search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பனிப்பொழிவு"

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் கோவில் நடை 6 மாதத்திற்கு பிறகு இன்று அதிகாலை மீண்டும் திறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். #BadrinathTemple #CharDhamYatra
    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ளது பத்ரிநாத் கோவில். இமயமலைத் தொடரில் கர்வால் மலையில் அமைந்துள்ள இந்த விஷ்ணு கோவில், கடல் மட்டத்தில் இருந்து 10 ஆயிரம் அடி உயரத்தில் உள்ளது. பக்தர்கள் சார்தாம் யாத்திரை மேற்கொள்ளும் 4 புனித தலங்களில் இக்கோவிலும் ஒன்று. 

    நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக இக்கோவிலுக்கு வந்து தரிசனம் செய்கின்றனர். குளிர்காலங்களைத் தவிர மீதமுள்ள 6 மாதங்கள் மட்டும் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும். 

    அவ்வகையில் குளிர்காலம் முடிவடைந்துள்ள நிலையில், 6 மாதத்திற்குப் பிறகு இன்று அதிகாலை 4.15 மணியளவில் வேத மந்திரங்கள் முழங்க கோவில் நடை திறக்கப்பட்டது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கோவில் நடையை தலைமை பூசாரி ஈஸ்வரி பிரசாத் நம்பூதிரி திறந்தார். அப்போது கோவில் பூசாரிகள், நிர்வாகிகள் மற்றும் சுமார் 10 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஆளுநர் பேபி ராணி மயூர்யா, முன்னாள் முதல்வர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் போன்ற முக்கிய பிரமுகர்களும் இன்று சாமி தரிசனம் செய்தனர்.

    இமயமலையில் உள்ள கேதார்நாத் சிவன் கோவில், பத்ரிநாத் விஷ்ணு கோவில் மற்றும் கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய அம்மன் கோவில்களுக்கான சார்தாம் யாத்திரை அட்சய திருதியை தினத்தில் (மே 7) தொடங்கியது. அன்றைய தினம் கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி கோவில் நடை திறக்கப்பட்டது. நேற்று கேதார்நாத் கோவில் நடை திறக்கப்பட்டு வழிபாடு தொடங்கிய நிலையில், இன்று பத்ரிநாத் விஷ்ணு கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. 

    யாத்ரீகர்கள் முதலில் யமுனோத்ரியில் வழிபாடு நடத்தி விட்டு அதன்பின்னர் கங்கோத்ரி, கேதார்நாத் தலங்களில் தரிசனம் செய்துவிட்டு, இறுதியாக பத்ரிநாத் வந்து விஷ்ணுவை வழிபட்டு சார்தாம் யாத்திரையை நிறைவு செய்வார்கள். #BadrinathTemple #CharDhamYatra
    அமெரிக்காவின் கடும் பனிப்பொழிவில் சிக்கிய ரெயில் ஒன்று, 2 நாட்களுக்கு பின்னர் மீட்கப்பட்டுள்ளது. #Americasnowfall #Trainstuckinsnow
    லாஸ் ஏஞ்சல்ஸ்:

    அமெரிக்காவின் சியாட்டில்- லாஸ் ஏஞ்சல்ஸ் வழித்தடத்தில் பயணிகள் ரெயில் கடந்த ஞாயிறு அன்று  சென்றுக்கொண்டிருந்தது. அப்போது பனிப்பொழிவு மிக அதிகமாக காணப்பட்டது. ரெயில் பாதையில் மரக்கிளைகள் விழுந்து கிடந்துள்ளன. இதனையடுத்து ரெயில் சட்டென நின்றது. இதில் ரெயிலின் எஞ்சின் முற்றிலும் பழுதானது.

    பயணிகள் அனைவரும் ரெயில் திடீரென நின்றதை  உணர்ந்து பதற்றம் அடைந்தனர். ரெயில்வே துறையினருக்கு இது குறித்து தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சிக்கிய ரெயில் எஞ்சின், ரெயில்வே ஊழியர்களால் அன்று இரவு பழுது பார்க்கப்பட்டது. ரெயிலை உடனடியாக இயக்க முடியவில்லை.



    இருப்பினும் ஊழியர்கள் விடாது 36 மணி நேரம் நிதானத்துடனும், மிகுந்த கடமை உணர்வுடனும்  போராடி எஞ்சின் கோளாறை சரி செய்தனர்.  இதன் மூலம் ரெயில் நேற்று காலை மீண்டும் இயங்க துவங்கியது.

    ரெயில் தண்டவாளத்தை விட்டு நகர முடியாமல் நின்றபோது, தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டதால் ரெயிலில் பயணம் செய்த 182 பயணிகளுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த நிகழ்வினை பயணிகள் புகைப்படம் மற்றும் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.  #Americasnowfall  #Trainstuckinsnow 
    ஜம்மு காஷ்மீரில் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்ட பகுதியில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணியை மீட்ட ராணுவ வீரர்கள் சுமார் 2½ கி.மீ சுமந்து சென்று காப்பாற்றினர். #Pregnantwoman #Snowfall
    ஜம்மு:

    கா‌ஷ்மீரில் கடந்த சில மாதங்களாக வரலாறு காணாத கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இந்த நிலையில் வடக்கு கா‌ஷ்மீர் பந்திபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கர்ப்பிணி ஒருவர் பிரசவ வலியால் துடிப்பதாகவும், அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல உதவும்படியும் பந்திபூர் ராணுவ முகாமுக்கு தொலைபேசி மூலம் தகவல் வந்தது.

    இதனை தொடர்ந்து ராணுவ வீரர்கள் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் ஆம்புலன்ஸ் மூலம் அந்த கிராமத்துக்கு விரைந்தனர். ஆனால் சாலைகள் முழுவதும் பனித்துகள்களால் மூடப்பட்டு இருந்ததால் ஆம்புலன்சை வீட்டின் அருகே கொண்டு செல்ல முடியவில்லை. எனினும் மனம் தளர்ந்துவிடாத வீரர்கள், அந்த பெண்ணை தூக்குப்படுக்கையில் சுமார் 2½ கி.மீ தூரத்துக்கு இடுப்பளவு பனித்துகள்களுக்கு மத்தியிலும் சுமந்து சென்றனர்.

    பின்பு அங்கு தயாராக இருந்த ஆம்புலன்ஸ் மூலம் அவரை மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த பெண் சிகிச்சைக்காக ஸ்ரீநகரில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது. தக்க நேரத்தில் உதவி புரிந்த ராணுவ வீரர்களுக்கு அந்த பெண் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். #Pregnantwoman #Snowfall
    ஜம்மு காஷ்மீர் மற்றும் ஸ்ரீநகருக்கு இடையேயான தேசிய நெடுஞ்சாலை தொடர்ந்து 4வது நாளாக இன்றும் பனிமூட்டத்தின் காரணமாக மூடப்பட்டுள்ளது. #JKSnowfall
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. தலைநகர் ஸ்ரீநகரில் இன்று அதிகாலை முதலே பனிமழை கொட்டித் தீர்த்து வருகிறது. சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு பனி கொட்டிக் கிடக்கிறது. கட்டிடங்களின் மேற்கூரை, வாகனங்கள் என அனைத்தும் பனி மூடிக் காணப்படுகின்றன. பனிப்பொழிவு மற்றும் மோசமான வானிலை தொடர்ந்து நிலவி வருகின்றது.

    இதையடுத்து காஷ்மீர் மற்றும் ஸ்ரீநகர் உள்ளிட நாட்டின் பிற மாநிலங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை பனிப்பொழிவு மற்றும் மழை காரணமாக தொடர்ந்து 4வது நாளாக இன்றும் மூடப்பட்டுள்ளது.

    நெடுஞ்சாலையில் ரம்பால் மற்றும் பனிஹல் பகுதிகளுக்கு இடையே சுமார் 12 இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவை சரிசெய்யும் பணியில் இயந்திரங்களுடன் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் குல்காம் மாவட்டத்தில் பனிச்சரிவால் மூடப்பட்ட ஜவஹர் சுரங்கப்பாலத்தில், பனிக்கட்டிகளை அகற்றும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாக போக்குவரத்து போலீஸ் ஐஜி அலோக் குமார் தெரிவித்துள்ளார்.

    மேலும் பீடா, ஷேர்பீபி, டிக்டோல், மரூக், அனோகிஃபால், பந்தியால், நஷ்ரி, குனி நல்லா மற்றும் காங்ரசூ போன்ற பகுதிகளில் மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவினை சரிசெய்யும் பணியும் விரைவில் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    ஜம்மு காஷ்மீரில் இரவில் குறைந்தபட்ச வெப்பநிலை 4.4 டிகிரி செல்சியஸ் என பதிவாகியுள்ளது. எனினும் காலையில் ஏற்படும் சூரிய வெப்பம், குளிருக்கு சற்று இதமாக இருந்தது. படோடே பகுதியில் மைனஸ் 1.6 டிகிரி செல்சியஸ் மற்றும் பனிஹலில் 1.4 டிகிரி செல்சியஸ் அளவிற்கு கடுங்குளிர் நிலவுவது குறிப்பிடத்தக்கது. #JKSnowfall
    அமெரிக்காவில் வீட்டில் வளர்ந்த பூனை, பனிப்பொழிவினால் முழுவதும் உறைந்தபோதும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளது. #USSnowstorm
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் தற்போது கடுமையான பனிப்பொழிவுடன் குளிர் காற்று வீசுகிறது. துருவ சுழல் எனப்படும் கடுங்குளிர் காரணமாக, நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    கடுங்குளிரினால் சிகாகோவில் ஓடும் ஆறு ஒன்று முற்றிலும் பனிக்கட்டியாக மாறி இருக்கிறது. பனியின் தாக்கத்தால் பல மாநிலங்களில் அரசு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள், வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், அமெரிக்காவின் மையப்பகுதிகளில், உயிரை உறையவைக்கும் கடுங்குளிருக்கு பலர் பலியாகியுள்ளனர்.

    குளிரின் தாக்கத்தை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் எடுத்து வலைத்தளங்களில் பலரும் வெளியிட்டு வருகின்றனர். அவ்வகையில், பனிப்பொழிவின் தாக்கத்தால் உறைந்துபோன பூனை, அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த தகவல் வெளியாகி உள்ளது.

    அமெரிக்காவின் மொன்டானா மாநிலத்தில் உள்ள ஒரு குடும்பத்தில் ஃபிளஃபி எனும் பெயருடைய பெண் பூனை ஒன்று வளர்ந்து வந்துள்ளது. இது கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறியுள்ளது. இதனை அந்த வீட்டார் தீவிரமாக தேடி வந்துள்ளனர்.

    பின்னர், அந்த பூனை வீட்டின் அருகில் இருந்த சாலையின் ஓரம் பனியினால் முழுவதுமாக மூடப்பட்டு, உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டது. உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அங்கு பூனையின் உடலில் இருந்த பனிக்கட்டிகள் அகற்றப்பட்டு, உடல் உஷ்ணத்தை அதிகரித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் பூனையின் உயிர் காப்பாற்றப்பட்டது.

    பொதுவாக பூனையின் சாதாரண உடல் வெப்பநிலை 101 டிகிரி ஆகும். ஆனால் இந்த பூனை -90 டிகிரி அளவிலான வெப்பநிலையில் உயிருடன் இருந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. #USSnowstorm
    காஷ்மீர் மாநிலத்தின் இருமுனைகளை இணைக்கும் ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை ஐந்தாவது நாளாக இன்றும் மூடப்பட்டுள்ளதால் வாகனப் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. #JammuSrinagarNH
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நவம்பர், டிசம்பர் மாதத்தில் தொடங்கி 40  நாட்கள்வரை உச்சகட்டமான பனிப்பொழிவு இருக்கும். இந்த ஆண்டின் அதிகபட்சப் பனிப்பொழிவு வரும் 31-ந் தேதிவரை நீடிக்கும். அதன் பின்னரும் அடுத்து 20 நாட்களுக்கு லேசான பனிப்பொழிவு இருக்கும்.

    ஒரு மாதத்துக்கும் மேலாக தொடர்ந்து உறைபனி பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்துள்ளது.

    இதன் விளைவாக காஷ்மீரின் கோடைக்கால தலைநகரான ஸ்ரீநகர் பகுதியை மாநிலத்தின் பிறபகுதிகளுடன் இணைக்கும் ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை தொடர்ந்து மூடப்பட்டுள்ளது.

    இதற்கிடையில், ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் உள்ள ஜவஹர் சுரங்கப்பாலத்தை உறைபனி மூடியதால் கடந்த 5 நாட்களாக இப்பகுதி வழியாக போக்குவரத்து முற்றிலும் முடங்கிக் கிடக்கிறது. இரு பகுதிகளின் வழியாக சரக்கு கொண்டு செல்ல வேண்டிய சுமார் 1500 லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


    இதனால் மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்லும் சரக்கு  வாகனப் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

    ஸ்ரீநகர் பகுதியில் நேற்றிரவு 1.3 செல்சியஸ் அளவுக்கு பனி பெய்தது. தெற்கு காஷ்மீர் பகுதியில் 1.2 செல்சியஸ் அளவுக்கு பனிப்பொழிவு இருந்தது.

    இந்நிலையில், கங்ரூ, ரம்சூ, பன்டியால், அனோக்கி, ரம்பான் ஆகிய மாவட்டங்கள்வழியாக செல்லும் ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் நேற்றிரவில் இருந்து அதிகமான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் இன்னும் சில நாட்களுக்கு இவ்வழியாக வாகனப் போக்குவரத்து நடைபெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. #JammuSrinagarNH 
    நீலகிரி மாவடத்தில் தொடர் பனிப்பொழிவும் கடுங்குளிர் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
    குன்னூர்:

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் பனிப்பொழிவு தொடங்கும். ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் படிப்படியாக பனிப்பொழிவு குறைந்து மாத இறுதிக்குள் குளிர்காலம் முடிந்து விடும்.

    ஆனால் தற்போது ஜனவரி மாதம் இறுதி ஆகியும் பனிப்பொழிவு மற்றும் குளிரின் தாக்கம் குறையவில்லை. தினசரி மாலையில் 6 மணிக்கு தொடங்கும் பனிப்பொழிவு மறுநாள் காலை 11 மணி வரை நீடிக்கிறது.

    இதன் காரணமாக ஊட்டி, தலைக்குந்தா, கேத்தி பள்ளத்தாக்கு, குன்னூர் ஜிம்கானா போன்ற பகுதிகளில் புல்வெளிகள் வெள்ளை கம்பளம் போர்த்தியது போல் எங்கு பார்த்தாலும் பனி படர்ந்து வெண்ணிறமாக காட்சியளிக்கிறது.

    இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெப்பநிலை தொடர்ந்து 4,5,6 டிகிரி செல்சியசாக குறைந்து காணப்படுகிறது. இன்று காலையில் தாவரவியல் பூங்காவில் 00.73 டிகிரி செல்சியசாக வெப்பநிலை பதிவாகி இருந்தது.

    இரவில் வெளியே நிறுத்திவைக்கப்படும் வாகனங்களில் விழும் பனிப்பொழிவு ஐஸ் கட்டியாக மாறிவிடுகிறது. புல்வெளியில் படர்ந்துள்ள பனிப்பொழிவு காலையில் வெகு நேரம் நீடிப்பதால் கால்நடைகள் மேய்ச்சலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    அவைகளும் சூரிய ஒளியில் நின்று தங்கள் உடலை சூடாக்கி கொள்கின்றது. சாலையோர வியாபாரிகள் கனமான கம்பளி ஆடைகளை அணிந்து வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காலை வெகுநேரம் குளிர் வாட்டி வதைப்பதால் உள்ளூர் வாசிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குளிரால் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடியே காணப்படுகிறது.

    தொடர் பனிப்பொழிவு, கடுங்குளிர் காரணமாக சுற்றுலா பயணிகளின் வரத்தும் குறைவாகவே காணப்படுகிறது.#tamilnews
    கனடாவில் விமானத்தின் கதவு பனியால் உறைந்து திறக்க முடியாத நிலை ஏற்பட்டதால், உள்ளே இருந்த பயணிகள் 16 மணி நேரம் குளிரில் தவித்தனர். #Canada #UnitedAirlines
    மாண்ட்ரியல்:

    அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள நெவார்க்கில் இருந்து ஹாங்காங்குக்கு விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. அதில் 250 பயணிகள் இருந்தனர். நடுவானில் விமானம் பறந்தபோது ஒரு பயணிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    எனவே விமானத்தை கனடாவில் உள்ள நியூ பவுண்டுலேண்டு என்ற இடத்தில் விமானி அவசரமாக தரை இறக்கினார். பின்னர் உடல்நலக்குறைவு ஏற்பட்ட பயணி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இதையடுத்து விமானம் புறப்பட தயாரானது. ஆனால் கடும் பனி கொட்டியது. தட்பவெட்ப நிலை மைனஸ் 30 டிகிரி ஆனது. எனவே விமானம் இயங்காமல் என்ஜின் கோளாறு ஏற்பட்டது.

    விமானத்தின் கதவு பனிப்பொழிவால் உறைந்து விட்டது. இதனால் திறக்க முடியவில்லை. எனவே பயணிகளால் வெளியே செல்ல முடியவில்லை. பசி, பட்டினியால் அவதிப்பட்டனர். போர்த்திக்கொள்ள மெல்லிய கம்பளி மட்டுமே கொடுக்கப்பட்டது. இதனால் விமானத்துக்குள்ளேயே 16 மணி நேரம் கடும் குளிரில் நடுங்கியபடி அவதிப்பட்டனர்.

    சிறிது நேரம் கழித்து காபி மற்றும் நொறுக்கு தீனி வழங்கப்பட்டது. பொழுது விடிந்த பிறகு வெயில் பட்டதும் விமானத்தின் கதவு திறக்க முடிந்தது. அதன் பின்னர் பயணிகள் விமானத்தில் இருந்து வெளியேறி பஸ் மூலம் வேறு விமானத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    மதியம் அவர்கள் மீண்டும் அமெரிக்காவின் நெவார்க் நகருக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். #Canada #UnitedAirlines 
    ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்தில் பனிப்பொழிவின் காரணமாக விமான போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரி கூறியுள்ளார். #JKSnowfall #SrinagarAirport
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. தலைநகர் ஸ்ரீநகரில் இன்று அதிகாலை முதலே பனிமழை கொட்டித் தீர்த்து வருகிறது. சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு பனி கொட்டிக் கிடக்கிறது. கட்டிடங்களின் மேற்கூரை, வாகனங்கள் என அனைத்தும் பனி மூடிக் காணப்படுகின்றன. பனிப்பொழிவு மற்றும் மோசமான வானிலை காரணமாக விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இன்று காலை முதல் கண்ணை மறைக்கும் அளவிற்கு பனிப்பொழிவு இருந்ததால், விமானங்கள் ஏதும் இயக்கப்படவில்லை. வானிலையில் முன்னேற்றம் ஏற்பட்டால் விமானங்கள் இயக்கப்படலாம் என்று அதிகாரி கூறினார். மேலும் இந்த மாதத்தில் ஸ்ரீநகரில் மூன்றாவது முறையாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதாகவும்  கூறினார்.

    இதற்கிடையில்,  நாளை முதல் அடுத்த மூன்று நாட்களில் கடும் பனிப்பொழிவு மீண்டும் ஏற்பட வாய்ப்புள்ளதாக  வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    காஷ்மீர் பள்ளத்தாக்கினையும், நாட்டின் மற்ற பகுதிகளோடு இணைக்கும் ஒரே தேசிய நெடுஞ்சாலையில் பனிப்பொழிவு இருப்பதால் ஒரு வழி போக்குவரத்துக்கு மாற்றப்பட்டது. அதே நேரத்தில் பனிப்பொழிவு காரணமாக ஸ்ரீநகர்-லே மற்றும் பிற சாலைகள் மூடப்பட்டன. ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை முதல் ஜவஹர் சுரங்கப்பாதை, ஷைத்தான நல்லாஹ் மற்றும் பானிஹால் ஆகிய இரு பகுதிகளிலும் பனிப்பொழிவு அதிகம் இருந்தது.

    ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஏற்கனவே சனிக்கிழமையிலிருந்து கடுமையான பனிப்பொழிவு காரணமாக விமானப் போக்குவரத்து பாதிக்கப்படும் என்று வானிலை ஆய்வு மையம் ஒரு எச்சரிக்கையை வெளியிட்டிருந்தது . இதற்கிடையில், காஷ்மீருடன் லடாக்கின் பிராந்தியத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையானது பனிப்பொழிவு காரணமாக இரண்டு மாதங்கள்  மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. #JKSnowfall #SrinagarAirport

    காஷ்மீரில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வட மாநிலங்களிலும் கடுமையான குளிர் வாட்டி வதைக்கிறது. #JammuAndKashmir #Kashmir #SnowFall
    ஸ்ரீநகர்: 

    வட மாநிலங்களில் பனிக்காலம் தொடங்கியதில் இருந்து கடுமையான குளிர் வாட்டி வதைக்கிறது.

    காஷ்மீர் மாநிலத்தில் குளிர்காலத்தில் 40 நாட்களில் மிகக்கடுமையான பனிப்பொழிவு நிலவுவது வழக்கம். இந்த ஆண்டு, வருகிற 31-ந் தேதியுடன் கடும் பனிப்பொழிவு காலம் நிறைவுபெறுகிறது. அந்த வகையில், புத்தாண்டு தினத்தில் இருந்து கடும்குளிர் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.

    ஸ்ரீநகர், குல்கமார்க் மற்றும் பகல்காம் பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களில் இன்று பனிப்பொழிவு வழக்கத்தைவிட சற்று அதிகமாகவே இருந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. கார்கில் பகுதியில் மைனஸ் 17 டிகிரி செல்சியசும், லடாக் மாகாணம் லே நகரில் மைனல் 12.4 டிகிரி வெப்பநிலையும் நிலவியது. 



    மேலும் பீகார், உத்தரபிரதேசம், குஜராத், அரியானா உள்ளிட்ட மாநிலங்களிலும் உறைய வைக்கும் அளவுக்கு குளிர் வாட்டி வதைக்கிறது. இமாச்சல பிரதேசம், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் அங்கு சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. #JammuAndKashmir #Kashmir #SnowFall

    ராமநாதபுரம் மாவட்டத்தில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளதால் மழை பெய்யாமல் விவசாயிகளை ஏமாற்றி வருகிறது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளதால் மழை பெய்யாமல் விவசாயிகளை ஏமாற்றி வருகிறது. மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை மட்டுமே கைகொடுத்து வந்துள்ளது. இந்த ஆண்டும் வடகிழக்கு பருவமழை கைகொடுக்கும் என்று பெரிதும் எதிர்பார்த்திருந்த விவசாயிகள், மழை பொய்த்ததால் ஏமாற்றமடைந்துள்ளனர்.

    பருவமழை காலங்களில் பனி பொழிந்தால், மழை குறைந்துவிடும். சில நாட்களாக கடும் குளிர் நிலவுகிறது. பருவம் தவறி மழை பெய்தாலும் நிலத்தடி நீராவது பெறுகும்.

    பருவம் தப்பினால் புயல் சின்னம் உருவானால் மட்டுமே மழை பெய்யும். பனி குறைந்து மழை பெய்ய வேண்டும். அக்டோபர், நவம்பர் மாதம் சராசரி மழை பெய்யாததால், மானாவாரி பயிர் சாகுபடியும், மகசூலும் கிடைப்பது கேள்விக்குறியாக உள்ளது.

    தொடர்ந்து பல ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால் விவசாயிகள் விவசாயம் இல்லாமல், கடன் வாங்கியதை திருப்பி கொடுக்க முடியாமல் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். மானாவாரி பயிருக்கு 10 நாட்களுக்கு இடைவெளியில் மழை பெய்தால் மட்டுமே, மகசூல் கிடைக்கும். கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு தவிர்க்கப்படும். குறிப்பாக ராமேசுவரம் தீவு பகுதிகளில் நல்ல மழை பெய்தும் மாவட்ட முழுவதும் பரவலாக சராசரி மழை கிடைக்கவில்லை.

    சில நாட்களாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கடுமையான பனிப்பொழிவு உள்ளதால், இனியும் மழை பெய்யுமா என்ற கேள்விக்குறியுடன் விவசாயிகள் வருணபகவானின் கருணைக்கு காத்து இருக்கின்றனர்.

    பனிப்பொழிவு, பருவ நிலை மாற்றம் காரணமாக காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சென்னையில் அதிகரித்துள்ளது. #Fever
    சென்னை:

    தமிழ்நாடு முழுவதும் கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பன்றிக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவியது. இதில் பலர் பாதிக்கப்பட்டனர்.

    காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு விழிப்புணர்வு பிரசாரங்களில் ஈடுபட்டனர். ஊருக்கு ஊர் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

    இதனால் காய்ச்சல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    தெருவுக்கு தெரு கிளினிக்கில் தினமும் காலை, மாலை நேரங்களில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதில் சிலருக்கு மூட்டு வலியுடன் காய்ச்சல் வருவதால் டெங்கு அறிகுறி இருப்பதாக கூறி ரத்த பரிசோதனை செய்து வருகின்றனர்.

    ராயப்பேட்டை, மயிலாப்பூர், மடிப்பாக்கம், பல்லாவரம், கோயம்பேடு, அமைந்தகரை, திருவொற்றியூர் உள்பட பல பகுதிகளில் காய்ச்சலால் ஆஸ்பத்திரிக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    பனிப்பொழிவு, பருவ நிலை மாற்றம் காரணமாக காய்ச்சல் பாதித்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக காரணம் சொல்லப்படுகிறது.

    ஆனால் அரசு ஆஸ்பத்திரிகளில் விசாரித்ததில் காய்ச்சல் பாதித்தோரின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரிவித்தனர். #Fever
    ×