search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 106670"

    • ஆண்களைப் போலவே, பெண்களும் கல்லீரல் தொடர்பான நோய்களால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.
    • எண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் சிவப்பு இறைச்சியை தவிர்ப்பது நல்லது.

    ரத்தத்தை சுத்தப்படுத்துவது, புரதத்தை உருவாக்குவது, ஹார்மோன்களை சமநிலைப்படுத்துவது, ஊட்டச்சத்துக்களை சீராக பயன்படுத்துவது என பலவிதமான வேலைகளை செய்வது கல்லீரல். ஆண்களைப் போலவே, பெண்களும் கல்லீரல் தொடர்பான நோய்களால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். பெண்களுக்கு கல்லீரலில் உண்டாகும் நோய்களில் முக்கியமானது 'சிரோசிஸ்' எனும் 'கொழுப்பு கல்லீரல் நோய்'. அதிகப்படியான கொழுப்பினால் ஏற்படும் வீக்கம் 'சிரோசிஸ்' எனப்படுகிறது. கொழுப்பு கல்லீரல் நோய் மது அருந்துவதாலும், ஊட்டச்சத்து குறைபாட்டாலும், அதிக உடல் எடையாலும் ஏற்படுகிறது. இதைத் தவிர்ப்பதற்கு வைட்டமின் பி, சி, தாதுக்கள் மற்றும் குளுட்டோதயோனின் நிறைந்த உணவுகள் உதவும். அவற்றைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

    1. காபி: இதில் காபின், கரிம அமிலங்கள், பாலிசாக்ரைடுகள், ஆன்டிஆக்ஸிடன்டுகள் மற்றும் பாலிபினால்கள் அதிகமாக உள்ளன. இவை சிரோசிஸ் நோய்க்கு எதிரான ஆற்றலை அதிகரிக்கும்.

    1. காபி: இதில் காபின், கரிம அமிலங்கள், பாலிசாக்ரைடுகள், ஆன்டிஆக்ஸிடன்டுகள் மற்றும் பாலிபினால்கள் அதிகமாக உள்ளன. இவை சிரோசிஸ் நோய்க்கு எதிரான ஆற்றலை அதிகரிக்கும்.

    2. பச்சை இலை உணவுகள்: கீரை, முட்டைக்கோஸ் போன்ற பச்சை இலை உணவுகளில் பொட்டாசியம், மாங்கனீசு மற்றும் மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் உள்ளன. இவற்றில் உள்ள குளோரோபில் நச்சு ரசாயனங்களை நீக்க உதவும்.

    3. பருப்புகள் மற்றும் விதைகள்: பாதாம், அக்ரூட் போன்ற பருப்புகளில் உள்ள மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள், கல்லீரலில் கெட்டக் கொழுப்பு சேர்வதை தடுக்கின்றன.

    4. பூண்டு: பூண்டில் உள்ள அல்லிசின், வைட்டமின் சி, வைட்டமின் பி6 மற்றும் செலினியம் ஆகிய சத்துக்கள் நச்சு நீக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அல்லிசின் என்பது ஒரு கந்தக கலவை ஆகும். இது ஆன்டிஆக்ஸிடன்டு மற்றும் ஆன்டிபயாடிக் பண்புகளைக் கொண்டுள்ளது. செலினியம், இயற்கையாகவே நச்சு நீக்கும் கனிமமாகும். இது ஆன்டிஆக்ஸிடன்டுகளின் செயல்பாட்டை அதிகரிப்பதன் மூலம், கல்லீரலின் செயல்பாட்டை அதிகரிக்க உதவும்.

    5. பீட்ரூட்: இதில் குறிப்பிடத்தக்க அளவு நார்ச்சத்து, மாங்கனீசு, பொட்டாசியம், வைட்டமின்கள் ஏ மற்றும் சி உள்ளன. இவை நொதிகளின் செயல்பாட்டை மேம்படுத்துகின்றன. இதனால் நச்சுக் கழிவுகள் விரைவாக உடலில் இருந்து வெளியேறுகின்றன.

    மேலும் முட்டை, சிட்ரஸ் பழங்கள், இஞ்சி, மஞ்சள், தேநீர் மற்றும் மீன் போன்ற உணவுகளும் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடியவையாகும். மேலும், சர்க்கரை, ஆல்கஹால், பதப்படுத்தப்பட்ட உணவுகள், எண்ணெய்யில் பொரித்த உணவுகள் மற்றும் சிவப்பு இறைச்சியை தவிர்ப்பது நல்லது.

    • மூளைப் பகுதியில் ‘உறக்க மையம்’ என்ற ஒன்று உள்ளது.
    • நாம் உறங்கும்போது உறக்க மையம் இரண்டு விதமாகச் செயல்படுகிறது.

    பகல் முழுவதும் உழைத்த பின்பு உடலும் உள்ளமும் களைத்துப் போகின்றன. சோர்ந்த உறுப்புகளுக்கும், திசுக்களுக்கும் புத்துணர்வும் ஆற்றலும் ஊட்டுவதற்கு தூக்கம் மிகவும் அவசியம். சரி, நமக்கு தூக்கம் எப்படி வருகிறது?, தூக்கத்தில் உடலுக்கு என்ன நேர்கிறது? என்பதை அறிவியல் பூர்வமாக அறிந்து கொள்வோம்.

    * தூக்கம் எப்படி வருகிறது?

    மூளைப் பகுதியில் 'உறக்க மையம்' என்ற ஒன்று உள்ளது. இந்த உறக்க மையத்தை ரத்தத்தில் உள்ள கால்சியம் கட்டுப்படுத்துகிறது. உறக்க மையத்தில் வேண்டிய அளவு கால்சியம் சேர்ந்தவுடன் உறக்கம் வருகிறது. அப்படியானால், தூக்கமின்மை நோயால் தவிக்கும் மனிதர்களுக்கு உறக்கம் வருவதற்காக கால்சியத்தை உறக்க மையத்தில் செலுத்தினால் தூக்கம் வருமா என்றால்... 'வரும்' என்கிறார்கள். சில விலங்குகள் மீது இத்தகைய சோதனையைச் செய்து விஞ்ஞானிகள் நிரூபித்திருக்கிறார்கள்.

    ஆனால் இதில் பிரச்சினை என்னவென்றால், உறக்க மையத்தில் நேரடியாக கால்சியம் செலுத்தப்பட்டால் மட்டுமே உறக்கம் வரும். ரத்தக் குழாயில் கால்சியத்தைச் செலுத்தினால் வராது. நாம் சோர்வடையும் நேரத்தில் உறக்க மையம் சில ரசாயனப் பொருட்களால் உணர்ச்சியடைந்து இருக்கும். அப்போது கால்சியம் செயல்படவே, உறக்கம் வருகிறது.

    * தூங்கும்போது என்ன நடக்கிறது?

    நாம் உறங்கும்போது உறக்க மையம் இரண்டு விதமாகச் செயல்படுகிறது. முதலில் இதன் இயக்கத்தால் மற்ற உறுப்புகளிலிருந்து மூளையின் தொடர்பு அற்றுப் போகிறது. இரண்டாவது, உடலின் மற்ற உறுப்புகளையும் இது தடுத்துச் செயலாற்ற வைக்கிறது. உறக்கத்தில் நமது மன ஆற்றலும், உணர்ச்சியும் தற்காலிகமாக நிலைத்துப் போகின்றன.

    தூக்கத்தில் உடலானது பலவிதமான அசைவுக்கு உள்ளாகிறது. நாம் இரவுத் தூக்கத்தில் சராசரியாக 20 முதல் 40 தடவை புரண்டு படுக்கிறோம். ரத்த ஓட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. இதயத் துடிப்பு சற்று குறைகிறது. ஜீரண உறுப்புகள் சரியாக இயங்குகின்றன. ஈரலும், சிறுநீரகமும் தொடர்ந்து செயலாற்றுகின்றன. உறக்கத்தில் உடல் வெப்பம் ஒரு சென்டி கிரேடு குறைகிறது. உடலில் சேர்ந்த கழிவுகளை வெளியேற்றும் வேலை தூக்கத்தின்போது வேகமடைகிறது.

    • கோடை வெப்பத்தை சமாளிப்பதற்கு ஏற்ற வழிமுறைகளை பின்பற்றுவது அவசியம்.
    • அடர் நிறம் கொண்ட துணிகள் அணிவதை தவிர்க்கவும்.

    கோடை காலத்தில் வெப்பநிலையில் ஏற்படும் மாறுபாடுகளை சமாளிப்பதற்கு ஏற்ற வழிமுறைகளை பின்பற்றுவது அவசியம். அதன் மூலம் உடல் ஆற்றலை அதிகரித்துக்கொள்ளலாம். தேவையற்ற பிரச்சினைகளில் இருந்து உடலை தற்காத்தும் கொள்ளலாம். அதற்கு செய்ய வேண்டிய 10 விஷயங்கள்:

    1. அடர் நிறம் கொண்ட துணிகள் அணிவதை தவிர்க்கவும். வெளிர் நிறத்திலும் வெள்ளை நிற ஆடைக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். தளர்வான பருத்தி ஆடைகளை அணிவது உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.

    2. காபின் அதிகம் கொண்ட பானங்கள் நீரிழப்பை ஏற்படுத்தும். அந்த பானங்கள் பருகுவதற்கு இதமாக இருந்தாலும் கோடை காலத்தில் அவற்றை அறவே தவிர்த்துவிடுவது நல்லது. மதுப்பழக்கத்தையும் தவிர்க்கவும். அதுவும் நீரிழப்பை அதிகப்படுத்திவிடும்.

    3. வெயிலின் தாக்கத்தால் உடலில் இருந்து வெளிப்படும் அதிகப்படியான வியர்வை உடலில் இருந்து சோடியம் மற்றும் பொட்டாசியத்தை இழக்க வழிவகுக்கும். எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர், ஸ்வீட் கார்ன், தர்பூசணி, வெள்ளரி ஆகியவை கோடைகால உணவில் அவசியம் இடம் பெற்றிருக்க வேண்டும். இவை இழந்த வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை மீட்டெடுக்க உதவும்.

    4. புரதம் மற்றும் கொழுப்பு கொண்ட உணவுகள் செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். மேலும் அவை உடலின் அடிப்படை வெப்பநிலையையும் அதிகப்படுத்திவிடும். இந்த கோடை வெப்பத்தில் உடலை நீரேற்றமாக வைத்திருக்கும் காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்வது சிறப்பானது.

    5. மூன்று வேளை சாப்பிடும் உணவுகளை கோடை காலத்தில் ஐந்து முறையாக பிரித்து சாப்பிடலாம். அப்படி சாப்பிடுவது செரிமானம் இலகுவாக நடைபெற உதவும். நாள் முழுவதும் உடல் ஆற்றலுடன் செயல்படவும் வித்திடும்.

    6. நேரடி சூரியத் தொடர்பைத் தவிர்க்கவும். காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே செல்வதை கூடுமானவரை தவிர்க்கவும். தலையை பாதுகாக்க குடை மற்றும் தொப்பியைப் பயன்படுத்தவும். சன்ஸ்கிரீன் பூசுவதற்கும் மறந்துவிடாதீர்கள்.

    7. மாய்ஸ்சுரைசர் போடுவது சருமத்திற்கு கூடுதல் சுமையாகத் தோன்றலாம். ஆனால் அது சருமத்தை ஈரப்பதமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும். மென்மையான கிரீம் அல்லது கற்றாழை ஜெல் சருமத்திற்கு இதமளிக்கும்.

    8. கோடையில் எல்லோரும் விரும்பும் பயிற்சிகளில், முதன்மையானது நீச்சல். அது உடலை வெப்பத்தில் இருந்து காக்கும். காலை அல்லது மாலையில் நடைப்பயிற்சி செய்வது, சைக்கிள் ஓட்டுவது கூட புத்துணர்ச்சி அளிக்கும்.

    9. காதுகளின் பின்புறம், மணிக்கட்டு, கழுத்து, முழங்கைகள், முழங்கால்கள் போன்ற பகுதிகளில் ஐஸ்கட்டி கொண்டு ஒத்தடம் கொடுக்கலாம். குளிர்ந்த பாட்டிலை உருட்டியும் மசாஜ் செய்யலாம். அது உடலை விரைவாக குளிர்விக்க உதவும்.

    10. அடிக்கடி தண்ணீர் பருக மறக்காதீர்கள். கோடையை சமாளிக்க தினமும் போதுமான அளவு ஓய்வெடுங்கள்.

    • கவலையுடன் படுக்கைக்கு செல்லக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
    • தியானம் செய்வதன் மூலம் மனதை அமைதிப்படுத்த முடியும்.

    இரவு தூங்குவது முதல் காலையில் விழித்து எழுவது வரையிலான இடைப்பட்ட நேரத்தில் எதுவும் சாப்பிடாததால் நீண்ட நேரம் வயிறு காலியாக இருக்கும். அதன் காரணமாக காலையில் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறையும். அதனை சீராக பராமரிப்பதற்கு குளுகோகன், எபிநெப்ரின் மற்றும் கார்டிசோல் ஆகிய மூன்று ஹார்மோன்கள் போராடும்.

    இவற்றுள் கார்டிசோல், மன அழுத்த ஹார்மோனாகும். ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை பராமரிக்கும் இந்த ஹார்மோன் அதிகாலை வேளையில் அதிகமாக சுரக்கும். பகல் பொழுதை நெருங்கும்போது படிப்படியாக குறையும். நள்ளிரவில் வெகுவாக குறைந்துவிடும். பின்பு காலையில் அதிகரித்துவிடும். எனவே நீரிழிவு நோயாளிகள் காலை நேரத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக மன அழுத்தத்தில் இருந்தால் இந்த ஹார்மோன் காலை வேளையில் சட்டென்று அதிகரித்துவிடும்.

    குறிப்பிட்ட நேரத்தில் வேலையை முடித்தாக வேண்டும் என்ற நெருக்கடிக்கு ஆளாகுதல், வேலையையும், குடும்ப வாழ்க்கையையும் சம நிலையில் நிர்ணயிக்க தவறுதல், கடன் நெருக்கடி உள்பட பல்வேறு காரணங்கள் மன அழுத்தத்திற்கு வித்திடுகின்றன. அதே நிலை நீடிக்கும்போது ஒருவித பயம், வெறுமை போன்ற உணர்வுகள் வெளிப்படும்.

    அப்படிப்பட்ட மன நிலையில் தூங்கச் சென்றால் காலையில் மன அழுத்த ஹார்மோனான கார்டிசோல் அதிகமாக வெளியேறிவிடும். அதனால்தான் நோயாளிகள் கவலையுடன் படுக்கைக்கு செல்லக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். இது நீரிழிவு நோயாளிகளுக்கும் பொருந்தும்.

    ஏனெனில் காலை வேளையில் கார்டிசோல் அளவு அதிகரித்தால் இன்சுலின் உற்பத்தி பாதிப்புக்குள்ளாகும். குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்குத்தான் நேரடி பாதிப்பை ஏற்படுத்தும். மன அழுத்த ஹார்மோன்களின் செயல்பாடு அதிகரிக்கும்போது கணையத்தில் இன்சுலினை உற்பத்தி செய்யும் செல்கள் சரியாக வேலை செய்ய முடியாத நிலைக்கு ஆளாகக்கூடும். அவை தயாரிக்கும் இன்சுலினின் அளவு குறையலாம். அதன் தாக்கமாக உடலில் குளுக்கோஸ் அளவும் குறையக்கூடும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு பாதிப்பை அதிகப்படுத்திவிடும்.

    கார்டிசோல் ஹார்மோன் அதிகரிப்பது, நீரிழிவு நோயாளிகளை மட்டுமல்ல மற்றவர்களையும் பாதிக்கலாம். அதிகாலை வேளையில் கார்டிசோல் ஹார்மோனின் அதிகரிப்பு காரணமாக ஏற்படும் அழுத்தத்தின் தாக்கமாக உயர் ரத்த அழுத்தம், பதற்றம், மாரடைப்பு, மூளை பக்கவாதம் போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும். நாள்பட்ட நோய்கள், உடல் வலி, மன அழுத்தம் மற்றும் நுரையீரல் நோய்கள் போன்ற பாதிப்பு கொண்டவர்களுக்கு நிலைமை மோசமாகக்கூடும்.

    கட்டுப்படுத்துவதற்கான வழிகள்

    * அதிகாலையில் கார்டிசோல் ஹார்மோன் சுரப்பு காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தை தடுக்க யோகாசனம் அல்லது உடற்பயிற்சி செய்யலாம்.

    * ஆன்டி-ஆக்சிடெண்டுகள் அதிகம் கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டும்.

    * நீரிழிவு நோயாளிகள் சரியான நேரத்தில் மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.

    * இரவில் ஆழ்ந்த தூக்கம் அவசியமானது. தூக்கமின்மை பிரச்சினை இருந்தால் அதனை சரி செய்வதற்கான வழிமுறைகளை கையாள வேண்டும்.

    * மது அருந்துதல், புகைப்பிடித்தல் மற்றும் பிற போதை பழக்கங்களை தவிர்க்க வேண்டும்.

    * தியானம் செய்வதன் மூலம் மனதை அமைதிப்படுத்த முடியும்.

    * தினமும் போதுமான நேரம் ஓய்வு எடுப்பது அவசியமானது.

    இலக்குகளையும் எதிர்பார்ப்புகளையும் நிர்ணயித்துக்கொள்வது, அது பற்றிய சிந்தனையிலேயே மூழ்கி இருப்பது மன அழுத்தத்துக்கு வழிவகுக்கும். அதற்கு இடம் கொடுக்காமல் திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

    • நோய் எதிர்ப்பு சக்தி என்பது ஒரு உறுப்போ ஒரு தசையோ ஒரு செல்லோ மட்டுமே சம்பந்தப்பட்டது இல்லை.
    • நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ள நாம் என்ன செய்வது என்று கீழ்வருமாறு பார்ப்போம்.

    வெளியே மழை பொழிகிறதோ வெயில் அதிகமாக காய்கிறதோ இல்லை குளிர் உடலைத் தாக்குகிறதோ. நாம் மழையையோ வெயிலையோ குளிரையோ நிறுத்த முடியாது. ஆனால் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள குடை பிடித்துக் கொள்கிறோம், நிழலை தேடுகிறோம் மற்றும் கம்பளி உடைகளை அணிந்து கொள்கிறோம்.. அதைப் போலத்தான் நம்மை சுற்றிலும் வைரஸ் பாக்டீரியா ஃபங்கஸ் போன்ற நோய் தொற்று கிருமிகள் இருக்கின்றன அவையெல்லாம் நம் மூச்சுக்காற்று மூலமாகவும், உணவு தண்ணீர் மூலமாகவும் நம் உடலுக்குள் சென்று கொண்டு தான் இருக்கும். இந்த கிருமிகளில் இருந்து நம்மை பாதுகாக்க இதற்காகத்தான் இயற்கை ஒரு அரணை நமக்கு கொடையாக கொடுத்துள்ளது. அதுதான் நம் நோய் எதிர்ப்பு சக்தி.

    இந்த நோய் எதிர்ப்பு சக்தி என்பது ஒரு உறுப்போ ஒரு தசையோ ஒரு செல்லோ மட்டுமே சம்பந்தப்பட்டது இல்லை. நம் உடலின் மொத்த உறுப்புகளின், தசைகளின் இணக்கமான ஒத்திசைவே நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியாக விளங்குகிறது. எனவே நம் உடலின் எல்லா உறுப்புகளையும் எல்லா தசைகளையும், ரத்த ஓட்டங்களையும், நிணநீர் ஓட்டங்களையும், நரம்புகளையும் நாம் நல்ல முறையில் சீரமைத்துக் கொள்ள வேண்டும். நம் உடல் மட்டுமின்றி நம் மனதை மிகவும் முக்கியத்துவத்துடன் நாம் பாதுகாத்து சரியான முறையில் இயக்க பழகிக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நம் உடலின் எதிர்ப்பு சக்தி மிகவும் துல்லியமாக செயல்படும். சரி நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ள நாம் என்ன செய்வது என்று கீழ்வருமாறு பார்ப்போம்.

    புகை பிடித்தல்: புகை பிடித்தலை அறவே ஒழிப்போம். ஒவ்வொரு சிகரெட்டை புகைக்கும் போதும் நம் வாழ்நாளில் ஒரு சில நிமிடங்களை நாம் இழக்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். புகை பிடிப்பது நம் உடலின் நுரையீரலை மட்டுமின்றி ரத்த ஓட்டங்களையும் பாதிக்கிறது. உடலில் நச்சுப் பொருட்கள் தேங்குவதை கூட்டுகிறது. இதனால் நம் உடலின் எதிர்ப்பு சக்தி மிகவும் பாதிப்படைகிறது என்பதை மறுக்க முடியாது. மேலும் புகைபிடிப்பவர்கள் தங்களின் ஆரோக்கியத்தை மட்டுமின்றி அவர்கள் வெளியிடும் புகையை சுவாசிக்கும் குடும்பத்தில் சமுதாயத்தில் உள்ள மற்றவர்களும் இதனால் பாதிப்படைகிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே புகை என்பதை அறவே ஒழிக்க வேண்டும்.

    ஆரோக்கியமான உணவு பழக்கம்: நம் உணவில் நிறைய பழங்களும் பச்சைக் காய்கறிகளும் இருக்க வேண்டியது அவசியம். அதேபோல் மாவுச்சத்து புரதச்சத்து மற்றும் கொழுப்புச் சத்துக்களும் சரிவிகித அளவில் இருப்பதை உணர்ந்து சாப்பிட வேண்டும். உணவை நன்கு ரசித்து நிதானமாக மென்று உமிழ்நீருடன் கலந்து உண்ண வேண்டும். பசி இல்லாத போது எதையும் சாப்பிடுவதை தவிர்ப்பதும் நிதானமாக சாப்பிடும் பழக்கத்தை மேற்கொண்டாலும் நாம் பல நோய்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம்.

    மிதமான உடற்பயிற்சி: உடற்பயிற்சி என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இல்லை. துரித நடை பயிற்சி சைக்கிள் ஓட்டுதல், நீச்சல், ஓட்டம், நடனம் ஆடுதல், யோகாசனம் என்று நம் மனதிற்கு பிடித்த எந்த ஒன்றை வேண்டுமானாலும் செய்யலாம். வாரத்தில் ஐந்து நாட்களாவது இதை கடைபிடிப்பது நல்லது.

    சரியான எடை: உடல் பருமன் என்பது பலவிதமான நோய்களுக்கு வழி கோல்வதுடன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் பாதிக்கக் கூடியதாக இருக்கிறது. எனவே உடல் எடையை சரியான முறையில் பராமரிப்பது மிகவும் அவசியம்.

    தூக்கம்: குறைந்தபட்சமாக 7 மணி நேர தூக்கம் ஒருவருக்கு மிகவும் அவசியம். குழந்தைகளுக்கு இன்னும் சற்று அதிகமான தூக்கம் நல்லது. தூங்கும் இடம் வசதியானதாகவும் காற்றோட்டம் உள்ளதாகவும் இருப்பது அவசியம்.

    உடல் சுகாதாரம்: பலவிதமான நோய்கிருமிகள் சுகாதாரமற்ற சூழலில் பெருகி வளர்ந்து நம்மை தாக்குகிறது. எனவே சமைக்கும் பொருட்களை சுத்தமானதாக தேர்ந்தெடுத்து நன்கு கழுவி சமைப்பது நல்லது. குறிப்பாக இறைச்சி உணவுகளை நீண்ட பொழுது வைத்திருக்காமல் அவ்வப்பொழுது சமைத்து உண்பது நல்லது. சாப்பிடும் முன்பும் வெளியில் சென்று வந்தாலும் கைகளை நன்கு கழுவ வேண்டும்.

    மன உளைச்சல்: மனதை லேசாக அமைதியாக வைத்துக் கொள்ள பழக வேண்டும். இதற்கு தியானம் பெரிதும் உதவுகிறது. வீட்டிலும் பணியிடங்களிலும் முடிந்தவரை தேவையற்ற விஷயங்களை தவிர்ப்பதும் நல்லது. உறவுகளுக்குள் சிக்கல் ஏற்படும் பொழுது உடனடியாக அதை பேசி தீர்த்துக் கொள்வது நன்மை பயக்கும்.

    நாம் செய்ய வேண்டிய கடமையாக நம் உடலையும் மனதையும் சரியாக ஆரோகியமாக வைத்துக்கொண்டாலே போதும், நம் உடலுக்குள் நுழையும் வேண்டாத கிருமிகளை நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி நம் துணை மற்றும் உதவி இன்றியே துரிதமாக விரட்டி அடித்து விடும்.

    • இதில் 3.7 கிராம் நார்ச்சத்து மற்றும் 3 கிராம் புரதம் இருக்கிறது.
    • இதில் நார்ச்சத்து மிக அதிகமாக உள்ளது.

    கொத்தவரங்காய் சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு குறையும் என்பது உண்மைதான். கொத்தவரங்காயில் நார்ச்சத்து மிக அதிகமாக இருப்பதோடு, வைட்டமின் சி, வைட்டமின் ஏ, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், இரும்பு சத்து, போலேட் ஆகியவையும் அதிகமாக இருக்கிறது. 100 கிராம் கொத்தவரங்காயில் 35 கலோரிகள் தான் இருக்கிறது.

    மேலும் இதில் 3.7 கிராம் நார்ச்சத்து மற்றும் 3 கிராம் புரதம் இருக்கிறது. இதன் சர்க்கரை உயர்தல் குறியீடு (கிளைசிமிக்ஸ் இன்டெக்ஸ் ) மிகக் குறைவு என்பதால் நீரிழிவு நோயாளிகள் இதனை தயக்கமின்றி சாப்பிடலாம்.

    இதன் விதைகளில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து, குடலில் உள்ள நன்மை தரக்கூடிய பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவித்து குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இது ரத்தத்தில் எல்.டி.எல். எனப்படும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. மேலும், இது பித்தப்பையில் உள்ள கற்களை கரைக்கக்கூடிய திறன் படைத்தது.

    இதில் உள்ள பைட்டோநியூட்ரியன்ட்ஸ் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கிறது. போலேட் மற்றும் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் கருவுற்றிருக்கும் பெண்கள் இதை தாராளமாக சாப்பிடலாம். இத்தகைய நன்மைகளைப் பெற்றிருக்கும் கொத்தவரங்காய் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவாக கருதப்படுகிறது. இதில் நார்ச்சத்து மிக அதிகமாக இருப்பதால் உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ளும்போது வயிறு சம்பந்தப்பட்ட செரிமான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்

    • வெந்தயத்தை கர்ப்பிணி பெண்கள் தவிர்ப்பது நல்லது.
    • வெந்தயம் கர்ப்பப்பையில் சுருக்குதல் உண்டாக்கி கருச்சிதைவு ஏற்படலாம்.

    நீரிழிவு நோயாளிகள் வெந்தயத்தை ஊற வைத்து சாப்பிடுவதால் சர்க்கரை அளவு குறையும் என்பது உண்மைதான். வெந்தயத்தில் உள்ள கேலக்ட்டோமேனான் என்ற நார்ச்சத்து செரிமானத்தை தாமதப்படுத்தி கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை உறிஞ்சுதலை வயிற்றில் குறைத்து, குளுக்கோஸ் ஸ்பைக்ஸ் வராமல் தடுக்கிறது.

    மேலும் வெந்தயத்தில் உள்ள ஹைட்ராக்சி லியூஸின் என்ற வேதிப்பொருள் இன்சுலின் உணர்திறனை அதிகரித்து இன்சுலின் சுரப்பதை மேம்படுத்தி, ரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது. இது 2015-ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டது.

    வெந்தயத்தில் உள்ள ட்ரைகோணலின் என்ற வேதிப்பொருள் இன்சுலின் திறம்பட செயல்பட உதவுகிறது. வெந்தயத்தை மென்று சாப்பிட்டால் அல்லது 10 கிராம் வெந்தயத்தை ஒரு டம்ளர் நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலை குடித்தால் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

    வெந்தயத்தில் உள்ள சப்போனின் என்ற ஒரு வேதிப்பொருள் ரத்தத்தில் உள்ள எல்.டி.எல் கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. வெந்தயத்தை கர்ப்பிணி பெண்கள் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் வெந்தயம் கர்ப்பப்பையில் சுருக்குதல் உண்டாக்கி கருச்சிதைவு ஏற்படலாம். மேலும் வார்பெரின் போன்ற மருந்துகளுடன் வெந்தயம் எதிர் செயல் புரிவதால் இம்மருந்துகளை உட்கொள்பவர்கள் வெந்தயம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • கோடை காலத்தில் ‘டேபிள் பேன்’ பயன்படுத்துவது நல்லது.
    • தேவையில்லாமல் விளக்குகளை எரியவிடக்கூடாது.

    கோடைகாலத்தில் அதிகரிக்கும் வெப்பத் தாக்கம் வீட்டின் உள்ளேயும் வெளிப்படும். அப்போது மின் விசிறியை உபயோகித்தாலும் அனல் காற்றுதான் அறைக்குள் சுழன்று கொண்டிருக்கும். வீட்டில் 'எக்ஸாஸ்ட் பேன்' இருந்தால் அதை உபயோகப்படுத்துவது நல்லது. பெரும்பாலும் சமையல் அறையில்தான் 'எக்ஸாஸ்ட் பேன்' பயன்பாட்டில் இருக்கும். சமையல் முடிந்ததும் அதனை அணைத்துவிடாமல் சில மணி நேரங்கள் ஓட விடுவது வீட்டில் இருக்கும் வெப்பம் சூழ்ந்த காற்றை வெளியேற்ற உதவும். அதனால் அறைக்குள்ளும் வெப்பத்தாக்கம் குறையும்.

    கோடை காலத்தில் 'டேபிள் பேன்' பயன்படுத்துவது நல்லது. அது அதிக அளவில் வெப்ப காற்றை வெளியேற்றாது. அதன் முன்பு அகன்ற பாத்திரத்தில் ஐஸ்கட்டிகளை கொட்டி வைக்கலாம். டேபிள் பேனில் இருந்து வெளிப்படும் காற்று ஐஸ்கட்டிகளில் பரவி அறையில் குளிர்ந்த காற்றை வீசச்செய்யும்.

    கோடை காலத்தில் சிந்தடிக், பாலியஸ்டர் போன்ற துணிகளால் ஆன திரைச்சீலைகளை பயன்படுத்தினால் அது அதிக வெப்பத்தை உமிழும். திரைச்சீலைகள் மட்டுமின்றி சோபா கவர், மெத்தை, தலையணை உறை போன்றவற்றுக்கும் காட்டன் துணிகளை பயன்படுத்தவேண்டும். மின் சாதனங்களும் வெப்பத்தை உமிழக்கூடியவை என்பதால் கோடை காலத்தில் அவற்றின் பயன்பாட்டை குறைத்துக்கொள்ள வேண்டும். பகல்வேளையிலும், இரவு வேளையிலும் தேவையில்லாமல் விளக்குகளை எரியவிடக்கூடாது.

    வீட்டில் கணினி இருந்தால் அதனை உபயோகித்து முடித்ததும் அணைத்துவிட வேண்டும். பிரிட்ஜும் வெப்பத்தை உமிழும் என்பதால் அதில் அதிக பொருட்களை சேமித்துவைக்கக்கூடாது. அவை அதன் செயல்பாட்டை அதிகரிக்க செய்து அதிக வெப்பத்தையும் வெளியேற்றும். வீட்டில் தேவையற்ற பொருட்கள் சேர்வதற்கும் அனுமதிக்கக்கூடாது. அவையும் வெப்பத்தை கடத்தும். வீட்டை சுற்றி காலி இடம் இடம் இருந்தால் ஆங்காங்கே செடிகள் வளர்க்கலாம்.

    அவை வீட்டுக்குள் குளிர்ச்சி தன்மை நிலவ உதவும். அறைக்குள் ஆங்காங்கே கண்ணாடி டம்ளர்கள், குவளைகளில் கூழாங்கற்களைப் போட்டு வைத்தாலும் வீட்டில் குளுமை தென்படும். வீட்டின் மொட்டை மாடி தரைத்தளத்தில் மாலை வேளையில் தண்ணீர் தெளித்தால், இரவு வேளையில் சீலிங் வழியாக வெப்பம் கீழே வருவது தடுக்கப்படும். அடிக்கடி தரைத்தளத்தை 'மாப்' போட்டு துடைத்து வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்வதும் நல்லது. அறைகளுக்குள் காற்று விசாலமாக புகும்விதத்தில் வீட்டை வடிவமைத்து கட்டுவது மிக அவசியம்.

    • மனித உடலில் உள்ள எலும்புகள் வலுவாக இருந்தால்தான் உடல் உறுதியாக இருக்கும்.
    • நம் அன்றாட வாழ்வில் எளிய வழிமுறைகளை கடைபிடிப்பதன் மூலம் எலும்பு புரை நோயை கட்டுப்படுத்தலாம்.

    'ஓஸ்டியோபோரோஸிஸ்' என்பது எலும்பு புரை நோய். இந்த நோய் எலும்பை கொஞ்சம், கொஞ்சமாக உருக்குவதோடு மட்டும் நின்று விடுவதில்லை. அவற்றோடு கழுத்து மற்றும் முதுகுவலியையும் உருவாக்கும்.

    மனித உடலில் உள்ள எலும்புகள் வலுவாக இருந்தால்தான் உடல் உறுதியாக இருக்கும். எலும்புகள் அடர்த்தி குறைந்தாலோ, தேய்மானம் அடைந்தாலோ உடல் வலுவின்றி உயிர் இருந்தும் இல்லாததுபோல் ஆகிவிடும்.

    இந்த 'ஓஸ்டியோபோரோஸிஸ்' நோய் ஆண்களை காட்டிலும் பெண்களையே அதிக அளவில் பாதிக்கிறது. அதிலும் குறிப்பாக 40 வயதை கடந்த பெண்கள் மாதவிடாய் இறுதி நாட்களின்போது அதாவது 'மெமோபாஸ்' காலகட்டத்தில் இருக்கும் பெண்களையே இது அதிக அளவில் பாதிக்கிறது. ஆரம்பகட்ட அறிகுறிகளை தெரிந்து கொண்டவுடன் உடனடியாக அதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    பொதுவாக 40 வயதை கடந்த ஆண், பெண் என இரு பாலரையும் எலும்பு புரைநோய் அதிகம் தாக்குகிறது. மூன்றில் ஒரு பெண்ணுக்கும், ஐந்தில் ஒரு ஆணுக்கும் இந்த நோய் கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவ ஆய்வு சொல்கிறது.

    மாதவிலக்கு பிரச்சினை உள்ள பெண்களுக்கு கர்ப்பப்பையை நீக்கும்போது ஹார்மோன் சுரப்பிகள் சுரக்காமல் நின்று விடும். அப்போது பெண்களுக்கு இந்த எலும்பு புரை நோய் ஏற்படும்.

    நம் அன்றாட வாழ்வில் எளிய வழிமுறைகளை கடைபிடிப்பதன் மூலம் எலும்பு புரை நோயை கட்டுப்படுத்தலாம். அதிகாலை வெயில் உடலில் படும்படி இருந்தால், வைட்டமின் 'டி' சத்து உடலுக்கு கிடைக்கும். இதன் மூலம் செரிமான கோளாறு ஏற்படாது. எலும்புகளுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும். உடல் உழைப்பு இல்லாதவர்கள் நடைப்பயிற்சி செய்வது, தண்டால் எடுப்பது உள்ளிட்ட எளிய உடற்பயிற்சிகளை செய்யலாம்.

    இதுதவிர பச்சை காய்கறிகளை சாப்பிடலாம். ராகி, கேப்பை உள்ளிட்ட கால்சியம் சத்துக்கள் நிறைந்த சிறுதானியங்களை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். எலும்பு புரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் டாக்டர்களின் ஆலோசனைப்படி வைட்டமின் 'டி', கால்சியம் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம்.

    • உடல் பருமன் அதிகரிக்கும்போது புற்றுநோய்க்கான பரிசோதனை செய்துகொள்வது நல்லது
    • தெருவுக்குத் தெரு புற்றுநோய் சிறப்பு மருத்துவமனைகள் முளைத்துவிட்டன.

    இன்று உலகை அச்சுறுத்தும் முக்கிய நோயாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது புற்றுநோய். இந்தியா போன்ற நாடுகளில் இதன் தாக்கம் ரொம்பவே அதிகம். அடிப்படை வசதிகள் கூட இல்லாத கிராமங்களில் கூட இந்நோய் ஆழமாக ஊடுருவிவிட்டது. அதனால் தெருவுக்குத் தெரு புற்றுநோய் சிறப்பு மருத்துவமனைகள் முளைத்துவிட்டன.

    நல்ல வசதி, வாய்ப்பு இருப்பவர்கள் ஆரம்பத்திலேயே நோயை கண்டறிந்து சரியான சிகிச்சை பெற்று முழுமையாக குணமடைந்து விடுகின்றனர். ஆனால், வசதி, வாய்ப்பில்லாத பலர் இறுதிக் கட்டத்தில் நோயை கண்டறிந்து மரணத்தைத் தழுவுகின்றனர். இந்நிலையில், ''புகைப்பிடித்தலை விட உடல் பருமன்தான் புற்று நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணியாக இருக்கிறது...'' என்று அதிர்ச்சியளிக்கிறது சமீபத்திய ஆய்வு.

    இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு மருத்துவ நிறுவனம் பல ஆண்டுகளாக புற்றுநோய் குறித்து ஆய்வு செய்து இந்தத் தகவலை வெளியிட்டிருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு பால் புட்டியால் குழந்தைகளுக்குப் புற்றுநோய் ஏற்படுகிறது என்ற அதிர்ச்சித் தகவலை உலகுக்குத் தெரிவித்ததும் இந்த நிறுவனம்தான்.

    குடல், சிறுநீரகம், கல்லீரல், கருப்பை புற்றுநோய் உட்பட 13 வகையான புற்றுநோய்களுக்கு முக்கிய காரணியாக இருப்பது உடல் பருமன் தான் என்று அடித்துச் சொல்கிறது அந்த ஆய்வு. இந்த வகையில் உலகம் முழுவதும் உடல் பருமன் காரணமாக பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனராம்.

    'புகைப்பிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும்' அளவுக்கு 'அதிகமான உடல் பருமனும் புற்றுநோயை உண்டாக்கும்' என்று நாம் விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை என்பது அந்த ஆய்வு முன்வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு.

    உடல் பருமன் உடைய எல்லோரையுமே புற்றுநோய் தாக்காது என்பது இதில் சின்ன ஆறுதல். ஆனால், தேவையில்லாமல் உடல் பருமன் அதிகரிக்கும்போது புற்றுநோய்க்கான பரிசோதனை செய்துகொள்வது நல்லது என்று ஆலோசனை தருகிறார்கள் மருத்துவர்கள்.

    • ஆரோக்கியமான, உறுதியான உடல்தான் பதற்றமில்லாத மனதுக்கு ஆதாரம்.
    • யோகா, மூச்சுப் பயிற்சி போன்றவை பயன்தரும்.

    உடல், மனம் என இரண்டையும் தனித்தனியாக பிரித்துப் பார்க்க முடியாது. சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த பிரச்சினைகளுக்கு மனப்பதற்றமும் ஒரு காரணமாக இருக்கலாம்.

    மனப்பதற்றத்தை தணிப்பதற்கு நாம் முதலில் செய்ய வேண்டியது, வாழ்க்கை முறையில் மாற்றங்கள்.

    உடல் எடை அதிகமாக இருந்தால் எடையைக் குறைத்தாலே பாதிப் பிரச்சினைகள் சரியாகும். தவறாமல் உடற்பயிற்சி செய்தாலே, மனப்பதற்றமும் மனச் சோர்வும் வெகுவாக குறையும். ஆரோக்கியமான, உறுதியான உடல்தான் பதற்றமில்லாத மனதுக்கு ஆதாரம்.

    குறிப்பாக யோகா, மூச்சுப் பயிற்சி போன்றவை பயன்தரும். காபி, டீ போன்ற பானங்களை அதிகம் அருந்துவதும் மனப்பதற்றத்தை அதிகரிக்கும். அவற்றைக் குறைத்துக்கொண்டு நிறைய காய்கறிகள், பழங்களைச் சாப்பிடுங்கள்.

    சிறு விஷயங்களுக்குக்கூட பதற்றப்பட்டு பதற்றப்பட்டு, பின்னர் அதுவே ஒரு பழக்கமாக ஆகிவிடும். பிறகு பல நேரம் நம்மை அறியாமலேயே பதற்றம் வந்துவிடும்.

    ஒரு விஷயம் நடந்துவிடுமோ என்று நாமே கற்பனை செய்வதால், எதுவும் நடக்கப்போவதில்லை, ஏன் பதற்றப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வுடன் இருந்தாலே பதற்றம் வராது. இந்த வழிமுறைகள் எல்லோருக்கும் தெரிந்தவைதான். அவற்றைச் செயல்படுத்துவதில்தான் சூட்சுமம் இருக்கிறது.

    • வெப்பம், வறண்ட வானிலை ஆகியவை சிறுநீரக கற்கள் உருவாகும் வாய்ப்பை அதிகரிக்கும்.
    • கோடை காலத்தில் பெரும்பாலான மக்கள் நீரிழப்பு பிரச்சினையால் பாதிக்கப்படுகின்றனர்.

    கோடை கால நோய்களில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்வது எப்படி? என்பது குறித்து வேலூர் அமுதம் கூட்டுறவு ஆயுஷ் மருத்துவமனை ஆயுர்வேத டாக்டர் சுபஸ்ரீ பியூலா விளக்கம் அளித்துள்ளார்.

    ஆயுர்வேத டாக்டர்

    வேலூர் சத்துவாச்சாரி அமுதம் கூட்டுறவு ஆயுஷ் மருத்துவமனையில் ஆயுர்வேத டாக்டராக பணிபுரிபவர் சுபஸ்ரீ பியூலா. இவர் பெண்களுக்கு கோடை காலத்தில் ஏற்படும் நோய்களும், அதிலிருந்து நம்மை எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்பது குறித்தும் கூறினார்.

    அவர் கூறியதாவது:-

    கோடை காலம் வந்துவிட்டது, அதிகரித்து வரும் வெப்பநிலை பல நோய்களை கொண்டு வரலாம். இந்தியாவில், கோடைக்காலம் ஆண்டின் வெப்பமான பருவமாகும். பொதுவாக மார்ச் முதல் ஜூன் வரை வெப்பமான வானிலை இருக்கும். இந்த நேரத்தில் தோல், கண்கள் மற்றும் இரைப்பை அமைப்பு உள்பட முழு உடலையும் வெப்பம் பாதிக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாவிட்டால், கடுமையான வெப்பம் மற்றும் இடைவிடாத வறட்சி ஆகியவை பொதுவான கோடைக்கால நோயைக் கொண்டுவரும். கோடையில் ஏற்படக்கூடிய சில நோய்கள் மற்றும் அவற்றைத் தவிர்ப்பதற்கான முறைகள் குறித்து தெரிந்து கொள்வோம்.

    கோடையில் ஏற்படும் நோய்கள்

    கோடை காலத்தில் பெரும்பாலான மக்கள் நீரிழப்பு பிரச்சினையால் பாதிக்கப்படுகின்றனர். ஒருவர் அருந்தும் நீர் அவரது உடல் தேவையை பூர்த்தி செய்யாதபோது நீரிழப்பு ஏற்படுகிறது. நீரிழப்பு சிறுநீர் பாதை தொற்றுகளுக்கு வழிவகுக்கும். எனவே கோடையில் சிறுநீர் பாதை தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம். கோடை காலத்தில் வானிலை வெப்பமாக இருக்கும். இது கிருமிகள் அல்லது பாக்டீரியாக்கள் வளர ஏற்றதாக இருக்கும்.

    கோடை மாதங்களில் வெப்பம், வறண்ட வானிலை ஆகியவை சிறுநீரக கற்கள் உருவாகும் வாய்ப்பை அதிகரிக்கும். சிறுநீரகக் கல் உருவாவதற்கான ஆபத்து வயதுக்கு ஏற்ப அதிகரிக்கிறது. இருப்பினும், 20 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் கோடையில் சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்படுகின்றனர். இதில் பெண்களை விட ஆண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

    கோடை காலத்தில் சிறுநீரக கற்கள் ஏற்படுவதற்கு முதன்மையான காரணம் நீர்ச்சத்து குறைபாடுதான். நம்மில் பெரும்பாலோர் ஆண்டு முழுவதும் மற்ற பருவங்களை விட வெப்பமான மாதங்களில் வெளியில் இருக்கிறோம். இதன் விளைவாக அதிக வியர்வை வெளியேறுகிறது. சரியான நீரேற்றம் இல்லை என்றால், உடல் திரவங்கள் உணவு தாதுக்களுடன் அதிக செறிவூட்டப்பட்டு கற்களாக மாறக்கூடும்.

    அன்றாட செயல்பாடுகளைத் தொடரவும், நீர் இழப்பை ஈடுகட்டவும் அதிக தண்ணீர், பழங்கள் மற்றும் பழச்சாறுகள், மோர் மற்றும் இளநீர் ஆகியவற்றை அருந்த வேண்டும்.

    தோல் பிரச்சினைகள்

    நமது தோலில் வெளிப்படும் பகுதி குளிர்காலம் மற்றும் கோடைக்காலம் ஆகிய இரண்டிலும் பாதிக்கப்படுகிறது. நீண்ட நேரம் சூரிய ஒளியில் இருப்பது தீங்கு விளைவிக்கும். சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்கள் தோலில் ஊடுருவி பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும். மேலும், உடலில் மெலனின் உள்ளடக்கம் குறைவாக உள்ளவர்கள் மெலனோமா (ஒரு வகை தோல் புற்றுநோய்) போன்ற கடுமையான தோல் நோய்த்தொற்றுகளுக்கு ஆளாகின்றனர். நீண்ட நேரம் சூரிய ஒளியில் இருப்பது தோல் எரிச்சல், வறட்சி மற்றும் வெடிப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும்.

    சளி, தட்டம்மை, சின்னம்மை, சொறி, தோல் கொப்பளம் போன்றவை கோடை காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் பொதுவான நோய்களாகும். வெப்பத் தடிப்புகள் பொதுவாக ஆடைகளால் மூடப்பட்ட பகுதிகளில் ஏற்படும். குழந்தைகளுக்கு இந்த தொற்று அடிக்கடி வலி மற்றும் அரிப்பை ஏற்படுத்துகிறது.

    இரைப்பை குடல் அழற்சி

    வெப்பம் அதிகரிக்கும் போது, ஒருவரது செரிமான கொள்ளளவு குறைந்து சில செரிமான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். எனவே, உங்கள் உணவுப் பழக்கத்தை கவனித்துக்கொள்வது மற்றும் வெப்பத்தை வெல்ல ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிப்பது அவசியம்.

    வெப்பம் அதிகரிக்கும் போது வயிற்றுக் குடல் அழற்சி பொதுவாக எல்லா வயதினருக்கும் காணப்படும். அதன் அறிகுறிகளில் சில வாந்தி, வயிற்றுப்போக்கு, மலத்தில் ரத்தம், நீர்ப்போக்கு மற்றும் வயிற்று வலி ஆகியவை அடங்கும்.

    மூலிகை, பழங்கள்

    நீங்கள் காரமான, வறுத்த, உணவுகளின் பிரியராக இருக்கலாம், ஆனால் கோடையில் அவற்றைத் தவிர்க்க வேண்டும். அவை குடல் புண், வீக்கம் மற்றும் வயிற்று அழற்சியை கூட ஏற்படுத்தும். புரோபயாடிக்குகள் குடலுக்கு உகந்த பாக்டீரியாவைக் கொண்டிருப்பதால் உதவியாக இருக்கும். மோரில் புரதம் நிரம்பியுள்ளது. அதில் உள்ள பாக்டீரியாக்கள் உங்கள் செரிமான செயல்முறையை எளிதாக்கும். வயிற்றுப்போக்கை நீக்கும்.

    கோடையில் உடல் சூட்டைத் தணிக்க நன்னாரி, வெட்டிவேர், பூசணிக்காய், கற்றாழை, தர்பூசணி, வெள்ளரி, நெல்லிக்காய் போன்ற மூலிகை மற்றும் பழங்களை சாப்பிடலாம்.

    உடற்பயிற்சி

    கோடைகாலத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்ட உணவு முறை, வானிலைக்கு ஏற்ப புதிய உடற்பயிற்சி முறை. வெப்பமான காலநிலையின் ஆரம்பம் உங்கள் உடலை பல்வேறு வகையான நோய்களுக்கு உள்ளாக்கும். எனவே ஆரோக்கியமான கோடைக்காலத்திற்கு நான் கூறிய சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும். அவ்வாறு செயல்பட்டால் கோடை வெப்பத்தில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×