search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mamallapuram"

    • இந்தியா முழுவதும் மத்திய தொல்லியல் துறை சார்பில் நவம்பர் 19-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை உலக பாரம்பரிய வாரம் கடை பிடிக்கப்படுகிறது.
    • பள்ளி மாணவர்களும் அதிக அளவில் இலவச அனுமதியை பயன்படுத்தி சுற்றுலா வந்த அவர்கள் ஆர்வமுடன் புராதன சின்னங்களை கண்டுகளித்து சென்றனர்.

    மாமல்லபுரம்:

    சர்வதேச நாடுகளில் உள்ள சரித்திர கால பாரம்பரிய கலைச்சின்னங்கள் அந்த பகுதியின் பழமை, கலாசாரம், வாழ்க்கை முறையை உணர்த்துகின்றன. அத்தகைய நினைவு சின்னங்களை வருங்கால தலைமுறையினர் அறியவும், அவற்றின் முக்கியத்துவம் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றன.

    அவற்றை பாதுகாப்பது குறித்து ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் மத்திய தொல்லியல் துறை சார்பில் நவம்பர் 19-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை உலக பாரம்பரிய வாரம் கடை பிடிக்கப்படுகிறது. பாரம்பரிய வாரம் நேற்று நாடு முழுவதும் தொடங்கப்பட்டது.

    பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களை நேற்று ஒரு நாள் மட்டும் நுழைவுக்கட்டணம் இன்றி சுற்றுலா பயணிகள் இலவசமாக கண்டுகளிக்கலாம் என மாமல்லபுரம் தொல்லியல் துறை அறிவித்து இருந்தது.

    அதன்படி நேற்று காலை 8 மணி முதல் சுற்றுலா வந்த வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகள் நுழைவு கட்டணம் எடுக்காமல் கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணெய் உருண்டைக்கல், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட புராதன சின்னங்களை பார்த்து ரசித்தனர். பள்ளி மாணவர்களும் அதிக அளவில் இலவச அனுமதியை பயன்படுத்தி சுற்றுலா வந்த அவர்கள் ஆர்வமுடன் புராதன சின்னங்களை கண்டுகளித்து சென்றனர்.

    குறிப்பாக ஜப்பான் நாட்டு சுற்றுலா பயணிகள் 50 பேர் நேற்று குழுவாக சுற்றுலா வந்தனர். அவர்கள் தலா ஒருவருக்கு ரூ.600 கட்டணம் செலுத்தாமல் இலவசமாக சுற்றி பார்த்துவிட்டு சென்றனர். இலவச அனுமதியால் அந்த ஜப்பான் நாட்டு குழுவினருக்கு மொத்தம் ரூ.30 ஆயிரம் மிச்சமானது. இலவச அனுமதியால் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

    மாமல்லபுரம் பாரம்பரிய சின்னங்களை கண்டுகளிக்க உள்நாட்டு பயணிகளுக்கு நபர் ஒருவருக்கு ரூ.40-ம், வெளிநாட்டு பயணிகளுக்கு தலா ரூ.600-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கதாகும். நேற்று மாலை 6 மணியுடன் இலவச அனுமதி முடிவுற்றது என்றும், இன்று (திங்கட்கிழமை) முதல் வழக்கம் போல் சுற்றுலா வரும் பயணிகள் ரூ.40 நுழைவு கட்டணம் செலுத்திதான் புராதன சின்னங்களை காண முடியும் என்றும் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

    • நவம்பர் 19-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை உலக பாரம்பரிய வாரமாக அறிவித்து ஆண்டுதோறும் தொல்லியல்துறை விழாவாக நடத்தி வருகிறது.
    • மாமல்லபுரத்தில் பாரம்பரிய வாரம் துவக்க நாளான நாளை ஒருநாள் மட்டும், அனைத்து சுற்றுலா பயணிகளும் அங்குள்ள புராதன சின்னங்களை இலவசமாக பார்க்கலாம்.

    மாமல்லபுரம்:

    நவம்பர் 19-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை, உலக பாரம்பரிய வாரமாக அறிவித்து அந்த நாட்களில் புராதன சின்னங்கள் குறித்து கட்டுரை, ஓவியம் போன்ற கலைத்திறன் போட்டிகள் நடத்தி ஆண்டுதோறும் தொல்லியல்துறை விழாவாக நடத்தி வருகிறது.

    மாமல்லபுரத்தில் பாரம்பரிய வாரம் துவக்க நாளான நாளை ஒருநாள் மட்டும், அனைத்து சுற்றுலா பயணிகளும் அங்குள்ள புராதன சின்னங்களான கடற்கரை கோயில், அர்ச்சுனன் தபசு, வெண்ணெய் உருண்டைக்கல், புலிக்குகை, ஐந்துரதம் பகுதிகளை இலவசமாக பார்க்கலாம் என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

    • பஞ்சபாண்டவர் மண்டபத்தின் மேல்பகுதியில் வலுவிழந்து விரிசல் ஏற்பட்டு உள்ளது.
    • மண்டபத்தின் மேற்பகுதியில் ஏற்பட்டு உள்ள விரிசலின் அளவு, கல்லின் தன்மை, உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. இங்குள்ள புராதன சின்னங்களான ஐந்துரதம், கடற்கரை கோவில், வெண்ணை உருண்டை பகுதி, அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட இடங்களை பார்க்க தினந்தோறும் வெளிநாட்டினர் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கிறார்கள்.

    இதையடுத்து புராதன சின்னங்கள் உள்ள பகுதிகளில் சுற்றுலாபயணிகளின் வசதிக்காக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இரவு நேரத்தில் புராதன சின்னங்களை மின்விளக்கு ஒளியில் ரசிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    அர்ச்சுணன் தபசு பகுதியை பார்க்க செல்லும் சுற்றுலா பயணிகள் அதன் அருகே உள்ள பஞ்சபாண்டவர் மண்டபத்தையும் ரசிப்பது வழக்கம். இந்நிலையில் பஞ்சபாண்டவர் மண்டபத்தின் மேல்பகுதியில் வலுவிழந்து விரிசல் ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே தொல்லியல்துறையினர் மண்டபத்தின் மேற்பகுதியில் அவ்வப்போது ரசாயன சிமெண்ட் கலவை வைத்து பராமரித்து வந்தனர். தற்போது விரிசல் அதிகமாகி மண்டபத்தின் உள்ளே மழைநீர் ஒழுகும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. மழை பெய்யும் போது பஞ்சபாண்டவர் மண்டபத்தில் ஒதுங்கி நிற்கும் சுற்றுலா பயணிகள் விரிசல் வழியாக வரும் மழை நீரில் வழுக்கி விழும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    இதுகுறித்து உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தொல்லியல்துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். சிலர் இணையதளம் வழியாக டெல்லியில் உள்ள தொல்லியல் துறையின் தலைமை அலுவலகத்திற்கும் புகார் அனுப்பினர்.

    இதையடுத்து சென்னை தலைமை செயலக வளாகத்தில் உள்ள மத்திய தொல்லியல்துறை தொல்பொருள் ஆய்வாளர்கள், பழங்கால கட்டிட கட்டமைப்பு பாதுகாப்பு என்ஜினீயர்கள் பஞ்சபாண்டவர் மண்டபத்தில் திடீர் ஆய்வு செய்தனர். மண்டபத்தின் மேற்பகுதியில் ஏற்பட்டு உள்ள விரிசலின் அளவு, கல்லின் தன்மை, உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து விரிசலை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

    • பெண்கள் இறுதி போட்டியில் சாரா வகிதா முதலிடம் பிடித்தார்.
    • ஆண்கள் இறுதி போட்டியில் டென்ஷி இவாமி முதலிடம் பிடித்தார்.

    தமிழ்நாடு அலைசறுக்கு சங்கம் மற்றும் இந்திய அலைசறுக்கு கூட்டமைப்பு இணைந்து நடத்தும் சர்வதேச லீக் போட்டி மாமல்லபுரத்தில் கடந்த 12ம் தேதி துவங்கியது. இன்று அரையிறுதி மற்றும் இறுதி போட்டியுடன் நிறைவடைந்தது.

    ஆண்கள் இறுதி போட்டியில் ஜப்பான் நாட்டை சேர்ந்த டென்ஷி இவாமி 16.30 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார். ஸ்வீடன் நாட்டை சேர்ந்த கியான் மார்ட்டின் 14.70 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார்.

    பெண்கள் இறுதி போட்டியில் ஜப்பான் நாட்டு வீராங்கனை சாரா வகிதா 13.50 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார். ஜப்பான் வீராங்கனை ஷினோ மட்சுடா 13.10 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார்.

    இளைஞர் நலன் விளையாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலர் அதுல்யா மிஸ்ரா, உறுப்பினர்-செயலர் மேகநாதன், செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் ஆகியோர், வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்கினர்.

    • ஆடவர் இறுதிச்சுற்று போட்டியில் ஜப்பானின் டென்ஷி இவாமி சாம்பியன் பட்டம் வென்றார்.
    • பெண்கள் பிரிவில் சாரா வகிடா வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் சர்வதேச அலைச்சறுக்கு போட்டி கடந்த 14-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா தரப்பில் 15 வீரர்கள் உட்பட தாய்லாந்து, சிங்கப்பூர் மலேசியா, வங்கதேசம், மியன்மார், உள்ளிட்ட 12 நாடுகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட சர்வதேச அலைச்சறுக்கு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

    இந்த நிலையில் ஆடவர் இறுதிச்சுற்று போட்டியில் ஜப்பானின் டென்ஷி இவாமி சாம்பியன் பட்டம் வென்றார். 2-வது இடத்தை கியான் மார்டின் பிடித்தார். இதேபோல பெண்கள் பிரிவில் சாரா வகிடா வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். 2-வது இடத்தை ஷினோ மட்சுடா பிடித்தார்.

    • சென்னை, புதுச்சேரி செல்லும் பயணிகள் பஸ்சுக்காக அங்கு பயத்துடன் காத்து நிற்கின்றனர்.
    • ஹெல்மெட் அணிந்து கொண்டு பைக்கில் சந்தேகத்துக்கு இடமான செயின் பறிப்பு நபர்கள் சுற்றுவதாகவும் கூறப்படுகிறது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை பையாஸ் பகுதியில் உள்ள மின் விளக்குகள் ஒரு வாரமாக எரியாததால் அப்பகுதி இருட்டாக காணப்படுகிறது.

    சென்னை, புதுச்சேரி செல்லும் பயணிகள் பஸ்சுக்காக அங்கு பயத்துடன் காத்து நிற்கின்றனர்.

    சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்களில் அதிகளவில் மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகளும் அங்கு பஸ்சுக்கு குடும்பமாக, குழந்தைகளுடன் நிற்கின்றனர். போதை ஆசாமிகள் அவர்கள் வெளியூர் ஆட்கள் என தெரிந்து கொண்டு, அவர்களிம் மது அருந்த பணம் கேட்பதாகவும், ஹெல்மெட் அணிந்து கொண்டு பைக்கில் சந்தேகத்துக்கு இடமான செயின் பறிப்பு நபர்கள் சுற்றுவதாகவும் கூறப்படுகிறது.

    இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாமல்லபுரம் இ.சி.ஆர் மின் விளக்குகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • 7 டி.எக்ஸ் டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் கூடிய காட்சியரங்கம் விரைவில் கட்டப்பட உள்ளது.
    • நிகழ்ச்சியில் திருப்போரூர் எம்.எல்.ஏ எஸ்.எஸ்.பாலாஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    மாமல்லபுரம்:

    கோவளம் அடுத்த முட்டுக்காட்டில் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகத்தின் படுகு குழாம் உள்ளது. இங்கு ரூ.50லட்சம் செலவில் புதிய சுகாதார மையம், குழந்தைகள் விளையாட்டு மையம், கழிவுநீர் சுத்திகரிப்பு, காற்றில் இருந்து குடிநீர் உற்பத்தி உள்ளிட்டவை அமைக்கப்பட்டது. இதன் தொடக்க விழா நடைபெற்றது. இதில் சுற்று லாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு திறந்து வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மாமல்லபுரத்தில் உள்ள புரான சின்னமான அர்ச்சுனன் தபசு அருகில் ரூ.5 கோடி மதிப்பில், 7 டி.எக்ஸ் டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் கூடிய காட்சியரங்கம் விரைவில் கட்டப்பட உள்ளது.

    இதில் மாமல்லபுரம் புராதன சின்னங்களின் வரலாறு குறித்து "3டி லேசர்" ஒளி, ஒலி காட்சி ஒளிபரப்பு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் திருப்போரூர் எம்.எல்.ஏ எஸ்.எஸ்.பாலாஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வரும் நாட்களில் மற்ற இடங்களும் மின்னொளியில் ரசிக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
    • இரவு 9மணிவரை ஏராளமான சுற்றுலா பயணிகள் மின்னொளியில் கடற்கரை கோவிலை பார்த்து ரசித்தனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் இங்குள்ள புராதன சின்னங்களான கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்சுணன்தபசு, வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட இடங்களை பார்த்து ரசித்து செல்கிறார்கள்.

    புராதன சின்னங்களை மின்னொளியில் இரவிலும் பார்வையிட ஏற்பாடு செய்யவேண்டும் என்று சுற்றுலா பயணிகள் தொடர்ந்து மத்திய தொல்லியல்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதைத்தொடர்ந்து நேற்று முதல்(15-ந்தேதி) புராதன சின்னங்களை இரவில் மின்னொளியில் ரசிக்கலாம் என்று மத்திய தொல்லியல் துறையினர் அறிவித்து இருந்தனர். இரவு 9மணி வரை அலங்கார மின்னொளியுடன், புராதன சின்னங்கள் திறந்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இதைத்தொடர்ந்து நேற்று இரவு புராதன சின்னங்களான கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்சுணன்தபசு, வெண்ணை உருண்டை பாறை பகுதிகளை மின்னொளியில் ரசிக்கலாம் என எதிர் பார்த்து ஏராளமான சுற்றுலா பயணிகள் மாமல்லபுரம் வந்தனர். ஆனால் கடற்கரை கோவிலை மட்டும் மின்னொளியில் சுற்றுலா பயணிகள் ரசிக்க அனுமதி வழங்கப்பட்டது. மற்ற இடங்களில் மின்னொளி ஏற்பாடுகள் செய்யப்பட வில்லை. பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான ஆட்கள் பற்றாக்குறை காரணமாக மத்திய தொல்லியல்துறை கடற்கரை கோவிலை மட்டும் முதல் கட்டமாக மின்னொளியில் சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதி அளித்து உள்ளதாக தெரிகிறது.

    வரும் நாட்களில் மற்ற இடங்களும் மின்னொளியில் ரசிக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். புராதன சின்னங்களில் இரவு மின்னொளி காட்சியை அறிந்து விடுதிகளில் தங்கியிருந்த உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் மாலையில் கடற்கரை கோவில் வளாகத்தில் திரண்டு இருந்தனர். உள்நாட்டவர்களுக்கு ரூ.40, வெளிநாட்டவர்களுக்கு- ரூ.600-ம் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இரவு 9மணிவரை ஏராளமான சுற்றுலா பயணிகள் மின்னொளியில் கடற்கரை கோவிலை பார்த்து ரசித்தனர். செல்போன்களில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது, கடற்கரைகோவில் போல் ஐந்துரதம், அர்சுணன்தபசு, வெண்ணை உருண்டை பாறை பகுதிகளும் மின்னொளியில் காட்சியளித்தால் கூடுதல் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என்றனர்.

    • 2019ல் பிரதமர் மோடியும், சீன அதிபரும் மாமல்லபுரம் வந்த போது மின்னொளியால் அலங்கரிக்கப்பட்டது.
    • சுற்றுலா பயணிகள் தொல்லியல் துறை உயர் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து வந்தனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களான கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்சுன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை, பகுதிகளை இரவிவிலும் பார்த்து ரசிப்பதற்காக, கடந்த 2019ல் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் மாமல்லபுரம் வந்த போது மின்னொளியால் அலங்கரிக்கப்பட்டது. இரவு 9 மணிவரை சுற்றுலா பயணிகள் உள்ளே சென்று பார்க்க அனுமதியும் வழங்கப்பட்டது. பின்னர் ஓரிரு வாரத்தில் பராமரிப்பு இல்லாமல், பாதுகாப்பு கருதி நிறுத்தப்பட்டது.

    இந்த இரவு ஒளிக்காட்சி குறித்து அறிந்து உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் மாலை நேரத்தில் வந்தனர். ஆனால் அவர்கள் ஒளிக்காட்சியை பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

    அதன்பின்னர், மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட், ஜி-20 சர்வதேச கூட்டங்கள், காத்தாடி திருவிழா, அலைச்சறுக்கு என சர்வதேச நிகழ்ச்சிகள் நடைபெற்றதால், நிகழ்ச்சிக்கு வரும் வெளிநாட்டு பிரதிநிதிகள் புராதன சின்னங்களை இரவிலும் பார்வையிட மீன்டும் அலங்கார ஒளி விளக்குகள் அமைக்கப்பட்டன. இதை சுற்றுலா பயணிகளும் கண்டு ரசிக்கும் வகையில் இரவு 9 மணி வரை, ஒளிவிளக்குகளை எரியவிட்டு, உள்ளே அனுமதிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் தொல்லியல் துறை உயர் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து வந்தனர்.

    இதையடுத்து வரும் 15ஆம் தேதியில் இருந்து இரவு 9 மணி வரை அலங்கார மின்னொளியுடன், புராதன சின்னங்கள் திறந்திருக்கும் என தொல்லியல்துறை தெரிவித்துள்ளது. இதேபோல் கங்கைகொண்ட சோழபுரம், தஞ்சாவூர், சிவகங்கை, திருச்சி மற்றும் வெளி மாநிலம் என 14 இடங்களுக்கு 9 மணிவரை அனுமதி வழங்கியுள்ளது.

    • நெல்லை மாவட்டத்தில் இருந்து போட்டியை பார்வையிட செல்லும் வீரர்களை தேர்வு செய்வதற்கான போட்டி இன்று பாளை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்றது.
    • இதில் முதல் 25 இடங்களை பிடிக்கும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பரிசு கோப்பைகள் வழங்கப்படும்.

    நெல்லை:

    44-வது ஒலிம்பியாட் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் அடுத்த மாதம் தொடங்குகிறது. இந்த போட்டியில் 180 நாட்டை சேர்ந்த சுமார் 1,800 போட்டியாளர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

    இந்த போட்டியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்தின் சார்பாக 15 வயதுக்கு உட்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கு தனி தனியாக போட்டிகள் நடத்தி அதில் முதல் இடம் பெறும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் போட்டியை கண்டு களிக்கவும் மற்றும் அங்கு வீரர்களுடன் கலந்துரையாடவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது .

    அதன்படி நெல்லை மாவட்டத்தில் இருந்து ஒலிம்பியாட் சதுரங்க போட்டியை பார்வையிட செல்லும் வீரர்களை தேர்வு செய்வதற்கான போட்டி இன்று பாளை வ.உ.சி. மைதானத்தில் உள்ள பல்நோக்கு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. அனைத்து இந்திய சதுரங்க பெடரேஷன் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு சதுரங்க கழகத்தின் அனுமதியோடு நடைபெற்ற இந்த போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டு விளையாடினர். நாளையும் போட்டி நடைபெறுகிறது. இதில் முதல் 25 இடங்களை பிடிக்கும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பரிசு கோப்பைகள் வழங்கப்படும். நுழைவு கட்டணம் கிடையாது. 

    • உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு அனைத்து சுற்றுலா பயணிகளும் இலவசமாக பார்க்கலாம் என தொல்லியல்துறை அறிவித்தது.
    • மாமல்லபுரம் புராதன சின்னங்களை பார்க்க வந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் கட்டணமின்றி அனுமதிக்கப்பட்டனர்.

    மாமல்லபுரம்:

    உலகின் பாரம்பரிய நினைவு சின்னங்களை பாதுகாத்து அதை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, யுனெஸ்கோ அமைப்பினர் ஆண்டுதோறும் ஏப்ரல் 18-ந் தேதியை உலக பாரம்பரிய தினமான கடைபிடித்து வருகிறார்கள். மத்திய தொல்லியல் துறை சார்பில் நாடு முழுவதும் உள்ள பாரம்பரிய சின்னங்கள் உள்ள இடங்களில் இன்று உலக பாரம்பரிய தினம் கடைபிடிக்கப்பட்டது.

    இதையொட்டி தமிழ்நாட்டில் மத்திய தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள சென்னை கோட்டை மியூசியம், மாமல்லபுரம் புராதன சின்னங்கள், செஞ்சிகோட்டை, தஞ்சாவூர், தாராசுரம் கோயில், வேலூர் கோட்டை, கங்கை கொண்ட சோழபுரம் உள்ளிட்ட பகுதிகளை, இன்று உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு அனைத்து சுற்றுலா பயணிகளும் இலவசமாக பார்க்கலாம் என தொல்லியல்துறை அறிவித்தது.

    அதன்படி இன்று மாமல்லபுரம் புராதன சின்னங்களை பார்க்க வந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் கட்டணமின்றி அனுமதிக்கப்பட்டனர். உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கடற்கரை கோயில், ஐந்துரதம், வெண்ணெய் உருண்டை பாறை, புலிக்குகை, மற்றும் குடவரை கோயில் பகுதிகளை இலவசமாக பார்த்து ரசித்து சென்றனர். இதனால் வழக்கத்தை விட இன்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    • பார்கோடை ஸ்கேன் செய்தால் சுற்றுலா இடங்களின் வரலாறு, செல்லும் தூரம், உள்ளிட்ட விபரங்கள் டிஜிட்டல் ஆடியோவில் வரும்.
    • புதிய பார்கோடு முயற்சிக்கு சுற்றுலா பயணிகள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. இங்குள்ள புராதன சின்னங்களை பார்வையிட தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் முக்கிய சுற்றுலா இடத்தில் மாமல்லபுரம் இடம் பிடித்து வருகிறது.

    இந்நிலையில் மாமல்லபுரம் வரும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் தாங்கள் விரும்பிய இடத்திற்கு செல்லும் முன் அப்பகுதி விபரங்களை ஆடியோ வழியாக அறிந்து கொள்வதற்கு வசதியாக புதிதாக பார்கோடு ஏற்பாடு செய்யப் பட்டு உள்ளது. தொல்லியல்துறை மற்றும் சுற்றுலாத் துறையின் ஏற்பாட்டில் 'ஸ்டோரி டிரையல்ஸ் ஆடியோ டூர்' என்ற பெயரில் டிஜிட்டல் முறையில் புதிய பார்கோடு ஒன்றை உருவாக்கி ஐந்துரதம், கடற்கரை கோயில் பகுதியில் முதற்கட்டமாக அறிமுகம் செய்து ஒட்டி வைத்து உள்ளனர்.

    சுற்றுலா பயணிகள் இந்த பார்கோடை தங்களது செல்போனில் ஸ்கேன் செய்தால் அருகில் உள்ள முக்கிய புராதன சின்னங்கள், சுற்றுலா தலங்கள், கோயில்கள், போன்ற இடங்களின் வரலாறு, செல்லும் தூரம், உள்ளிட்ட விபரங்கள் டிஜிட்டல் ஆடியோவில் வரும்.

    இதனால் சுற்றுலா பயணிகள் வழிகாட்டிகள் உதவியின்றி புராதன சின்னங்கள் குறித்து அறிந்து கொள்ள முடியும். மேலும் சுற்றுலா தலம் குறித்து முழுவதும் அறிந்து கொண்டு வேகமாக தங்களது பயணத்தை முடிக்க முடியும்.

    இந்த புதிய பார்கோடு முயற்சிக்கு சுற்றுலா பயணிகள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். புராதன சின்னங்கள் குறித்து முழுமையாக சரியான தகவலை பெற முடிகிறது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    ×