search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indian Athletes"

    • இந்தியா இந்த முறை 12 விளையாட்டுகளில் பங்கேற்கிறது.
    • 2020 டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் 54 வீரர்கள் சென்று 19 பதக்கங்களை இந்தியா வென்றது.

    பாரீஸ்:

    பாரீஸ் பரா ஒலிம்பிக் போட்டிகள் நாளை மறுநாள் தொடங்க உள்ளன. ஆகஸ்ட் 28 முதல் பிரான்ஸ் தலைநகரில் பாரா விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த முறை இந்தியா தரப்பில் 84 வீரர் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இது இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு சாதனை என்றே சொல்லலாம். 2020 டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் 54 வீரர்கள் சென்று 19 பதக்கங்களை இந்தியா வென்றது.

    இந்தியா இந்த முறை 12 விளையாட்டுகளில் பங்கேற்கிறது. குறிப்பாக தடகளத்தில் மட்டும் இந்தியாவின் 38 போட்டியாளர்கள் இருப்பார்கள். வில்வித்தை, பேட்மிண்டன், சைக்கிள் ஓட்டுதல், ஜூடோ, பாரா கயாக்கிங், பவர்லிஃப்டிங், ரோயிங், துப்பாக்கி சுடுதல், டேபிள் டென்னிஸ், டெக்வாண்டோ போன்ற விளையாட்டுகளில் இந்திய வீரர்கள் களமிறங்குகின்றனர்.

    கடந்த பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற சுமித் அந்தில், மாரியப்பன் தங்கவேலு, சுஹான் எல்.ஒய், கிருஷ்ணா நாகர், அவனி லேகாரா, மணீஷ் நர்வால், பவீனா படேல், நிஷாத் குமார் உள்ளிட்டோர் இந்த முறையும் தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் மீண்டும் பதக்கம் வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இளம் பாரா வில்வித்தை வீரரான சீதல் தேவி, இரண்டு கைகளும் இல்லாத போதிலும் உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். இவர் இந்தியாவின் மிகப்பெரிய பதக்க நம்பிக்கையாக கருதப்படுகிறார்.

    பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை இந்தியா மொத்தம் 9 தங்கம், 12 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 31 பதக்கங்களை வென்றுள்ளது. இந்த முறை குறைந்தது 25 பதக்கங்களை வென்று அரை சதத்தை எட்டும் ஆர்வத்தில் உள்ளது.

    முதல் முறையாக இந்தியா பாரா ஒலிம்பிக் போட்டிகளில் 12 விளையாட்டுகளில் தனது வீரர்களை களமிறக்குகிறது. 38 பேர் தடகளத்தில் பல்வேறு பிரிவுகளில் களமிறங்குவார்கள்.

    3 ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற 16-வது பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா 19 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்தது. இந்த முறை குறைந்தது 25 பதக்கங்கள் வெல்லும் இலக்குடன் இந்திய அணி பாரிஸ் வந்துள்ளது.

    பாரா ஒலிம்பிக் போட்டிகளில் கர்நாடகாவிலிருந்து 3 பேர் பங்கேற்க உள்ளனர். பெண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ரக்ஷிதா ராஜு, துப்பாக்கி சுடுதலில் ஸ்ரீஹர்ஷா மற்றும் பவர்லிஃப்டிங்கில் சகீனா கதுன் ஆகியோர் களமிறங்குவார்கள். கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்ட, தற்போது உத்தரபிரதேசத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வரும் பேட்மிண்டன் நட்சத்திரம் சுஹாஸ் யாதவ்வும் போட்டிகளில் பங்கேற்க உள்ளார்.

    • பாரிஸ் ஒலிம்பிக்ஸ் திருவிழா வரும் 26-ந்தேதி பாரீசில் தொடங்குகிறது.
    • 16 விளையாட்டுகளில் சுமார் 117 இந்திய வீரர்கள், வீராங்கனைகள் களமிறங்குகிறார்கள்.

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான பாரிஸ் ஒலிம்பிக்ஸ் திருவிழா வரும் 26-ந்தேதி பாரீசில் தொடங்குகிறது. ஜூலை 26-ல் தொடங்கும் 33-வது பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள், ஆகஸ்ட் 11-ம் தேதி முடிவடையும்.

    ஒலிம்பிக்ஸ் போட்டிகளை ஒட்டி செய்ன் நதிக்கரையில் 3 லட்சம் பேர் முன்னிலையில் பிரமாண்ட தொடக்க விழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    206 நாடுகளைச் சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்க உள்ளனர். இதில், 16 விளையாட்டுகளில் சுமார் 117 இந்திய வீரர்கள், வீராங்கனைகள் களமிறங்குகிறார்கள்.

    இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக்ஸ் தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு உதவும் வகையில் இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு பிசிசிஐ சார்பில் ரூ. 8.5 கோடி வழங்கவுள்ளதாக செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஜெய்ஷா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளதாவது:-

    2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நம் விளையாட்டு வீரர்களுக்கு பிசிசிஐ ஆதரவளிக்கும் என்பதை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன். இதற்காக, இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு ரூ. 8.5 கோடி நிதியுதவி வழங்குகிறோம் என்பதை பிசிசிஐ அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

    நம் முழு குழுவிற்கும் நல்வாழ்த்துக்கள். இந்தியாவை பெருமைப்படுத்துங்கள்! ஜெய் ஹிந்த்!

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பிடி உஷாவுடன் சந்திப்பு.
    • பாரிஸ் ஒலிம்பிக்கிற்கான இந்தியாவின் தயார் நிலை குறித்து விளக்கினர்.

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டி இந்த ஆண்டு ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது.

    இந்த போட்டியில் பல்வேறு நாடுகளில் இருந்து வீரர்கள் பங்குபெறுவார்கள். இந்தியா சார்பில் ஏற்கனவே 97 வீரர்கள் தகுதி பெற்றுள்ள நிலையில், மேலும்,120 தடகள வீரர்கள் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவார்கள் என புதிதா பதவியேற்ற மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

    மத்திய விளையாட்டு துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பிடி உஷாவுடனான சந்திப்பின் போது, இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளுக்கான நாட்டின் தயார் நிலை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

    இந்த சந்திப்பில், விளையாட்டுத்துறையின் புதிய இணை அமைச்சர் ரக்ஷா காட்சே, விளையாட்டுத்துறை செயலாளர் சுஜாதா சதுர்வேதி, இந்திய விளையாட்டு ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் சந்தீப் பிரதான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    பின்னர் அமைச்சர் மாண்டவியா கூறுகையில், " நான் இன்று முதல் முறையாக ஐஓஏ அதிகாரிகளை சந்தித்தேன். அங்கு அவர்கள் பாரிஸ் ஒலிம்பிக்கிற்கான இந்தியாவின் தயார் நிலை குறித்து என்னிடம் விளக்கினர்.

    சாத்தியமான அனைத்து ஆதரவையும் வழங்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.

    பாரீஸ் ஒலிம்பிக் விளையாட்டில் பங்கேற்க ஏற்கனவே 97 விளையாட்டு வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர். மேலும் 115 முதல் 120 தடகள வீரர்கள் பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்," என்றார்.

    ×