என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "RSS"

    • இந்தியாவின் மகாராஜாக்கள் என நான்கு அல்லது ஐந்து பேர் உள்ளனர்.
    • அவர்களின் விருப்பப்படி பிரதமர், அதிகாரிகள் செயல்படுகிறார்கள்.

    ஜெய்ப்பூர்:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நடத்தி வரும் இந்திய ஒற்றுமை பாத யாத்திரை, ராஜஸ்தான் மாநிலம் பாத்ஷாபுராவை அடைந்தது .தௌசா மாவட்டத்தில் உள்ள பாக்டி கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி கூறியுள்ளதாவது:

    நீங்கள் அவர்களின் அமைப்பில் (ஆர்.எஸ்.எஸ்.) ஒரு பெண்ணை கூட பார்க்க மாட்டீர்கள். ஆர்எஸ்எஸ் பெண்களை அடக்குகிறார்கள், இதனால் பெண்களை தங்கள் அமைப்பிற்குள் நுழைய அவர்கள் அனுமதிப்பதில்லை. ஸ்ரீராமர் மற்றும் சீதா தேவி இருவரையும் ஏற்றுக் கொள்ளும் ஜெய் சியாராம் என்று சொல்வதற்கு பதிலாக ஜெய் ஸ்ரீராம் என்று அவர்கள் அழைக்கிறார்கள்.

    ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினரை நான் கேட்க விரும்புகிறேன், நீங்கள் ஜெய் ஸ்ரீராம் என்று சொல்கிறீர்கள், ஆனால் ஏன் ஜெய் சியாராம் என்று சொல்லவில்லை? ஏன் சீதா அன்னையை நீக்கினீர்கள்? ஏன் அவமதிக்கிறீர்கள்? ஏன் இந்தியப் பெண்களை இழிவுபடுத்துகிறீர்கள்?. 


    மற்றவர்களின் பயத்தால் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பயனடைகின்றன, ஏனென்றால் அவர்கள் இந்த பயத்தை வெறுப்பாக மாற்றுகிறார்கள். அவர்களின் ஒட்டுமொத்த அமைப்புகளும் அதே வேலையைச் செய்கின்றன. அவர்கள் நாட்டைப் பிரிக்கவும், வெறுப்பையும், பயத்தையும் பரப்பவும் வேலை செய்கிறார்கள். நாட்டில் பரப்பப்படும் பயம் மற்றும் வெறுப்பை எதிர்த்து நிற்பதுதான் பாரத் ஜோடோ யாத்ரா.

    நாட்டில் உள்ள 55 கோடி பேரின் சொத்துக்கு சமமாக இந்தியாவில் உள்ள 100 பணக்காரர்களிடம் சொத்து இருக்கிறது. இந்தியாவின் பாதி செல்வம் 100 பேரிடம் மட்டுமே உள்ளது, நாடு அவர்களுக்காக இயங்குகிறது.

    இந்தியாவின் மகாராஜாக்கள் என்று நான்கு அல்லது ஐந்து பேர் உள்ளனர். முழு அரசாங்கமும், ஒட்டு மொத்த ஊடகங்களும் மற்றும் அனைத்து அதிகாரிகளும் அவர்களின் விருப்பப்படி செயல்படுகிறார்கள்.பிரதமர் மோடி ஜியும் அவர்களின் விருப்பப்படி செயல்படுகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • 2047-க்குள் இந்தியா வல்லரசாக உருவாக வேண்டும்.
    • இந்தியா வளர்ந்து கொண்டிருக்கிறது.

    மும்பை :

    பால விகாஸ் பரிஷத் அமைப்பின் நிறுவனர் சூரஜ் பிரகாஷின் நூற்றாண்டு விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:-

    இந்தியா வளர்ந்து கொண்டிருக்கிறது. இந்தியர்களாகிய நாம் நமது தலையை மெருமிதத்தால் நிமிர்த்திக் கொண்டுள்ளோம். முன்பு நம்மை சீண்டுவார் இல்லை. இன்று நாம் ஜி20 மாநாட்டை தலைமையேற்று நடத்துகிறோம்.

    இப்போது அறிவுறுத்தியது போல் முன்பு ரஷியாவிடம் போர் தொடுக்க வேண்டாம் என்று கூறியிருந்தால் அவர்கள் நம்மை அசட்டை செய்திருப்பார்கள். (ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி 'போர் தொடுப்பதற்கான காலம் இது அல்ல' என ரஷிய அதிபர் புதினிடம் நேரடியாக தெரிவித்திருந்தார்).

    இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் இந்த வேளையில் நாம் அடைந்த வெற்றிகளை நாமே வியந்து பார்க்கிறோம். 2047-க்குள் இந்தியா வல்லரசாக உருவாக வேண்டும். அதற்கான பாதையை வகுத்து இந்தியா முன்னேறும் என்று நான் நம்புகிறேன்.

    ஆனால் வளர்ச்சிப் பாதையில் செல்லும்போது பிற நாடுகளை பின்பற்றக் கூடாது. அப்படி பின்பற்றினால் நம்மால் வளர இயலாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • வழக்கின் மனு தொடர்பான நகல்களை பெற்று விளக்கம் அளிப்பதாக காவல்துறை தகவல்.
    • ஆர்எஸ்எஸ் தரப்பு மனுவிற்கு பதில் அளிக்க, தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.

    தமிழகத்தில் கோவை, பல்லடம், நாகர்கோவில் உள்ளிட்ட 6 இடங்களை தவிர்த்து 44 இடங்களில் சுற்றுச் சுவருக்குள் அணிவகுப்பு நடத்தி கொள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு அனுமதி வழங்கி, சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதி மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது ஆர்.எஸ்.எஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், அணிவகுப்புக்கு அனுமதி அளித்த தனி நீதிபதி, பின்னர் அதில் மாற்றம் செய்து சுற்றுச்சுவருக்குள் அணிவகுப்பு நடத்த உத்தரவிட்டது தவறு என்றும், எனவே அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் வாதிட்டனர். இடைப்பட்ட காலத்தில் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி அளித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும் குறிப்பிட்ட தேதிகளில் அனுமதி வழங்குவதாக காவல்துறை கூறினால் அதை ஏற்க தயார் என்றும் வாதிடப்பட்டது-

    அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கின் மனு தொடர்பான நகல்கள் தங்களுக்கு கிடைக்க பெறவில்லை என்பதால், அதை பெற்று விளக்கம் அளிப்பதாக தெரிவித்தார். இதனை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டு நீதிபதிகள், மனுவின் நகலை அரசு தரப்பிற்கு வழங்க உத்தரவிட்டனர்.

    மேலும் அந்த மனுவிற்கு பதில் அளிக்கும் படி தமிழக அரசுக்கும், காவல்துறைக்கு உத்தரவிட்டனர். அப்போது ஜனவரி 22 மற்றும் 29ந் தேதிகளில் அணிவகுப்புக்கு அனுமதி கேட்டு விண்ணப்பிக்க இருப்பதாக நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அணி வகுப்புக்கு அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ். விண்ணப்பித்தால் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க காவல் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜனவரி 5ந் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

    • விண்ணப்பங்களை சுதந்திரமான முறையில் பரிசீலிக்கலாம் என தெரிவித்த நீதிபதிகள், இதே அணுகுமுறை தான் அனைத்து போராட்டங்களுக்கும் பின்பற்றப்படுகிறதா? எனக் கேள்வி எழுப்பினர்.
    • ஆர்.எஸ்.எஸ். தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு பதில் மனு தாக்கல் செய்ய காவல்துறை தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜனவரி 20ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் கோவை, பல்லடம், நாகர்கோவில் உள்ளிட்ட 6 இடங்கள் தவிர 44 இடங்களில் சுற்றுச்சுவருக்குள் அணிவகுப்பை நடத்திக் கொள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு அனுமதித்து சென்னை ஐகோர்ட்டு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். சார்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

    இந்த மனுக்கள் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்யநாராயண பிரசாத் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ஆர்எஸ்எஸ் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள், கடந்த முறை நீதிமன்றம் தெரிவித்தபடி, ஜனவரி 29-ந் தேதி அணி வகுப்பு நடத்த அனுமதி கோரி விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

    அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கை சுட்டிக்காட்டி அந்த விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், சுதந்திரமான முறையில் விண்ணப்பம் அளிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

    அந்த விண்ணப்பங்களை சுதந்திரமான முறையில் பரிசீலிக்கலாம் என தெரிவித்த நீதிபதிகள், இதே அணுகுமுறை தான் அனைத்து போராட்டங்களுக்கும் பின்பற்றப்படுகிறதா? எனக் கேள்வி எழுப்பினர்.

    பின்னர், ஆர்.எஸ்.எஸ். தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு பதில் மனு தாக்கல் செய்ய காவல்துறை தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜனவரி 20ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

    • எனது தந்தையின் பாரம்பரியத்தை சுரண்டுவதற்காக அவர்கள் பிறந்தநாள் கொண்டாடுகின்றனர்.
    • அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும் என்ற நேதாஜியின் கருத்தை பிரதிபலிக்கவில்லை,

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் நாளை மறுநாள் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு ஆர்எஸ்எஸ் ஏற்பாடுகளை செய்துள்ளது. சாகித் மினார் மைதானத்தில் நடைபெறும் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உரையாற்ற உள்ளார்.

    ஆனால் நேதாஜியின் பிறந்தநாளைக் கொண்டாடும் ஆர்எஸ்எஸ் திட்டத்திற்கு நேதாஜியின் மகள் அனிதா போஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    ஜெர்மனியில் வசித்து வரும் நேதாஜியின் மகள் அனிதா போஸ் இதுபற்றி கூறியதாவது:-

    ஆர்எஸ்எஸ் அமைப்பின் சித்தாந்தமும், தேசியவாதத் தலைவரான நேதாஜியின் மதச்சார்பின்மை மற்றும் உள்ளடக்கிய கருத்துக்களும் எதிரெதிர் துருவங்களே தவிர, அவை ஒத்துப்போவதில்லை. என் தந்தையின் பெருமையை சுரண்டுவதற்காக அவர்கள் பிறந்தநாள் கொண்டாடுகின்றனர்.

    அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும் என்ற நேதாஜியின் கருத்தை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பிரதிபலிக்கவில்லை, நேதாஜி ஒரு பக்தியுள்ள இந்துவாக இருந்தார், ஆனால் மற்ற மதங்களை மதிக்க வேண்டும் என்றார். பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களுக்கிடையில் ஒத்துழைப்புக்கு அவர் ஆதரவாக இருந்தார்.

    இந்த அணுகுமுறையை ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக பிரதிபலிக்க வேண்டிய அவசியமில்லை. எளிதாக சொல்லவேண்டுமானால் அவர்கள் வலதுசாரிகள், நேதாஜி ஒரு இடதுசாரி.

    நேதாஜியை கவுரவிக்க பாஜக அரசு பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. எந்த ஒரு அரசியல்வாதியாக இருந்தாலும், முதலில் அவர்களின் ஆர்வத்தைப் பார்க்க அனுமதிக்க வேண்டும். நேதாஜி இன்று உயிருடன் இருந்து, அரசாங்கத்தின் பார்வையில் இருந்து மாறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தால், பாஜக அவரைக் கவுரவித்திருக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரெயில்வேயில் வேலை வாங்கித் தருவதற்காக நிலத்தை லஞ்சமாகப் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
    • எனது கட்சியினரோ, குடும்பத்தினரோ ஒருபோதும் பா.ஜ.க.வுக்கு பணிய மாட்டோம் என்றார்.

    பாட்னா:

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கடந்த, 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ரெயில்வே மந்திரியாக லாலு பிரசாத் யாதவ் இருந்தார். அப்போது பீகாரை சேர்ந்த சிலருக்கு, ரெயில்வேயில் வேலை வாங்கித் தருவதற்காக நிலத்தை லஞ்சமாகப் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

    இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவின் மனைவி ரப்ரி தேவி மற்றும் அவரது குடும்பத்தாரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த வாரம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து இந்த வழக்கில் லாலு பிரசாத், அவரது மகன் மற்றும் துணை முதல் மந்திரியான தேஜஸ்வி பிரசாத் யாதவ் மற்றும் 3 மகள்களுடன் தொடர்புடைய நாடு முழுவதும் உள்ள 24 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

    இந்த அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.1 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.1.55 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகள், 540 கிராம் தங்கம் மற்றும் 1.5 கிலோவுக்கு கூடுதலான தங்க நகைகள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.

    இதுவரை நடந்த சோதனை முடிவில் லாலு பிரசாத் குடும்பத்துடன் தொடர்புடைய வழக்கில் ஏறக்குறைய ரூ.600 கோடி அளவுக்கு பணமோசடி குற்றங்கள் நடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், எனது கட்சியினரோ, குடும்பத்தினரோ ஒருபோதும் அவர்களுக்கு (ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதா) பணிய மாட்டார்கள் என்று லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், அவசரநிலைக் காலத்தின் இருண்ட பகுதியையே பார்த்தவர்கள் நாங்கள். அப்போதும் நாங்கள் போராடியிருக்கிறோம். இன்று எனது மகள்கள், பேத்திகள், கர்ப்பிணி மருமகள் ஆதாரமில்லாத பழிவாங்கும் நோக்கிலான வழக்குகளுக்காக 15 மணிநேரத்திற்கும் மேலாக காக்க வைக்கப்பட்டுள்ளனர். எங்களுடனான அரசியல் ரீதியிலான சண்டைக்காக பா.ஜ.க. இவ்வளவு கீழ்த்தரமான அளவிற்கு இறங்குமா? என்றும், மற்றொரு டுவிட்டர் பதிவில், "எனக்கு ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வுடன் கருத்தியல் ரீதியிலான போராட்டம் இருந்து வருகிறது. அது தொடரும். நான் அவர்கள் முன் ஒருபோதும் பணிந்தது இல்லை. என்னுடைய குடும்பத்தினரோ, கட்சியினரே யாரும் அவர்களின் அரசியலுக்கு முன்பு பணியமாட்டார்கள்" என தெரிவித்துள்ளார்.

    • ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் லெட்டர்பேடில் எழுதப்பட்டது போன்ற கடிதம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
    • கடிதம் முற்றிலும் போலியானது என்று ஆர்.எஸ்.எஸ். ஊடக தொடர்பு பிரிவு தலைவர் சுனில் அம்பேத்கர் விளக்கம் அளித்துள்ளார்.

    புதுடெல்லி:

    ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் லெட்டர்பேடில் எழுதப்பட்டது போன்ற 2 பக்க கடிதம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. பஜ்ரங்தள், இந்து சேனா உள்ளிட்ட அமைப்புகளுக்கு எழுதப்பட்ட கடிதம் போல் அது காட்சி அளிக்கிறது.

    அதில், ''முஸ்லிம் இளம்பெண்களை வலையில் வீழ்த்தி, அவர்களை இந்து மதத்துக்கு கொண்டு வாருங்கள்'' என்று இந்துக்களுக்கு அழைப்பு விடுப்பதுபோல் கூறப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, அந்த கடிதம் முற்றிலும் போலியானது என்று ஆர்.எஸ்.எஸ். ஊடக தொடர்பு பிரிவு தலைவர் சுனில் அம்பேத்கர் விளக்கம் அளித்துள்ளார். அந்த கடிதம் மீது 'போலி' என்று முத்திரையிட்டு, அதை தனது 'டுவிட்டர்' பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    • ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செயல்பாட்டை யும் ஆயர் கீவர்க்கீஸ் பாராட்டி உள்ளார்.
    • பாரதிய ஜனதா கட்சி ஒன்றும் தீண்டதகாத கட்சி இல்லை, என்றும் கூறியுள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் பினராய் விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

    கேரளாவில் பாரதிய ஜனதா கட்சிக்கு எம்.எல்.ஏ.க்களோ எம்.பி.க்களோ இல்லை. ஆனால் வர இருக்கிற பாராளுமன்ற தேர்தலில் கணக்கை தொடங்க பாரதிய ஜனதா கட்சி தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சமீபத்தில் கட்சி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, கேரளாவில் பாரதிய ஜனதா விரைவில் ஆட்சி அமைக்கும் என்று கூறினார்.

    அதற்கேற்ப கேரளாவில் உள்ள பாரதிய ஜனதா கட்சியினர் அங்கு பெரும்பான்மையான கிறிஸ்தவர்களின் வாக்கு வங்கியை குறிவைத்து தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். அதன்படி கடந்த ஈஸ்டர் பண்டிகையின் போது அவர்கள் கிறிஸ்தவர்களின் வீடுகளுக்கு சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

    பாரதிய ஜனதாவின் செயல்பாடுகளை தற்போது கிறிஸ்தவ ஆயர்கள் பாராட்டி வருகிறார்கள். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ரப்பருக்கு உரிய விலை கொடுத்தால் கேரளாவில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு எம்.பி. பதவி கிடைக்கும் என்று கத்தோலிக்க பேராயர் ஒருவர் கூறினார்.

    இப்போது மலங்கரா ஆர்த்தடாக்ஸ் சிரியன் தேவாலய ஆயர் கீவர்க்கீஸ், பாரதிய ஜனதா கட்சியின் செயல்பாடுகளை பாராட்டி கருத்து பதிவிட்டுள்ளார். அதில் இந்தியாவில் கிறிஸ்தவர்கள் துன்புறுத்த ப்படுகிறார்கள் என்று சர்வதேச அளவில் சிலர் தேவையற்ற பிரசாரங்களை மேற்கொள்கிறார்கள். இது இந்தியாவை அவமதிப்பது போல் உள்ளது.

    இந்தியா மிகப்பெரிய நாடு. ஆங்காங்கே மனக்கசப்பை ஏற்படுத்தும் சில சம்பவங்கள் நடைபெறலாம். அதனை சட்டரீதியாக எதிர்கொள்ள வேண்டும், எனக்கூறியிருந்தார்.

    இதுபோல ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செயல்பாட்டை யும் ஆயர் கீவர்க்கீஸ் பாராட்டி உள்ளார். ஆர்.எஸ்.எஸ்.சில் பல நல்ல விசயங்கள் உள்ளன. உடற்பயிற்சி என்பது தற்காப்புக்காக மேற்கொள்வது. மேலும் பாரதிய ஜனதா கட்சி ஒன்றும் தீண்டதகாத கட்சி இல்லை, என்றும் கூறியுள்ளார்.

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் கத்தோலிக்க ஆயர்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு அடுத்தடுத்து பாராட்டு தெரிவித்து வருவது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆர்.எஸ்.எஸ்.பேரணி-பொதுக்கூட்டம் இன்று மாலை ஸ்ரீவில்லிபுத்தூரில் நடக்கிறது.
    • பி.ஆர்.சி. டெப்போவில் தொடங்கும் பேரணி வடக்கு ரதவீதியில் முடிவடைகிறது.

    விருதுநகர்

    தமிழகம் முழுவதும் 45 இடங்களில் இன்று மாலை ஆர்.எஸ்.எஸ். பேரணி, பொதுக்கூட்டங்கள் நடைபெறுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆர்.எஸ்.எஸ். பேரணி இன்று மாலை 3 மணிக்கு தொடங்குகிறது.

    பி.ஆர்.சி. டெப்போவில் தொடங்கும் பேரணி வடக்கு ரதவீதியில் முடிவடைகிறது.

    தொடர்ந்து மாலை 6 மணிக்கு ஆர்.எஸ்.எஸ். பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் லட்சுமணன், முருகன், பேராசிரியர் சவுந்தரபாண்டியன் ஆகியோர் சிறப்புரையாற்று கிறார்கள்.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் நடக்கும் ஆர்.எஸ்.எஸ்.பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • அம்பையில் இன்று மாலை 4 மணிக்கு பேரணி தொடங்குகிறது.
    • தூத்துக்குடியில் நடைபெறும் பேரணியானது வி.வி.டி சிக்னலில் முடிவடைகிறது.

    நெல்லை:

    தமிழகத்தில் 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு இன்று மாலை நடைபெற உள்ளது.

    நெல்லை

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் 4 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடக்கிறது. நெல்லை மாவட்டம் அம்பையில் இன்று மாலை 4 மணிக்கு பேரணி தொடங்குகிறது. இந்த பேரணியானது அம்பை கிருஷ்ணன்கோவிலில் தொடங்கி மெயின் பஜார் வழியாக ராணி பள்ளி அருகில் முடிவடைகிறது. இதனை யொட்டி ஏ.டி.எஸ்.பி. தலைமை யில் 4 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வை யில் சுமார் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    தென்காசி

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபெற பேரணியை யொட்டி கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு சார்லஸ் கலைமணி தலைமையில் 4 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் 290 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    பேரணியானது சங்கர ன்கோவில் சங்கரநாராயணர் கோவில் வடக்கு ரதவீதியில் தொடங்கி நகைக்கடை பஜார், திருவேங்கடம் சாலை, கிழக்கு ரதவீதி வழியாக மீண்டும் வடக்கு ரதவீதியை வந்தடைகிறது.

    தூத்துக்குடி

    தூத்துக்குடி மாவட்டத்தில் காமராஜ் கல்லூரி அருகில் பேரணி தொடங்கி பிரையண்ட் நகர் கிழக்கு வழியாக வி.வி.டி சிக்னலில் முடிவடைகிறது. இந்த பேரணியையொட்டி போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மேற்பார்வையில் துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ் தலைமையில் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதேபோல் ஸ்ரீவை குண்டத்திலும் கள்ளபிரான் சுவாமி கோவில் முன்பு தொடங்கி வ.உ.சி. திடல் வரை அணிவகுப்பு ஊர்வலம் நடக்கிறது. அங்கும் சுமார் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    • போலீஸ் பாதுகாப்புடன் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்தினர்.
    • கூட்டத்திற்கு சிங்கம்புணரி கிராம அம்பலம் சத்தியசீலன் தலைமை தாங்கினார்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடைபெற்றது. சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகநாதர் சுவாமி ஆலயத்தில் இருந்து ஊர்வலம் தொடங்கியது. காரைக்குடி ரோடு, கூத்தாடி அம்மன் கோவில் தெரு, நியூ காலனி, கீழகாட்டுரோடு, கீழத்தெரு, செட்டியார் குளம் வடகரை, சந்திவீரன் கூடம், கம்பலிங்கம் தெரு வழியாக அரசு மருத்துவ மனை ரோடு, சுந்தரம் நகர், திண்டுக்கல் ரோடு பஸ் நிலையம் வழியாக பெரிய கடை வீதி வந்து சீரணி அரங்கத்தை சென்றடைந் தது.

    இந்த ஊர்வலத்தில் ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் ஆர்.எஸ்.எஸ். சீருடை அணிந்து மிடுக்காக வந்தனர். சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் தலைமையில் 7 துணை சூப்பிரண்டுகள், 12 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 450- க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதை தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்திற்கு சிங்கம்புணரி கிராம அம்பலம் சத்தியசீலன் தலைமை தாங்கினார். ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் சேவா சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜ முருகானந்தம் சிறப்புரை ஆற்றினார்.

    கூட்டத்தில் ராமேசுவரம் மண்டல தலைவர் மங்க ளேஸ்வரன், கோட்டச் செய லாளர் பாலசுப்பிரமணியன், மாவட்டத் துணைத் தலை வர் குகன், ஜில்லா பொறுப் பாளர் தினேஷ் மற்றும் சிவகங்கை மாவட்ட ஆர்.எஸ்.எஸ். மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பா ளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • கோவை மாநகரில் பொன்னையராஜபுரம் பகுதியில் இருந்து ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் தொடங்கியது.
    • கோவையில் நடந்த ஆர்.எஸ்.எஸ். பேரணியில் கோர்ட்டு நிபந்தனைகளை மீறி சிலம்பாட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் நேற்று கோவை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி உள்பட 3 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடந்தது.

    கோவை மாநகரில் பொன்னையராஜபுரம் பகுதியில் இருந்து ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் தொடங்கியது. இந்த பேரணியில் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு சீருடை அணிந்தபடி ஊர்வலமாக சென்றனர்.

    பொன்னைய ராஜபுரத்தில் தொடங்கிய இந்த பேரணியானது ஆர்.எஸ்.புரம், சுக்கிரவார்பேட்டை, தெலுங்குவீதி, ராஜவீதி வழியாக தேர்நிலைத் திடல் சென்று நிறைவு பெற்றது. அதனை தொடர்ந்து பொதுக்கூட்டமும் நடந்தது.

    ஆர்.எஸ்.எஸ். பேரணியையொட்டி கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. தமிழகத்தில் நடந்த ஆர்.எஸ். பேரணிக்கு கோர்ட்டு பல்வேறு நிபந்தனைகளை விதித்து இருந்தது. அதன்படியே தமிழகத்தில் பேரணியும் நடந்தது.

    இந்த நிலையில் கோவையில் நடந்த ஆர்.எஸ்.எஸ். பேரணியில் கோர்ட்டு நிபந்தனைகளை மீறி சிலம்பாட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கோர்ட்டு நிபந்தனைகளை மீறியதாக கோவை மாவட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுகுமார், மாவட்ட செயலாளர் முருகன், இணை செயலாளர் குமார் ஆகிய 3 பேர் மீது வெரைட்டிஹால் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×