பற்றி துளியும் கவலைப்படவில்லை. அதன் விளைவுதான் குடிநீர் பஞ்சம்.

    கர்நாடக காங்கிரஸ் அரசில் இந்த மூவர் தவிர, சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோரும் தலையிடுகின்றனர். இந்த ஆறு பேரும் தலையிடுவதால் அரசு நிர்வாகம் செயலிழந்திருக்கிறது.

    காங்கிரஸ் ஆளும் மூன்று மாநிலங்களில் வளமான மாநிலம் கர்நாடகம் என்பதால் அதனை தங்களது கஜானாவாகவே காங்கிரஸ் கட்சி பார்க்கிறது. இதன் விளைவுதான் கார்களை கழுவினால் ரூ. 5,000 அபராதம் என்ற அறிவிப்பு.

    காங்கிரஸ் அரசின் நிர்வாகத் தோல்வியால் ஏற்பட்ட குடிநீர் பஞ்சத்தால் கர்நாடக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதிலிருந்து மக்களைத் திசைதிருப்பவும், கர்நாடக மக்களின் உணர்வுகளைத் தூண்டி அரசியல் ஆதாயம் அடையவும், 'தமிழகத்திற்கு ஒரு சொட்டு கூட தண்ணீர் தரமாட்டோம்' என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்திருக்கிறார்.

    பெங்களூரு குடிநீர் பஞ்சத்தை காரணம் காட்டி உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை தர மறுக்கிறது கர்நாடக காங்கிரஸ் அரசு. இதற்கு கடும் எதிர்ப்பை தமிழக அரசு தெரிவிக்காமல், கர்நாடக அரசுடன் போராடி நீரை பெற்று தராமல் தமிழகத்திற்கு துரோகம் செய்து வருவது கடும் கண்டனத்துக்குரியது

    காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளை வாரி வழங்கியிருக்கும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு, கர்நாடக முதல்வர் சித்ததராமையாவுக்கு கண்டனம் தெரிவிக்க கூட நேரம் இல்லை.

    கர்நாடக அரசு பாடத்திட்டத்தில், ஈ.வெ.ராமசாமியின் இந்து விரோத வரலாற்றை சேர்க்க, கர்நாடக காங்கிரஸ் அரசுடன் தனக்குள்ள நட்பை பயன்படுத்த தெரிந்த முதல்வர் ஸ்டாலினுக்கு, தமிழகத்திற்கு தண்ணீர் கேட்க முடியவில்லை.

    இனியும் தமிழக மக்களை ஏமாற்றாமல், தனது நண்பர்களான கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் ஆகியோருடன் பேசி தமிழகத்திற்கு வர வேண்டிய காவிரி நீரை முதல்வர் ஸ்டாலின் பெற்றுத் தர வேண்டும்.

    இல்லையெனில் வரும் மக்களவைத் தேர்தலில் தமிழக மக்கள் திமுக கூட்டணிக்கு உரிய பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • குடியுரிமை திருத்த சட்டத்திற்கு, ராஜ்யசபாவில் அ.தி.மு.க. எதிர்த்து வாக்களித்து இருந்தால் இந்த சட்டமே வந்திருக்காது.
    • காங்கிரஸ் உடன் பேச்சுவார்த்தை முடிந்ததும் தி.மு.க. வேட்பாளர் பட்டியல் நாளை அல்லது நாளை மறுநாள் வரும்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகே ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள கற்பகம் கூட்டுறவு பெட்ரோல் பங்கை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று திறந்து வைத்தார்.

    அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மத்திய அரசு சொன்னாலும் காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தர மாட்டோம் என்று சித்தராமையா கூறியுள்ளார்.

    கர்நாடகாவில் என்றைக்காவது, எந்த மந்திரியாவது தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடுவோம் என்று கூறி கேள்விப்பட்டது உண்டா.


    எப்போது பார்த்தாலும் இப்படி தான் சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு முறையும் உச்சநீதிமன்றம் சென்று தான் நாம் தண்ணீரை பெற்றுக் கொண்டிருக்கிறோம். தண்ணீரை கர்நாடகாவிலிருந்து எப்படி பெறுவது என்று எங்களுக்கு தெரியும்.

    குடியுரிமை திருத்த சட்டத்திற்கு, ராஜ்யசபாவில் அ.தி.மு.க. எதிர்த்து வாக்களித்து இருந்தால் இந்த சட்டமே வந்திருக்காது. காங்கிரஸ் உடன் பேச்சுவார்த்தை முடிந்ததும் தி.மு.க. வேட்பாளர் பட்டியல் நாளை அல்லது நாளை மறுநாள் வரும்.

    ஆந்திராவில் பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவது தொடர்பாக தமிழக அரசு தொடுத்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

    அது குறித்து வழக்கறிஞர்கள் பேசுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த திங்கட்கிழமை காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் அதன் தலைவர் வினித்குப்தா தலைமையில் டெல்லியில் நடைபெற்றது.
    • மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 52.43 அடியாக இருந்தது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103 அடியாக இருந்தது. இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை பொய்த்ததாலும், கர்நாடக அணைகளில் இருந்து உரிய தண்ணீர் திறக்கப்படாததாலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்தது.

    இதையடுத்து குடிநீர் மற்றும் மீன்வளத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த மாதம் 10-ந்தேதி காலை 6 மணியுடன் நிறுத்தப்பட்டது. குடிநீருக்காக மட்டும் தொடர்ந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கிடையே கடந்த அக்டோபர் மாதம் 15-ந் தேதியில் இருந்து 31-ந் தேதி வரை தமிழகத்துக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடக்கோரி கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. ஆனாலும் கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் மட்டுமே சொற்ப அளவில் வெளியேற்றப்பட்டு வந்தது. கர்நாடக அணைகளில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள விவசாயிகள், அரசியல்வாதிகளும் போராட்டம் நடத்தினர்.

    இதற்கிடையே கடந்த திங்கட்கிழமை காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் அதன் தலைவர் வினித்குப்தா தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் அடுத்து வரும் நாட்களுக்கான தண்ணீர் பங்கீடு தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது.

    இதில் தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்ட அதிகாரிகள் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு வழங்கவேண்டிய 13 டி.எம்.சி. தண்ணீர் மற்றும் ஏற்கனவே நிலுவையில் உள்ள 3 டி.எம்.சி. தண்ணீர் என மொத்தமாக 16 டி.எம்.சி. தண்ணீரை திறக்க பரிந்துரை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டனர். ஆனால் கர்நாடகா தரப்பில் தங்கள் மாநிலத்தில் மழை பற்றாக்குறை நிலவுவதாகவும், இதனால் குடிநீர் பற்றாக்குறை உள்ளதாகவும் எனவே தண்ணீர் திறந்து விட இயலாது என்று கூறினர்.

    2 தரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட காவிரி ஒழுங்காற்றுக் குழு தமிழகத்திற்கு நவம்பர் 1-ந்தேதியான இன்று முதல் வருகிற 15 நாட்களுக்கு வினாடிக்கு 2ஆயிரத்து 600 கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என பரிந்துரை செய்தது. ஆனால் வழக்கம்போல் கர்நாடக அணைகளில் இருந்து இன்றும் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. கர்நாடகாவில் உள்ள கபினி அணைக்கு இன்று காலை நீர்வரத்து வினாடிக்கு 196 ஆக இருந்தது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் வெறும் 300 கனஅடியே திறக்கப்பட்டு வருகிறது.

    இதே போல் கிருஷ்ண ராஜசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 99.44 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 531 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. குடிநீருக்காக மட்டும் வாய்க்காலில் வினாடிக்கு 567 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 52.43 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2ஆயிரத்து 968 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து குடிநீருக்காக 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • வரும் 3-ந்தேதி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற உள்ளது.
    • சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் இவ்வளவு பிடிவாதமாக இருப்பது ஆச்சரியமாக உள்ளது.

    சென்னை:

    சென்னை கோட்டூர்புரத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரியில் 13 ஆயிரம் கனஅடி நீர் திறக்க நாங்கள் கோரிக்கை வைத்தோம். 2,600 கனஅடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்துள்ளது.

    வரும் 3-ந்தேதி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற உள்ளது. 13ஆயிரம் கனஅடி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் வலியுறுத்துவோம்.

    காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க முடியாது என்று சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் இவ்வளவு பிடிவாதமாக கூறி இருப்பது ஆச்சரியமாக உள்ளது. ஏதோ எதிரிநாட்டோடு மோதுவது போல் நினைக்கிறார்கள். உச்சநீதிமன்ற உத்தரவை கர்நாடக அரசு மதிக்காமல் இருப்பது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.

    இவ்வாறு துரைமுருகன் கூறினார்.

    • போராட்டத்தில் ஈடுபட்ட கர்நாடகா மாநில விவசாயிகள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • சாம்ராஜ்நகர் போலீசார் மறியலில் ஈடுபட்ட 38-க்கும் மேற்பட்ட விவசாயிகளை கைது செய்தனர்.

    தாளவாடி:

    தமிழக நெற்களஞ்சியமான தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் காவிரி நீரை நம்பியே சாகுபடி செய்து வருகிறார்கள்.

    நடப்பு ஆண்டில் கடந்த ஜூன் 12-ம் தேதி டெல்டா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடகா வழங்கவில்லை. இதனால் காவிரி டெல்டா பகுதியில் சாகுபடி செய்திருந்த பயிர்கள் கருகின.

    கடன் வாங்கி சாகுபடி செய்த பயிர்கள் சேதம் அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இதனை அடுத்து காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரை திறந்து விடுமாறு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். மேலும் காவிரி ஆணைய கூட்டத்திலும் தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    காவிரி ஆணைய உத்தரவின்படி கர்நாடகா அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் அரசியல் கட்சிகள், விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் குதித்தனர்.

    இந்நிலையில் இன்று காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறக்க கூடாது என்பதை வலியுறுத்தி கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாய சங்க தலைவர் பாக்யராஜ் தலைமையில் 38-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈரோடு மாவட்டம் தாவாடி அருகே உள்ள தமிழக கர்நாடக எல்லையான புளிஞ்சூர் சோதனை சாவடியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் தங்களுக்கு குடிப்பதற்கு தண்ணீர் இல்லாத நிலையில் தமிழகத்திற்கு எப்படி தண்ணீர் திறந்து விட முடியும் என்று கூறி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட கர்நாடகா மாநில விவசாயிகள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து சாம்ராஜ்நகர் போலீசார் மறியலில் ஈடுபட்ட 38-க்கும் மேற்பட்ட விவசாயிகளை கைது செய்தனர். விவசாயிகளின் மறியல் போராட்டத்தால் தமிழக-கர்நாடகா இடையே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வாகனங்கள் இரண்டு புறங்களிலும் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. ஒரு மணி நேரத்துக்கு பிறகு போக்குவரத்து சீரானது.

    ×