search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Puratasi saturday"

    • திருமாலின் நாமத்தை ஜபித்து விஷ்ணுவை வழிபடுகிறார்கள்.
    • புரட்டாசி ஏகாதசியும் சிறப்பானதுதான்.

    சித்திரை தொடங்கிக் கணக்கிடப்படும் பன்னிரண்டு தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதம் ஆறாவது மாதம். இம்மாதம் முப்பத்தியோரு நாட்களை உடையது.

    `மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்` என்று கண்ணன் கீதையில் சொன்னாலும், அன்பர்கள் புரட்டாசியையும் பெருமாளுக்குரிய மாதமாகவே கருதுகிறார்கள்.


    திருமாலின் வடிவமான திருப்பதி வேங்கடவனின் ஆசி பெற விரும்பும் அன்பர்கள், வேங்கடாஜலபதியை விசேஷமாகப் புரட்டாசியில் வழிபடுகிறார்கள்.

    அதற்கு ஒரு காரணம் உண்டு. வெங்கடாஜலபதி திருப்பதியில் அவதரித்தது ஒரு புரட்டாசி மாத திருவோண நட்சத்திரத்தில் தான்.

    படிப்படியாய் மலையில் ஏறி திருப்பதி மலையப்பனை தரிசித்துப் பிரார்த்தனை செய்தால், நம்மை எப்படி கடக்க முடியும் என மலைக்க வைத்த துன்பங்களெல்லாம் படிப்படியாய்க் குறைந்து நிம்மதி தோன்றும் என்று அடியவர்கள் நம்புகிறார்கள்.

    வைணவர்கள் மட்டுமல்லாமல் சைவர்களில் பலரும் கூட புரட்டாசி சனிக்கிழமையன்று நெற்றியில் நாமம் இட்டுக் கொண்டு திருமாலின் நாமத்தை ஜபித்து விஷ்ணுவை வழிபடுகிறார்கள்.

    வேங்கடவனுக்கு மாவிளக்கு ஏற்றிப் பிரார்த்தனை செய்யும் மரபு பல குடும்பங்களில் வழிவழியாக வருகிறது. அவர்களெல்லாம் மாவிளக்கு ஏற்ற புரட்டாசி சனிக்கிழ மையைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள்.

    புரட்டாசி காலஞ்சென்ற நம் குடும்ப முன்னோர்களை வழிபடுவதற்குரிய மாதமாகவும் கருதப் படுகிறது. முன்னோருக்கு நீர்க்கடன் செலுத்தும் மகாளய அமாவாசை புரட்டாசி மாதத்தில்தான் வருகிறது.

    பவுர்ணமி தொடங்கி அமாவாசை முடிய உள்ள பதினைந்து நாட்கள் அடங்கிய காலகட்டம் `மகாளய பட்சம்` எனப்படுகிறது. அந்தப் பதினைந்து நாட்களும் நம் முன்னோர் மேலுலகில் இருந்து வந்து நம்மோடு தங்கிச் செல்கிறார்கள் என்பதும் அந்த நாட்களில் அவர்களைப் பிரார்த்தனை செய்வதால் அவர்கள் ஆசியைப் பெறமுடியும் என்பதும் அன்பர்களின் நம்பிக்கை.

    பித்ருக்களுக்கு நீர்க்கடன் செலுத்துதல் பழங்காலம் தொட்டே தமிழர்களிடம் நிலவிவந்த ஒரு பழக்கம். திருக்குறளும் நீத்தாருக்கு நீர்க்கடன் செய்யும் அவசியத்தைப் பேசுகிறது.

    ஒருவன் தன் சம்பாத்தியத்தை ஐந்தாய்ப் பிரித்து அதில் ஒரு பங்கை நீத்தார் கடன் செலுத்தப் பயன்படுத்தவேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.

    `தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல்

    தான் என்றாங்கு

    ஐம்புலத்தாறு ஓம்பல் தலை'

    என்கிற திருக்குறளில் பித்ருக்களுக்கு நீர்க்கடன் செலுத்தவேண்டும் என்பதைச் சொல்லும்போது `காலமான முன்னோர், கடவுள், விருந்தினர், சுற்றத்தார், தான்` என்ற வரிசையில் பித்ருக்களை முதலில் வைக்கிறார் வள்ளுவர் என்பதும் கவனத்திற்குரியது.


    புரட்டாசி அமாவாசை மட்டுமா, புரட்டாசி ஏகாதசியும் சிறப்பானதுதான். அன்று உண்ணாநோன்பு மேற்கொண்டு பெருமாளைத் துளசியால் அர்ச்சித்து வழிபட்டுப் பலனடைகிறார்கள் பக்தர்கள்.

    தேவியை வழிபடும் நவராத்திரியும் இந்த மாதத்துப் பண்டிகைதான். இது பெண்களுக்கே உரிய பண்டிகை. `காளையர்க்கு ஓரிரவு சிவராத்திரி ஆனால் கன்னியர்க்கு ஒன்பதுநாள் நவராத்திரி' என்பன கண்ணதாசன் வரிகள்.

    அழகிய படிகளைக் கட்டி பொம்மைகளை அவற்றில் வரிசையாய்க் கொலு வீற்றிருக்கச் செய்து கொண்டாடப்படும் நவராத்திரி போன்றதொரு பண்டிகை உலகில் வேறெங்கும் இருப்பதாகத் தெரியவில்லை.

    மண் பொம்மைகளைச் செய்து அவற்றின் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு வாழும் கைவினைக் கலைஞர்கள் ஆண்டுதோறும் ஆவலாக எதிர்பார்ப்பது நவராத்திரிப் பண்டிகையைத் தான். வருடம் முழுவதற்குமான அவர்களின் வாழ்க்கைக்கு புரட்டாசியில் வரும் நவராத்திரி விற்பனைதான் வழி செய்கிறது.

    கவுரி விரதம், மகாலட்சுமி விரதம், தசாவதார விரதம் போன்ற பற்பல வித்தியாசமான விரதங்கள் எல்லாம் புரட்டாசியில்தான் வருகின்றன.

    புரட்டாசி ஆன்மிக மாதம் என்பதற்கு மேலும் ஓர் எடுத்துக்காட்டு வேண்டுமென்றால் பற்பல மகான்கள் பிறந்திருப்பது இந்த மாதத்தில்தான் என்பதைச் சொல்லலாம்.

    வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலார் புரட்டாசியில் பிறந்தவர்தான். திருவள்ளுவரின் புலால் உண்ணாமைக் கோட்பாட்டைத் தீவிரத்தோடு வலியுறுத்திய மகான் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.

    புரட்டாசி வள்ளலார் பிறந்த மாதம் என்பதால் அந்த மாதத்திலாவது அசைவ உணவை முற்றிலுமாகத் தவிர்க்கும் பழக்கம் சிலரிடம் காணப்படுவது பொருத்தமானதுதான்.

    வைணவச் சான்றோரும் தமிழ் வடமொழி இரண்டிலும் மிகச் சிறந்த நூல்களைப் படைத்தவருமான வேதாந்த தேசிகர் பிறந்ததும் புரட்டாசியில் தான்.

    திருமந்திரம் என்ற அரிய தத்துவச் செய்யுள் நூலைப் படைத்தவரும் திருவிடை மருதூரில் சமாதிக் கோயில் கொண்டிருப்பவருமான திருமூலர் அவதரித்ததும் ஒரு புரட்டாசி மாதத்தில்தான்.

    தாகூரால் மகாத்மா என அழைக்கப் பட்ட காந்தி அடிகளும் அவரது கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இளம் வயதிலேயே சுதந்திரப் போரில் உயிர் நீத்த கொடிகாத்த குமரன் பிறந்ததும் புரட்டாசியில்தான். ராமாயணம் என்ற மகத்தான இதிகாசத்தைப் படைத்த ஆதிகவி வால்மீகி அவதரித்ததும் புரட்டாசி அனுஷ நட்சத்திரத்தில்தான்.

    மறுமையில் வீடுபேறு அடைவதற்குரிய புண்ணியச் செயல்களைச் செய்யும் மாதம் இது என்பதாலோ என்னவோ, இம்மையில் வீடு வாங்குதல் போன்ற செயல்களைப் பொதுவாகப் புரட்டாசி மாதத்தில் செய்வதில்லை.

    புதுமனை புகுவிழாக்களையோ புது வியாபாரம் தொடங்குதல் போன்றவற்றையோ அதுபோன்ற எந்தப் புது முயற்சியையுமே புரட்டாசியில் செய்யும் வழக்கமில்லை.

    பூண்டு வெங்காயம் போன்றவற்றை இந்த மாதத்தில் உணவில் சேர்க்காமல் தவிர்ப்பவர்கள் உண்டு. புரட்டாசி மாதம் முழுவதிலும் முடியவில்லை என்றாலும் புரட்டாசி சனிக்கிழமை அன்றாவது அசைவத்தையும் பூண்டு வெங்காயத்தையும் தவிர்ப்பவர்கள் நிறையப் பேர் உண்டு.

    புரட்டாசி சனிக்கிழமையன்று முழுவதுமாக உண்ணாவிரதம் இருப்பவர்களும் கூட உண்டு.

    திருமாலைப் பற்றிய பக்திப் பனுவல்களில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட நாராயணீயம் முக்கியமானது. நாராயணனைப் போற்றி நாராயண பட்டதிரி அருளிய நூலே நாராயணீயம்.

    குருவாயூரப்பனை முன்னிலைப் படுத்தி அவருடன் பேசுவது போலான உத்தியில் எழுதப்பட்டுள்ள இந்த நூலை எப்போது பாராயணம் செய்தாலும் புண்ணியம்தான். என்றாலும் திருமாலுக்குரிய புரட்டாசி மாதத்தில் பாராயணம் செய்வது விசேஷமானது.

    ஒரு பக்தி நூலைப் பாராயணம் செய்வதால் ஏற்படும் பலன்களைப் பற்றிச் சொல்லக் கூடியது அந்த நூலின் இறுதியில் அமைந்து ள்ள பலச்ருதி என்ற பகுதி.

    நாராயணீயத்தின் பலச்ருதி என்பது உடல் ஆரோக்கியம்தான். நம் உடல் நலனை வலுப்படுத்தக் கூடிய மந்திர சக்தி நிறைந்த சுலோகங்களைக் கொண்டது நாராயணீயம்.

    பத்துப் பத்துக் கவிதைகளாக அமைந்த நாராயணீயத்தின் நூறு தசகங்களில் ஒவ்வொரு தசகத்தின் இறுதியாக அமையும் பாடலிலும் `என் நோயிலிருந்து என்னைக் காத்தருள் இறைவா!` என்ற பொருளுடைய வாக்கியம் கட்டாயம் இடம்பெற்றிருக்கும்.

    நாராயணீயத்தைப் புரட்டாசி மாதத்தில் பாராயணம் செய்வதால் நோய்நீங்கி நல்ல உடல்நலத்தோடு கூடிய ஆரோக்கியமான வாழ்க்கையைப் பெற முடியும்.

    திருமாலின் ஆயிரம் நாமங்களைக் கூறி அவரைத் துதிக்கும் சகஸ்ர நாமத்தையும் புரட்டாசியில் நாள்தோறும் ஜபிப்பது நல்ல பலனைத் தரும்.

    புரட்டாசியில் செய்யும் ராமநாம ஜபம் அதிகப் பலன்தரக் கூடியது. வால்மீகி ராமாயணம், கம்ப ராமாயணம், பாகவதம், மகாபாரதம் முதலிய திருமாலின் பெருமைகளைப் பேசும் நூல்களை இந்த மாதத்தில் பாராயணம் செய்வது சிறப்பு.

    கண்ணன் அருளிய கீதையை மனமொன்றி வாசித்து அதுசொல்லும் கருத்துகளை ஆழ்மனத்தில் சிந்திப்பதற்குரிய விசேஷ மாதமும் புரட்டாசியே.

    பலர் பல்வேறு நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதாக மனத்தில் வேண்டிக் கொள்வதுண்டு. ஆனால் உலகச் சூழலில் பற்பல காரணங்களால் அத்தகைய நேர்த்திக் கடன்களை உடனுக்குடன் செலுத்த இயலாமல் போவதும் உண்டு.

    செலுத்தாமல் தாமதமான நேர்த்திக் கடன்களைச் செலுத்துவதற்குரிய மாதமும் புரட்டாசிதான். விட்டுப்போன நேர்த்திக் கடன்களைப் புரட்டாசி மாதத்தில் செலுத்தினால், இறைவன் அந்தத் தாமதத்தை மன்னித்து அன்பர்களுக்கு அருள் புரிவார் என நம்பப் படுகிறது.

    புரட்டாசியில் திருப்பதி, ஸ்ரீரங்கம், குணசீலம், ஸ்ரீவில்லிப்புத்தூர் முதலான வைணவத் திருத்தலங்களில் பிரம்மோத்சவத் திருவிழா கொண்டாடப் படுகிறது.

    பத்து முதல் பன்னிரண்டு நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில் காலையும் மாலையும் பல்வேறு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் இடம்பெறும். திருப்பதி பிரம்மோத்சவமும் திருவரங்க பிரம்மோத்சவமும் மிகப் பிரசித்தமானவை.

    புரட்டாசி மாதத்தில் நாம் வழிபடும் திருமால், தொன்றுதொட்டுத் தமிழர்கள் வழிபட்டுவரும் தெய்வமாவார். தொல்காப்பியம் என்ற மிகப் பழைய தமிழ் இலக்கண நூல் திருமாலை `மாயோன்` என்ற பெயரால் குறிப்பிடுகிறது.

    ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் `ஆய்ச்சியர் குரவை` என்ற பகுதியில் மதுரையில் வாழும் இடைக்குலப் பெண்கள் திருமாலைப் போற்றுவதாக அமைந்த பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

    `மடம்தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்

    கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும்

    போற்ற

    படர்ந்து ஆரணம் முழங்க பஞ்சவர்க்குத்

    தூது

    நடந்தானை ஏத்தாத நா என்ன நாவே!

    நாராயணா என்னா நா என்ன நாவே!'

    என்றெல்லாம் அந்தப் பகுதியில் திருமாலைப் போற்றுகிறார் சமணப் புலவரான இளங்கோ அடிகள்.

    படைத்தல் காத்தல் அழித்தல் ஆகியவை இறைச்சக்தியின் மூன்று பெரும் தொழில்கள். அவற்றில் காக்கும் தொழிலைச் செய்பவர் திருமால். அவருக்கு உகந்த புரட்டாசி மாதத்தில் அவரைப் பிரார்த்திப்பதன் மூலம் நம் இன்னல்கள் அனைத்திலிருந்தும் நாம் காக்கப் படுவோம்.

    தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com

    • காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவுக்கு உகந்த மாதமாகும்.
    • புரட்டாசி முழுவதும் விரதநாட்கள் தான்.

    தமிழ் மாதங்கள் பன்னிரண்டில் ஆறாவது மாதமான புரட்டாசிக்கு தனி மகிமை உண்டு. இது காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவுக்கு உகந்த மாதமாகும். ஒவ்வொரு மாதத்திலும் விரதநாட்கள் இருந்தாலும் புரட்டாசி முழுவதும் விரதநாட்கள் தான்.

    சனி விரதம், நவராத்திரி விரதம் என தினம் தினம் திருவிழா கோலம்தான். பெருமாளை சனிக்கிழமையில் வழிபடுவது மிகவும் சிறப்பு என்பார்கள்.அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை.


    ஒன்பது கோள்களில் ஒன்றான புதன் கிரகத்திற்கு உரிய மாதங்களில் புரட்டாசியும் ஒன்று. புதனின் அதி தேவதையாக இருப்பவர் மகாவிஷ்ணு. எனவேதான் விஷ்ணுவின் அருள்பெற உகந்த மாதமாக புரட்டாசி திகழ்கிறது.

    பெருமாளின் அம்சமாக கருதப்படும் புதனுடைய வீடு கன்னி. இந்த கன்னி ராசியில் சூரியன் அமர்வது புரட்டாசி மாதத்தில்தான். ஆகவே இந்த மாதத்தில் பெருமாளுக்கு வேண்டிய பஜனைகள் பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன.

    புதனுக்கு நட்பு கிரகம் சனிபகவான். அதனால்தான் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகள் விஷேசமாக கொண்டாடப்படுகிறது.

    புரட்டாசி மாதத்தை எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது. எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத் தில் காத்தல் கடவுளான விஷ்ணுவை வணங்குவது சிறப்பு. ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் விரதம் கடைப்பிடிப்பது நல்லது.

    அப்படி விரதத்தினை மேற்கொள்ள முடியாதவர்கள், புரட்டாசி சனிக்கிழமைகளில் அவரவர் குடும்ப வழக்கப்படி மாவிளக்கு ஏற்றி, பெருமாளுக்குப் பூஜை செய்து வழிபட்டு, முடிந்த அளவு அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் அருள் கிடைக்கும்.

    சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான். இதில், புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது. புரட்டாசி சனிக் கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார்.

    அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடு பலன்கள் குறைய காக்கும் கடவுளான பெருமாளை வணங்குவது வழக்கத்தில் வந்தது. புரட்டாசி மாதம் பல்வேறு சிறப்புகள் கொண்டது. சிவபெருமான், விஷ்ணு, அம்மன், விநாயகர் வழிபாடு புரட்டாசியில் மிகவும் சிறப்பாக நடைபெறும்.

    குறிப்பாக புரட்டாசி என்றதுமே அனை வருக்கும் முதலில் திருப்பதி ஏழு மலையான் வழிபாடுதான் நினைவுக்கு வரும். அதனால் தான் புரட்டாசி மாதத்தை "பெருமாள் மாதம்" என்று சொல்கிறார்கள்.

    புரட்டாசி மாதம் சனிக் கிழமைகளில் மேற்கொள் ளப்படும் விரதம் மிக, மிக சக்தி வாய்ந்தது. புண்ணியத்தை இரட்டிப்பாக்கி தர வல்லது. எனவே பெருமாள் பக்தர்கள் புரட்டாசி மாதம் முழுவதும் வழிபாடு செய்வதை வழக்கத் தில் வைத்துள்ளனர்.

    புரட்டாசியில் சனிக் கிழமை விரதம் தவிர அனந்த விரதம், ஏகாதசி விரதம் உள்பட ஏராளமான விரதங்கள் உள்ளன. புரட்டாசியில் பெருமாளுக்கு இணையாக சிவபெருமானுக்கும் வழிபாடுகள் நடத்தப்படுகிறது.

    அது போல அம்பாளுக்கு உகந்த நவராத்திரி 9 நாட்கள் வழிபாடும் புரட்டாசியில் வர உள்ளது. அதோடு லலிதா சஷ்டி விரதம், உமா மகேஸ்வரி விரதம், கேதார கவுரி விரதம் ஆகியவையும் அம்பாளுக்கு உகந்த புண்ணிய தினங்களாகும்.


    புரட்டாசியில் வரும் தூர்வாஷ்டமி விரதம், ஜேஷ்டா விரதம் ஆகிய இரு விரதங்களும் விநாயகப் பெருமானுக்கு உரியவையாகும். இந்த நாட்களில் விநாயகரை வழிபட்டால் அவரது அருளை முழுமையாகப் பெறலாம்.

    புரட்டாசி சனிக் கிழமையன்று நாம் பெருமாளை வழிபடும் போது, ''திருவேங்கடமலையில் வாசம் செய்யும் சீனிவாசப் பெருமாளே நமஸ்காரம். அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே, வேண்டும் வரங்களை எல்லாம் வழங்குபவரே, மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே நமஸ்காரம்.

    மகாலட்சுமி வசிக்கும் அழகான மார்பை உடையவரே, துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம் போல நன்மைகளை பொழிபவரே, சீனிவாசா உமக்கு நமஸ்காரம்....'' என்று மனம் உருக சொல்லி வழிபட வேண்டும். இந்த துதியை சொல்ல, சொல்ல சகல செல்வங்களும் உங்களுக்கு வந்து சேரும்.

    புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாள் படத்தின் முன்னர் நெய் தீபம் ஏற்றுவதால் வறுமை நீங்கி, வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும். இதனால்தான் புரட்டாசி மாதம், புண்ணியம் தரும் மாதமாக கருதப்படுகிறது.

    • போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • வருகிற 21, 28-ந் தேதி அடுத்தமாதம் 5, 12-ந் தேதி வரை இயக்கப்படுகிறது.

    நெல்லை:

    புரட்டாசி மாதம் பிறப்பதையொட்டி நெல்லையில் இருந்து நவ திருப்பதி கோவில்களுக்கு சென்று வர போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    அதன்படி நவ திருப்பதி கோவில்களான ஸ்ரீவைகுண்டம், நத்தம், திருப்புளியங்குடி, இரட்டை திருப்பதி(2), பெருங்குளம், தென்திருப்பேரை, திருக்கோளூர், ஆழ்வார் திருநகரி ஆகிய இடங்களுக்கு இயக்கப்படுகிறது.

    அந்த வகையில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளான வருகிற 21, 28-ந் தேதி அடுத்தமாதம் 5, 12-ந் தேதி ஆகிய 4 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நெல்லை மண்டலம் தகுந்த ஏற்பாடுகளை செய்துள்ளது.

    இந்த சிறப்பு பஸ்களானது புரட்டாசி மாத சனிக்கிழமை காலை 7 மணிக்கு நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு நவ திருப்பதிகளுக்கு சென்று பின்னர் இரவில் மீண்டும் புதிய பஸ் நிலையம் வந்து சேரும்.

    இதற்காக ஒரு நபருக்கு கட்டணம் ரூ.500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக முன்புதிவு செய்ய விரும்புவோர் நெல்லை புதிய பஸ் நிலையம், தென்காசி மற்றும் சங்கரன்கோவில் பஸ் நிலையங்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கட்டண தொகையை முழுமையாக செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    அல்லது அரசு போக்கு வரத்து கழக இணையதளம் www.tnstc.in மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

    இத்தகவலை அரசு போக்குவரத்து கழக நெல்லை மண்டல மேலாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.

    • சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள், நரசிம்மர் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
    • இரட்டை ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு பால் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது.

    மயிலாடுதுறை

    புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி நேற்று மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பெருமாள், நரசிம்மர் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

    மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற பரிமள ரங்கநாத பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.

    இதேபோல் திருவெண்காடு அருகே உள்ள மங்கைமடம் வீர நரசிம்மர் கோவில், திருக்குரவலூர் உக்கிர நரசிம்மர் கோவில், திருக்குரவலூர் உக்கிர நரசிம்மர் கோவில், திருநகரி யோக மற்றும் ஹிரண்ய நரசிம்மர், மற்றும் திருவாலி லட்சுமி நரசிம்மர் என பஞ்ச நரசிம்மர் கோவில்களில் வழிபாடுகள் நடந்தன. சீர்காழி அருகே உள்ள வடரங்கம் ரங்கநாதபெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.

    இதனைத் தொடர்ந்து மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    தலைச்சங்காடு நான் மதிய பெருமாள் கோவில், அண்ணன் பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

    செம்பனார்கோவில் அருகே மேலப்பாதி இரட்டை ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு பால் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    அனைத்து கோவில்களில் நடந்த வழிபாடுகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • வாடிப்பட்டியில் புரட்டாசி சனிக்கிழமை வீதி பஜனை நடந்தது.
    • பாதயாத்திரை குழுவினரும் கலந்து கொண்டனர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே நீரேத்தானில் நவநீத பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி முதல் வார வீதி உலா பஜனை நடந்தது. கோவில் அர்ச்சகர் நவநீத கண்ணன் தலைமையில் கோவிலில் இருந்து புறப்பட்டு தாதம்பட்டி மந்தை, சடையாண்டி கோவில், விராலிப்பட்டி பிரிவு, மேட்டு பெருமாள் நகர், நாட்டாமைக்காரர் தெரு, நடுத்தெரு, இரட்டை விநாயகர் கோவில் தெரு, மெயின் ரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகளில் பஜனை பாடல்கள் பாடியபடி வீதி உலா சென்று கோவிலை அடைந்தனர். இந்த ஊர்வலத்தில் திருநெல்வேலியில் இருந்து ஸ்ரீரங்கம் செல்லும் பாதயாத்திரை குழுவினரும் கலந்து கொண்டனர். 

    • தொண்டை மானுக்கு ஏழுமலையான் மீது பற்றும், பாசமும் அதிகம்.
    • தினமும் பொன்மலர்களால் அர்ச்சனை செய்வதற்குரிய ஏற்பாடுகளை செய்திருந்தான்.

    ஏழுமலையானுக்கு புரட்டாசி சனிக்கிழமைதான் உகந்த நாள் என்பதன் பின்னணியில் ஒரு கதை உள்ளது. அந்த கதை வருமாறு:-

    மன்னன் தொண்டை மானுக்கு ஏழுமலையான் மீது பற்றும், பாசமும் அதிகம். எனவே திருவேங்கடவனுக்கு ஆலயம் அமைத்து தினமும் பொன்மலர்களால் அர்ச்சனை செய்வதற்குரிய ஏற்பாடுகளை செய்திருந்தான். அதன்படியே பூஜையும் செய்து வந்தான். ஒருநாள் பூஜையின்போது பொன்மலர்களுக்கிடையே மண்மலர்களும் வந்து விழுவதைக் கண்டான். திடுக்கிட்ட அவன், அவை மண்மலர்கள்தானா எனக் கூர்ந்து நோக்கினான்.

    அவை மண்மலர்கள்தான் என்பதை மீண்டும் மீண்டும் பூஜையில் வந்து விழுந்த மலர்கள் சந்தேகமே இல்லாமல் நிரூபித்தன. கதவுகள் அனைத்தையும் மூடி விட்டு மன்னன் மீண்டும் பூஜையைத் தொடர்ந்தபோதும் அவ்வாறே நிகழ்ந்தது. மன்னனின் மனம் குழப்பத்துக்கு உள்ளாகியது. தனது வழிபாட்டில் ஏதேனும் பிழை இருக்குமோ என உள்ளுக்குள் வருந்தினான்.

    குருவை என்ற கிராமம் ஒன்றில் பீமய்யா என்ற குயவன் ஒருவன் வாழ்ந்து வந்தான். பிறவியிலேயே அவனுக்கு கால் ஊனம். தனது குலத்தொழிலான மண்பாண்டங்கள் செய்தலை நேர்மை தவறாமல் ஏழுமலையான் மீது அயராத பக்தி கொண்டு செய்து வந்தான். வேங்கடவனும் அவன் பக்திக்கு மெச்சி, தன் திருவுருவத்தை அவனுக்கு கனவில் காட்டி பின்பு மறைந்து விட்டார்.

    பீமய்யாவுக்கு திருமால் கனவில் காட்சியளித்த நாள், புரட்டாசி மாத சனிக்கிழமை விடியற்காலை நேரம். பீமய்யாவும், தனது கனவில் தோன்றிய திருமாலின் வடிவத்தை அப்படியே செய்தான். அதன்பின்னர் மண்ணால் ஏழுமலையானின் உருவத்தை வடித்து, மலர்கள் தூவி வழிபட்டு வந்தான். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை நாளில் தவறாமல் விரதம் அனுசரித்து வந்த பீமய்யன், பெருமாளின் சிந்தனையிலேயே தொழிலையும் செய்து வந்தான்.

    இவ்விதம் தொழில் செய்து கொண்டிருக்கும் போதே, கண்மூடி தியானத்தில் ஆழ்ந்து விடுவான். அச்சமயங்களில்தான் என்ன செய்கிறோம் என்பதை அறியா நிலையிலேயே, பிசைந்து கொண்டிருக்கும் களி மண்ணையே மலர்களாக பாவித்து பெருமாளுக்கு அர்ச்சிப்பான். காலப்போக்கில் இதுவே அவனது அன்றாட அலுவலாகவும் ஆகி விட்டது. இது இப்படியிருக்க, குழப்பத்திலிருந்த தொண்டைமான் ஒருநாள் அபூர்வக் கனவொன்றைக் கண்டான்.

    அக்கனவில் வேங்கடநாதன் தோன்றி, `தமது பக்தன் பீமய்யன் செய்யும் பூஜையே தமக்கு மிகுந்த மனநிறைவை அளிப்பதாகவும், அந்தப் பூஜையை நீயும் செய்து பார், அப்போது உண்மை விளங்கும்' என்று கூறி மறைந்தார். தொண்டைமானும் திருமால் குறிப்பிட்ட இடத்துக்கு சென்று பீமய்யன் செய்யப்போகும் பூஜையை மறைந்திருந்து கவனித்தான்.

    தினமும் செய்வது போலவே, பீமய்யன் தான் வடிவமைத்திருந்த வேங்கடவனின் சிலை அருகே அமர்ந்து மண்பாண்டங்களை செய்து கொண்டே, கண்மூடி மண் மலர்களைத் தூவி இறை வனை வழிபடு வதை கண்டான் தொண்டைமன்னன். உடனே பீமய்யனைச் சென்று கட்டித் தழுவிய தொண்டைமான் அவனிடம், `உன் பக்தி உயர்வான பக்தி.

    உனது வழிபாட்டைத் திருமால் ஏற்றுக் கொண்டு விட்டார் என்பதை நான் புரிந்து கொண்டேன்' என்றான். இதற்கிடையில் அந்தப் பரந்தாமன் பீமய்யனின் கனவிலும் தோன்றி, `உன் பக்தி யின் பெருமையை என்று பிறர்கூற அறிகின் றாயோ அன்றே உனக்கு முக்தி அளித்து, வைகுந்தத்துக்கு அழைத்துக் கொள்வேன்' எனக் கூறியிருந்தார்.

    அதன்படியே தொண்டைமான், பீமய்யனின் பக்தியை பாராட்டியதைக் கேட்ட மறுகணமே அவனுக்கு முக்தி கிடைத்தது. எனவே புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து, ஏழுமலையானை மனம் உருக வழிபட்டால், செல்வமும், நிம்மதியும் கிடைக்கும் என்பதோடு, முக்தியும் வாய்க்கும் என்பது ஐதீகம். புரட்டாசி மாத சனிக்கிழமை விரதத்துக்கு இப்படியொரு மகத்துவம் இருக்கிறது.

    • சனிக்கிழமை விரதம் இருப்பது திருப்பதி ஏழு மலையானுக்கு மிகவும் உகந்தது.
    • தசாவதாரத்தில் எந்த அவதாரத்திலும் சேராதது ஸ்ரீ வெங்கடேசன் அவதாரம்.

    புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது திருப்பதி ஏழு மலையானுக்கு மிகவும் உகந்தது. தசாவதாரத்தில் எந்த அவதாரத்திலும் சேராதது ஸ்ரீ வெங்கடேசன் அவதாரம். பக்தர்களின் நலனுக்காக அவர் திருமலையில் எழுந்தருளி இருக்கிறார்.

    புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பவர்கள் முதலில் வீட்டில் பூஜை அறையை சுத்தம் செய்து கோல மிட வேண்டும். பின்னர் அலமேலு மங்கையுடன் கூடிய வெங்கடேசப்பெருமாள் படத்தை அலங்கரிக்க வேண்டும். இரு பக்கங்களிலும் ஐந்துமுக குத்து விளக்கை ஏற்றி வைக்க வேண்டும். பூஜைக்குரியவற்றை சேகரித்து வைத்து ராகு காலம், எமகண்டம் நேரம் இல்லாமல் நல்ல நேரத்தில் மாவிளக்கேற்றி பூஜிக்க வேண்டும். சர்க்கரைப்பொங்கல், வடை எள் சாதத்தை நிவேதனமாக படைக்கலாம்.

    புரட்டாசி மாதம் ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் மாவிளக்கு ஏற்றி, பூஜைகள் செய்ய வேண்டும். அரிசிமாவு, வெல்லம் ஆகியவற்றை கலந்து மாவில் ஒரு பகுதியை இளநீர் விட்டு பிசைந்து தீபம் போல் செய்து மீதி மாவை குவித்து அதன்மேல் பஞ்சினால் பூவத்திபோல் செய்து அதை தீபத்தில் வைத்து சுத்தமான நெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும். அதன் பிறகு பூஜைகள் செய்து ஆரத்தி காட்டவேண்டும்.

    பூஜை முடிந்ததும் தேங்காயை துருவி, மாவுடன் அதனை கலந்து அனைவருக்கும் பிரசாதமாக கொடுக்கலாம். துளசி தண்ணீர், புளிசாதம் மற்றும் எலுமிச்சை சாதம் வைத்து வேங்கடவனை வழிபடுவதும், துளசி, தாமரை மற்றும் குங்குமத்தால் அர்ச்சிப்பதும் விசேஷம். புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை விரதத்தை மேற்கொண்டால் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். செல்வம் செழிக்கும். துன்பங்கள் விலகும்.

    • நான்கு அவதாரங்கள் சங்குசக்கரத்துடன் காட்சியளிக்கின்றன.
    • தும்பிக்கையாழ்வார் என்ற நாமத்தோடு விநாயகர் பன்னிரு ஆழ்வார்களுடன் அமைந்துள்ளார்.

    நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே வீரகேரளம்புதூரில் நவநீதகிருஷ்ணன் சுவாமி கோவில் உள்ளது. `நவநீதம்' என்றால் "வெண்ணெய்" எனப்பொருள். கிருஷ்ணருக்கு பிடித்தது வெண்ணை. இதனால் அவர் நவநீத கிருஷ்ணர் என பெயர் பெற்றார்.

    இந்த கோவில் கர்ப்பகிரஹத்தில் "ஸ்ரீ நவநீதகிருஷ்ணன்" இரு திருக்கரங்களிலும் வெண்ணெய் ஏந்தியவாறு புன்முறுவலுடன் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.

    கற்பூர ஆரத்தியின்போது அவரது திருமுகத்தில் தவழும் புன்னகை அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொள்ளும். கர்ப்ப கிரஹத்தின் முன்பு உள்ள மண்டபத்தில் "ஸ்ரீ தேவி, பூமாதேவி நாச்சியார்கள்" சமேதராக "ஸ்ரீ நவநீதகிருஷ்ணன்" அருள்பாலித்து வருகிறார்.

    கர்ப்பகிரஹத்தின் மேலே செப்புக்கலசத்துடன் கூடிய விமானம் உள்ளது. இவ்விமானத்தில் "கிழக்கு முகமாக ஸ்ரீநவநித கிருஷ்ணனும், தெற்கு முகமாக ஸ்ரீ தட்சிணா மூர்த்தியும், மேற்கு முகமாக ஸ்ரீ யோக நரசிம்மரும்,வடக்கு முகமாக ஸ்ரீ பிரம்மாவும்" எழுந்தருளியுள்ளனர்.

    இத்தலத்தில் பெருமாளின் பத்து அவதாரங்களும் உள்ளனர். மச்சவதாரம், கூர்மவதாரம், வராகவதாரம், நரசிம்மவதாரம் ஆகிய நான்கு அவதாரங்கள் சங்குசக்கரத்துடன் காட்சி அளிக்கின்றன. வாமன அவதாரம் கையில் குடையுடனும், பரசுராம அவதாரம் கையில் கோடாரியுடனும், ராம அவதாரம் வில்லன்புடனும், பலராமன் அவதாரம் கலப்பையுடனும், கிருஷ்ணவதாரம் கையில் வெண்ணையுடனும் இருக்கின்றன.

    கல்கி அவதாரம் கையில் கேடயமும், வாளும் ஏந்தியிருக்கிறது. இந்து மதத்தில் நல்ல உடல்நலத்திற்காக வழிபடப்படும் கடவுள் வடிவங்களுள் தன்வந்திரி ஒன்றாகும். விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படும் இந்த வடிவம் , தசாவதாரத்திற்குள் சேருவதில்லை. பெரும் புகழ்வாய்ந்த விஷ்ணு கோவில்களில் மட்டும் தன்வந்திரி (தனிக்கோயிலில்) காணப்படுகிறார்.

    இந்து மத வேதங்கள் மற்றும் புராணங்கள் தன்வந்திரியை தேவர்களின் மருத்துவர் என்றும் ஆயுர்வேத மருத்துவத்தின் கடவுள் என்றும் குறிப்பிடுகிறது.

    இங்கு இத்திருக்கோயிலின் தன்வந்திரி பகவான் தனி சன்னதியில் உள்ளார். பிரணவ சொரூபியான விநாயகப்பெருமான் தும்பிக்கையாழ்வார் என்ற நாமத்தோடு ஆலயத்தில் பன்னிரு ஆழ்வார்களுடன் அமைந்துள்ளார்.வைணவத்தை வாழவைத்த ராமானுஜர் தனி சன்னதியில் உள்ளார். உற்சவமூர்த்திக்கு எதிரில் "பெரிய திருவடி"என்றழைக்கப்படும் "ஸ்ரீ கருடாழ்வார்" பெருமாளை நோக்கி கைகூப்பி வணங்கிய நிலையில் எழுந்தருளி உள்ளார்.

    உற்சவர் எழுந்தருளி உள்ள மண்டபத்தின் வடக்குத் தூணில் "சிறிய திருவடி" என்று போற்றப்படும் "ஸ்ரீ ஆஞ்சநேயர்" அருள்பாலிக்கிறார்.பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரத்திற்கு பத்து நாட்களுக்கு முன்பாக கொடியேற்றமும் உத்திரம் அன்று தேரோட்டம் நடைபெறுகிறது. மொத்தம் பதினொரு நாட்கள் திருவிழா நடைபெறும்.

    தை பொங்கல் மறுநாள் பாரிவேட்டையும்,தசராவில் பத்து நாட்களுக்கு கொலு வைபவும் ,வைகுண்ட ஏகாதசியில் சொர்க்க வாசல் திறப்பு விழாவும் ,கார்த்திகை மாதம் கார்த்திகை தீபம் அன்று சொக்கபனை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடைபெறும். தமிழ் மாதம் கடைசி சனிக்கிழமையும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். வாரத்தில் புதன், வெள்ளி மற்றும் சனி கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமைகள் மற்றும் கிருஷ்ணருக்குரிய அனைத்து விழாக்களும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமைகள் மற்றும் கிருஷ்ணருக்குரிய விசேஷ நாட்களில் இத்தலத்திற்கு வந்து அருகில் உள்ள சிற்றாற்றில் நீராடி விட்டு கிருஷ்ணரை தரிசித்து, பால்பாயாசம், வெண்ணெய் நைவேத்தியம் செய்து வழிபட்டால், கிருஷ்ணர் தன்னைப்போலவே ஒரு அழகான குழந்தை பிறக்க வரமளித்திடுவார் என்பது ஐதீகம்.

    இந்த கோவிலில் தல விருட்சமாக நெல்லி மரம் உள்ளது.

    • புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு செங்கோட்டை கோவில்களில் அதிகாலை முதலே துளசிமாலை, வெற்றிலை மாலை அணிவித்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    • செங்கோட்டை சுந்தரராஜபெருமாள் கோவிலில் காலையில் நறுமண பொருட்களால் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.

    செங்கோட்டை:

    புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு செங்கோட்டை அழகிய மனவாள பெருமாள் கோவில், அறம்வளர்த்த நாயகி அம்மன், ஆஞ்சநேயர் கோவிலில்களில் புரட்டாசி சனி கருட சேவை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.

    அதிகாலை முதலே கோவிலில் துளசிமாலை, வெற்றிலை மாலை அணிவித்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    இதே போன்று செங்கோட்டை சுந்தரராஜபெருமாள் கோவிலில் காலையில் நறுமண பொருட்களால் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. காலையிலும், மாலையிலும் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. புரட்டாசி சனிக்கிழமையையொட்டி பிரானூர் பார்டர் ஆஞ்சநேயர், இலத்தூர் மதுநாதர் அறம் வளர்த்த நாயகி சமேத சனிஸ்வரன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் புரட்டாசி கருட ேசவை கொண்டாடப்பட்டு வருகிறது. கோவிலில் உள்ள ராமர், சீதை, ஆஞ்சநேயர் அறம் வளர்த்த நாயகி சமேத மதுநாதர் சனிஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனையும் நடைபெற்றது.

    ×