search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 107099"

    • இரவு யானை வாகன வீதிஉலா நடந்தது.
    • இன்று தங்கத்தேரோட்டம் நடக்கிறது.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 5-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 10 மணி வரை உற்சவர் பத்மாவதி தாயார் மோகினி அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    வாகன வீதிஉலாவுக்கு முன்னால் அலங்கரிக்கப்பட்ட காளைகள், குதிரைகள், யானைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. மங்கல இறை இசை வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. கோலாட்டம், நடனம் நடந்தது.

    அதைத்தொடர்ந்து காலை 11.30 மணியில் இருந்து மதியம் 1.30 மணி வரை ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் பத்மாவதி தாயாருக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், தேன், பன்னீர் மற்றும் பல்வேறு வகையான பழங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    வாகனச் சேவையில் பங்கேற்று சோர்வடைந்த உற்சவர் பத்மாவதி தாயாருக்கு நிவாரணம் வழங்க நேற்று மாலை 4 மணியில் இருந்து மாலை 5 மணிவரை வசந்தோற்சவம் நடந்தது. நான்கு மாட வீதிகளில் உற்சவர் பத்மாவதி தாயார் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வீதிஉலாவில் பங்கேற்ற பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் சந்தனநீரை தெளித்துக் கொண்டனர்.

    அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை பத்மாவதி தாயார் தங்க யானை வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின் 6-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை சர்வ பூபால வாகன வீதிஉலா, மாலை தங்கத்தேரோட்டம், இரவு கருட வாகன வீதிஉலா நடக்கிறது.

    • தாயாருக்கு சிறப்பு அலங்காரம் செய்து ஊஞ்சல் சேவை நடத்தப்பட்டது.
    • இன்று பல்லக்கு உற்சவம், இரவு கஜ வாகன வீதிஉலா நடக்கிறது.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 10 மணிவரை கல்ப விருட்ச வாகனத்தில் உற்சவர் பத்மாவதி தாயார், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    அதைத்தொடர்ந்து மதியம் 12.30 மணியில் இருந்து 1.30 மணிவரை கோவில் அருகில் உள்ள ஸ்ரீகிருஷ்ணசாமி முக மண்டபத்தில் உற்சவர் பத்மாவதி தாயாருக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம், பால், தயிர், தேன், பன்னீர், இளநீர் போன்றவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பிறகு தாயாருக்கு சிறப்பு அலங்காரம் செய்து, மாலை 5.30 மணியில் இருந்து மாலை 6 மணி வரை ஊஞ்சல் சேவை நடத்தப்பட்டது.

    பின்னர் இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை பத்மாவதி தாயார் அனுமன் வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    பிரம்மோற்சவ விழாவின் 5-வது நாளான இன்று (வியாழக்கிழமை) காலை பல்லக்கு உற்சவம், இரவு கஜ வாகன வீதிஉலா நடக்கிறது.

    • தாயாருக்கு திருமஞ்சனம் நடந்தது.
    • ஊஞ்சல்சேவை நடைபெற்றது.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் மூன்றாவது நாளான நேற்று காலை முத்துப்பந்தல் வாகனத்தில் பத்மாவதி தாயார் பகாசுரவத அலங்காரத்தில் எழுந்தருளி மங்கள வாத்தியங்கள் முழங்க நான்கு மாட வீதிகளில் உலாவந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். காலை 8 மணி முதல் 10 மணி வரை நடந்த இந்த வீதி உலாவின் போது பக்தர்கள் ஆரத்தி எடுத்து வழிபட்டனர். வாகன வீதி உலாவின் முன்பு பெண்கள் நடனம், கோலாட்டம் மற்றும் பஜனை நிகழ்த்தியபடி சென்றனர்.

    சித்தூர் மாவட்டம் நிம்மனப்பள்ளியை சேர்ந்த வெங்கடரமண பஜனை குழுவினர் கிராமிய பாரம்பரிய பில்லனகுரோவி பஜனைகளை நடத்தினர்கள். இதேபோல் ராஜமுந்திரியை சேர்ந்த சிவகேசவ கோலாட்ட பஜனை மண்டலி கலைஞர்களின் பாரம்பரிய நடனம், திருப்பதியை சேர்ந்த சதானந்த நிலையவாச பஜனை கலைஞர்கள், திருப்பதியை சேர்ந்த வைபவ வெங்கடேஸ்வரா கோலாட்ட குழுவினர்களின் கோலாட்டம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    மதியம் 12.30 மணி முதல் 2.30 மணி வரை கிருஷ்ணசுவாமி மண்டபத்தில் தாயாருக்கு திருமஞ்சனம் நடந்தது. மஞ்சள், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை ஊஞ்சல்சேவை நடைபெற்றது. இரவு 7 மணி முதல் 9 மணி வரை பத்மாவதி தாயார் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    • நான்கு மாடவீதிகளில் பிரம்மோற்சவ விழா வாகன சேவை நடக்கிறது.
    • கொடிமர பீடத்தில் விஷ்வக்சேனாராதனம் மற்றும் புண்யாஹவச்சனம் நடந்தது.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா கோலாகலமாகத் தொடங்கியது. முதல் நாளான நேற்று காலை 9.45 மணிக்கு மிதுன லக்னத்தில் கங்கணப்பட்டர் மணிகண்ட பட்டர் தலைமையில் வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓத, பிரதான அர்ச்சகர்கள் தங்கக் கொடி மரத்தில் பிரம்மோற்சவ விழா கொடியை ஏற்றினர்.

    முன்னதாக கோவிலில் காலை மூலவர் பத்மாவதி தாயாருக்கு சுப்ரபாதம் நடந்தது. அதே சமயம் யாகசாலையில் சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டது. அதையொட்டி ரக் ஷாபந்தனம், பிராணப்பிரதிஷ்டை, ஹோமம், பூர்ணாஹுதி ஆகியவை நடந்தது. கொடிமர பீடத்தில் விஷ்வக்சேனாராதனம் மற்றும் புண்யாஹவச்சனம் நடந்தது.

    நெய், பால், தயிர், தேன், மஞ்சள்நீர் ஆகியவற்றை பாத்திரங்களில் வைத்து, பரவாசுதேவர், விஷ்ணு, மதுசூதனன், திரிவிக்ரமன், வாமனன், ஸ்ரீதரன், ரிஷிகேசா, பத்மநாபன், தாமோதரன் ஆகிய தெய்வங்கள் ஆவாஹனம் செய்யப்பட்டது. சதுர் வேதங்கள் பாராயணம் நடந்தது. தங்கக்கொடிமரத்துக்கு அபிஷேகம் செய்த பின் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த உற்சவர் பத்மாவதி தாயார் முன்னிலையில் முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் அழைப்பு விடுக்கும் வகையில் கொடியேற்றப்பட்டது.

    கொடியேற்ற நிகழ்ச்சியில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர், கொரோனா தொற்று பரவலால் 2 ஆண்டுகளுக்கு பிறகு கோவிலின் நான்கு மாடவீதிகளில் பிரம்மோற்சவ விழா வாகன சேவை நடக்கிறது. பிரம்மோற்சவ விழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய வரும் திரளான பக்தர்களுக்கு விரிவான வசதி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் காலை, இரவு வேளையில் நடக்கும் வாகனச் சேவையில் பங்கேற்று தாயாரை தரிசனம் செய்யலாம், என்றார்.

    • பரிவட்டம் கட்டப்பட்டு, கழுத்தில் மாலை அணிவிக்கப்பட்டது.
    • கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் நடக்கும் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழாவையொட்டி ஆந்திர மாநில அரசு சார்பில் தாயாருக்கு பட்டு வஸ்திரம், மங்கல பொருட்கள் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அரசு சார்பாக துணை முதல்-மந்திரி நாராயணசாமி பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க பத்மாவதி தாயார் கோவிலுக்கு வந்தார். கோவிலுக்கு வந்த துணை முதல்-மந்திரியை தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன் மற்றும் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் பாரம்பரிய முறைபடி வரவேற்றனர்.

    கோவில் வாசலில் துணை முதல்-மந்திரியின் தலையில் பரிவட்டம் கட்டப்பட்டு, கழுத்தில் மாலை அணிவிக்கப்பட்டது. ஒரு வெள்ளித்தட்டில் பட்டு வஸ்திரம், மங்கல பொருட்களை வைத்து துணை முதல்-மந்திரியின் தலைமீது வைத்தனர்.

    அதைத்தொடர்ந்து மேளதாளம் மற்றும் மங்கல இசை முழங்க ஊர்வலமாகக் கோவிலுக்குச் சென்று மூலவர் பத்மாவதி தாயாரிடம் பட்டு வஸ்திரங்களை சமர்ப்பித்து, அம்பாளை தரிசனம் செய்தார். அவருக்கு, கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது.

    கோவிலில் இருந்து வெளியே வந்ததும், துணை முதல்-மந்திரி நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    பத்மாவதி தாயாருக்கு ஆந்திர மாநில அரசு சார்பில் பட்டு வஸ்திரம் சமர்ப்பித்தது தனது கடந்த பிறவிக்குக் கிடைத்த புண்ணியமாகக் கருதுகிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய முதல்-மந்திரி ஒய்.எஸ்.ஜெகன்மோகன்ரெட்டிக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கார்த்திகை பிரம்மோற்சவ விழாவையொட்டி பத்மாவதி தாயாரை தரிசனம் செய்ய திருச்சானூருக்கு வரும் பக்தர்களுக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தானம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. மாநிலம் பசுமையாக இருக்கவும், மக்கள் சுபிட்சமாக வாழ வேண்டியும் தாயாரிடம் வேண்டி கொண்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருச்சானூரில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பிரம்மோற்சவம் நடக்க உள்ளது.
    • பிரம்மோற்சவ விழா நிறைவு நாளில் பஞ்சமி தீர்த்தம் நடக்கிறது.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருகிற 20-ந்தேதியில் இருந்து 28-ந்தேதி வரை வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நடக்கிறது. நிறைவு நாளில் பஞ்சமி தீர்த்தம் நடக்கிறது. அதற்காக நடந்து வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் திருப்பதியில் உள்ள சுவேத பவனில் நடந்தது.

    கூட்டத்துக்கு தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி பங்கேற்று பேசினார்.

    அவர் பேசியதாவது:-

    திருச்சானூரில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பிரம்மோற்சவம் நடக்க உள்ளது. திருமலையில் நடக்கும் பிரம்மோற்சவ விழா பாணியில் பிரமாண்டமாக நடத்தப்படும். வாகனச் சேவை நிகழ்ச்சிகள் அனைத்தும் தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பக்தி சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

    பஞ்சமி தீர்த்தத்தில் பங்கேற்க ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக, இந்த முறை பக்தர்களுக்கு சிறப்பு காம்பார்ட்மெண்டுகள் மற்றும் ஜெர்மன் ஷெட்டுகள் அமைத்துத்தரப்படும்.

    கோவிலில் இருந்து திருச்சானூர் செல்லும் வழித்தடங்களில் தேவையான சாலைகளை சீரமைத்துக் கொள்ளலாம். போக்குவரத்துப் பிரச்சினை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    புஷ்கரணியில் பக்தர்கள் புனித நீராட செல்லும்போது, தள்ளு முள்ளு நடக்கக்கூடாது. அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும். பஞ்சமி தீர்த்தம் அன்று 2 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் இணை அதிகாரி வீரபிரம்மன், போலீஸ் சூப்பிரண்டு பரமேஸ்வர்ரெட்டி, கமிஷனர் அனுபமாஅஞ்சலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 15-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது.
    • 19-ந்தேதி அங்குரார்ப்பணம் நடக்கிறது.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா 20-ந்தேதியில் இருந்து 28-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது.

    15-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணியும், 19-ந்தேதி மாலை அங்குரார்ப்பணமும் நடக்கிறது.

    பிரம்மோற்சவ விழா வாகன சேவை விவரங்கள் வருமாறு:-

    20-ந்தேதி காலை கொடியேற்றம், இரவு சிறிய சேஷ வாகன வீதிஉலா, 21-ந்தேதி காலை பெரிய சேஷ வாகன வீதிஉலா, இரவு ஹம்ச வாகன வீதிஉலா, 22-ந்தேதி காலை முத்து பந்தல் வாகன வீதிஉலா, இரவு சிம்ம வாகன வீதிஉலா, 23-ந்தேதி காலை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு அனுமன் வாகன வீதிஉலா, 24 -ந்தேதி காலை பல்லக்கு உற்சவம், இரவு கஜ வாகன வீதிஉலா.

    25-ந்தேதி காலை சர்வ பூபால வாகன வீதிஉலா, மாலை தங்கத்தேரோட்டம், இரவு கருட வாகன வீதிஉலா, 26-ந்தேதி காலை சூரிய பிரபை வாகன வீதிஉலா, இரவு சந்திர பிரபை வாகன வீதிஉலா, 27-ந்தேதி காலை தேரோட்டம், இரவு குதிரை வாகன வாகன வீதிஉலா, 28-ந்தேதி காலை பஞ்சமி தீர்த்தம் எனப்படும் சக்கர ஸ்நானம், இரவு கொடியிறக்கம் நடக்கிறது. இத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

    மேற்கண்ட வாகன வீதிஉலா தினமும் காலை 8 மணியில் இருந்து காலை 10 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரையிலும் நடக்கிறது. வாகனங்களில் உற்சவர் பத்மாவதி தாயார் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    கொரோனா பரவலால் கோவில் உள்ளே நடந்த வாகனச் சேவை, 2 ஆண்டுகளுக்கு பிறகு நான்கு மாடவீதிகளில் நடப்பதால் பக்தர்களிடையே அதிக எதிர்பார்ப்பாக உள்ளது.

    • இந்த கோவிலின் மூலஸ்தானத்தில் ஸ்ரீதேவி-பூதேவியுடன் வெங்கடேசபெருமாள் எழுந்தருளியுள்ளார்.
    • நவம்பர் 3-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை 4 நாட்கள் பவித்ர உற்சவ திருவிழா நடத்தப்பட உள்ளது.

    திருமலை, திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலின் மூலஸ்தானத்தில் ஸ்ரீதேவி-பூதேவியுடன் வெங்கடேசபெருமாள் எழுந்தருளியுள்ளார். இதுதவிர பத்மாவதி தாயார் சன்னதி, ஆண்டாள் சன்னதி, கருட பகவான் சன்னதி ஆகிய சன்னதிகளும் தனித்தனியாக கட்டப்பட்டுள்ளன.

    இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.

    கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு வரும் பக்தர்கள், இந்த கோவிலிலும் திருப்பதியை போன்று பிரம்மோற்சவ திருவிழா நடத்த வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து பக்தர்களின் கோரிக்கையை ஏற்று இந்த கோவிலில் பிரம்மோற்சவ திருவிழா நடத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.

    அதன்படி பிரம்மோற்சவ திருவிழாவின் போது 10 நாட்களும் காலை மற்றும் மாலை நேரங்களில் கோவிலை சுற்றி வெங்கடாசலபதிசாமி பவனி வருவதற்காக 12 வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

    இந்த விழாவுக்காக திருப்பதியில் உள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் 7 தலைநாகம் கொண்ட பெரிய சேஷ வாகனம், அனுமந்த வாகனம், அன்ன வாகனம் ஆகிய 3 புதிய வாகனங்கள் கன்னியாகுமரியில் உள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு கடந்த ஆகஸ்டு மாதம் கொண்டு வரப்பட்டது.

    இந்தநிலையில் 5 தலைநாகம் கொண்ட சிறிய சேஷ வாகனம், சிம்ம வாகனம் ஆகிய என மேலும் 2 புதிய வாகனங்கள் திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் இருந்து கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மீதி உள்ள வாகனங்கள் பக்தர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் மூலம் கும்பகோணத்தில் வடிவமைக்கப்பட்டு விரைவில் கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதைத்தொடர்ந்து கன்னியாகுமரியில் உள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் பிரம்மோற்சவ திருவிழாவும், அதற்கு முன்பாக வரும் நவம்பர் மாதம் 3-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் பவித்ர உற்சவ திருவிழாவும், தொடர்ந்து சீனிவாசத் திருக்கல்யாண வைபவமும் நடத்தப்பட உள்ளது.

    • பிரம்மோற்சவ விழா நவம்பர் மாதம் 20-ந்தேதியில் இருந்து 28-ந்தேதி வரை நடக்கிறது.
    • பக்தர்கள் புனிதநீராட புஷ்கரணிக்குள் நுழைவதற்கும், வெளியேறுவதற்கும் உரிய வழிகள் அமைக்கப்படும்.

    திருச்சானூா் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நவம்பர் மாதம் 20-ந்தேதியில் இருந்து 28-ந்தேதி வரை நடக்கிறது. அதையொட்டி கோவிலில் முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்வது குறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன் நேற்று திருச்சானூரில் பல்வேறு இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது கோவில் வளாகம், புஷ்கரணி, அங்குள்ள உயர்நிலைப்பள்ளி வளாகம், மஞ்சள் மண்டபம், பூடி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அவர் கூறியதாவது:-

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நவம்பர் மாதம் 20-ந்தேதி தொடங்க உள்ளது. அதற்காகக் கோவிலில் பல்வேறு முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள உள்ளோம். விழாவின் கடைசி நாளான சக்கரஸ்நானத்தில் பங்கேற்க வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த பூடி ரோடு, ரேணிகுண்டா ரோடு, மார்க்கெட் யார்டு ஆகிய பகுதிகளில் வாகன நிறுத்துமிடங்களை அமைக்க ஏற்பாடு செய்ய உள்ளோம்.

    இதேபோல் நவஜீவன் கண் மருத்துவமனை, உயர்நிலைப்பள்ளி, கோசாலை வளாகம் ஆகிய பகுதிகளில் பக்தர்கள் ஓய்வெடுக்க 'ஜெர்மன் ஷெட்' அமைக்கப்பட உள்ளது. பக்தர்கள் புனிதநீராட புஷ்கரணிக்குள் நுழைவதற்கும், வெளியேறுவதற்கும் உரிய வழிகள் அமைக்கப்படும். தமிழக பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வர வாய்ப்பு உள்ளதால் தமிழில் வழிகாட்டி பெயர் பலகைகள் எழுதி வைக்கப்படும்.

    திருமலையில் இருந்து திருச்சானூருக்கு பட்டு வஸ்திரங்கள் மற்றும் தங்க ஆபரணங்கள் ஊர்வலமாகக் கொண்டு வரும் பாதையை முன்கூட்டியே பார்வையிட்டு ஆய்வு செய்து, அந்தப் பாதையில் போக்குவரத்து பிரச்சினை ஏற்படாமல் இருக்க முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    ஊர்வலத்தின்போது யானைகள் மிரண்டு ஓடாமல் இருக்க, சிறப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான கோசாலை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆய்வின்போது தேவஸ்தான என்ஜினீயர் சத்தியநாராயணா, கோவில் துணை அதிகாரி லோகநாதம், என்ஜினீயர் மனோகரம், போக்குவரத்துப் பிரிவு மேலாளர் சேஷாரெட்டி கூடுதல் சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர் சுனில், உதவி பறக்கும் படை அதிகாரி சைலேந்திரா மற்றும் பலா் உடனிருந்தனர்.

    • ரூ.20 கோடியே 43 லட்சத்து 9 ஆயிரத்து 400 உண்டியலில் காணிக்கையாக வசூலானது.
    • ரூ.300 சிறப்பு தரிசனம், வி.ஐ.பி. தரிசனம் ஆகிய தரிசனங்கள் இன்று மீண்டும் தொடங்கியது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த மாதம் 27-ந் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்கியது.

    முதல் நாளான அன்று இரவு பெரிய சேஷ வாகனத்தில் ஏழுமலையான் ஸ்ரீதேவி, பூதேவி சமேத 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைத் தொடர்ந்து தினமும் காலை மாலை பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடந்தது. கடந்த 1-ந் தேதி கருட சேவை நடந்தது.

    பிரம்மோற்சவ விழா தொடங்கியது முதல் நேற்று வரை 5 லட்சத்து 68 ஆயிரத்து 735 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். 2 லட்சத்து 20 ஆயிரத்து 816 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். 20 லட்சத்து 99 ஆயிரத்து 96 பக்தர்கள் அன்னபிரசாதம் சாப்பிட்டனர். 24 லட்சத்து 89 ஆயிரத்து 481 சிறிய லட்டுக்களும், 29 ஆயிரத்து 968 பெரிய லட்டுக்களும் விற்பனையானது.

    ரூ.20 கோடியே 43 லட்சத்து 9 ஆயிரத்து 400 உண்டியலில் காணிக்கையாக வசூலானது. திருப்பதியில் இருந்து திருமலைக்கு 3 லட்சத்து 47 ஆயிரத்து 226 பக்தர்களும், திருமலையில் இருந்து திருப்பதிக்கு 4 லட்சத்து 47 ஆயிரத்து 969 பக்தர்களும் பஸ்சில் பயணம் செய்தனர்.

    குற்ற சம்பவங்களை கண்காணிக்க திருமலையில் 2,279 சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டன. பாதுகாப்பு பணியில் 4,635 போலீசார் மற்றும் திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    ஆந்திராவில் பின்தங்கிய பகுதிகளில் உள்ள பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக 140 பஸ்களில் அழைத்து வரப்பட்டு 61,997 சாமானிய பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    பிரம்மோற்சவத்தையொட்டி திருப்பதியில் நிறுத்தப்பட்டிருந்த ரூ.300 கட்டண சேவை சிறப்பு தரிசனம், வி.ஐ.பி. தரிசனம் ஆகிய தரிசனங்கள் இன்று மீண்டும் தொடங்கியது.

    இந்த தரிசனங்களில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    • குங்குமப்பூவால் மாலைகள், கிரீடங்கள் தயார் செய்யப்பட்டன.
    • ஒரு கிலோ குங்குமப்பூவின் விலை சுமார் ரூ.2 லட்சம்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் வாகனச் சேவை முடிந்ததும் கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடக்கும். ஆனால், இந்த முறை பிரம்மோற்சவ விழாவின்போது, உற்சவர்களுக்கு ஏற்கனவே ஒரு முறை ஸ்நாபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

    வண்ணமயமான ஆர்க்கிட் மலர்களாலும், தாமரைகளாலும் மண்டபம் அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தன. ஸ்நாபன திருமஞ்சனத்தில் சுகந்த திரவியங்கள் பயன்படுத்தப்பட்டது. ஸ்நாபன திருமஞ்சனம் முடிந்ததும் உலர்ந்த பழங்கள், குங்குமப்பூ, பாதாம், பிஸ்தா மாலைகள், உலர் பழங்களால் தயாரிக்கப்பட்ட கிரீடங்கள் உற்சவர்களுக்கு அணிவிக்கப்பட்டன.

    தமிழகத்தில் திருப்பூரை சேர்ந்த காணிக்கையாளர்கள் ஐதராபாத்தில் இருந்து அலங்கார நிபுணர்களை வரவழைத்து கோவிலில் ஸ்நாபன திருமஞ்சனம் நடத்தும் ரெங்கநாயகர் மண்டபத்தை அலங்கரித்தனர். ஸ்நாபன திருமஞ்சனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு ஜப்பான் ஆப்பிள்கள், சின்னத் திராட்சை, கொரியன் பேரிக்காய், மாம்பழங்கள், அமெரிக்க செர்ரி பழங்கள், குங்குமப்பூ, பிஸ்தா, பாதாம் மாலைகளை பிரத்யேகமாக தயாரித்து அணிவித்து உற்சவர்கள் அலங்கரித்தனர்.

    இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் சீனிவாசுலு கூறியதாவது:-

    இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழாவில் சிறப்பு அம்சமாக, முதல் முறையாக குங்குமப்பூவால் மாலைகள், கிரீடங்கள் தயார் செய்யப்பட்டன. ஒரு கிலோ குங்குமப்பூவின் விலை சுமார் ரூ.2 லட்சம். அதன் மூலம் ஒரு மாலை தயாரிக்க சுமார் 3 கிலோ வரை குங்குமப்பூ பயன்படுத்தப்படுகிறது.

    இந்தக் குங்குமப்பூ மாலைகளை ஐதராபாத்தைச் சேர்ந்த அம்பிகா புளோரா நிறுவனம், தமிழகத்தின் திருப்பூரைச் சேர்ந்த காணிக்கையாளர்களான ராஜேந்திரன், சண்முகசுந்தரம், பாலசுப்பிரமணியம் ஆகியோரின் காணிக்கையில் தயார் செய்யப்பட்டன.

    அம்பிகா பிளோராவின் தலைவர் சீனிவாஸ் வழிகாட்டுதலின் கீழ் சுமார் 60 பேர் திருமலைக்கு வந்து இரவும் பகலும் கடுமையாக உழைத்து, வாசனை திரவியங்கள் மற்றும் உலர் பழங்களால் இந்த மாலைகளை தயார் செய்தனர்.

    அதேபோல் அத்திப்பழம், நாவல் பழம், பிஸ்தா, பாதாம், ஏலக்காய், சோளம் போன்றவற்றைக் கொண்டு மாலைகளும், கிரீடங்களும் தயார் செய்யப்பட்டன. ஸ்நாபன திருமஞ்சனத்தில் 7 வகையான மாலைகள், கிரீடங்கள் மற்றும் இறுதியாக துளசி மாலைகளை பயன்படுத்தி அலங்காரம் செய்யப்பட்டன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தீர்த்தவாரி முடிந்தவுடன் ஏராளமான பக்தர்கள் புஷ்கரணியில் புனித நீராடினர்.
    • பிரம்மோற்சவ விழா இன்று மாலை கொடி இறக்கத்துடன் நிறைவு பெறுகிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த மாதம் 27-ந்தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்கியது. காலை மாலை என இரு வேளைகளிலும் ஏழுமலையான் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெவ்வேறு வாகனங்களில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவை கடந்த 1-ந் தேதி இரவு நடந்தது. கருட சேவையை 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான நேற்று காலை ஏழுமலையான் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் பிரம்மாண்ட தேரில் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று மாலை தங்க குதிரை வாகனத்தில் ஏழுமலையான் வீதி உலா வந்தார்.

    பிரம்மோற்சவ விழாவின் 9-வது நாளான இன்று காலை திருமலையில் உள்ள புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது.

    தீர்த்தவாரியை ஒட்டி சக்கரத்தாழ்வார் கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க புஷ்கரணிக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு வேத பண்டிதர்கள் வேதங்களை முழங்க தீர்த்தவாரி நடந்தது. அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என விண்ணதிர பக்தி பரவசத்துடன் கோஷமிட்டனர்.

    தீர்த்தவாரி முடிந்தவுடன் ஏராளமான பக்தர்கள் புஷ்கரணியில் புனித நீராடினர்.

    கடந்த 8 நாட்களாக கோலாகலமாக நடைபெற்ற பிரம்மோற்சவ விழா இன்று மாலை கொடி இறக்கத்துடன் நிறைவு பெறுகிறது.

    திருப்பதியில் நேற்று 68,539 பேர் தரிசனம் செய்தனர். 21,077 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.90 கோடி உண்டியல் காணிக்கையாக வசூலானது.

    ×