search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆணையம்"

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதிகளில் தலா ஒரு வாக்குச்சாவடியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    தேனி:

    தமிழகத்தில் கடந்த மாதம் 18-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தேனி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பெரியகுளம் அருகே வடுகபட்டியில் உள்ள வாக்குச்சாவடி எண் 197-ல் மாதிரி வாக்குப்பதிவு முடிந்த பின்னர் யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் விவி பேட் கருவியில் இருந்து ஒப்புகை சீட்டை அகற்றாமல் தொடர்ந்து வாக்குப்பதிவு நடந்தது.

    இது பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த மையத்தில் 1405 வாக்குகள் உள்ளன. இதில் ஆண்கள் 702 பேரும், பெண்கள் 703 பேரும் வாக்காளர்களாக உள்ளனர். இதில் ஆண்கள் 450 பேர், பெண்கள் 454 பேர் என 904 பேர் வாக்களித்திருந்தனர்.

    இதே போல ஆண்டிப்பட்டி அருகே பாலசமுத்திரம் வாக்குச்சாவடி எண் 67-ல் மாதிரி வாக்குப்பதிவு அழிக்காமலும், ஒப்புகை சீட்டை அகற்றாமலும் வாக்குப்பதிவு நடந்தது. இந்த மையத்தில் 644 ஆண்கள், 611 பெண்கள் என 1255 பேர் வாக்காளர்களாக உள்ளனர். இதில் 523 ஆண்கள், 500 பெண்கள் என மொத்தம் 1023 பேர் வாக்களித்திருந்தனர். இதனால் இந்த இரண்டு வாக்குச்சாவடிகளிலும் மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    இதற்காக 2 வாக்குச்சாவடிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளார்கள். தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் இன்று மாலையே வாக்குச்சாவடிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடிகளுக்கு இன்று காலை வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் விவி பேட் எந்திரம் அனுப்பி வைக்கப்பட்டது. மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான பல்லவி பல்தேவ் வாக்குச்சாவடிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பாராளுமன்ற தேர்தலையொட்டி, ஆணையத்தின் உத்தரவின்படி, திருவள்ளுர் மாவட்டத்தில் 30 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் 30 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில், நிலையான கண்காணிப்பு மற்றும் தேர்தல் பறக்கும் படை குழுக்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அப்போது மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி கூறியதாவது:-

    நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலையொட்டி, ஆணையத்தின் உத்தரவின்படி, திருவள்ளுர் மாவட்டத்தில் 30 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் 30 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தேர்தல் முடியும் வரை பணியிலிருக்க வேண்டும்.

    நிலையான கண்காணிப்பு குழுவில் ஒரு மாஜிஸ்திரேட் அந்தஸ்து வழங்கப்பட்ட அலுவலர் தலைமையில் மூன்று காவல் துறையினர் மற்றும் வீடியோ கிராபர் ஒருவர் உள்பட 5 பேர் கொண்ட குழு பணி செய்ய வேண்டும்.

    தேர்தல் பறக்கும்படை குழுவில் கூடுதலாக ஒரு காவலரும் கொண்ட 6 பேர் பணி செய்ய வேண்டும். இக்குழுக்களின் முக்கிய பணிகளாக தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு மாறான செயல்பாடுகளை கண்காணித்து கிடைக்கப் பெறும் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,

    முக்கியமாக வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் நோக்கத்தில் ஆதாரம் இல்லாமல் ரொக்க பணம் ரூ. 50 ஆயிரத்திற்கு மேல், ரூ. 10 ஆயிரத்திற்கு மேல் மதிப்புள்ள, வெளிமாநில மதுவகைகள், எரிசாராயம், கள்ளச்சாராயம் ஆகியவற்றை கொண்டு சென்றால், முறைப்படி பறிமுதல் செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    உரிமம் இல்லாத மற்றும் உரிமம் பெற்ற ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை கொண்டு செல்வதை கண்காணித்து பிடித்து முறைப்படி பறிமுதல் செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக விரோதிகளின் நடமாட்டத்தை கண்காணித்து, குற்றம் நடைபெறுவதை தடுத்தல், அனைத்து பெரிய ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் ஆகியவற்றை வீடியோ பதிவு செய்து கண்காணித்தல் வேண்டும்.

    அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கும் பொருட்டு, தேர்தல் பறக்கும் படை குழுவினர் பறிமுதல் செய்த பணம் மற்றும் பொருட்களை படிவம் ஏ-யின் மூலமும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய செயல்களுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையினை படிவம் பி-யின் மூலமும் தெரிவித்தல் வேண்டும். பெண்களை சோதனை செய்யும்போது ஒரு பெண் அலுவலர் மூலமாக மட்டுமே சோதனை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேகதாது அணை கட்ட அனுமதி அளித்த மத்திய நீர்வள ஆணைய தலைவர் மீது வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. #MekedatuDam #TNGovt

    சென்னை:

    கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் ரூ.5,912 கோடி செலவில் புதிய அணை கட்டுவதற்கான சாத்திய கூறு அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்தில் தாக்கல் செய்திருந்தது.

    இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட நீர்வள ஆணையம் விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து அளிக்குமாறு கர்நாடக நீர்ப்பாசனைத்துறைக்கு உத்தரவிட்டது.

    இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அனைத்து கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 2-வது கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடை பெற்றது. கூட்டத்துக்கு மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவரும், காவிரி மேலாண்மை ஆணைய தலைவருமான மசூத் உசேன் தலைமை தாங்கினார்.

     


    இதில் தமிழக அரசு சார்பிலும், கர்நாடக அரசு சார்பிலும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது தமிழக பொதுப் பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் தனது எதிர்ப்புகளை பதிவு செய்தார்.

    தமிழக அரசு தெரிவித்த நியாயமான மறுப்புகளை பரிசீலிக்காமலும் தமிழ்நாடு மற்றும் இதர படுகை மாநிலங்களின் அனுமதி பெறாமலும் மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை கர்நாடகம் தயாரிப்பதற்கு மத்திய நீர்வள பாசன ஆணையம் அனுமதி அளித்தது காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணை மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மீறும் செயலாகும். எனவே இந்த அனுமதியை ஆணையம் ரத்து செய்து திரும்ப பெற வேண்டும் என்று கூறி இருந்தார்.

    ஆனால் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசேன் நிருபர்களிடம் கூறுகையில், மேகதாது அணை விவகாரத்தில் விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்வதற்கு மட்டுமே மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்து உள்ளது. ஆனால் அணை கட்ட அனுமதிக்க வில்லை என்று கூறினார்.

    எனவே மத்திய நீர்வள ஆணைய தலைவர் மசூத் உசேன் முன்னுக்கு பின் முரணாக இங்கே ஒரு கருத்தும் அங்கே ஒரு கருத்தும் தெரிவித்து வருவதால் அவர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

    காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் பதவி, மத்திய நீர்வள ஆணைய தலைவர் பதவி ஆகிய இரண்டு பதவியிலும் மசூத் உசேன் நீடிக்க கூடாது என்றும் ஏதாவது ஒரு பதவியில் தான் அவர் இருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் முறையிட உள்ளது.

    இதற்காக சட்டநிபுணர்களுடன் தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. #MekedatuDam #TNGovt

    காவிரி மேலாண்மை ஆணையத்தை இந்த மாத இறுதிக்குள் அமைக்க வேண்டும் என ஜி.கே.வாசன் கூறினார்.
    திருவாரூர்:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று திருவாரூர் வந்தார். அப்போது அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    காவிரி பிரச்சினையில் கிடைத்த வெற்றி தமிழக விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றியாகும். சுப்ரீம் கோர்ட்டு அளித்த காவிரி தீர்ப்பை 48 மணி நேரத்தில் மத்திய அரசு, அரசிதழில் வெளியிட வேண்டும்.

    காவிரி மேலாண்மை ஆணையத்தினை உடனடியாக இந்த மாத இறுதிக்குள் அமைக்க வேண்டும். அதற்கு முழு அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.

    காவிரியில் இருந்து 2 வாரங்களில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர்் திறக்க முடியும்.

    காவிரி நீர் பிரச்சினையால் 4 மாநிலங்களில் அதிகம் பாதிக்கப்பட்டது தமிழகம் தான். இதில் காங்கிரஸ், பா.ஜனதா ஆகிய இரு தேசிய கட்சிகளும் கண்டு கொள்ளாமல் கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கவே கவனம் செலுத்தி வந்தனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்வு ஏற்பட்டு பொதுமக்களை கடுமையாக பாதிக்கிறது.

    எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். தமிழக மக்கள் மீது மத்திய அரசு வலுக்கட்டாயமாக ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களை திணிக்கிறது. அதனை மக்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள். கவர்னர் என்பவர் மரியாதைக்குரியவர். அவர் நடுநிலை தவறாமல் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது மாநில செயற்குழு உறுப்பினர் சுரேஷ் மூப்பனார், மாவட்ட தலைவர் குடவாசல் தினகரன், துணைத்தலைவர் செல்லதுரை, செயலாளர் ராதாகிருஷ்ணன், பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன், நகர தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் உடன் இருந்தனர். 
    ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக அப்பல்லோ மருத்துவர்கள் அளித்த வாக்குமூலம் முரண்படுவதால் ‘ரமணா’ பட பாணியில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதா? என்ற சந்தேகம் ஆணையத்துக்கு எழுந்துள்ளது. #Jayalalithaa #JayaProbe #Apollo
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தி வருகிறார். ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் பல்வேறு காலகட்டங்களில் போயஸ் கார்டனில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த 20 மருத்துவர்களின் பட்டியலை சசிகலா ஆணையத்தில் தாக்கல் செய்திருந்தார்.

    அந்த மருத்துவர்களிடம் தற்போது ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. அந்த பட்டியலில் இடம்பெற்ற அப்பல்லோ மருத்துவர் ஜெயஸ்ரீகோபால் மற்றும் மருத்துவர் ராமச்சந்திரன்(இருவரும் சர்க்கரை நோய் தடுப்பு சிறப்பு மருத்துவர்கள் ஆவர்) ஆகியோரிடம் நேற்று முன்தினம் ஆணையம் விசாரணை நடத்தியது.

    கோப்பு படம்

    சசிகலா அளித்த பட்டியலில் இடம்பெற்றிருந்த அப்பல்லோ மருத்துவமனையில் சர்க்கரை நோய் தடுப்பு சிறப்பு மருத்துவராக பணியாற்றி வரும் சாந்தாராமிற்கு ஆணையம் சம்மன் அனுப்பியது. அதன்படி நேற்று காலை 10.30 மணிக்கு அவர் ஆணையத்தில் ஆஜரானார்.

    ஜெயலலிதாவுக்கு எந்த ஆண்டு முதல் சிகிச்சை அளித்து வருகிறீர்கள்?, ஜெயலலிதாவுக்கு என்னென்ன உடல்நிலை பாதிப்பு இருந்தது?, உங்களது சிகிச்சையில் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் இருந்ததா? என்பது போன்று பல்வேறு கேள்விகளை நீதிபதி கேட்டார்.



    அதற்கு மருத்துவர் சாந்தாராம், ‘2000-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை தொடர்ந்து 14 ஆண்டுகள் ஜெயலலிதாவுக்கு சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அளித்தேன். அப்போது சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. 2015-ம் ஆண்டுக்கு பின்னர் ஜெயலலிதாவுக்கு நான் சிகிச்சை அளிக்கவில்லை. என்னை ஏன் அழைக்கவில்லை என்பது எனக்கு தெரியாது. எனக்கு பின்னர், ஜெயஸ்ரீகோபால் ஜெயலலிதாவுக்கு சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அளிப்பதாக கேள்விப்பட்டேன். 2015-ம் ஆண்டுக்கு பின்னர் ஜெயலலிதாவுக்கு சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்றும் கேள்விப்பட்டேன். நான் அப்பல்லோ மருத்துவமனையில் பணியாற்றியபோதும், ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும் அவருக்கு சிகிச்சை எதுவும் அளிக்கவில்லை’ என்று பதில் அளித்துள்ளார்.

    ‘தொடர்ந்து 14 ஆண்டுகள் நீங்கள் ஜெயலலிதாவுக்கு சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அளித்து இருந்ததால் அவரது உடல்நிலை குறித்து உங்களுக்கு தெரிந்திருக்கும். அப்படி இருக்கும்போதும், ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோதும் ஏன் உங்களை ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் குழுவில் சேர்க்கவில்லை’ என்று சாந்தாராமிடம் நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு, அதுபற்றி தனக்கு தெரியாது என்று மருத்துவர் சாந்தாராம் பதில் அளித்துள்ளார்.

    தொடர் சிகிச்சையில் இருந்த ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்பது குறித்து கேள்வி எழுப்பிய ஆணையம், அதுபோன்று திடீர் மாரடைப்பு ஏற்படும்போது என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்று கேள்வி எழுப்பியது.

    அதற்கு மருத்துவர் சாந்தாராம், ‘அதிக ரத்த அழுத்தத்தின் காரணமாக மாரடைப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. மாரடைப்பு ஏற்பட்டால் ரத்த ஓட்டம் நின்று விடும். சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல், மூளை செயல் இழந்து விடும். மீண்டும் இருதயம் செயல்பட்டால் எல்லா உறுப்புகளும் செயல்படும். ஆனால், ஜெயலலிதாவுக்கு இருதயம் மீண்டும் செயல்படவில்லை’ என்று கூறி உள்ளார்.

    மேலும், ரத்த ஓட்டம் நின்றபின்பு கொடுக்கப்படும் மருந்துகள் செயல்படுமா? என்று கேட்டதற்கு, அதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறி உள்ளார். மருத்துவர் சாந்தாராமிடம் ஆணையத்தின் வக்கீல் எஸ்.பார்த்தசாரதி குறுக்கு விசாரணை செய்தார். அதேபோன்று சாந்தாராமிடம் குறுக்கு விசாரணை செய்வதற்காக சசிகலா தரப்பு வக்கீல் ராஜ்குமார் பாண்டியன் அவரது வாக்குமூலத்தை பதிவு செய்துகொண்டார்.

    அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் ஆணையத்தில் தாக்கல் செய்த ஜெயலலிதா சிகிச்சை குறித்த மருத்துவ ஆவணங்களில், 2016-ம் ஆண்டு டிசம்பர் 4-ந் தேதி மாலை 6 மணிக்கு ஜெயலலிதாவுக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அப்போது ஜெயலலிதாவுக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஆனால், ஜெயலலிதாவுக்கு அன்றைய தினம் மாலை 4.20 மணிக்கு இருதய அடைப்பு ஏற்பட்டதும், மீண்டும் இருதயத்தை செயல்பட வைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சி அனைத்தும் தோல்வியில் முடிந்தது என்பதும் அப்பல்லோ மருத்துவர்களின் வாக்குமூலத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

    இருதய அடைப்பு ஏற்பட்டதும் ரத்த ஓட்டம் நின்று விடும் என்ற சூழ்நிலையில் அன்றைய தினம் மாலை 6 மணிக்கு ஜெயலலிதாவுக்கு ரத்த பரிசோதனை மேற்கொண்டதாக அப்பல்லோ மருத்துவ ஆவணங்களில் குறிப்பிடப்பட்டு இருப்பது ஆணையத்துக்கு பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும், ஜெயலலிதாவுக்கு இருதய அடைப்பு ஏற்பட்ட பின்பு ‘ரமணா’ பட(நடிகர் விஜயகாந்த் நடித்த ரமணா படத்தில் இறந்தவருக்கு பரபரப்பாக சிகிச்சை அளிப்பது போன்ற காட்சி இடம்பெறும்) பாணியில் சிகிச்சை அளிக்கப்பட்டதா? என்ற சந்தேகம் ஆணையத்துக்கு எழுந்துள்ளது. இதை அடுத்தடுத்து ஆஜராகும் மருத்துவர்கள் மூலம் உறுதி செய்ய ஆணையம் முடிவு செய்துள்ளது.  #Jayalalithaa #JayaProbe #Apollo
    ×