search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குஷ்பு"

    நடிகையும் காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளருமான குஷ்பு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    சென்னை:

    நடிகையும் காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளருமான குஷ்பு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு என்ன ஆனது என்பது குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

    தனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை மட்டும் அவர் தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நாளை (இன்று) நடைபெற இருக்கும் வாக்கு எண்ணிக்கையின்போது தொலைக்காட்சி நேரலை விவாதங்களில் என்னால் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வருத்தமாக இருக்கிறது. நாம் ஒன்று திட்டமிட்டால் கடவுள் வேறு மாதிரி ஒரு திட்டத்தை வைத்துள்ளார்’ என்று குஷ்பு தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மருத்துவமனையில் இருந்தபோதிலும் காலை முதலே தேர்தல் முன்னணி நிலவரத்தையொட்டிய பதிவுகளை பகிர்ந்து வருகிறார்.
    ஜெயலலிதா மிகவும் துணிச்சலான பெண். அவர் காரில் கடந்து செல்வதை மக்களுடன் நான் சாலையில் காத்து நின்று அவரை பார்த்திருக்கிறேன் என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    நடிகை குஷ்பு சென்னையை பற்றிய தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது:-

    சென்னை எனக்கு புகழ், குடும்பம் என எல்லாவற்றையும் தந்துள்ளது. என் மனதில் இருந்த துன்பத்தை போக்கியது. நான் பாஸ் போர்ட்டில் மும்பை வாசியாக இருந்தாலும், இதயப்பூர்வமாக சென்னை வாசியாக உணர்கிறேன். இந்த சிறப்பான நகரத்துக்கு கடமைப்பட்டு இருக்கிறேன்.

    சென்னை காலத்துக்கேற்ப நிறைய மாறி இருக்கிறது. ஆனாலும் இங்கு கலாசாரம் வேரூன்றி இருக்கிறது. எனது மகள்கள் இங்கே வளர்ந்ததை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.

    ஒரு நடிகையாக, தற்போது விளம்பர பலகைகள், பேனர்களை அண்ணா சாலையில் பார்க்க முடிய வில்லை என்பது சற்று வருத்தம் தான். முன்பெல்லாம் பட ரிலீசின் போது மவுண்ட் ரோட்டுக்கு சென்ற போது பெரிய பெரிய பேனர்களை பார்த்திருக்கிறேன். எனது முதல் தமிழ் படமான ‘தர்மத்தின் தலைவன்’ வெளியான போது நான் மவுண்ட் ரோட்டுக்கு சென்றேன்.

    அங்கு பெரிய அளவில் திரண்டிருந்த ரசிகர்கள் பேனர்களை பார்த்து கொண்டிருந்தனர். அதில் பிரபுவின் படம் மட்டும் இருந்தது. அது எனக்கு ஏமாற்றமாக இருந்தது.

    எனது கணவர் சுந்தர் சி நடித்த ‘தலைநகரம்‘ படம் வெளியான போது மவுண்ட்ரோட்டில் அவரது படத்துடன் கூடிய பெரிய பேனர் வைக்கப்பட்டிருப்பதை பார்த்த போது எனக்கு ஆனந்த கண்ணீர் வந்தது. நான் தென்னிந்தியாவில் முதலில் தெலுங்கு படத்தில்தான் நடித்தேன். அந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விஜயவாகினி ஸ்டூடியோவில் 1986-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி தொடங்கியது.

    அந்த நாட்களை என் வாழ்வாளில் மறக்க முடியாது. ரஜினிகாந்துடன் நான் நடித்த ‘பாண்டியன்’ படத்தின் படப்பிடிப்பு முட்டுக்காடு பகுதியில் நடைபெற்ற போது ரசிகர்களும், சுற்றுலா பயணிகளும் பெரிய அளவில் திரண்டிருந்தனர். அதேபோல ‘அண்ணாமலை’ படத்தின் ஒரு பாடல் காட்சி போட்கிளப் பகுதியில் நடந்த போதும் அப்பகுதி பொதுமக்கள் தெரு முழுவதும் திரண்டு நின்று பார்த்தனர். இதை என்னால் மறக்க முடியாது.

    ஒரு அரசியல்வாதியாக எனக்கு முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியிடம் பெரிய செல்வாக்கு இருந்தது. இது எனக்கு கிடைத்த அரியாசனமாக உணர்ந்தேன். நான் சென்னையில் நீண்ட காலமாக வசித்த போது தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளை நான் பார்த்திருக்கிறேன்.

    ஜெயலலிதா மிகவும் துணிச்சலான பெண். அதற்காக நான் அவரை பாராட்டுகிறேன். அவர் காரில் கடந்து செல்வதை பார்க்க தெருக்களில் மக்கள் அலை போல திரண்டு இருப்பதை பார்த்திருக்கிறேன்.

    ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்த போது தினமும் காலை 9.30 மணிக்கு மியூசிக் அகாடமி ரோட்டில் காரில் செல்வார். நானும் மக்களுடன் சாலையில் காத்து நின்று அவரை பார்த்திருக்கிறேன். அவர் மதியம் சாப்பிட செல்லும் போது சாலையின் எதிர் திசைக்கு சென்று அவரை பார்ப்பேன்.


    இது சில வாரங்கள் சென்று கொண்டே இருந்தது. இதைப் பார்த்த அவர், ஒரு நாள் அவரது மெய்க்காப்பாளர்களை அனுப்பி என்னை யார்? என விசாரித்துள்ளார்.

    எனக்கு அமைதி தேவை என்றால் உடனே மெரினா கடற்கரைக்கு சென்று விடுவேன். தி.நகர் கடைகளுக்கு சென்று சேலைகள் வாங்கியதையும் மறக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பு, சமீபத்தில் அளித்த பேட்டியில், அந்த படத்தை ரீமேக் செய்ய வேண்டாம் என்று கூறியிருக்கிறார். #Khushbu
    பிரபு, குஷ்பு நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் ‘சின்னதம்பி’. இந்த படத்தை ரீமேக் செய்யலாம் என்று ஒரு பேச்சு எழுந்தது. இதுபற்றி குஷ்புவிடம் ஒரு பேட்டியில் கேட்டதற்கு, ‘ஒரு காலத்தில் கொண்டாடப்பட்ட படத்தை ரீமேக் என்ற பெயரில் கைவைக்கக் கூடாது. வட இந்தியாவில் இருந்து நடிக்க வந்த ஒரு நடிகை தமிழ் பேசி ஆடிப்பாடி சிரித்து, அழுதுபுரண்டு நடித்ததை வியந்து பார்த்தனர். 



    அந்த அளவுக்கு டைரக்டர் வாசு சார் சின்னத்தம்பி நந்தினி கதாபாத்திரத்தை செதுக்கி உருவாக்கி இருந்தார். படத்தின் கிளைமாக்ஸ் காட்சி முழுக்க முழுக்க நந்தினி தோளில் சுமத்தப்பட்டது. இன்னொரு முக்கியமான வி‌ஷயம் வேறு எந்த ஹீரோக்கள் நடித்து இருந்தாலும் என்னை அந்த அளவுக்கு விட்டுக்கொடுத்திருக்க மாட்டார்கள். பிரபு சார் அவரது ஹீரோயிசத்தை பெருந்தன்மையாகக் குறைத்துக்கொண்டார். 

    நான் நடித்த நந்தினி கேரக்டரை எந்த நடிகையும் நடிக்கலாம். ஆனால், பிரபு சார், மனோரமா ஆச்சி நடித்த கேரக்டர்களில் யாரை நடிக்க வைப்பீர்கள்...?’. இவ்வாறு குஷ்பு கேட்டுள்ளார்.
    பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று துவங்கிய நிலையில், ரஜினிகாந்த், அஜித், விஜய் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் தங்களது வாக்கினை பதிவு செய்தனர். #LokSabhaElections2019
    12 மாநிலங்களில் இரண்டாம் கட்டமாக 96 மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

    சரியாக காலை 7 மணிக்கு அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

    நடிகர் ரஜினிகாந்த் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்தார். அனைவரும் தங்களது வாக்கினை தவறாமல் பதிவு செய்ய வேண்டும் என்று வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

    நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் உள்ள பள்ளியில் வாக்களித்தனர். நடிகர் விஜய் நீலாங்கரையில் உள்ள பள்ளியில் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார். நடிகர் கமல்ஹாசன் தனது மகள் சுருதிஹாசனுடன் தேனாம்பேட்டையில் உள்ள பள்ளியில் வாக்கினை பதிவு செய்தார். முன்னதாக கமல் வாக்குப்பதிவு செய்த பள்ளியில் வாக்குப்பதிவு எந்திரம் பழுதடைந்ததால், காத்திருந்து தனது ஓட்டை பதிவு செய்துவிட்டு சென்றார்.



    மேலும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நடிகை குஷ்பு உள்ளிட்ட பலரும் தங்களது ஓட்டை பதிவு செய்தனர். #LokSabhaElections2019 #Rajinikanth #KamalHaasan #AjithKumar #Vijay 

    பணக்கார நண்பர்களுக்கு மட்டும்தான் மோடி பிரதமராக உள்ளார் என்று குமரி மாவட்டத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட நடிகை குஷ்பு தெரிவித்தார். #LokSabhaelections2019 #Kushboo
    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரை ஆதரித்து நேற்று குமரி மாவட்டத்தில் நடிகை குஷ்பு பிரசாரம் செய்தார். சுசீந்திரம், கொட்டாரம், நாகர்கோவில் ராமன் புதூர் உள்பட 15 இடங்களில் திறந்த ஜீப்பில் சென்று அவர் பேசினார்.

    பாராளுமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு நாளான வருகிற 18-ந்தேதி நீங்கள் ஓட்டுப்போடும் முன்பு கடந்த 5 ஆண்டு பாரதிய ஜனதா ஆட்சியில் எந்த அளவிற்கு கஷ்டப்பட்டு இருக்கிறோம் என்பதை நினைத்துப் பார்த்து வாக்களியுங்கள்.

    பிரதமர் மோடி உங்கள் வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் போடுவதாக சொன்னாரே அதை அவர் செய்தாரா? 2 கோடி பேருக்கு வேலை கொடுப்பதாக சொன்னாரே வேலை கிடைத்ததா? பாரதிய ஜனதா ஆட்சியில் 2 கோடி பேர் வேலை இழந்து உள்ளனர்.

    பாரதிய ஜனதா தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இந்த ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. டெல்லியில் விவசாயிகள் 60 நாட்கள் போராடிய போதும் அவர்களை பிரதமர் பார்க்கவில்லை. பிரதமர் மோடி பணக்கார நண்பர்களுக்கு மட்டும்தான் பிரதமராக உள்ளார். இந்த ஆட்சியில் விலைவாசி எந்த அளவிற்கு உயர்ந்து இருக்கிறது என்பது உங்களுக்கு நன்றாக தெரியும்.

    காங்கிரஸ் ஆட்சியின் போது 450 ரூபாயாக இருந்த கியாஸ் விலை இன்று 950 ரூபாய் அளவிற்கு உயர்ந்து விட்டது. கேபிள் டி.வி. கட்டணம் 150 ரூபாயில் இருந்து 350 ரூபாய் ஆகி விட்டது. அதிக பணம் கொடுத்தால் தான் எல்லா சேனல்களையும் பார்க்க முடியும். நீங்கள் விரும்பும் சேனல்களைக்கூட உங்களால் பார்க்க முடியாது.

    பாரதிய ஜனதா ஆட்சியில் அவர்கள் சொல்வதைதான் நீங்கள் கேட்க வேண்டும். அவர்கள் சொல்வதைதான் நீங்கள் சாப்பிட வேண்டும். யாரை காதலிக்க வேண்டும், யாரை திருமணம் செய்ய வேண்டும் என்பதைக்கூட அவர்கள்தான் சொல்வார்கள். ஒரு சர்வாதிகார ஆட்சியை நாம் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.


    இதற்கு எல்லாம் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்றால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்தான் முடியும். இளம் தலைவர் ராகுல்காந்தி பிரதமர் ஆகும் போதுதான் எல்லா மாற்றத்தையும் கொண்டுவர முடியும். அடுத்த பிரதமர் ராகுல்காந்திதான் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறி உள்ளார். அவரது கனவை நினைவாக்க வேண்டும்.

    ஆட்சிக்கு வந்தபிறகு காங்கிரஸ் கட்சி சொன்னதை எல்லாம் நிறைவேற்றும். நாங்கள் சொல்வதைதான் செய்வோம், செய்வதைத் தான் சொல்வோம். மக்களின் குரலுக்கு மோடி செவிசாய்க்கவில்லை. ஆனால் ராகுல் மக்களின் தேவை அறிந்து செயலாற்றுவார். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.72 ஆயிரம் உங்கள் வீடு தேடி வரும்.

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் ஊரக வேலை திட்டத்தில் ரூ.300 வழங்கப்படும். கல்விக்கடன், விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். சிறு தொழில் தொடங்க வங்கியில் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் கடன் வழங்கப்படும்.

    இவ்வாறு குஷ்பு பேசினார். #LokSabhaelections2019 #Kushboo
    தேர்தலில் போட்டியிட நான் சீட் கேட்கவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு கூறினார். #LokSabhaElections2019 #Kushboo
    பெங்களூரு:

    நடிகை குஷ்பு நிருபர்களிடம் கூறியதாவது:-

    நான் தேர்தலில் போட்டியிட போகிறேன் என்று சொன்னேனா? எனக்கு இதுபோன்ற வதந்திகள் புதிதல்ல. தி.மு.க.வில் இருக்கும்போது 2011-ல் இதே பேச்சு வந்தது. 2014, 2016 மற்றும் 2019 வரை இதே பேச்சு தொடர்ந்து கொண்டிருகிறது. எனக்கு இது பழக்கம் ஆகிவிட்டது.

    ஒவ்வொரு முறையும் சீட் கொடுக்கவில்லை. அதனால் குஷ்பு வருத்தத்தில் இருக்கிறார் என்கிறார்கள். நான் எப்போது சீட் கேட்டேன்? தி.மு.க.விலோ, காங்கிரசிலோ இதுவரை நான் சீட்டு கேட்டதேயில்லை.

    நான் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர். அது தொடர்பான பணிகளே நிறைய இருக்கிறது. பல்வேறு மாநிலங்களுக்கும் செல்ல வேண்டியிருக்கிறது.

    தேசிய பொறுப்பில் இருப்பதால் இந்தியா முழுவதும் சென்று கொண்டிருக்கிறேன். அதற்காக நான் செல்லும் இடமெல்லாம், நானும் ஜெயிலுக்கு போறேன் என்று தண்டோரா போட முடியாது என்னைப் பற்றி கட்சிக்கு நன்றாக தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #Kushboo
    சில்மிஷம் செய்தவருக்கு பளார் என்று ஒரு அறை விட்ட நடிகை குஷ்புவின் செயலுக்கு, பெண்கள் உங்களை போல துணிச்சலாக இருக்க வேண்டும் என்று பலர் பாராட்டுகின்றனர். #Kushboo
    பெங்களூர்:

    பெங்களூர் மத்திய தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ரிஸ்வான் அர்சத் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

    அவரை ஆதரித்து அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான நடிகை குஷ்பு பிரசாரம் செய்தார்.

    முன்னதாக நடிகை குஷ்பு பெங்களூர் இந்திராநகரில் உள்ள ரிஸ்வான்அர்சத் வீட்டுக்கு சென்று இருந்தார். அங்கிருந்து அவர் பிரசாரம் செய்வதற்கு புறப்பட்டார்.

    அவரை காண வீட்டுக்கு வெளியே நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டு இருந்தனர். அவர்களுக்கு வணக்கம் தெரிவித்தபடி தனது பிரசார வாகனத்தில் ஏறுவதற்காக குஷ்பு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது குஷ்புவுக்கு பின்னால் வந்த வாலிபர் ஒருவர் அவரிடம் முறைகேடாக நடக்க முயற்சி செய்தார். அவரது சில்மிஷத்தை உணர்ந்த மறுநிமிடமே குஷ்புவுக்கு கடும் கோபம் ஏற்பட்டது. வேகமாக திரும்பிய அவர் அந்த வாலிபர் கன்னத்தில் “பளார்” என்று ஒரு அறை விட்டார்.

    திடீரென குஷ்பு கூட்டத்துக்குள் ஒருவரை அடித்ததை கண்டதும் அங்கிருந்தவர்கள் பரபரப்பு அடைந்தனர். குஷ்புவுடன் வந்துக் கொண்டிருந்த ரிஸ்வான் அர்சத், சாந்தி நகர் எம்.எல்.ஏ. அகமதுகரீஸ் ஆகியோர் என்ன நடந்தது என்று விசாரித்தனர்.



    அவர்களிடம் குஷ்பு நடந்ததை கூறினார். அந்த வாலிபரை பிடித்து போலீசில் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொண்டார். இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை அந்த கூட்டத்தில் இருந்து விலக்கி தனியாக அழைத்து சென்றனர்.

    அந்த வாலிபருக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. குஷ்பு தரப்பில் இருந்து யாரும் புகார் கொடுக்காததால் போலீசார் விடுவித்து விட்டதாக தெரிகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து குஷ்புவுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. அதன் பிறகு குஷ்பு பிரசாரத்துக்கு புறப்பட்டு சென்றார்.

    இதற்கிடையே கூட்டத்துக்குள் வாலிபரை குஷ்பு பளார் என அடிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. ஆயிரக்கணக்கானவர்கள் அந்த வீடியோ காட்சிகளை பார்த்தனர்.

    இதைத் தொடர்ந்து குஷ்புவின் டுவிட்டர் பக்கத்தில் ஏராளமானவர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். குஷ்புவின் அதிரடி செயலை பாராட்டியும் விமர்சனம் செய்தும் ஏராளனமான பதிவுகள் இடப்பட்டு இருந்தது.

    பெரும்பாலும் குஷ்புவின் செயலுக்கு பாராட்டு தெரிவித்து ஏராளமானவர்கள் பதிவு செய்திருந்தனர். பெண்கள் உங்களை போல துணிச்சலாக இருக்க வேண்டும். பொது இடங்களில் பயப்படக்கூடாது என்ற ரீதியில் பெரும்பாலானவர்களின் கருத்து அமைந்து இருந்தது.

    சரவணன் சுப்பிரமணியன் என்பவர், “குஷ்பு உங்களின் செயல் உங்களது வலிமையையும், துணிச்சலையும் காட்டுகிறது. பெண்களிடம் தவறாக நடந்து கொள்பவர்களுக்கு எப்படி உடனடியாக பதிலடி கொடுக்க வேண்டும் என்ற நல்ல பாடத்தை நீங்கள் அனைத்து பெண்களுக்கும் சொல்லி இருக்கிறீர்கள்” என்று கூறியுள்ளார்.

    அதே சமயத்தில் சிலர் குஷ்புவை கிண்டல் செய்தும் டுவிட்டரில் பதிவுகளை வெளியிட்டுள்ளனர். பா.ஜனதாவைச் சேர்ந்த அபிஷேக் சர்மா என்பவர் வெளியிட்டுள்ள பதிவில், “குஷ்பு அந்த சூழ்நிலையை சமாளித்த விதம் அருமை. ஆனால் காங்கிரஸ் கூட்டங்களில்தான் இப்படியெல்லாம் நடக்கிறது” என்று கூறியுள்ளார்.

    மற்றொருவர் வெளியிட்டுள்ள பதிவில், “குஷ்புவிடம் சில்மி‌ஷம் செய்தவர் காங்கிரஸ் தொண்டராக இருந்தால் என்ன செய்து இருப்பார்?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

    அதற்கு பதில் அளித்துள்ள குஷ்பு, “என்னிடம் அறை வாங்கியவர் காங்கிரஸ் தொண்டர் என்று நான் குறிப்பிட்டு இருக்கிறேனா? சரி பரவாயில்லை. அவர் காங்கிரஸ் தொண்டராகவே இருந்தாலும் எனது நடவடிக்கை ஒரே மாதிரிதான் இருந்திருக்கும்” என்று கூறியுள்ளார். #Kushboo
    தேர்தல் பிரசாரத்தின்போது தன்னை தவறாக தொட்டவரை நடிகை குஷ்பு கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. #LokSabhaElections2019 #Kushboo
    பெங்களூரு:

    நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் தேசிய செய்தி தொடர்பாளராக பொறுப்பு வகித்து வருகிறார். அரசியல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அவர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பினார். தமிழகத்தில் உள்ள ஒரு தொகுதியில் போட்டியிட அவருக்கு சீட் கிடைக்கும் என்று ஆதரவாளர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.

    ஆனாலும் குஷ்பு வருத்தப்படாமல் தேர்தல் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். தமிழகத்தின் சில தொகுதிகளில் பிரசாரம் செய்துவிட்டு வெளிமாநிலங்களுக்கு சென்றார். அங்கு காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து நடந்து சென்றும், வேனில் பயணித்தும் பிரசாரம் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூரு மத்திய தொகுதியில் நடிகை குஷ்பு பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவரை பார்ப்பதற்காக பெருங்கூட்டம் திரண்டது. கூட்டத்தினர் மத்தியில் குஷ்பு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது பின்னால் வந்த ஒரு ஆசாமி குஷ்புவை தவறான இடத்தில் தொட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் ஆவேசம் அடைந்த குஷ்பு பின்னால் திரும்பி அந்த வாலிபரை கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவத்துக்கு பிறகு குஷ்புவுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் பிரசாரத்தில் ஈடுபட்டார். #LokSabhaElections2019 #Kushboo

    40 தொகுதிகளிலும் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்று அகில இந்திய காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் குஷ்பு கூறினார். #LokSabhaElections2019 #Kushboo
    பெங்களூரு:

    மத்திய பெங்களூரு பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் ரிஸ்வான் ஹர்‌ஷத்தை ஆதரித்து அகில இந்திய காங்கிரஸ் செய்தித்தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு தேர்தல் பிரசாரம் செய்தார் அப்போது அவர் பேசியதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், பா.ஜனதா என்று பார்க்காமல் தீய சக்தி, நல்ல சக்தி என்று தேர்தலை பார்க்க வேண்டும். பா.ஜனதா என்றாலே தீய சக்தி தான்.

    பிரதமர் மோடி கடந்த 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளார். கியாஸ் விலை உயர்ந்துள்ளது. ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் கியாஸ் சிலிண்டரின் விலை என்ன?. மோடியின் ஆட்சியில் அதன் விலை என்ன என்பதை நீங்கள் தான் சிந்தித்து பார்க்க வேண்டும்.

    பொதுவாக தாய்மார்கள் கணவர்களுக்கு தெரியாமல் சமையல் அறையில் பணத்தை மறைத்து வைப்பார்கள். ஆனால் மோடி ஆட்சிக்கு வந்த பின்பு ஒரே இரவில் பணம் அனைத்தும் செல்லாது என கூறி அனைத்து பணத்தையும் குப்பையாக மாற்றினார்.

    பின்னர் பணத்துக்காக மக்கள் ஏ.டி.எம். வாசலில் காத்து நின்றனர். அவ்வாறு வரிசையில் காத்து நின்றபோது 100-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.

    பா.ஜனதா என்றால் மோடி மட்டுமே. ஆனால் காங்கிரஸ் என்பது ஒரு கூட்டம். மோடி தமிழ்நாடு என்றாலே வெறுக்கிறார். தமிழ் நாட்டில் புயல் பாதிப்பின் போது மோடிக்கு தமிழ்நாடு மீது அக்கறை வரவில்லை. தற்போது தேர்தல் வருவதால் மோடி தமிழ்நாட்டு மக்கள் மீது அக்கறை இருப்பது போல் நடித்து வருகிறார்.

    கடந்த 2014-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் பிரதமர் மோடி அனைவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என கூறினார். இதுவரை ஒருவர் வங்கி கணக்கிலும் ஒரு பைசா கூட செலுத்தவில்லை. அதனால் பொய் கூறிவரும் மோடியை வீட்டுக்கு அனுப்புங்கள்.

    ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகத்திற்கு வரும் பிரதமர் நரேந்திர மோடி புயல் பாதித்தபோது எங்கே இருந்தார்? முருகனுக்கு அரோகரா என்று கோ‌ஷம் எழுப்புவதால் தமிழக மக்கள் அதையெல்லாம் மறந்து விடுவார்களா?

    கேரளாவிற்கு சென்று ஐயப்பா என்று கூறுவதாலும் பா.ஜனதாவுக்கு வாக்குகள் கிடைத்து விடாது. பிரதமர் நரேந்திர மோடியின் இந்த நடிப்பை தமிழக மக்கள் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட தென்னிந்திய மக்கள் நம்பப் போவதில்லை.

    தமிழகத்தில் பா.ஜனதா போட்டியிட்டு உள்ள 5 தொகுதிகளிலும் நோட்டாவை விட குறைவான வாக்கே கிடைக்கும்.

    தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை, தூத்துக்குடியில் வெற்றி பெறுவேன் என்ற ரீதியில் கடலில் தாமரை மலர்ந்தே தீரும் என்று சமீபத்தில் கூறி இருந்தார்.

    அ.தி.மு.க.வில் விஞ்ஞானிகள் அதிகம். ஏரி நீர் ஆவியாக மாறுவதை தடுப்பதற்கு தெர்மாகோல் தடுப்பு அமைக்க நடந்த முயற்சி அனைவருக்கும் தெரியும். அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கூட்டணி அமைத்துள்ளதால் தமிழிசைக்கும் அதன் பாதிப்பு வந்துவிட்டது.

    எந்த காலத்திலும் தமிழகத்தில் பா.ஜனதா கால் ஊன்றாது. தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். மத்தியில் காங்கிரஸ் பதவியேற்ற 10 மணி நேரத்தில் விவசாய கடன் ரத்து செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #Kushboo
    பா.ஜனதா திட்டங்கள் அனைத்தும் தோல்வியை தழுவி உள்ளதால் அக்கட்சியை நம்ப முடியாது என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு கூறினார். #LokSabhaElections2019 #Kushboo
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள சேவால்லா பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கொண்ட விஸ்வேஸ்வர ராவ் ரெட்டியை ஆதரித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு பிரசாரம் செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் கூறி உள்ள அனைத்தையும் நிச்சயமாக செய்து முடிக்கும். எதார்த்தமாக நடைமுறையில் செய்து முடிக்கக்கூடிய திட்டங்களை மட்டுமே காங்கிரஸ் கட்சி நாட்டு மக்களிடம் சொல்லி உள்ளது.

    இதற்கு முன்பும் காங்கிரஸ் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது. இந்த வி‌ஷயத்தில் காங்கிரஸ் நேர்மையுடன் நடந்து கொள்கிறது. ஆனால் பா.ஜனதா மக்களை ஏமாற்றும் வகையில் தொடர்ந்து பொய் சொல்லி வருகிறது.

    பா.ஜனதாவின் திட்டங்கள் அனைத்தும் தோல்வி அடைந்துள்ளன. பா.ஜனதா மேக் இண்டியா திட்டத்தை மிகவும் பிரபலப்படுத்தியது. ஆனால் அந்த திட்டம் படுதோல்வி அடைந்துள்ளது.

    அதுபோல நிதி சீரமைப்புகளை பா.ஜனதா அறிவித்தது. இந்த திட்டங்களில் நிறைய முன்னேற்றம் வரும் என்று சொன்னது. ஆனால் நிதி சீரமைப்புகளும் தோல்வி அடைந்துள்ளன.

    பா.ஜனதா சொன்னது எல்லாம் தோல்வியை தழுவி உள்ளது. எனவே பா.ஜனதாவை நம்ப முடியாது.

    இவ்வாறு குஷ்பு கூறினார். #LokSabhaElections2019 #Kushboo

    குஷ்புவுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாது என்று தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். #SellurRaju #LokSabhaElections2019

    மதுரை:

    தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு தமிழகத்தின் தேவைகளுக்காக பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை செய்து வருகிறது. ஸ்மார்ட் சிட்டி, எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட சிறப்பு வாய்ந்த பல்வேறு திட்டங்கள் மத்திய அரசின் உதவியோடு தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

    ஆனால் நாங்கள் மத்திய அரசுக்கு அடிமைகளாக இருப்பதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்கிறார். நாங்கள் மத்திய அரசுடன் இணைக்கமாக இருந்து மாநிலத்துக்கு தேவையான திட்டங்களை பெற்று தருகிறோம்.

    ஆனால் மத்தியில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஆட்சி அமைந்தபோது தி.மு.க. காங்கிரசுக்கு அடிமையாக இருந்து தமிழர்களின் உரிமைகளை காவு கொடுத்துவிட்டது. இதனை மக்கள் மறக்க மாட்டார்கள்.


    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பொய்யான வாக்குறுதிகளை மக்களிடம் கூறி வருகிறார். கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகளில் 5 பவுன் நகை வரை அடகு வைத்து விவசாய கடன் பெற்றவர்களின் கடன் அனைத்தும் ரத்து செய்யப்படும் என கூறுகிறார்.

    தமிழக கூட்டுறவு வங்கிகளில் மட்டும் ரூ.25 ஆயிரம் கோடி வரை நகைக்கடன் உள்ளது. தனியார் வங்கிகளையும் சேர்த்தால் ரூ.1 லட்சம் கோடி வரை இருக்கும். இதை எப்படி தள்ளுபடி செய்ய முடியும்.

    தமிழக விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடனை நல்லமுறையில் திருப்பி செலுத்தி வருகிறார்கள். எனவே எப்படியாவது மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துவிடலாம் என மு.க.ஸ்டாலின் கனவு காண்கிறார். தி.மு.க. இனி ஒருபோதும் ஆட்சிக்கு வரமுடியாது.

    மத்திய மந்திரியாக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது தமிழ்நாட்டிற்கும், அவரை தேர்ந்தெடுத்த சிவகங்கை தொகுதிக்கும் எந்த நன்மையும் செய்ததில்லை. தற்போது போலி தேர்தல் அறிக்கை தயாரித்து அதனை வைத்து மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்.

    தற்போது நடிகர்-நடிகைகளின் பிரசாரத்திற்கு கூட்டம் கூடுகிறது. அதே போல்தான் குஷ்புக்கும் கூட்டம் கூடுகிறது. குஷ்புவுக்கு ஒரு காலத்தில் கோவில் கட்டினார்கள். தற்போது அவருக்கு வயதாகி விட்டது. நடிகர்-நடிகைகளை பார்க்க கூடும் கூட்டம் எல்லாம் வாக்காக மாறிவிடாது.

    தெர்மாகோல் வி‌ஷயத்தில் என்ஜினீயர்கள் செய்த தவறால் தெர்மாகோல் ராஜூ என தற்போது ஊடகங்களில் என்னை குறிப்பிடுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #SellurRaju #LokSabhaElections2019

    நடிகை நயன்தாரா பற்றி அவதூறு கருத்து தெரிவித்த ராதாரவிக்கு கனிமொழி, நடிகை குஷ்பு, லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். #RadhaRavi #Nayanthara #Khushboo #Kanimozhi
    நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ள கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் ராதாரவி நயன்தாரா பற்றி தெரிவித்த கருத்துகள் சர்ச்சையானது.

    நடிகர், நடிகைகள் கடும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து ராதாரவி தி.மு.க. கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். ராதாரவிக்கு அரசியல், திரையுலக பிரபலங்கள் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

    ராதாரவியின் பேச்சு குறித்து கனிமொழி எம்.பி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

    ‘ஒவ்வொரு பெண்ணுக்கும் தனது தொழிலை தேர்ந்தெடுத்துக்கொள்ளும் உரிமை இருக்கிறது. செய்யும் பணியை வைத்து ஒரு பெண்ணை விமர்சிப்பதையும் மரியாதை குறைவாக நடத்துவதையும் ஏற்றுக் கொள்ளவே முடியாது. தனிமனித சுதந்திரம், உரிமை, தன்மானத்தை பாதிக்கும் எந்த வி‌ஷயத்துக்கும் தி.மு.க. துணை போகாது.’

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ராதாரவியின் பேச்சு குறித்து குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தங்கள் அகம்பாவத்தை ஊக்கப்படுத்திக்கொள்ள ஆண்கள் எளிதில் கையாளும் வழி, ஒரு பெண்ணை இழிவுபடுத்துவது அல்லது அவளது குணத்தைக் கொச்சைப்படுத்துவது. ஒரு பெண் எப்படி வாழ்கிறாள், என்ன செய்கிறாள் என்பதை பற்றியெல்லாம் யாரும் பேசக்கூடாது. நயன் அகத்திலும் புறத்திலும் அழகானவர். அவரை அவமானப்படுத்துபவரும், அதைக் கைதட்டி ரசித்தவர்களும் திரைத்துறைக்கே அவமானச் சின்னங்கள்.’

    இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.

    ராதாரவியின் பேச்சு குறித்து நடிகை டாப்சி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு இது வெறுப்பை ஏற்படுத்துகிறது. நடிப்பதற்கான தகுதிகளைப் பற்றி விவரிக்க இவர் யார்? இவர் என்ன நன்னடத்தை சான்றிதழ் வழங்கும் அமைப்பின் தலைவரா? இந்தத் துறையின் மிக வலிமையான நடிகையைப் பற்றி இவர் இப்படி பேசுவார் என்றால், மற்றவர்களைப் பற்றி இவர் எப்படி எல்லாம் பேசுவார்?.’

    சாந்தனு பாக்யராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ராதாரவி ஒரு பெண்ணை மேடையில் அவமானப்படுத்துவது இது முதல் முறையல்ல. இப்படி பல சம்பவங்கள் கவனிக்கப்படாமல் போயிருக்கின்றன. ஆனால், நயன்தாரா அற்புதமான பெண்மணி, ஏன் அதற்கும் அப்பாற்பட்டவர். அவரது அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பை வைத்தே அவரது வளர்ச்சியைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். நாம் அனைவரும் இங்கே கூச்சல் போடலாம். ஆனால், சரியானவர்கள் ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.’

    நடிகை லட்சுமி ராம கிருஷ்ணன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    ‘இதைவிடப் பெரிய வி‌ஷயம் ஒன்று இருக்கிறது. ராதாரவியாவது அவரது மனதில் பட்டதைப் பேசிவிடுகிறார். ஆனால், இது போன்ற வி‌ஷயங்களை மனதில் வைத்துக் கொண்டு எத்தனை பேர் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் தெரியுமா?. இவைதானே பொள்ளாச்சி போன்ற எல்லா இடத்திலும் வெளிப்படுகிறது. அவர் பேசினது தப்பான வி‌ஷயம்.

    ஆனால் அந்த தப்பான வி‌ஷயம் தானே நடந்துகொண்டிருக்கிறது. அதற்கு நாம் என்ன பண்ணப் போறோம். ஒரு பெண்ணாக நயன்தாரா சூப்பர் ஸ்டார் பதவிக்கு வருவதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டார்?. சாதிக்க வேண்டும் என வரக்கூடியப் பெண்களும் அவரை வைத்து இப்படியொரு தவறான வழிகாட்டுதலையா நாம் செய்ய வேண்டும். சினிமாத்துறையில் எத்தனை பேர் பாதியிலேயே காணாமல் போய்விடுகிறார்கள்.

    ராதாரவியைத் தடைப் பண்ணினால் மட்டும் பயன் இல்லை. அங்கே இருந்தப் பெண்களே கைதட்டி சிரிக்கிறார்களே அவங்களுக்கு எப்போது தடை போடப் போகிறீர்கள்?. அவர்கள் ரசித்து சிரிச்சிட்டுத்தானே இருக்கிறார்கள்.


    இந்த வி‌ஷயங்கள் மாறுவதற்குப் பெண்கள் ஒத்துழைப்புத் தரவேண்டும். பெண்களுக்கு எதிரான வன்கொடுமை மற்றும் பெண்களை மதிக்கத்தகுந்தவர்களாக நடத்த கண்டிப்பாக பெண்கள் வெளிவர வேண்டும்.

    ஆண்கள் எப்படி காரணமாக இருக்கிறார்களோ அதே போல சில பெண்களும் இந்தப் பிரச்சனைகளுக்குக் காரணமாக இருக்கிறார்கள்.

    அதனால் முழுக்க முழுக்க ஆண்களையே குற்றம்சாட்ட வேண்டியதில்லை என நினைக்கிறேன். எதையும் சமாதானப்படுத்திக் கொள்ளாதீர்கள். பெண்களை கீழ்த்தரமாக காண்பிக்கும் எந்த வி‌ஷயங்களிலும் பங்கு பெறாதீர்கள். பெண்களுக்கு நடக்கும் வன்கொடுமைக்கும், இப்போது நடக்கும் வி‌ஷயத்துக்கும் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும்.’

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #RadhaRavi #Nayanthara #Khushboo #Kanimozhi

    ×