search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 101697"

    கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்தபோது டயாலிசிஸ் செய்தால் இறந்து போவீர்கள் என்று நர்சு ஒருவர் கூறியதால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளி மாரடைப்பால் பரிதாபமாக இறந்தார்.
    கோவை:

    திருப்பூர் மாவட்டம் முருகானந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் அன்வர் அலி (வயது 57), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சவுராமா. இவர்களுக்கு சர்மிளா பானு, ஆதிதா பானு ஆகிய மகள்களும், மன்சூர் அலிகான் என்ற மகனும் உள்ளனர். இதில் சர்மிளா பானு, ஆதிதா பானு ஆகியோருக்கு திருமணம் ஆகிவிட்டது.

    அன்வர் அலிக்கு சிறுநீரக கோளாறு காரணமாக கடந்த 19-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு டயாலிஸ் சிகிச்சைக்காக சென்று உள்ளார். அப்போது பணியில் இருந்த நர்சு ஒருவர் அன்வர் அலியிடம் டயாலசிஸ் செய்தால் நீங்கள் இறந்துவிடுவீர்கள் என்று தெரிவித்து உள்ளார். இதைக்கேட்ட 5 நிமிடத்தில் அவர் மயங்கி விழுந்து இறந்துவிட்டார். நோயின் தன்மை குறித்து நோயாளியிடம் வெளிப்படையாக தெரிவித்ததால் அவர் இறந்ததாகவும், சம்பந்தப்பட்ட நர்சு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்வர் அலியின் உறவினர்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து அன்வர் அலியின் மகள்கள் சர்மிளா பானு, ஆதிதா பானு ஆகியோர் கூறியதாவது:-

    எங்களது தந்தை அன்வர் அலி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உடல் முழுவதும் அரிப்பு மற்றும் உடல் சோர்வு காரணமாக அவதியடைந்து வந்தார். இதற்காக அவரை ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றோம். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு சிறுநீரக கோளாறு இருப்பதை அறிந்தனர்.

    இதையடுத்து அவர் மேல்சிகிச்சைக்காக கடந்த மாதம் 9-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவரை மறுநாள் 10-ந் தேதி காலையில் அரசு ஆஸ்பத்திரி புதிய கட்டிடத்தில் இயங்கும் சிறுநீரக சிகிச்சை பிரிவில் சேர்த்தோம். இதைத்தொடர்ந்து அவருக்கு டயாலிசிஸ் செய்ய வேண்டும் என்று எங்களிடம் டாக்டர்கள் தெரிவித்தனர்.

    அத்துடன் அங்கு பணியில் இருந்த நர்சு ஒருவர் எங்களது தந்தையிடம் உங்களுக்கு டயாலிசிஸ் செய்தால் 90 சதவீதம் இறப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்து உள்ளார். இதனால் பயந்துபோன அவர் டயாலிசிஸ் செய்ய வேண்டாம் என்று கூறியவாறு ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறினார்.

    இந்தநிலையில் கடந்த 19-ந் தேதி அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக அவரை திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றோம். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் அன்று இரவு மேல்சிகிச்சைக்காக அங்குள்ள டாக்டர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    அங்கு மறுநாள் 20-ந் தேதி ஏற்கனவே நாங்கள் சென்ற சிறுநீரக சிகிச்சை பிரிவுக்கு டயாலிசிஸ் செய்ய மீண்டும் அனுமதிக்கப்பட்டார். அப்போது அங்கு பணியில் இருந்த நர்சு எங்களிடம் கையெழுத்து வாங்கினார். அதேபோல் எங்களுடைய தந்தையிடம் டயாலிஸ் செய்தால் உங்கள் உடலில் வயிற்றுப்பகுதியில் ஓட்டை போட்டு 2 லிட்டர் தண்ணீர் செலுத்தி ரத்தத்தை சுத்தம் செய்வோம். அதில் நீங்கள் உயிர் இழப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.

    இதை ஏன் சம்பந்தப்பட்ட நோயாளியிடம் தெரிவிக்கிறீர்கள் என்று நாங்கள் கண்டித்தோம். அதற்கு அவர்கள் இது எங்கள் பணி. நாங்கள் அவ்வாறு தான் சொல்வோம் என்று அலட்சியமாக பதில் அளித்தனர்.



    இந்தநிலையில் நர்சு கூறிய வார்த்தையை கேட்டு அதிர்ச்சியடைந்த எங்கள் தந்தை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு நெஞ்சை பிடித்துக்கொண்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை அங்குள்ள டாக்டர்கள் மற்றும் நர்சுகள் வார்டில் உள்ள படுக்கைக்கு அழைத்து சென்றனர். பின்னர் சிறிது நேரத்தில் எங்களுடைய தந்தை டயாலிசிஸ் செய்வதற்கு முன்பே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். எனவே எங்கள் தந்தை போன்று வேறு யாருக்கும் இந்தநிலை வரக்கூடாது. இதில் சம்பந்தப்பட்ட நர்சு மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி டீன் அசோகனிடம் கேட்டபோது, கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளிடம் நோய் குறித்து தெரிவிக்கக்கூடாது என்று டாக்டர்கள் மற்றும் நர்சுகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. எனவே டயாலிசிஸ் செய்ய வந்த நோயாளியிடம் அவரின் நிலை குறித்து நர்சு தெரிவிக்க வாய்ப்பு இல்லை.

    மேலும் இங்கு வரும் நோயாளிகளிடம் கனிவாக பேசி சில புரோக்கர்கள் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்கிறார்கள். எனவே அவர்கள் இதுபோன்று நோயாளியிடம் தெரிவித்து இருக்கலாம். இதில் உண்மை தன்மை இருந்தால் சம்பந்தப்பட்ட நர்சு மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
    ஒரத்தநாடு அருகே மகள் திருமணத்திற்காக வைத்திருந்த 15 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து தொழிலாளியின் மகன் போலீசில் புகார் அளித்துள்ளார்.
    ஒரத்தநாடு:

    ஒரத்தநாடு அருகே பாச்சூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் பிச்சைமுத்து. கூலித் தொழிலாளி. இவரது மகன் பாலமுருகன்(வயது28). பி.இ. படித்துள்ளார். மகள் கனிமொழி.

    கனிமொழிக்கு திருமண ஏற்பாடுகளை பிச்சை முத்து செய்து வந்தார். அதற்காக 15 பவுன் நகைகள் மற்றும் ரூ. 10 ஆயிரம் ரொக்கத்தை வீட்டில் பீரோவில் வைத்திருந்தனர். பிச்சைமுத்து, அவரது மனைவி கூலி வேலைக்கு செல்லும்போது வீட்டை பூட்டி சாவியை வாசல் நிலைப் படியில் வைத்துவிட்டு செல்வது வழக்கமாம்.

    இந்நிலையில் கடந்த 14-ந்தேதி பாலமுருகன் வெளியூர் சென்றிருந்ததால் பிச்சைமுத்து வீட்டை பூட்டி வழக்கம்போல் சாவியை நிலைப் படியில் வைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் அனைவரும் மாலையில் வீடு திரும்பினர். நேற்று காலை பீரோவில் இருந்த நகைகளை சரிபார்க்க திறந்தபோது 15 பவுன் நகைகளையும், ரூ.10 ஆயிரத்தையும் காணாமல் அதிர்ச்சியடைந்தனர்.

    அப்போதுதான் வீட்டு நிலைப்படியில் வைத்திருந்த சாவியை யாரோ எடுத்து திறந்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பாலமுருகன் ஒரத்தநாடு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #tamilnews
    வேலூர் மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி குருவை பூபாலன் மோடி மீண்டும் பிரதமராக வேண்டி திருவண்ணாமலையில் 31 நாட்கள் கிரிவலம் சென்று வருகிறார். #PMModi #Arakkonamworker
    திருவண்ணாமலை:

    வேலூர் மாவட்டம் அரக்கோணம் குருவராஜப்பேட்டையை சேர்ந்தவர் குருவை பூபாலன் (வயது 48), கூலி தொழிலாளி. இவர் மீண்டும் பிரதமர் மோடி ஆட்சி தொடர வேண்டும் என்று கடந்த 4-ந் தேதி முதல் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்று வருகிறார்.



    மோடி பிரதமராகிய பின்னர் மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதனால் அவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டு மீண்டும் பிரதமராக மோடி நல்லாட்சி தொடர வேண்டி கடந்த 4-ந் தேதி முதல் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்று அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரார்த்தனை செய்து வருகிறேன். வருகிற மார்ச் மாதம் 6-ந் தேதி வரை தொடர்ந்து 31 நாட்கள் கிரிவலம் செல்ல உள்ளேன்.

    முன்னதாக மத்தூர் மகிஷாசூரமர்த்தினி கோவிலில் இருந்து நடைபயணமாக சென்று திருத்தணி சுப்பிரமணிய சுவாமியை வேண்டி பிரார்த்தனை செய்துள்ளேன்.

    அதுமட்டுமின்றி அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டியும், திருவாசகம் சிவபுராணம், திருப்பள்ளி எழுச்சி ஆகியவை 18 ஆட்சிமொழிகளில் மொழி பெயர்க்க வேண்டும். தேசிய நதிநீர் இணைப்பும் தென்னக நதிகளை இணைக்க வேண்டும். இயற்கை விவசாயம் செய்பவருக்கு இந்த அரசு உறுதுணையாக இருக்க ரூ.20 ஆயிரம் மானியம் வழங்க வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தியும் கிரிவலம் செல்கிறேன். இதுவரை நான் அரசியலில் ஈடுபட்டதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #PMModi #Arakkonamworker


    ஈரோடு அருகே சமையல் தொழிலாளி திடீர் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு, சூரம்பட்டி, மாரப்பா வீதியை சேர்ந்தவர் பிரகாஷ்(வயது 36). இவரது மனைவி பவித்ரா.

    பிரகாஷ் லஞ்ச்பாக்ஸ் என்ற பெயரில் ஹோம் டெலிவரி சர்வீஸ் வைத்து போன் செய்பவர்களுக்கு சாப்பாடு, டிபன் போன்றவற்றை வீடுகளுக்கு கொண்டு சென்று கொடுக்கும் வேலை பார்த்து வந்ததார்.

    இந்நிலையில் கடந்த 5 -ந் தேதி மதியம் வாடிக்கையாளர் ஒருவர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி விட்டு பிரகாஷ் சென்றார். ஆனால் அதன் பின் அவர் வீடு திரும்பி வரவில்லை. திடீரென மாயமானார். அவரை பல்வேறு இடங்களில் தேடியும் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இது குறித்து பிரகாஷ் மனைவி பவித்ரா சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் மாயமான தனது கணவரை மீட்டு தர வேண்டும் என்று கூறியிருந்தார்.

    மாயமான அன்று பிரகாஷ் வெள்ளை சட்டையும், கருப்பு கலர் பேண்ட்டும் அணிந்திருந்தார். அவரது இடது கால் பாதத்தில் பாம்பு கடித்த தடிப்பு உள்ளது.

    இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பிரகாசை தேடி வருகின்றனர்.

    தொழிலாளிக்கு ரத்தநாள மாற்று நவீன அறுவை சிகிச்சை செய்து கோவில்பட்டி அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.
    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அருகே இளம்புவனத்தை சேர்ந்த மாயக்கண்ணன் (வயது 30). கூலித்தொழிலாளியான இவர் கடந்த மாதம் 8-ந் தேதி ஊரில் இருந்து மோட்டார் சைக்கிளில் கோவில்பட்டிக்கு வந்து கொண்டிருந்தார். இளம்புவனம் விலக்கு பகுதியில் வந்தபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.

    இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த மாயக்கண்ணனின் வலது கால் மீது பின்னால் வந்த தனியார் பேருந்து ஏறி இறங்கியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுமதித்தனர். ஒட்டு உறுப்பு அறுவை சிகிச்சைக்காக நிபுணர் மருத்துவர் பிரபாகர் சிகிச்சை அளித்து வந்தார்.

    அவருக்கு ப்ரீ பிளாப் முறையில் மைக்ரோ வேஸ்குலர் அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டது. அதற்கான அறுவை சிகிச்சை நேற்று காலை 11 மணிக்கு தொடங்கி மாலை 3 மணிக்கு முடிவடைந்தது. இதில் பாதிக்கப்பட்ட மாயக்கண்ணனின் தொடைப் பகுதியில் இருந்து சதை எடுத்து, அதனை கால் பாதத்தில் வைத்து, அதிலுள்ள ரத்த குழாய்கள் இணைக்கப்பட்டது. அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்தில் ரத்த ஓட்டம் சீராக உள்ளதா எனவும் சோதனை நடத்தினர்.

    அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்ததை தொடர்ந்து மருத்துவர் பிரபாகர், மயக்கவியல் மருத்துவர் இளங்கோ, மருத்துவர்கள் பிரபா, ராமலட்சுமி, சரவணன் ஆகியோரை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் கமலவாசன் பாராட்டினர். இந்த அறுவை சிகிச்சை தனியார் மருத்துவமனைகளில் செய்தால் ரூ.5 லட்சம் வரை செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து டாக்டர் பிரபாகர் கூறுகையில், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ரத்த குழாய் அறுவை சிகிச்சை செய்துள்ளோம். இந்த வகையான அறுவை சிகிச்சை தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரியில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் கூட செய்யவில்லை என்பது குறிப்பிடதக்கது. இந்த ப்ரீ பிளாப் மைக்ரோ வேஸ்குலர் அறுவை சிகிச்சை ஒரு மி.மீட்டருக்கு குறைவாக உள்ள ரத்த குழாய்களை இணைக்கும் அறுவை சிகிச்சையாகும்.

    இதில் உள்ள நன்மை, பெரிய அளவில் விபத்தில் காயம் ஏற்பட்டவர்களுக்கு உடனடியாக ஒரு சதையை மூடி அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்றால், அதற்குள் உள்ள ரத்த குழாய்கள், எலும்புகள் சேதமடையாமல் பாதுகாக்க முடியும். அது இந்த அறுவை சிகிச்சையால் மட்டுமே முடியும். இந்த அறுவை சிகிச்சை செய்ய 8 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை தேவைப்படும். அதிக நேரம் தேவைப்படும் என்பதால், யாரும் இதனை எடுத்து செய்வதில்லை. நாங்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் நிறை வேற்றி உள்ளோம், என்றார்.#tamilnews
    ராஜபாளையத்தில் பொங்கல் பரிசு ரூ.1000 வாங்கி கணவர் மது குடித்ததால், மனைவி வாக்குவாதம் செய்தார். இதனால் அவரை தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டார்.
    ராஜபாளையம்:

    ராஜபாளையம் சுந்தர ராஜபுரம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் வடிவேல் (வயது 35) தொழிலாளி. இவர் அடிக்கடி மது அருந்தி வந்தார்.

    இதனால் குடும்ப செலவுக்கு பணம் கொடுப்பதில்லை. இந்த நிலையில் தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கிய ரூ.1,000-த்தை மனைவிக்கு தெரியாமல் வாங்கி, வடிவேல் மது குடித்துள்ளார்.

    இது தெரியவந்ததும் மனைவி பேச்சியம்மாள் கணவரை கண்டித்தார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த வடிவேல் மனைவியை சரமாரியாக தாக்கினார். இது குறித்து சேத்தூர் புறக்காவல் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து மனைவியை தாக்கிய வடிவேலுவை கைது செய்தார். #tamilnews
    மத்தியபிரதேசத்தில் தொழிலாளி கண்டெடுத்த 42.59 காரட் எடையுள்ள வைரம் 2.55 கோடிக்கு விலை போனது. #MadhyaPradesh #Diamond #Auction
    பன்னா:

    மத்தியபிரதேசம் மாநிலம் பன்னாவில் அமைந்துள்ள உதாலி சுரங்கத்தில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, மோதிலால் பிராஜபதி என்ற தொழிலாளி, வைரம் ஒன்றை கண்டெடுத்தார். அந்த வைரம் அதிகாரிகள் முன்னிலையில் நேற்று ஏலம் விடப்பட்டது.

    பல்வேறு வகையான வைரங்கள் ஏலம் விடப்பட்ட அந்த ஏலச்சந்தையில், கண்டெடுக்கப்பட்ட 42.59 காரட் எடையுள்ள இந்த வைரம் 2.55 கோடிக்கு விலை போனது. உத்தரபிரதேசத்தை சேர்ந்த ராகுல் அகர்வால் என்ற தொழிலதிபர் வைரத்தை ஏலத்துக்கு எடுத்தார்.

    பின்னர் கிடைத்த ஏலத்தொகையில் 12 சதவீதம் வரித்தொகைபோக மீதமுள்ள தொகை அந்த தொழிலாளியிடமே வழங்கப்படுகிறது.   #MadhyaPradesh #Diamond #Auction
    பள்ளி பாளையம் அருகே 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித்தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்து உள்ளது.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையம் அருகே உள்ள காடச்சநல்லூர் சத்தியநகரை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் ஆனந்த் (வயது 28). இவர் நூற்பாலைக்கும், கட்டுமான தொழிலுக்கும் கூலி வேலைக்கு சென்று வந்தார். ஆனந்த், கடந்த 2016-ம் தனது வீட்டிற்கு அருகில் வசித்த 4 மற்றும் 5-வகுப்பு படித்து வந்த 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு, அவர்களுக்கு கொலை மிரட்டலும் விடுத்தார்.

    இது குறித்து சிறுமிகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் திருச்செங்கோடு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு நாமக்கல் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சுசிலா வாதாடினார்.

    இந்த வழக்கில் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு, கொலை மிரட்டல் விடுத்த ஆனந்துக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி இளங்கோ தீர்ப்பு அளித்தார். அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 18 மாதம் சிறை தண்டனையை அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

    இதையடுத்து ஆனந்தை கோவை சிறைக்கு அழைத்து செல்ல போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
    களக்காடு மற்றும் ஆறுமுகநேரியில் இளம்பெண் உள்பட 2 தொழிலாளிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள காடுவெட்டியை சேர்ந்தவர் முத்துராஜ். விவசாயி. இவரது மகள் ராதா (வயது 19). இவர் 12-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இவர் அடிக்கடி மடிக்கணினியை பார்த்து வந்துள்ளார். இதனை அவரது பெற்றோர் கண்டித்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று ராதா தனது மடிக்கணினியை பார்த்துள்ளார். அப்போது அவரது பெற்றோர் வீட்டு வேலை செய்யாமல் மடிக்கணினியை பார்த்துக் கொண்டு இருக்கிறீயே? என சத்தம்போட்டுள்ளனர்.

    இதில் மனமுடைந்த ராதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வி‌ஷத்தை குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார். உடனடியாக அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மாலை ராதா பரிதாபமாக உயிரிழந்தார்.

    பணகுடி அருகே உள்ள கோவில்விளையை சேர்ந்தவர் குணா (வயது 45). இவரது மனைவி செல்வம். குணாவிற்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி செல்வம் பிரிந்து சென்றுவிட்டார்.

    இந்நிலையில் கடந்த 2-ந் தேதி களக்காடு பழைய பேருந்து நிலையம் அருகே குணா வி‌ஷத்தை குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார். இவரை மீட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த சம்பவங்கள் குறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஏரல் அருகே உள்ள இடையர்காட்டை சேர்ந்தவர் நயினார். இவரது மகன் நயினார் செல்வம் (வயது 26). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணகாகவில்லை. இவர் கடந்த சில மாதங்களாக சரியாக வேலை செல்லாமல் இருந்துள்ளார். இதனை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர்.

    இதில் மனமுடைந்த காணப்பட்ட அவர் கடந்த 27-ந் தேதி முக்காணி நேதாஜி தெருவில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்றார். இங்கு வைத்து அவர் வி‌ஷத்தை குடித்துவிட்டார். அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    பனை தொழில் நசிவடைந்து வரும் நிலையில் பனை ஓலையின் மூலம் 3 அடி உயரத்தில் தாஜ்மஹாலை ஸ்ரீவைகுண்டம் தொழிலாளி உருவாக்கி உள்ளார். #TajMahal #PalmTree
    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் பால்பாண்டி (வயது 65). பனைஏறும் தொழிலாளி. இவர் கருங்குளம் பகுதியில் பனை ஏறுவதும், மற்ற நேரங்களில் விவசாயமும் செய்தும் வந்தார். இவருக்கு பனை ஓலையில் பலவிதமாக பொருள்கள் செய்வதில் ஆர்வம். பனை நாரில் கட்டில் முடைவது, பனை ஓலையில் பாய் முடைவது, நார் பெட்டி செய்வது உள்பட தொழிலை செய்து கொண்டிருந்தார்.

    இவர் கண்காட்சியில் வைக்கும் அளவுக்கு ஓலையில் பலவிதமான பொருள்களை செய்ய ஆசைப்பட்டார். இதன் பயனாக தாஜ்மஹால் செய்வதற்கு இவர் பல ஸ்தூபிகளை அமைத்து அதன் மேலே ஓலையை கொண்டு பல வேலைபாடுகளை செய்துள்ளார். பளிங்கு மாளிகை என்பதை குறிக்கும் வண்ணத்தில் இதற்கு வெள்ளை வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் தாஜ்மஹால் சுமார் 3 அடி உயரத்தில் மிக பிரமாண்டமாக காணப்படுகிறது.

    ஓலைகளால் செய்யப்பட்ட பெட்டிகள், கூடை மற்றும் குதிரை பொம்மைகள்.

    மேலும் ஏரோபிளேன், சர்ச், ஆலய கோபுரம், வில்லு வண்டி, யானை, நார் பெட்டி, கல்லாபெட்டி, மிளகு பெட்டி, கிலுக்கு உள்பட பல பொருள்களை செய்தார். பின் அதற்கு வர்ணம் தீட்டினார். இந்த பொருள்கள் பார்ப்பவர்களை பரவசப்படுத்தியது.

    இதுகுறித்து பால்பாண்டி கூறும்போது, தற்போது பனை தொழில் நசிவடைந்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் பனையில் இருந்து கிடைக்கும் பொருள்கள் பயன்பாடு அதிகமாக இருந்தாலும் போலி பெருத்துக் கொண்டிருக்கிறது. பனை ஏறும் தொழிலாளர் எண்ணிக்கை குறைந்து விட்டது. இதனால் பனையின் பயன்பாடு எல்லோருக்கும் தெரிய வேண்டும் இதற்காக வித்தியாசமாக முயற்சி செய்ய நினைத்தேன்.

    பனை ஓலை மற்றும் நார் மூலமாக பொருள்களையெல்லாம் உருவாக்கி எனது வீட்டில் காட்சிக்கு வைத்துள்ளேன். விரைவில் கல்வி நிலையங்கள் உள்பட பல இடங்களுக்கு இந்த பொருள்களை கொண்டு போய் கண்காட்சியாக வைக்கலாம் என நினைக்கிறேன். அதோடு அரசு நலிந்து இருக்கும் இந்த தொழிலை மேலும் வலுப்படுத்த அரசு உதவிகள் செய்ய வேண்டும். இதை இந்த கண்காட்சி மூலமாக அரசுக்கு வலியுறுத்த விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #TajMahal #PalmTree


    காஞ்சீபுரம் அருகே மனநிலை பாதிக்கப்பட்ட வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தை அடுத்த வேளியூர் கிராமம், கட்டபொம்மன் தெருவில் வசித்து வந்தவர் கோவிந்தராஜன் (வயது 21). மனநிலை பாதிக்கப்பட்டவர்.

    இவர் அடிக்கடி அருகில் இருக்கும் வீடுகளை தட்டி வந்தார். மேலும் அவ்வழியே செல்பவர்களிடமும் சம்பந்தம் இல்லாமல் பேசி வந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற கோவிந்தராஜன், பக்கத்து தெருவில் வசிக்கும் தொழிலாளி வேலாயுதம் என்பவரது வீட்டை தட்டி கூச்சலிட்டார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த வேலாயுதம் அருகில் கிடந்த கட்டையால் கோவிந்தராஜனை சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த கோவிந்தராஜன் அங்கேயே மயங்கி விழுந்தார்.

    சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் கோவிந்தராஜன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். கோவிந்தராஜன் இறந்தது பற்றி அறிந்ததும் வேலாயுதம் தப்பி ஓடி விட்டார். அவரை காஞ்சீபுரம் தாலுக்கா போலீசார் தேடி வருகிறார்கள். #tamilnews
    டெங்கு கொசு ஒழிப்பு குறித்து ஆய்வு செய்த போது நாயை அவிழ்த்துவிட்டு சுகாதாரத்துறை செயலாளர் ராதகிருஷ்ணன் மற்றும் கலெக்டருக்கு மிரட்டல் விடுத்த தொழிலாளி மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் பகுதியில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் மற்றும் அதிகாரிகள் டெங்கு கொசு ஒழிப்பு குறித்து வீடு, வீடாக ஆய்வு செய்தனர்.

    அப்போது மணவாளநகர், காந்தி தெருவில் உள்ள பாலகிருஷ்ணன் என்பவரது வீட்டை ஆய்வு செய்ய உள்ளே நுழைந்தனர்.

    உடனே பாலகிருஷ்ணன் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு திடீரென வீட்டில் இருந்த நாய்களை அவிழ்த்து விட்டார்.

    இதனை கண்டு ஆய்வுக்கு வந்த சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன், கலெக்டர் மகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பாதுகாப்புக்கு வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் பாலகிருஷ்ணனை எச்சரித்து நாய்களை வெளியே விரட்டி விட்டனர்.

    பின்னர் அவரது வீட்டில் ஆய்வு செய்தனர். இதில் அந்த வீட்டில் டெங்கு கொசு உருவாகும் வகையில் சுகாதாரம் இல்லாமல் இருந்தது.

    இதையடுத்து பாலகிருஷ்ணனுக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அவரது வீட்டுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

    இதற்கிடையே அதிகாரிகளை பணி செய்யவிடாமல், அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டதாக பாலகிருஷ்ணன் மீது மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    மணவாளநகர் காந்தி தெருவில் சுகாதாரத்துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ஆகியோர் டெங்கு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்ய சென்ற போது பாலகிருஷ்ணன் என்பவர் வீட்டில் டெங்கு கொசு உற்பத்திக்கான அனைத்து ஆதாரங்களுடன் மிகவும் சுகாதாரமின்றி சீர்கேட்டுடன் இருந்தது. வீட்டின் உள்ளே செல்ல முயன்றபோது நான்கு பெரிய நாய்களை கொண்டு வீட்டின் உள்ளே வரவிடாமல் அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டார்.

    ஏற்கனவே இதே போன்று துப்புரவு பணியாளர் மற்றும் டிபிசி பணியாளர்கள் பலமுறை இந்த வீட்டிற்கு சென்றபோது வீட்டிற்கு உள்ளே வரவிடாமல் நான்கு பெரிய நாய்களை கொண்டு பணியாளர்களை அச்சுறுத்தும் வகையில் பணி செய்ய விடாமல் நடந்து கொண்டுள்ளார்.

    இதனைத் தொடர்ந்து பாலகிருஷ்ணன் என்பவரின் பயன்படுத்த படாமல் இருந்த மற்றொரு ஒடு; போட்ட வீடு முழுவதும் டெங்கு கொசு ஆதாரம் உள்ளது கண்டறியப்பட்டது. எனவே பொது சுகாதாரம் விதி 1939ன்படி ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அந்த வீடு வருவாய்த்துறை மூலம் ‘சீல்’ வைக்கப்பட்டது.

    மணவாளர் நகர் காவல் நிலையத்தில் சுகாதாரதுறை மற்றும் உள்ளாட்சி துறை பணியாளர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததற்காக கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் மூலம் புகார் அளிக்கப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

    எனவே அரசுத்துறை அலுவலர்கள், அரசு பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பொதுமக்கள் தங்களின் முழு ஒத்துழைப்பினை அளிக்க வேண்டும். தங்களின் வீடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் பொது சுகாதாரம் சட்டம் 1939 ன்படி சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #tamilnews
    ×