search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேட்டுப்பாளையம்"

    ஊட்டி-மேட்டுப்பாளையம் ரோட்டில் காட்டுயானை சாலையைக் கடந்து செல்லும் போது வாகனஓட்டுனர்கள் கவனமுடன் செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை வனக்கோட்டத்திற்குட்பட்ட மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் காட்டுயானைகள் கூட்டம் கூட்டமாக நடமாடி வருகின்றன. தற்போது கோடைகால சுட்டெரிக்கும் வெயில் காரணமாக வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது.செடி கொடிகள் காய்ந்து சருகாகி விட்டன.நீர்நிலைகளில் தண்ணீர் வற்றி குறைந்து காணப்படுகின்றது.

    இதனால் உணவு மற்றும் நீர்நிலைகளைத்தேடி அலையும் காட்டு யானைகள் இரவு நேரங்களில் வனப்பகுதியையொட்டியுள்ள கிராமங்களில் உள்ள தோட்டங்களில் புகுந்து விவசாய விளை பொருள்களை நாசம் செய்து வருகின்றது.

    இந்தநிலையில் மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலை மற்றும் மேட்டுப்பாளையம்- கோத்தகிரி சாலை வாகன போக்குவரத்தில் முக்கியப்பங்கு வகித்து வருகின்றது. தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலைகளில் வந்தும் சென்றும் கொண்டிருக்கின்றன.

    மேலும் இந்த 2 சாலைகள் காட்டுயானைகள் மற்றும் பிற வன விலங்குகள் கடந்து செல்லும் சாலைகளாகவும் உள்ளது.இதுதவிர மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் ஒற்றை காட்டு யானை ஒன்று இரவு நேரத்தில் சாலையைக்கடந்து செல்வது தினசரி வழக்கமாக நடைபெற்று வருகின்றது.

    ஊட்டியில் குளுகுளு சீசன் தொடங்கியதால் காலை ஊட்டிக்கு சென்ற வாகனங்கள் மீண்டும் இரவு நேரத்தில் மேட்டுப்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தன.அப்போது மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் கல்லாறு அருகே வழக்கம்போல் ஒற்றை காட்டு ஆண்யானை சாலையைக்கடக்க சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தது.யானையைக்கண்டதும் அந்த வழியே சுற்றுலாப் பயணிகளுடன் வாகன ஓட்டுனர்கள் அச்சமடைந்து அந்தந்த இடங்களில் வாகனங்களை நிறுத்தி யானையை வேடிக்கை பார்த்தார்கள்.

    ஒருசிலர் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.ஒரு சில யானைகள் வாகனங்களின் முகப்பு வெளிச்சம் மற்றும் ஹாரன் சப்தத்தைக்கேட்டு மிரண்டோடும்.ஆனால் இந்த யானைக்கு இவைகள் பழக்கப்பட்டு விட்டதால் பொருட்படுத்தாமல் மெல்ல ஓடந்துறை வனப்பகுதியில் இருந்து சாலையை மெல்ல மெல்ல கடந்து சாலையோரத்தில் இருந்த விடுதியைக்கடந்து கல்லாறு வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.அதன்பின்னர் மீண்டும் அந்த வழியே போக்குவரத்து தொடங்கியது.

    யானை சாலையைக் கடந்து செல்லும் போது சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.காட்டுயானை சாலையைக் கடந்து செல்லும் போது வாகனஓட்டுனர்கள் கவனமுடன் செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் விபத்தில் கல்லூரி மாணவர்-மாணவி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை கவுண்டம்பாளையம் கோவில் மேடு பகுதியை சேர்ந்தவர் சந்திரமோகன். இவரது மகன் மணிகண்டன் (வயது 21). கோவையில் உள்ள கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இவரது தோழி ராமேஷ்வரத்தை சேர்ந்த வினோதினி (20). இவர் கோவை மலுமிச்சம்பட்டியில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.ஏ. ஆங்கில இலக்கியம் படித்து வந்தார்.

    மணிகண்டனுக்கு நாளை (31-ந்தேதி) பிறந்த நாள். பிறந்தநாளை தோழி வினோதினி மற்றும் சென்னையில் வேலைபார்க்கும் நண்பர்கள் ராம்பிரகாஷ் (20), வெங்கடேஷ் (20) ஆகியோருடன் கொண்டாட விரும்பினார்.

    அதன்படி இன்று காலை தோழி வினோதினியை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டார். நண்பர்கள் ராம்பிரகாசும், வெங்கடேசும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.

    மோட்டார் சைக்கிள் அங்குள்ள பினீக்ஸ் பார்க் அருகே சென்றபோது தடுப்பு சுவர் முன்பு ஒரு கார் நின்றது.

    காரை கடந்து செல்ல மணிகண்டன் முயன்றார். அப்போது நின்ற கார் மீது மோட்டார் சைக்கிளின் பம்பர் கம்பி மோதியது. இதில் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறியது.

    அப்போது ஊட்டி ரோட்டில் இருந்து டிப்பர் லாரி வந்தது. கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி விழுந்தது. சாலையில் விழுந்து கிடந்த அவர்கள் மீது டிப்பர் லாரி ஏறியது. இதில் மணிகண்டன் அணிந்திருந்த ஹெல்மெட் நொறுங்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து பலியானார்.

    விபத்தில் படுகாயம் அடைந்த தோழி வினோதினி உயிருக்கு போராடினார். அதிர்ச்சியடைந்த உடன் சென்ற நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் வினோதினியை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே தோழி வினோதினியும் பரிதாபமாக இறந்தார்.

    நாளை பிறந்த நாள் கொண்டாட இருந்த நிலையில் மகனின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் நண்பர்கள் கதறி அழுதனர்.

    விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை, மேட்டுப்பாளையத்தில் சொகுசு காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரூ.8½ லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். #LSPolls
    கோவை:

    பாராளுமன்றத் தேர்தலையொட்டி கோவை தெற்கு தொகுதியில் பறக்கும்படை அதிகாரி ஷீலா தலைமையிலான குழுவினர் இன்று கோவை காந்திபுரம் ஜி.பி. சிக்கனல் அருகே சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் ரூ.7 லட்சத்து 21 ஆயிரத்து 500 இருந்தது. காரில் கோவை சித்ரா பகுதியை சேர்ந்த மனோ (வயது 29) மற்றும் 2 பேர் இருந்தனர்.

    பணம் குறித்து விசாரித்தபோது வியாபாரத்துக்கு பணம் கொண்டு செல்வதாக கூறினார்.

    இருந்தாலும் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரி அதனை கருவூலத்தில் ஒப்படைத்தார்.

    இதேபோன்று சிறுமுகை சத்தி மெயின் ரோடு கூத்தமண்டிபிரிவில் இன்று காலை பறக்கும் படை அதிகாரி ரவிச்சந்திரன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது பெத்திக்குட்டையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு ஒரு கார் வந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் வந்த கேரளாவை சேர்ந்த பென்னி (44) என்பவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி இருந்த ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை பறிமுதல் செய்து அதிகாரிகள் குமரேசன், புனிதா ஆகியோரிடம் ஒப்படைத்தனர். #LSPolls

    மேட்டுப்பாளையத்தில் காய்கறி வியாபாரியிடம் ரூ. 6 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. #LSPolls

    மேட்டுப்பாளையம்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்று காலை 10.50 மணிக்கு மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் ஒரு தனியார் திருமண மண்டபம் அருகே வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவரை நிறுத்தி வாகனத்தை சோதனை செய்தனர். அப்போது வாகனத்தின் சீட்டின் கீழ் பகுதியில் ஒரு கைப்பையில் ரூ. 5 லட்சத்து 98 ஆயிரம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    அவரிடம் விசாரித்த போது அவரது பெயர் அப்துல் ஹக்கீம் என்பது தெரிய வந்தது. அவர் மேட்டுப்பாளையம் -அன்னூர் சாலையில் புதிய மார்க்கெட்டில் காய்கறி மண்டி நடத்தி வருவதாக தெரிவித்தார்.

    இந்த பணத்தை ஊட்டி, கர்நாடக மாநிலத்தில் இருந்து மண்டிக்கு காய்கறி சப்ளை செய்த விவசாயிகளுக்கு கொண்டு செல்வதாக கூறினார். ஆனால் நிலையான கண்காணிப்பு குழுவினர் ரூ. 50 ஆயிரத்திற்கும் மேல பணம் கொண்டு சென்றால் உரிய ஆவணம் வேண்டும். இது தொடர்பாக நீங்கள் தாசில்தார் அலுவலகத்தில் கூறுங்கள் என பணத்தை பறிமுதல் செய்தனர்.

    இதனை தொடர்ந்து அப்துல் ஹக்கீம் மேட்டுப்பாளையம் தாசில்தார் அலுவலகம் வந்தார். அங்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் குமரேசன், கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் தாசில்தாருமான புனிதாவிடம் காய்கறி மண்டிக்கு காய்கறி சப்ளை செய்த விவசாயிகளுக்கு கொடுக்க தான் இந்த பணத்தை கொண்டு செல்கிறேன். பணத்தை கொடுக்காவிட்டால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்றார்.இதற்கான சில ரசீதுகளையும் காண்பித்தார். அவரிடம் அதிகாரிகள் தேர்தல் நன்னடத்தை விதிப்படி ரூ. 50 ஆயிரத்திற்கு மேல் கொண்டு செல்லக் கூடாது என்பதால் பறிமுதல் செய்ததாக தெரிவித்தனர்.

    இந்த பணத்தை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குழுவிடம் ஒப்படைத்து விடுவோம். அங்கு உரிய ஆவணங்களை நீங்கள் காண்பித்து பணத்தை பெற்று கொள்ளலாம் என கூறிவிட்டனர். இந்த நிலையில் பறிமுதல் செய்யப்படட பணம் கோவையில் உள்ள கருவூலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.  #LSPolls

    மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுப்படுகையில் யானைகள் நல வாழ்வு முகாம் இன்று தொடங்கியது. இந்த முகாமில் கோவில்கள் மற்றும் மடங்களை சேர்ந்த 27 யானைகள் கலந்து கொண்டன. #Elephants #Rejuvenationcamp
    மேட்டுப்பாளையம்:

    தமிழக இந்து அறநிலையத் துறை சார்பில் தமிழகத்தில் உள்ள கோவில்கள் மற்றும் மடங்களைச்சேர்ந்த யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் நல வாழ்வு முகாம் கடந்த 2003-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

    நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காட்டில் 4 ஆண்டுகளும் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் 6 ஆண்டுகளும் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் நடைபெற்றது.

    இதனைத்தொடர்ந்து 11-வது ஆண்டு யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவில் பவானி ஆற்றுப்படுகையில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது.

    தொடக்க நாளையொட்டி இன்று முகாம் முன் வாழை மரம் கட்டப்பட்டு இருந்தது. முகாம் முழுவதும் தென்னங்குருத்துகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. காலையிலே பாகன்கள் தங்கள் யானைகளை அங்குள்ள குளியல் மேடை, ‌ஷவருக்கு அழைத்து சென்று குளிக்க வைத்தனர்.

    பின்னர் அந்தந்த கோவில்களின் அடையாளம் யானைகளின் நெற்றியில் இடப்பட்டது. இதனை தொடர்ந்து நெற்றி பட்டம் சூடி, யானை உடலில் அலங்கார துணி அணிவிக்கப்பட்டது.



    அதன் பின்னர் 27 யானைகளும் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு மாலைகள் அணிவிக்கப்பட்டது. பின்னர் ஆப்பிள், அன்னாசி, கரும்பு, தர்பூசணி, உருண்டை வெல்லம், வாழைப்பழம் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்பட்டது.

    இந்த முகாமில் கோவில்கள் மற்றும் மடங்களை சேர்ந்த 27 யானைகள் கலந்து கொண்டன. இந்த முகாம் அடுத்த மாதம் (ஜனவரி) 30-ந்தேதி வரை 48 நாட்கள் நடைபெறுகிறது.

    6 ஏக்கர் நிலப்பரப்பில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. முகாம் அலுவலகம், பாகன்கள் தங்குமிடம் பாகன்கள் ஓய்வறை, தீவனமேடை, சமையல் கூடம், பாகன்கள் மற்றும் யானைகளுக்கு தனித்தனியாக மருத்துவ கொட்டகைகள். யானைகள் நடைபயிற்சி மேற்கொள்வதற்காக 3/4 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

    யானைகளை குளிக்க வைப்பதற்காக குளியல் மேடை ‌ஷவர் மேடைகள் அமைக்கப்பட்டுள்ளது. காட்டு யானைகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க முகாமைச்சுற்றிலும் வனப்பகுதியையொட்டி 8 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    மேலும் முகாமிற்குள் காட்டு யானைகள் புகுந்து விடுவதைத்தடுக்க முகாமைச்சுற்றிலும் 1 1/2கிலோ மீட்டர் தூரத்திற்கு சூரிய மின்வேலி தொங்கு மின்வேலிகள் சீரியல் பல்புகள் அமைக்கப்பட்டுள்ளன. 14 இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இரவு நேரத்திலும் ஒளிவிட்டுப்பிரகாசிக்க சக்தி வாய்ந்த மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

    அதையும் மீறி காட்டு யானைகள் வர முயன்றால் அதனை விரட்ட பட்டாசுகளுடன் வன ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர். முகாமுக்கு யானைகள் வரும் வழியில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்தனர்.

    முகாம் ஒருங்கிணைப்பாளரும் கோவை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையருமான ராஜமாணிக்கம் துணை ஆணையர் பழனிகுமார், உதவி ஆணையர்கள் ராமு, நந்தகுமார், உதவி கோட்ட பொறியாளர் பிரேம்குமார் மற்றும் அறநிலையத்துறை அலுவலர்கள் முகாமுக்கு வந்த யானைகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தனர்.

    இந்து சமய அறநிலையத்துறை தலைமை இடத்து இணை ஆணையர் ஹரிப்பிரியா, சட்டம் இணை ஆணையர் அசோக் ஆகியோர் முகாமை பார்வையிட்டனர்.  #Elephants #Rejuvenationcamp

    மேட்டுப்பாளையம் அருகே 2 மளிகை கடையின் ‌ஷட்டரை உடைத்து பணம் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் மணி நகரை சேர்ந்தவர் முத்துச் செல்வன். இவர் தாசம்பாளையம் மெயின் ரோட்டில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு 11 மணிக்கு முத்துச்செல்வன் தம்பி முத்து கிருஷ்ணன் வியாபாரம் முடிந்து கடையை பூட்டி சென்றார். இன்று அதிகாலை 5 மணிக்கு பால்காரர் பால் கேனை வைக்க முத்துச்செல்வன் மளிகை கடைக்கு வந்தார்.

    அப்போது கடையின் ‌ஷட்டர் உடைக்கப்பட்டு இருந்தது. இது குறித்து அவர் முத்துச் செல்வன் தந்தை தாமோதரனிடம் தெரிவித்தார்.

    தாமோதரன் மற்றும் அவரது மகன்கள் கடைக்கு வந்து பார்த்தனர். அப்போது ‌ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. கடையில் வைக்கப்பட்டு இருந்த ரூ. 72 ஆயிரம் ரொக்க பணத்தை காணவில்லை.

    மேலும் மளிகை பொருட்களும் திருட்டு போய் இருந்தது. பணத்தை திருடியவர்கள் தங்களுக்கு தேவையான மளிகை பொருட்களையும் எடுத்து சென்று உள்ளனர்.

    இதே போல் பாரி கம்பெனி ரோடு 9-வது வீதியில் தாசம் பாளையம் மண்டேலா நகரை சேர்ந்த ஜான்சன் என்பவர் நடத்தி வரும் மளிகை கடையின் ‌ஷட்டரை உடைத்து அங்கிருந்த ரூ. 5 ஆயிரம் ரொக்கப்பணம், மற்றும் மளிகை பொருட்களையும் மர்ம நபர்கள் திருடி சென்ற விட்டனர்.

    இந்த இரு திருட்டு குறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் திருட்டு போன மளிகை கடைக்கு வந்து பார்வையிட்டனர். பணம், மளிகை பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மேட்டுப்பாளையத்தில் கணவருடன் சுற்றுலா வந்த மலேசிய பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மேட்டுப்பாளையம்:

    மலேசியா சங்கைப்பட்டாணிகெடா, தாமன்டேசா ஜெயா பகுதியைச் சேர்ந்தவர் சிவனேசன்(34). சமையல் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி புவனா(34). அங்குள்ள கூரியர் சர்வீஸ் அலுவலகத்தில் பணியாற்றி வருகின்றார். இருவருக்கும் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு பிரகதி(9) ஜனனி (6) என்ற 2 மகள்கள் உள்ளார்கள்.

    இந்த நிலையில் கணவன் மனைவி 2 பேரும் தமிழகத்தை சுற்றிப்பார்க்க கடந்த 2-ந்தேதி மலேசியாவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தனர்.

    சென்னையில் தங்கியிருந்த அவர்கள் பல்வேறு கோவில்களுக்கு சென்று விட்டு கடந்த 8-ந்தேதி ஊட்டி செல்வதற்காக இரவு 11.30 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்து காரமடை ரோட்டில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கினர்.

    இதனையடுத்து நேற்று காலை 7.30 மணிக்கு சிவனேசன் எழுந்து பார்த்த போது தனது மனைவி புவனாவைக் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் விடுதி மற்றும் அக்கம்பக்கம் விசாரித்தும், தேடியும் அவரைப்பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவர் எங்கு சென்றார்? என்று தெரியவில்லை. அவர் விடுதியில் இருந்து கைப்பை, பாஸ்போர்ட், செல்போன் ஆகியவற்றை எடுத்துச் சென்றிருப்பது தெரிய வந்தது. செல்போனில் தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

    இது குறித்து சிவனேசன் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மலேசிய பெண் மாயமான சம்பவம் மேட்டுப்பாளையம் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மேட்டுப்பாளையத்தில் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்த ஆம்புலன்சில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.
    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் அருகே உள்ள வேடர்காலனி அகதி முகாமைச் சேர்ந்தவர். ராமமூர்த்தி(27) கூலிதொழிலாளி.

    இவரது மனைவி வெண்ணிலா(22) இவர்களுக்கு ஏற்கெனவே 3 வயதில் யோகி தாசினி என்ற பெண்குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் மீண்டும் வெண்ணிலா கர்ப்பம் அடைந்தார். நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு நேற்று இரவு பிரசவவலி ஏற்பட்டது. பிரசவ வலியால் துடித்த அவருக்கு காலை 7.45 மணிக்கு பிரசவ வலி அதிகரித்தது. உடனே இதுகுறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் வெண்ணிலாவை பிரசவத்துக்காக ஆம்புலன்சில் ஏற்றி கொண்டு வரப்பட்டது. ஆம்புலன்ஸ் ஊமப்பாளையம் முனியப்பன் கோவில் அருகே வந்து கொண்டிருந்த போது பிரசவ வலி அதிகமானது. இதையடுத்து ஆம்புலன்ஸ் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

    இதனையடுத்து வெண்ணிலாவிற்கு அழகான பெண்குழந்தை பிறந்தது. பின்னர் வெண்ணிலா மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவசிகிச்சை அளிக்கப்பட்டது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். #Tamilnews
    நண்பர்களுடன் குளித்த போது பவானி ஆற்றில் மூழ்கி கோவை வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை கணபதி மணியகாரன் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் கோபிநாத்(17) ஐ.டி.ஐ.படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார்.

    இந்த நிலையில் கோபிநாத் மற்றும் அவரது நண்பர்கள் 6 பேர் மேட்டுப்பாளையத்தில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட வந்தனர். சுவாமி தரிசனம் செய்து விட்டு மேட்டுப்பாளையம் அடுத்துள்ள ஆலாங்கொம்பு பழையூர் பவானி ஆற்றுக்கு குளிக்கச்சென்றனர். அப்போது திடீரென கோபிநாத் ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். நீரில் மூழ்கி தத்தளித்த அவர் சிறிது நேரத்தில் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார். உடனே அக்கம் பக்கம் இருந்தவர்கள் உதவியுடன் அவரது உடல் மீட்கப்பட்டது.

    இது குறித்து தகவல் கிடைக்கப் பெற்றதும் சிறுமுகை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திலக், ஏட்டு கிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    வாலிபர் கோபிநாத் பிணத்தை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்கு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலையில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
    கோத்தகிரி:

    கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் குஞ்சப்பனை மாமரம் உள்பட சுற்றுவட்டார ஆதிவாசி கிராம பகுதிகளில் ஏராளமான பலா மரங்கள் உள்ளன. தற்போது பலாப்பழம் சீசனாக இருப்பதால் பலா மரங்களில் ஏராளமான காய்கள் காய்ந்துள்ளன. எனவே பலாப்பழங்களை உண்பதற்காக சமவெளி பகுதியிலிருந்து காட்டு யானைகள் இந்த பகுதிகளுக்கு வந்து முகாமிட்டுள்ளன.

    மேலும் இந்த சாலையின் பெரும்பகுதி வனப்பகுதி வழியாகவே செல்வதால் ஆங்காங்கே யானைகள் சாலையை கடக்கும் வழித்தடங்களும் உள்ளன. எனவே பலாப்பழங்களை உண்ண வரும் யானைகள் அவ்வப்போது சாலையை கடப்பதும், சாலை வழியாக கும்பலாக நடந்து செல்வதும் வழக்கமாக உள்ளது.

    எனவே இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் யானைகள் நடமாட்டம் இருப்பதால் எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்க வேண்டும் என வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    இது குறித்து கோத்தகிரி வனச்சரகர் சீனிவாசன் கூறுகையில், தற்போது குஞ்சப்பனை மாமரம், செம்மனாரை, கீழ்கூப்பு, மேல்கூப்பு உள்பட ஆதிவாசி கிராமங்களில் உள்ள பலாமரங்களில் தற்போது சீசன் காரணமாக பலாப்பழங்கள் விளைச்சல் அதிகரித்துள்ளது. பலாப் பழங்களை உண்பதற்காக காட்டு யானைகள் சமவெளி பகுதியிலிருந்து வந்து பலாப்பழங்களை உண்டு வருகின்றன.

    எனவே யானைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலை ஓரத்தில் பலாப்பழங்கள் விற்பனை செய்ய வனத்துறை தடை விதித்துள்ளது. மேலும் வாகனங்களில் செல்வோர் யானைகளுக்கு தொந்தரவு கொடுக்கவோ அல்லது செல்பி புகைப்படம் எடுக்கவோ முயற்சிக்க கூடாது.

    மேலும் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது யானைகள் சாலையை கடக்க நேர்ந்தால் சற்று நேரம் காத்திருந்து யானைகள் சென்ற பின்பே செல்ல வேண்டும். காற்று ஒலிப்பானை (ஏர்ஹாரன்) ஒலிக்க வைத்து யானைகளை மிரள வைத்தலை தவிர்க்க வேண்டும்.

    இதுமட்டுமின்றி ஆதிவாசி கிராம மக்கள் அதிகாலை நேரத்திலோ அல்லது இரவு நேரத்திலோ வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். தொழிலாளர்கள் வேலைக்கு செல்லும் போது தனியாக செல்லாமல் ஒன்றாக செல்ல வேண்டும். வயதானவர்கள் துணைக்கு யாரையாவது அழைத்து செல்ல வேண்டும். இதனால் யானைகள் மனிதர்களை தாக்குவதை தவிர்க்க முடியும், என்று தெரிவித்தார்.
    ×