search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Harbor"

    • விசைப்படகு மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கரையேற்றி பழுதுபார்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
    • ஒரே நாளில் 293 விசைப்படகுகளில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    கன்னியாகுமரி:

    ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஆழ்கடலில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும் காலமாகும். இந்த காலங்களில் விசைப்படகுகள் ஆழ்கடலில் சென்று மீன்பிடித்தால் மீன் இனம் அடியோடு அழிந்து விடும் என்று கருதி ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந்தேதி வரை 61 நாட்கள் கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரையிலான தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது.

    அதேபோல இந்த ஆண்டு தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதி விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை அமலுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுவரும் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் களை இழந்து வெறிச்சோடி காணப்பட்டது.

    இதற்கிடையில் விசைப்படகு மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கரையேற்றி பழுதுபார்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். மேலும் தங்களது மீன்பிடி வலைகளையும் சரி செய்து தயார்படுத்தினார்கள். இந்த நிலையில் மீன்பிடி தடைகாலம் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயத்தமானார்கள். இதையடுத்து கரையேற்றி பழுது பார்த்த விசைப்படகுகளை மீனவர்கள் கடலில் இறக்கினார்கள்.

    இதைத்தொடர்ந்து மீன்பிடி தடைகாலம் முடிந்து 61 நாட்களுக்கு பிறகு இன்று முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் முடிவு செய்தனர்.

    அதன்படி நேற்று மாலை முதல் சின்னமுட்டம் துறைமுகத்தில் தயாராக நின்ற விசைப்படகுகளில் டீசல் நிரப்பினார்கள். மேலும் படகுகளில் உள்ள குளிர்சாதன கிடங்குகளில் மீன்களை பதப்படுத்தி வைத்து கொண்டு வருவதற்காக ஐஸ் கட்டிகளை நிரப்பினர்கள். அதன்பிறகு இன்று அதிகாலை 5 மணிக்கு சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றன.

    இன்று ஒரே நாளில் 293 விசைப்படகுகளில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்த விசைப்படகுகள் அனைத்தும் ஆழ்கடலில் மீன்பிடித்து விட்டு இன்று இரவு 9 மணி முதல் கரைக்கு திரும்புவார்கள். தடை காலம் முடிந்து மீன்பிடித்து விட்டு கரை திரும்பும் விசை படகுகளில் சீலா, வஞ்சிரம் நெய்மீன், பாறை, கைக்கொழுவை, நெடுவா, கணவாய், திருக்கை, கிளாத்தி, நவரை போன்ற உயர்ரக மீன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் பிடித்துக்கொண்டு வரும் உயர்ரக மீன்களை போட்டி போட்டு ஏலம் எடுப்பதற்காக வெளியூர், வெளிமாவட்டங்கள் மற்றும் கேரளா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான மீன் வியாபாரிகள் வந்து குவிந்த வண்ணமாக உள்ளனர்.

    இந்த ஆண்டு முதல் வெளியூர் வியாபாரிகளும் நேரடியாக மீன் கொள்முதல் செய்யலாம் என்று விசைப்படகு உரிமையாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இதனால் 2 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் களை கட்ட தொடங்கிவிட்டது.

    • வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது.
    • மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ராமேசுவரம்:

    தமிழகத்தில் இந்த ஆண்டு வழக்கத்தைவிட அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பாகவே கோடை வெயில் கொளுத்தியது. அதிகபட்சமாக 112 டிகிரி வரை ஒரு சில மாவட்டங்களில் வெயில் பதிவானது. இதனால் பொதுமக்கள் கோடை வெயிலை தாங்க முடியாமல் தவித்து வந்தனர்.

    இதனை தணிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் கடந்த 2 வாரங்களாக பெய்து வரும் கோடை மழை குளிர்வித்தது. ஒரு சில இடங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கும் அளவிற்கு மழை பெய்ததோடு உயிர்பலியையும் ஏற்படுத்தியது. டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் பருவம் தவறிய பலத்த மழையால் கடுமையான சேதங்களை சந்தித்தன.

    இதற்கிடையே வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. ரீமால் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் வடக்கு திசையில் நகர்ந்து இன்று தீவிர புயலாக வலுவடையக்கூடும் என்றும், நள்ளிரவில் வங்காளதேசத்தில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மேலும் அவ்வாறு புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 110 முதல் 120 கி.மீ. வேகத்தில் பலத்த சூறைக் காற்று வீசும் என்றும் கூறியுள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அறிவித்துள்ளது. இந்தநிலையில் புயல் கரைக்கு நெறுங்கும் நிலையில் மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக பாம்பன் துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் படகுகளை பாதுகாப்புடன் நிறுத்தி வைக்க வேண்டும் என மீன்வளத் துறை எச்சரித்துள்ளது.

    இதையடுத்து மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பாகவும், தகுந்த இடைவெளியுடனும் நங்கூரமிட்டு நிறுத்தி வைத்துள்ளனர்.

    • பிடிபட்ட ரஷ்ய வாலிபரிடம் பாஸ்போர்ட் இல்லை.
    • விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சியில் துறைமுகம் செயல்பட்டு வருகிறது. சர்வதேச துறை முகமாக செயல்படும் இங்கு மத்திய பாதுகாப்பு படையினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் இங்குள்ள வல்லார்பாடம் சர்வதேச கொள்கலன் முனையத்தில் வெளிநாட்டு வாலிபர் ஒருவர் அத்துமீறி நிழைந்தார்.

    கொள்கலன் முனை யத்தின் மேற்கு பகுதி வழியாக சுவர் ஏறி குதித்து புகுந்த அந்த நபரை பாது காப்பு படையினர் பிடித்தனர். பின்பு அவரை முளவு காடு போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் ரஷ்யா நாட்டை சேர்ந்த இலியா எகிமோவ்(வயது26) என்பது தெரியவந்தது.

    அவர் கடந்த 2 நாட்க ளுக்கு முன்பு கேரளாவுக்கு வந்ததாகவும், பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்த தாகவும், கூகுள் மேப்பை பார்த்து வந்தபோது வழி மாறி கொச்சி துறைமுகத்தின் கொள்கலன் முனை யத்துக்குள் நுழைந்து விட்ட தாகவும் விசாரணையில் ரஷ்ய வாலிபர் தெரி வித்துள்ளார். ஆனால் அவர் கூறும் தகவல் உண்மை தானா? என்று தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது.

    மேலும் பிடிபட்ட ரஷ்ய வாலிபரிடம் பாஸ்போர்ட் இல்லை. எர்ணாகுளத்துக்கு செல்வதற்கான ரெயில் டிக்கெட் மட்டும் வைத்தி ருந்தார். பாஸ்போர்ட் இல்லாத நிலையில் அவர் கேரளா வந்தது எப்படி? எதற்காக துறைமுக பகு திக்குள் நுழைந்தார்? என்று தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டது.

    மேலும் அவரிடம் மத்திய உளவு அமைப்புகளான 'ரா' மற்றும் 'ஐ.பி.' அதிகாரிகளும் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு ரஷ்ய வாலிபர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு எர்ணாகுளம் சப்-ஜெயிலில் அடைக்கப்பட்டார். கொச்சி துறை முகத்துக்குள் ரஷ்ய வாலிபர் அத்துமீறி நுழைந்த சம்பவம் பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • தூத்துக்குடி துறைமுக ஆணைய தலைவர் ராமச் சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
    • தூத்துக்குடி துறைமுக சாலை முதல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை 6 வழிச்சாலையாக ரூ. 200 கோடி மதிப்பில் மாற்றும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி துறைமுக ஆணைய தலைவர் ராமச் சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    வ.உ.சி. துறைமுகத்தில் கடந்த நிதி ஆண்டில் 38.04 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டு, முந்தைய ஆண்டை விட 11.5 சதவீதம் கூடுதலாக செயலாற்றி உள்ளது. கப்பல் துறைமுகங்கள் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகம் நிர்ணயித்த இலக்கினை தாண்டி சாதனை படைத்துள்ளது.

    2022-23-ம் நிதியாண்டில் மொத்த வருவாய் ரூ. 816.17 கோடி வளர்ச்சி பெற்று நிகர உபரி வருவாய் ரூ.256.14 கோடி பெற்றுள்ளது. தூத்துக்குடி துறைமுகத்தில் சரக்கு கையாளும் திறன் பன் மடங்கு அதிகரித்து ள்ளது.

    2023-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மட்டும் 36.81 லட்சம் சரக்குகளை கையாண்டு உள்நாட்டு சரக்குகளை விட அதிகமாக கையாண்டு சாதனை படைத்துள்ளது. ரூ. 16 கோடியில் நிலக்கரி சேமிப்பு கிடங்குகள் மேம்படுத்துதல், ரூ. 42 கோடியில் சரக்கு பெட்ட கங்களை கண்கா ணிக்க வசதி ஏற்படுத்துதல்.

    ரூ. 18.8 கோடியில் தீயணைப்பான் வசதியை நவீனமாக்குதல். ரூ. 70 லட்சம் செலவில் 140 கிலோவாட் மேற்கூரை சூரியமின் ஆலை அமைத்தல். ரூ. 2.22 கோடி செலவில் மின்சாரத்தில் இயங்கக்கூடிய 6 இ-கார்கள் 100 சதவீத எல்.இ.டி. ஒளி விளக்குகள் பயன்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

    மேலும் ரூ. 434.17 கோடி செலவில் 9-வது சரக்கு தளத்தை சரக்கு பெட்டக முனையமாக மாற்றும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. துறைமுக நுழை வாயில் அகலப்படுத்தும் பணி, உணவு உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் சேமிப்பு கிடங்கு தொடங்குவதற்காக சுமார் 54 ஏக்கர் நிலப்பரப்பினை ஒதுக்கி உள்ளது. மேலும் கூடுதலாக சிமெண்ட் கையாளும் முனையம் அமைப்பதற்கு 12.79 ஏக்கர் ஒதுக்கி உள்ளது. ரூ. 7ஆயிரத்து 55 கோடி மதிப்பில் வெளி துறைமுக வளர்ச்சி திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

    பசுமை துறைமுகம்

    துறைமுகத்தை ஹைட்ரஜன் முனையமாக மாற்றுவத ற்காக மத்திய அரசு ஒப்புதல் அளித்து ள்ளது. இந்த திட்டம் விரை வில் செயல்படுத்தப்பட்டு 2 ஆண்டுகளில் தூத்துக்குடி துறைமுகம் பசுமை ஹை ட்ரஜன், பசுமை அமோ னியா, பசுமை ஏத்தனால் துறைமுகமாக மாற்றும் பணி ரூ. 26 கோடி செலவில் 2 காற்றாலை மின் திட்டம், ரூ. 16 கோடியில் 5 மெகாவாட் சூரிய ஒளி மின் திட்டம் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்த பணிகள் அடுத்த மாதம் முடிவடையும் அதன் பின் துறைமுகம் பசுமை துறைமுகமாக உருவாகும். மேலும் 60 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி காற்றாலை உள்ளிட்ட மரபுசாரா எரிசக்தி திட்ட ங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.

    இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து

    தூத்துக்குடி துறை முகத்தில் இருந்து இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு கப்பல் போக்கு வரத்து தொடங்குவதற்காக துறைமுகம் தயாராக உள்ளது. தூத்துக்குடி துறைமுகத்தின் மூலமாக நடுக்கடலில் 2 ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட காற்றாலை மின் உற்பத்தி அமைக்கும் திட்டங்கள் ரூ. 700 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளது.

    துறைமுக சாலை முதல் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை 6 வழிச்சாலையாக ரூ. 200 கோடி மதிப்பில் மாற்றும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது துறைமுக போக்குவரத்து மேலாளர் பிரபாகர், நிதி ஆலோசகர் சாகு, துணை மருத்துவ அதிகாரி ராஜேஸ்வரி, மெக்கா னிக்கல் என்ஜி னீயர் சுரேஷ் பாபு, துணைக் காப்பாளர் பிரவீன் குமார் சிங், மக்கள் தொடர்பு அதி காரி சசி குமார், உதவி அலுவலர் முருகன் ஆகி யோர் உடன் இருந்தனர்.

    ×