search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ooty"

    • சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது.
    • மலை ரெயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    ஊட்டி:

    மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்களை காண கேரளா, கா்நாடகா மற்றும் சமவெளி பிரதேசங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

    அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் ஊட்டியிலுள்ள உலகப்புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, சிம்ஸ் பூங்கா, படகு இல்லம், பைக்காரா படகு இல்லம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்களை கண்டு ரசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் கிருஷ்ணஜெயந்தி மற்றும் வார விடுமுறை ஆகிய தொடா் விடுமுறையையொட்டி ஊட்டி சுற்றுலா தலங்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது.

    அதிலும் குறிப்பாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிலுள்ள வானுயா்ந்த மரங்கள், கண்ணாடி மாளிகையில் பூத்துக்குலுங்கும் வண்ண-வண்ண மலா்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனா்.

    மேலும் ஊட்டியில் நிலவும் இதமான காலநிலையை அனுபவித்தபடி உற்சாகமாக படகு சவாரி செய்து விடுமுறையை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனா்.

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழையின் காரணமாக வெறிச்சோடி இருந்த சுற்றுலா மையங்கள், தற்போது சுற்றுலாப் பயணிகளால் களைகட்டி காணப்படுகிறது.

    மேலும் ஊட்டிக்கு வந்து செல்பவர்கள் மலை ரெயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் குன்னுார்-ஊட்டி மலை ரயிலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

    • குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை வருவதால் மக்களும் அச்சத்தில் உள்ளனர்.
    • குடியிருப்பு பகுதிகளுக்குள் சிறுத்தை நுழைவது வாடிக்கையாகி விட்டது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அண்மைக்காலமாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

    குறிப்பாக வனத்தை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் சிறுத்தை, வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளை வேட்டையாடி செல்வது அதிகரித்துள்ளது.

    சிறுத்தை அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் வருவதால் மக்களும் அச்சத்தில் உள்ளனர்.

    ஊட்டி அருகே கல்லக்கொரை என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்குள் சம்பவத்தன்று இரவு வனத்தை விட்டு வெளியேறிய சிறுத்தை ஒன்று புகுந்தது.

    குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை அங்கு உணவு தேடி அலைந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் அங்குள்ள வீட்டிற்குள் நுழைந்த சிறுத்தை, வீட்டின் வளாகத்தில் சிறிது நேரம் சுற்றி வந்தது.

    பின்னர் வீட்டின் மொட்டை மாடிக்கு தாவிய சிறுத்தை, அங்கு கட்டப்பட்டிருந்த வளர்ப்பு நாயை தனது வாயில் கவ்வி கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி வெளியே சென்று விட்டது.

    இந்த காட்சிகள் அனைத்தும் வீட்டில் உள்ள சி.சி.டி.வி காமிராவில் பதிவாகி இருந்தது. இதை பார்த்த வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார். இந்த தகவல் அந்த பகுதி முழுவதும் பரவியதால் மக்களும் அச்சத்தில் உள்ளனர்.

    இதற்கிடையே இந்த காட்சிகள் சமூக வலைத்தளத்திலும் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த பலரும் அதிர்ச்சியாகினர். தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் சிறுத்தை நுழைவது வாடிக்கையாகி விட்டது. இதனால் நாங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியில் வருவதற்கு அச்சமாக உள்ளது.

    எனவே வனத்துறையினர் இந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு சிறுத்தையை கண்காணித்து அடர்ந்த வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மருத்துவ ஊழியர்கள் போதிய பாதுகாப்புடன் உள்ளனரா என்பது குறித்தும் ஆய்வு.
    • மாணவிகளிடம் கலந்துரையாடி, பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார்.

    ஊட்டி:

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து சிலரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே பெண் மருத்துவரின் படுகொலைக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டிலும் போராட்டம் நடந்தது.

    இந்த நிலையில் இந்த சம்பவம் எதிரொலியாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரிகளிலும் ஆய்வு செய்து அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு தமிழக டி.ஜி.பி சங்கர் ஜூவால் உத்தரவிட்டார்.

    அதனை தொடர்ந்து நேற்று ஊட்டி மாவட்ட அரசு மகப்பேறு மருத்து வமனையில் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு என்.எஸ்.நிஷா ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது மருத்துவமனை வளாகத்துக்குள் வாகனங்கள் வந்து செல்லும் வழி, அறைகள், உள்ளே செல்லும் வழி, வெளியேறும் வழி, எவ்வளவு மருத்துவ பணியாளர்கள் உள்ளனர் என்பது குறித்து கேட்டறிந்தார்.

    மேலும் மருத்துவம னையில் எவ்வளவு கண்காணிப்பு காமிராக்கள் உள்ளன? அவற்றில் எத்தனை பயன்பாட்டில் உள்ளது? மருத்துவ ஊழியர்கள் போதிய பாதுகாப்புடன் உள்ளனரா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் மருத்துவ கல்லூரி மாணவிகளிடமும் கலந்துரையாடி, அவர்களிடமும் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார்.

    இதேபோல் குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சவுந்தராஜன் தலைமையிலான போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.

    ஆஸ்பத்திரியில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்ட பகுதிகள் மற்றும் மருத்துவர்களின் அறைகள், குடியிருப்புகள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். கோத்தகிரியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில், குன்னூர் டி.எஸ்.பி.பாஸ்கர், கோத்தகிரி இன்ஸ்பெக்டர் ஜெயமுருகன், போக்கு வரத்து இன்ஸ்பெக்டர்பதி ஆகியோர் தலைமையிலான போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.

    ஆஸ்பத்திரியில் எவ்வளவு மருத்துவப் பணியாளர்கள் உள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு, இது தொடர்பாக ஆஸ்பத்திரியில் இருந்தவர்களிடம் கேட்டறிந்தனர்.

    ஊட்டி மகப்பேறு ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்ட பின் போலீஸ் சூப்பிரண்டு என்.எஸ்.நிஷா நிருபர்களிடம் கூறியதாவது:-

    மகப்பேறு மருத்துவமனையை பொறுத்த வரை வளாகத்துக்குள் பாதுகாப்புக்காக ஊழியர்கள் உள்ளனர்.

    27 கண்காணிப்பு காமிராக்கள் உள்ளது. சில காமிராக்கள் பழுதடைந்துள்ளன. அவற்றை சரி செய்ய அறிவுறுத்தி உள்ளோம். மருத்துவமனைகளின் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் தினமும் மருத்துவ மனைகளில் காவல்துறை மூலம் ரோந்து பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மருத்துவமனைகளில் நடத்தப்பட்ட ஆய்வு தொடர்பான அறிக்கை காவல்துறை தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள், மருத்து வர்கள், ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறை மூலமாக அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    • வார இறுதி நாட்களில் சிறப்பு மலை ரெயில் இயக்கப்படுகிறது.
    • சிறப்பு மலை ரெயில்களில் பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.

    ஊட்டி:

    சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சுதந்திரதினம், கிருஷ்ண ஜெயந்தி விடுமுறையை கொண்டாடுவதற்காக ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக வார இறுதி நாட்களில் சிறப்பு மலை ரெயில் இயக்கப்படுகிறது.

    அதன்படி குன்னூர்-ஊட்டி இடையே சிறப்பு மலை ரெயில் நாளை (16-ந்தேதி), நாளை மறுநாள் மற்றும் 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 3 நாட்கள் இயக்கப்பட உள்ளது.

    இந்த ரெயில் குன்னூரில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்பட்டு 9.40 மணிக்கு ஊட்டி செல்லும். இதேபோல ஊட்டியில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்படும் ரெயில் 5.55 மணிக்கு குன்னூர் வரும். மேற்கண்ட ரெயில்கள் முதல் வகுப்பில் 80 இருக்கைகள் மற்றும் 2-வது வகுப்பில் 130 இருக்கைகளுடன் இயக்கப்படும்.

    மேலும் ஊட்டி-கேத்தி இடையே இருமார்க்கங்களிலும் 3 சுற்றுகள் ஜாய்ரைடு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அதன் ஒருபகுதியாக முதல் சுற்று சிறப்பு ரெயில் ஊட்டியில் இருந்து காலை 9.45 மணிக்கு புறப்பட்டு 10.10 மணிக்கு கேத்தி செல்லும். அங்கிருந்து 10.30 மணிக்கு புறப்பட்டு 11 மணிக்கு ஊட்டிக்கு வரும்.

    2-வது சுற்று ரெயில் 11.30 மணிக்கு ஊட்டியில் இருந்து புறப்பட்டு 12.10 மணிக்கு கேத்தி வரும். அங்கிருந்து 12.40 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.10 மணிக்கு ஊட்டி வரும்.

    3-வது சுற்று சிறப்பு ரெயில் மாலை 3 மணிக்கு ஊட்டியில் இருந்து புறப்பட்டு 3.30 மணிக்கு கேத்தி வரும். பின்னர் 4 மணிக்கு புறப்பட்டு மாலை 4.30 மணிக்கு ஊட்டி வரும். மேற்கண்ட சிறப்பு மலை ரெயில்களில் பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • பல இடங்களில் மண்சரிவு மற்றும் மரங்களும் முறிந்து விழுந்து வருகின்றன.
    • விவசாய நிலங்களையும் தண்ணீர் சூழ்ந்து பயிர்கள் சேதம்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த சில தினங்களாக மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது.

    மாவட்டத்தில் பெய்யும் கனமழையால் பல இடங்களில் மண்சரிவு மற்றும் மரங்களும் முறிந்து விழுந்து வருகின்றன.

    கூடலூர் பகுதியில் பெய்து வரும் மழையால் தொரப்பள்ளி, இருவயல், பாடந்தொரை, குற்றிமுற்றி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. அங்குள்ள விவசாய நிலங்களையும் தண்ணீர் சூழ்ந்து பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

    கூடலூர்-மசினகுடி செல்லும் சாலையில் மாயாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் தெப்பக்காடு தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து தடை பட்டது.

    தரைப்பாலம் மூழ்கியதால் மசினகுடி ஊராட்சியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

    கூடலூர் கோக்கால் பகுதியில் சாலைகள் மற்றும் தெருக்களில் விரிசல்கள் அதிகரித்துள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். அங்குள்ள முதியோர் காப்பகம் மற்றும் வீடுகளில் சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டது.

    இருவயல் கிராமத்தை தொடர்ந்து வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்குள்ள 13 குடும்பத்தை சேர்ந்த 48 பேர் மீட்கப்பட்டு தொரப்பள்ளி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளியில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    பந்தலூர், சேரம்பாடி திருவள்ளுவர் நகர் பகுதியில் மழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், குடியிருப்புகள் முன்பு விரிசலும் ஏற்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.

    கனமழையால் ராஜகோபாலபுரம் புதுக்காலனியில் மண்சரிவு ஏற்பட்டது. நெலாக்கோட்டை அடுத்த விலாங்கூர் கிராமத்தில் மழைக்கு மதரசா கட்டிடம் விழுந்து சேதமானது.

    எருமாடு அருகே சிறைச்சாலை பகுதியில் இருந்து வெள்ள கட்டு என்ற இடத்திற்கு செல்லும் சாலையில் மண்சரிவு ஏற்பட்டு சாலை முழுவதுமாக மூடியது. இதனால் அங்குள்ள மக்கள் வெளியிடங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழை காரணமாக பல இடங்களில் மண்சரிவுகளும் ஏற்பட்டது.

    ஊட்டி அருகே உள்ள இத்தலார் கிராமத்தில் குடியிருப்புகளுக்கு நடுவே பெரிய அளவிலான மண்சரிவு ஏற்பட்டது. ஊட்டியில் இருந்து எமரால்டு செல்லும் சாலை, முத்தோரை பாலடாவில் இருந்து லவ்டேல் செல்லும் சாலையிலும் பெரிய அளவில் மண்சரிவு ஏற்பட்டது.

    அப்பர் பவானியில் விடிய, விடிய பெய்த மழைக்கு அங்குள்ள மின்வாரிய ஓய்வு விடுதிக்கு செல்லும் சாலையில் மண்சரிவு ஏற்பட்டது. சாலையின் ஒரு பகுதியில் பிளவு ஏற்பட்டு மண் திட்டு சரிந்து விழுந்தது.

    பாலடா அருகே பைகமந்து ஒசட்டி பகுதியில் சாலையோர மண்திட்டு சரிந்து நடுரோட்டில் விழுந்தது. சாலையோரம் இருந்த மின் கம்பமும் சாய்ந்ததால் உடனடியாக மின்சாரம் நிறுத்தப்பட்டு, சீரமைப்பு பணிகள் நடந்தது.

    இத்தலார், அவலாஞ்சி சுற்றுப்புற பகுதிகளில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

    மஞ்சூர் கிண்ணக்கொரை சாலையில் 3 இடங்கள், பிக்கட்டி, மணியட்டி, அட்டுபாயில் ஆகிய பகுதிகளில் 3 என மொத்தம் 6-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு உத்தரவிட்டுள்ளார்.

    மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    அவலாஞ்சி-204, எமரால்டு-123, அப்பர் பவானி-106, கூடலூர்-72, அப்பர் கூடலூர்-71, தேவாலா-68, நடுவட்டம்-63, செருமுள்ளி-56, பாடந்தொரை-52.

    • நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்து.
    • வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்து. நேற்று ஊட்டி, குன்னூர், கூடலூர், பந்தலூர், தேவாலா, கோத்தகிரி, பாடந்தொரை, சேரங்கோடு உள்பட மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது.

    குறிப்பாக அவலாஞ்சியில் 34 செ.மீ மழையும், அப்பர்பவானியில் 21 செ.மீ அளவுக்கு மழை பதிவாகி உள்ளது. மேலும் ஒரே நாளில் 5 இடங்களில் 10 செ.மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்துள்ளது.

    கனமழை காரணமாக அவலாஞ்சி பகுதியில் உள்ள லாரன்ஸ், கப்பத்துரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.

    அங்கு பல ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கேரட் பயிர்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்தன.

    இதுமட்டுமின்றி அறுவடைக்கு தயாராக இருந்த பூண்டு செடிகளில் தண்டு உடைந்து வீணானது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    ஊட்டி நகரிலும் கனமழை பெய்தது. இந்த மழைக்கு ஊட்டி நகரின் மத்திய பகுதியான பிரிக்ஸ் பள்ளி அருகே ராட்சத மரம் சாலையில் விழுந்தது. தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து மரத்தை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.

    பிங்கர் போஸ்ட் பகுதியில் மின்கம்பம் முறிந்து கீழே விழுந்ததில் கார் மற்றும் ஆட்டோ சேதமடைந்தது. ஊட்டி பெர்ன்ல் பகுதியிலும் மரம் விழுந்து, அது உடனடியாக அகற்றப்பட்டது.

    கூடலூர், பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று காலை முதல் இரவு வரை கனமழை வெளுத்து வாங்கியது. தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது.

    கூடலூர் தொரப்பள்ளி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் இருவயல் பகுதிக்குள் வெள்ளம் புகுந்தது. அங்குள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததுடன் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது.

    மேலும் தொரப்பள்ளியில் இருந்து இருவயல் செல்லும் சாலையில் மூங்கில்கள் கொத்தாக சரிந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அத்துடன் மூங்கில் முறிந்து விழுந்ததில் மின்கம்பங்களும் சேதம் அடைந்து, அந்த பகுதியில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.

    இதனால் அந்த பகுதியே இருளில் மூழ்கியது. பல மணி நேரங்களுக்கு பிறகு இடர்பாடுகள் சரி செய்யப்பட்டு, மின்சாரம் வழங்கப்பட்டது.

    மேல் கூடலூரை அடுத்துள்ள கோக்கால் மலை பகுதியில் உள்ள குடியிருப்புகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. 50 வீடுகளில் விரிசல் ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது. மேலும் அங்குள்ள சாலைகளிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடனேயே உள்ளனர்.

    மாயாறு, பாண்டியாற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மாயாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் 2-வது நாளாகவும் தெப்பக்காடு தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள குந்தா அணை, அவலாஞ்சி அணை, அப்பர் பவானி அணை உள்பட அனைத்து அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. இதில் குந்தா அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    குந்தா அணையின் மொத்த கொள்ளளவான 89 அடியும் நிரம்பி வழிகிறது.அணைக்கு வினாடிக்கு 300கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 2 மதகுகள் வழியாக 150 கன அடி உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

    குந்தா அணை திறக்கப்பட்டதை அடுத்து கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் ஆற்றில் இறங்கவோ, ஆற்றின் அருகே செல்லவோ வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் பெய்யும் தொடர் மழையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் கூடலூருக்கு விரைந்துள்ளனர்.

    மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    அவலாஞ்சி-339, அப்பர் பவானி-217, பந்தலூர்-136, தேவாலா-152, சேரங்கோடு, எமரால்டு-125, குந்தா-108, பாடந்தொரை-102, ஓவேலி-98, கூடலூர்-97, செருமுள்ளி-96, அப்பர் கூடலூர்-95, பாலகொலா-67, ஊட்டி, நடுவட்டம்-58.

    • பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
    • கிராம மக்கள் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஊட்டி:

    ஊட்டி நகராட்சி எல்லையை விரிவாக்கம் செய்து மாநகராட்சியாக தரம் உயர்த்தினால், அதிக அளவில் அரசு திட்டங்கள், நிதி செயல்பாட்டுக்கு வருவதன் மூலம் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரமும், பொருளாதாரமும் உயரும் என கருதி ஊட்டி நகராட்சி யை மாநகராட்சியாக தரம் உயர்த்த பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    கடந்த மாதம் 5-ந்தேதி நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, ஆணையாளர் ஏசுராஜ் தலைமையில் நடந்த அவசர கூட்டத்தில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டது.

    அதன்படி ஊட்டி நகராட்சியுடன் அருகில் உள்ள கேத்தி, இத்தலார் பேரூராட்சி, உல்லத்தி, நஞ்சநாடு, தொட்டபெட்டா ஆகிய ஊராட்சி பகுதிகளை இணைக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

    இதற்கு மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஊட்டி நகராட்சியை மாநகராட்சியாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து இத்தலார் ஊராட்சிக்கு உட்பட்ட 36 கிராம மக்கள் நேற்று இத்தலாரில் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இத்தலார் பஜார் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு போராட்டக்குழு தலைவர் ஹாலன் தலைமை தாங்கினார். நாக்குபெட்டா நலச்சங்க செயலாளர் மணிவண்ணன் சிறப்பு அழைப்பாளராக போராட்டத்தில் பங்கேற்றார்.

    இதுதொடர்பாக கிராம தலைவர் ஹாலன் கூறும்போது, `ஊட்டியை மாநகராட்சியாக மாற்றி இத்தலார் ஊராட்சியை அதனுடன் இணைக்க ஊராட்சி நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இத்தலார் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைத்தால் அரசு மூலம் வருமானம் தரக்கூடிய பல்வேறு திட்டங்கள் நிறுத்தப்படும். எனவே ஊட்டி நகராட்சியுடன் இத்தலாரை இணைக்கும் முடிவை கைவிட வேண்டும்' என்றார்.

    • அந்தமானில் வைத்து சூர்யா - பூஜா ஹெக்டேவின் இரண்டு டூயட் பாடல்கள் படமாக்கபட உள்ளன
    • இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

    சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தை நடித்து முடித்துள்ள சூர்யா தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை சூர்யாவின் 2D நிறுவனமும் , கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. படத்தின் கதாநாயகியாக பீஸ்ட் நாயகி பூஜா ஹெக்டே இணைத்துள்ளார்.

     

    இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக ஷ்ரேயாஷ் கிருஷ்ணா, சண்டைப் பயிற்சியாளராக கேச்சா கம்பக், கலை இயக்குநராக ஜாக்கி, எடிட்டராக ஷபீக் முகமது அலி, ஆகியோர் இணைத்துள்ளனர். படத்தின் ரிலீஸுக்கு பின்னர் வரும் லாபத்தில் சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் இருவருக்கும் பங்கு இருப்பதனால் சம்பளமே வாங்காமல் சூர்யா நடிக்கப் போகிறார் என்று தகவல் வெளியானது.

     

    தற்போது சூர்யா 44 படப்பிடிப்பு அந்தமானில் துவங்கி நடைபெற்று வருகிறது.  அங்குவைத்து சூர்யா - பூஜா ஹெக்டேவின் இரண்டு டூயட் பாடல்கள் படமாக்கபட உள்ளன அடுத்தாக ஊட்டியில் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் படத்தின் புதிய அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதாவது வரும் ஜூலை 23 சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டைட்டில் போஸ்டரும் பர்ஸ்ட் லுக்கும் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மழையின் தாக்கம் தீவிரம் அடைந்துள்ளது.
    • ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

    ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா தாலுகாக்களில் மழையின் தாக்கம் குறைந்த நிலையில் கூட லூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில் மழையின் தாக்கம் தீவிரம் அடைந்துள்ளது.

    நேற்றும் கூடலூர், பந்தலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான தேவாலா, அய்யன்கொல்லி, கொளப்பள்ளி, சேரம்பாடி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

    இதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. இன்று பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பனி மூட்டத்துடன் மழை பெய்து வருகிறது. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே வாகனங்களை இயக்கி வருகின்றனர்.

    பந்தலூர், கூடலூர் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    தொடர் மழையால், அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குட்டைகள், ஓடைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை காரணமாக அங்குள்ள சில குடியிருப்பு பகுதிகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

    ஆங்காங்கே சில இடங்களில் மண் சரிவுகளும், மரங்களும் முறிந்து விழுந்தன. இதனை தீயணைப்புத் துறையினர் வெட்டி அகற்றினர். தொடர் மழை காரணமாக கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து கலெக்டர் அருணா உத்தரவிட்டுள்ளார்.

    தேவால-உப்பட்டி டவர் பகுதியில் மழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. நிலச்சரிவு ஏற்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அந்த வாகனம் நகர்ந்ததால் காரில் வந்தவர் உயிர்தப்பினார்.

    கூடலூர் பகுதியில் பெய்த கனமழையில் இதுவரை 6 மின் கம்பங்கள், 5 வீடுகள் சேதம் அடைந்தன. பெரிதும், சிறிதுமாக 17 இடங்களில் விழுந்த மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டன.

    காற்றில் 2,500 நேந்திரன் வாழை மரங்கள் பாதிக்கப்பட்டன. 24 இடங்களில் சிறிய அளவில் மண்சரிவு ஏற்பட்டது. பருவமழையின் போது மழைநீர் சூழ்ந்து பாதிக்கப்பட்ட தேன்வயல், சிறுவயல் கிராம மக்களுக்கு இலவச வீடுடன் மாற்றிடம் வழங்கப்பட்டது.

    இதனால் கூடலூரில் தற்காலிக தங்கும் முகாம் அமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படவில்லை. இருவயல் பகுதியில் மட்டும் குடியிருப்புக்குள் மழை வெள்ளம் புகுந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் பந்தலூர் அருகே கொளப்பள்ளியில் இருந்து பாலாவயல் வழியாக பாட்டவயல் மற்றும் பிதர்காடு உட்பட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலை அமைந்துள்ளது.

    இந்த சாலை வழியாக, 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் நாள்தோறும் சென்று வருகிறார்கள். சாலையின் நடுவே பாயும் ஆற்றைக் கடப்பதற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டது.

    இந்த பாலம் கடந்த 2019-ம் ஆண்டு பெய்த மழையின் போது இடிந்து விழுந்தது. இதனால் தற்போது அங்கு புதிய பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. மக்கள் ஆற்றை கடந்து செல்வதற்கு வசதியாக அங்கு தற்காலிக பாலம் அமைக்கப்பட்டு, மக்கள் அதனை பயன்படுத்தி வந்தனர்.

    தற்போது மழை பெய்து வருவதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பாலத்தின் ஒரு பகுதியை ஆற்று வெள்ளம் சூழ்ந்தது. மற்றொரு பகுதி தண்ணீரின் மேல் பகுதியில் அமைந்துள்ளதால் மக்கள் பாலத்தை கடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் இந்த பகுதி மக்கள் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வேறு வழியில் பயணித்து வருகிறார்கள்.

    மாவட்ட கலெக்டர் அருணா கூறும்போது, `நீலகிரியில் பெய்து வரும் மழையால் பெரியளவில் பாதிப்பில்லை. மரங்கள் விழுந்துள்ளன. அவற்றை நெடுஞ்சாலை மற்றும் தீயணைப்புத்துறையினர் வெட்டி அகற்றினர். பந்தலூர் அருகே பாலாவயல் பகுதியில் ஆற்றை கடக்க அமைக்கப்பட்ட தற்காலிக பாலத்தை வெள்ளம் சூழ்ந்தது. அதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.

    நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    அப்பர் பவானி-72,

    சேரங்கோடு-39,

    ஓவேலி-28,

    பந்தலூர், நடுவட்டம்-22,

    பாடந்தொரை-18,

    செருமுள்ளி-16. 

    • ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
    • பொதுமக்ள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் அங்குள்ள ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    மேலும் கிரீன்பீல்டு, லோயர்பஜார் ஆகிய பகுதிகளில் உள்ள பெரும்பாலான குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்ள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

    இதுமட்டுமின்றி அங்குள்ள கடைகளிலும் தண்ணீர் புகுந்ததால் பொருட்களை வாங்க வந்த மக்கள் பாதிக்கப்பட்டனர். மழை ஓய்ந்த பிறகு கடைகளில் புகுந்த வெள்ளநீரை வியாபாரிகள் வெளியேற்றினர்.

    ஊட்டி பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலைய பாலத்தின் அடியில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது.

    இதில் அந்த வழியாக சென்ற சுற்றுலா வாகனங்கள் சிக்கிக்கொண்டன. மேலும் படகு இல்ல சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் மாற்றுவழியில் திருப்பிவிடப்பட்டன.

    ஊட்டி கமர்ஷியல் சாலையில் தண்ணீர் தேங்கி குளம்போல காட்சி அளித்தது. இருப்பினும் ஊட்டிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் கனமழையை ரசித்தபடி செல்போனில் வீடியோ பதிவுசெய்து மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

    இதற்கிடையே தேயிலை தோட்டங்களில் நல்ல ஈரப்பதம் தென்படுவதால் அங்குள்ள விவசாயிகள் நிலத்துக்கு உரமிட்டு பராமரிக்க தயாாராகி வருகின்றனர். மேலும் அங்குள்ள காய்கறி தோட்டங்களில் தற்போது விதைப்பு பணிகள் விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகின்றன.

    ஊட்டியில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்டு உள்ள பாதிப்புகள் குறித்து நகராட்சி கமிஷனர் ஏகராஜ் கூறுகையில், பாதாள சாக்கடை குழாய்கள் ஆங்காங்கே நிரம்பி வழிந்து சாலைகளில் கழிவுநீர் வெளியேறுவதால் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வரும் தண்ணீரை பாதாள சாக்கடைக்குள் விட வேண்டாம்.

    மேலும் ஓட்டல், விடுதிகளின் உரிமையாளர்கள் கட்டிடம் மற்றும் வளாகத்தில் இருந்து வரும் தண்ணீரை பாதாள சாக்கடை குழாய் இணைப்புக்குள் பொருத்தி இருக்கக்கூடாது. அப்படி செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது பொது சுகாதார சட்டப்படி அபராதம் விதிப்பதுடன் கட்டிடத்தில் உள்ள பாதாள சாக்கடை இணைப்பும் துண்டிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

    • நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடைவிழா தொடங்கி நடந்து வருகிறது.
    • தொட்டபெட்டாவின் இயற்கை அழகை பார்க்க ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடைவிழா தொடங்கி நடந்து வருகிறது. ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியும், ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சியும் நடந்து வருகிறது.

    கண்காட்சியை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்து அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

    சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்காவில் நடக்கும் மலர் கண்காட்சி, ரோஜா பூங்காவில் நடைபெறும் ரோஜா கண்காட்சி ஆகியவற்றை பார்வையிடுகிறார்கள்.

    அதனை தொடர்ந்து ஊட்டியில் உள்ள படகு இல்லம், தொட்டபெட்டா மலைச்சிகரம், பைக்காரா படகு இல்லம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களுக்கும் சென்று சுற்றிப் பார்ப்பது வழக்கம்.

    இந்த நிலையில் தொட்டபெட்டா மலைச் சிகரத்துக்குச் செல்லும் பகுதியில் வனத்துறை சாா்பில் சோதனைச் சாவடி அலுவலக கட்டுமான பணி தொடங்கி உள்ளது.

    இதன் காரணமாக தொட்டபெட்டா மலைச்சிகரம் தற்காலிகமாக மூடப்பட்டது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தற்காலிகமாக மூடப்பட்டிருந்த தொட்டபெட்டா காட்சி முனை 7 நாட்களுக்குப் பின் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

    தொட்டபெட்டாவில் விட்டு விட்டுப் பெய்யும் சாரல் மழை, அடிக்கடி சூழ்ந்து கொள்ளும் மேக மூட்டத்தால் நிலவும் குளிரில் இயற்கை அழகை பார்க்க இன்று ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

    • மலைரெயில் பாதையில் உள்ள தண்டவாளத்தில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்தன.
    • மலைரெயிலில் பயணிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரிக்கு தினமும் மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது. காடுகளுக்கு நடுவே செல்வதால் இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கலாம் என்பதால் இந்த ரெயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள்.

    நீலகிரி, மேட்டுப்பாளையத்தில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் கடந்த 18-ந் தேதி மலைரெயில் பாதையில் பாறைகள், மண்சரிவு ஏற்பட்டது. இதனால் 18-ந் தேதி தல் 21-ந் தேதி வரை 4 நாட்கள் ரத்து செய்யப்பட்டது.

    சீரமைப்பு பணிகள் முடிந்து நேற்று மீண்டும் மலைரெயில் போக்குவரத்து தொடங்கியது. இந்த நிலையில், மீண்டும் மழை பெய்ததால், மலைரெயில் பாதையில் உள்ள தண்டவாளத்தில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்தன. இதுகுறித்து ரெயில்வே ஊழியர்கள் ரெயில்வே நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து இன்று ஒருநாள் மலைரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்படும் என சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் மலைரெயிலில் பயணிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    ×