search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சித்ரவதை"

    சவுதிஅரேபியாவில் தெலுங்கானாவை சேர்ந்த தொழிலாளி சித்ரவதையால் அவதிப்படுவதாக வெளியிட்டுள்ள வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம் மக்தபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வீரய்யா. 2017-ம் ஆண்டு வேலைக்காக சவுதிஅரேபியாவுக்கு சென்றார்.

    தற்போது அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. இந்நிலையில் அவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    நான் இங்கிருந்து தப்பிக்கவே முடியாது. இரவும் பகலும் என்னை சுற்றி ஏராளமான விலங்குகள் உள்ளன. ஒரு ஒட்டகம் இறந்துவிட்டது. இதனால் கோபம் அடைந்த பணியாளர் ஒருவர் என்னை சரமாரியாக அடித்து தாக்கினார். எனக்கு உணவு கூட கொடுக்காமல் பட்டினி போட்டு சித்ரவதை செய்கின்றனர். என்னை காப்பாற்றுங்கள்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இதைத் தொடர்ந்து தெலுங்கானா ராஷ்ட்ரீய சமதி கட்சியின் செயல் தலைவர் கே.டி.ராமராவ், மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ், ஐக்கிய அரபு எமிரேட்சுக்கான இந்திய தூதர் நவ்தீப் சூரி ஆகியோரை தொடர்பு கொண்டு பேசினார்.

    அப்போது வீரய்யாவை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கூறினார். ரியாத்தில் உள்ள தூதரகம் மூலம் வீரய்யாவை மீட்கும் பணி நடந்து வருவதாக நவ்தீப் சூரி பதில் அளித்தார்.

    வீரய்யாவை போனில் தொடர்பு கொண்ட போது அவர் பதில் அளிக்கவில்லை என்றும் இதையடுத்து வீரய்யாவின் பாஸ்போர்ட் ஜெராக்ஸ், விசா ஆவணங்களை தூதரக அதிகாரிகள் கேட்டு மீட்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளதாகவும் நவ்தீப் சூரி தெரிவித்தார்.

    வீரய்யா வெளிட்ட வீடியோ சவுதியில் உள்ள ஒரு பாலைவன பகுதியில் தான் எடுக்கப்பட்டுள்ளது. அதில் வீரய்யாவின் பின்னால் 100-க்கும் மேற்பட்ட ஒட்டகங்கள் செல்கிறது. இந்த பகுதி ஜோர்தான் எல்லையில் எடுக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

    வளைகுடா- தெலுங்கானா பொது நல மற்றும் கலாசார கூட்டமைப்பின் தலைவர் பட்குரி பசந்த் ரெட்டி, சவுதி அரேபியாவில் உள்ள தெலுங்கு மக்கள் மூலம் வீரய்யாவின் இருப்பிடத்தை கண்டு பிடிக்கும் பணிகள் நடந்து வருவதாக கூறி உள்ளார்.

    தூதரக அதிகாரிகள் குழுவை அனுப்பி வீரய்யாவை கண்டு பிடித்து மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் பசந்த் ரெட்டி கூறினார்.

    வீரய்யாவின் தாயார் கடந்த மார்ச் 30-ந்தேதி இறந்துபோனார். அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்வதற்கு கூட வீரய்யாவை சொந்த ஊருக்கு அனுப்ப மறுத்து விட்டார்கள்.

    தற்போது அவரது இருப்பிடத்தை கண்டு பிடித்து மீட்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.
    நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை தாக்கி சித்ரவதை செய்த தச்சு தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை ஜீவானந்தபுரம் எம்.ஜி.ஆர். வீதியை சேர்ந்தவர் வெங்கடேசன், தச்சு தொழிலாளி. இவரது மனைவி புவனேஸ்வரி (வயது30). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதற்கிடையே புவனேஸ்வரியின் நடத்தையில் வெங்கடேசன் சந்தேகம் அடைந்தார். இதனால் தினமும் மதுகுடித்துவிட்டு புவனேஸ்வரியை அடித்து உதைத்து சித்ரவதை செய்து வந்தார்.

    அதுபோல நேற்று மதியம் வெங்கடேசன் மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது மீண்டும் இதுதொடர்பாக கணவன்- மனைவிக்கிடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த வெங்கடேசன் தேங்காய் திருவியால் மனைவியை தாக்கினார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த புவனேஸ்வரி கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    பின்னர் இதுகுறித்து கோரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் வழக்குபதிவு செய்து வெங்கடேசனை கைது செய்தனர்.

    புதுவையில் மோட்டார்சைக்கிளில் வீடு திரும்பிய கல்லூரி மாணவரை நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்த கஞ்சா கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பாகூர்:

    புதுவை தவளக்குப்பம் அருகே ஆண்டியார்பாளையம் காலனி முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் சசி அரிகரன் (வயது 20). இவர் வில்லியனூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    நேற்று மாலை கல்லூரி முடிந்து சசி அரிகரன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது நல்லவாடு பகுதியை சேர்ந்த கஞ்சா பழக்கம் உள்ள கும்பல் ஒன்று சசி அரிகரனை திடீரென வழிமறித்தது. பின்னர் அந்த கும்பல் கத்தியை காட்டி மிரட்டி சசி அரிகரன் மோட்டார் சைக்கிளை கடத்தி சென்றது.

    அங்குள்ள முந்திரி தோப்புக்கு சசி அரிகரனை கொண்டு சென்ற அந்த கும்பல் அங்கு அவருடைய ஆடைகளை அகற்றி நிர்வாணமாக்கி அடித்து உதைத்து சித்ரவதை செய்தது.

    இதுபற்றி தகவல் அறிந்த சசி அரிகரனின் உறவினர்கள் மற்றும் ஆண்டியார் பாளையம் காலனி மக்கள் சம்பவ இடத்துக்கு திரண்டு வந்தனர். இதனை பார்த்ததும் மாணவரை கடத்தி சென்ற கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

    இதையடுத்து கஞ்சா கும்பல் தாக்கியதில் காயம் அடைந்த சசி அரிகரனை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதற்கிடையே மாணவரை கடத்தி சென்று நிர்வாணமாக்கி சித்ரவதை செய்த கும்பலை கைது செய்ய கோரி ஆண்டியார் பாளையம் காலனி மக்கள் தவளக்குப்பம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு அப்துல்ரகீம், இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி மாணவரை சித்ரவதை செய்த கும்பலை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை ஏற்று கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த நிலையில் கல்லூரி மாணவரை நிர்வாணமாக்கி சித்ரவதை செய்த கும்பல் அங்குள்ள சவுக்கு தோப்பில் பதுங்கி இருந்தது. அவர்களை இன்று அதிகாலை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    அரசு பள்ளி மாணவனை கடத்தி சித்ரவதை செய்ததில் காயம் அடைந்த அவன் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறான்.

    முள்ளக்காடு:

    தூத்துக்குடி முத்தையாபுரம் கீதாநகரை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் சொந்தமாக என்ஜினீயரிங் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மகன் சதீஷ்குமார் (வயது 14). இவன் ஸ்பிக்நகர் அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான்.

    இதே பள்ளியில் அமிஸ் எபன் (14) என்ற மாணவனும் 9-ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த சில நாட்களுக்கு முன்னர் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லும் போது சதீஷ்குமாரும், அமிஸ் எபன்னும் சண்டையிட்டுள்ளனர்.

    பின்னர் மறுநாள் சைக்கிளில் வரும் போது எதிர் பாராதவிதமாக ஒருவருடன் ஒருவர் உரசி இருவரும் கீழே விழுந்துள்ளனர். இதில் அமிஸ் எபனின் சைக்கிள் முன்பகுதி சேதம் அடைந்துள்ளது. இதனை வீட்டிற்கு சென்றதும் தனது தந்தையிடம் கூறியுள்ளான். இதை கேட்டு அவனது தந்தை ஆத்திரமடைந்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த 11-ந் தேதி பள்ளி முடிந்து சதீஷ்குமார் வீடு திரும்பி கொண்டிருந்தான். அப்போது அமிஸ் எபனின் தந்தை, மாணவன் சதீஷ்குமாரை தாக்கி தனது பைக்கில் கடத்தி உள்ளார்.

    பின்னர் கனநீர் ஆலை ஊழியர் குடியிருப்பான ஹெவி வாட்டர் காலனியில் உள்ள தனது வீட்டிற்கு கடத்தி சென்றார். மேலும் மாணவனை அவர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    அப்போது அங்கு வந்த மாணவன் சதீஷ்குமாரின் தந்தை பாலமுருகன் இதை பார்த்து அதிர்ச்சியடைந்து தட்டிக் கேட்டார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து மாணவனை வெளியே அனுப்பி கதவை அடைத்தார்.

    இதில் காயம் அடைந்த மாணவன் சதீஷ் குமார் தனக்கு வயிறு வலிப்பதாக கூறியதால் அவனை தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான்.

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே சொத்தை எழுதி கேட்டு கணவரை அறையில் அடைத்து சூடு போட்டு சித்ரவதை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.
    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை தெற்கு புது வீதியை சேர்ந்தவர் நாராயணசாமி என்கிற ரமேஷ் (வயது 50).

    இவரது மனைவி பெயர் லலிதா (45). மகன் ஸ்ரீநாத் (20). இவர் கல்லூரி படிப்பை முடித்து உள்ளார்.

    நாராயணசாமி பெயரில் ரூ.2 கோடிக்கு சொத்து உள்ளது. மேலும் மாத வாடகை பணமும் ரூ.30 ஆயிரம் வருகிறது.

    நாராயணசாமியின் மனைவி மற்றும் மகனும் சொத்தை எழுதி கேட்டுள்ளனர். மனைவி லலிதா “உங்களிடம் உள்ள சொத்துகளை இப்போதே எனது பெயரில் மாற்றி எழுதி கொடுங்கள்” என்று கட்டாயப்படுத்தினாராம்.

    ஆனால் இதற்கு நாராயணசாமி மறுத்து உள்ளார். “உன் பெயருக்கு இப்போது சொத்தை மாற்ற மாட்டேன். பிறகு பார்க்கலாம்” என்று கூறினாராம்.

    இது தொடர்பாக அவர்களுக்குள் வாக்கு வாதமும் தகராறும் ஏற்பட்டது. இந்த நிலையில் நாராயணசாமியை அவரது மனைவியும் மகனும் சேர்ந்து வீட்டில் ஒரு அறையில் கடந்த ஒரு வாரமாக வெளியே செல்லவிடாமல் அடைத்து வைத்துள்ளனர். சொத்தை எழுதி கேட்டு உள்ளனர்.

    அப்போதும் நாராயணசாமி மறுக்கவே மனைவியும் மகனும் அவரது உடலில் பல இடங்களில் சூடுபோட்டு சித்ரவதை செய்தார்கள்.

    நேற்று இரவு 10 மணியளவில் மனைவி சித்ரவதை தாங்காமல் சத்தம் போட்டார். இந்த சத்தத்தை கேட்டு பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் ஈரோடு சூரம்பட்டியில் உள்ள நாராயணசாமியின் உறவினர் கோபால் என்பவருக்கு தகவல் கொடுத்தார். உடனே அவர் சென்னிமலைக்கு விரைந்தார்.

    வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நாராயணசாமியை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார்.

    அவரது உடலில் சூடு போடப்பட்டிருந்ததால் தீக்காயத்துக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    பிறகு இது குறித்து சென்னிமலை போலீசிலும் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    கணவரை அறையில் அடைத்து சூடு போட்டு சித்ரவதை செய்த மனைவி லலிதா மற்றும் மகன் ஸ்ரீநாத்தையும் போலீசார் கைது செய்தனர்.

    பிறகு இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த சம்பவம் சென்னிமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக 95 வாலிபர்களை சட்டவிரோத காவலில் வைத்து போலீசார் சித்ரவதை செய்தது தெரிய வந்துள்ளது. அந்த வாலிபர்களுக்கு ஜாமீன் அளிக்கப்பட்டது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து, 126 கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன், பலர் சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டதாகவும் தகவல் பரவியது.

    இதுதொடர்பாக சந்திரசேகர் என்ற வக்கீல், தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு பகவதி அம்மாளிடம் ஒரு மனு கொடுத்தார். சட்டவிரோத காவல் பற்றி விசாரணை நடத்தி, அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    அதை ஏற்று, வல்லநாடு துப்பாக்கி பயிற்சி சரகத்தில், சட்டவிரோத காவலில் யாராவது வைக்கப்பட்டுள்ளார்களா? என்று நேரில் போய் விசாரிக்குமாறு விளாத்திகுளம் மாஜிஸ்திரேட்டு காளிமுத்துவேலுக்கு மாஜிஸ்திரேட்டு பகவதி அம்மாள் உத்தரவிட்டார்.

    அதன்படி, மாஜிஸ்திரேட்டு காளிமுத்துவேல், நேரில் சென்று பார்த்தார். அங்கு 95 வாலிபர்கள் அடைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அங்கிருந்த போலீசாரிடம் விசாரித்தபோது, அனைவரும் சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டு இருப்பதை உணர்ந்து கொண்டார்.

    அதனால், அந்த வாலிபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்புங்கள் அல்லது விடுதலை செய்யுங்கள் என்று போலீசாருக்கு உத்தரவிட்டார். போலீசாரும் வேறு வழியின்றி, 65 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விட்டு, மீதி 30 பேரை விடுவித்தனர்.

    வழக்கு போடப்பட்ட 65 பேரும் மாஜிஸ்திரேட்டு அண்ணாமலை முன்பு நிறுத்தப்பட்டனர். அவர்களை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப அண்ணாமலை உத்தரவிட்டார்.

    இதற்கிடையே, 65 பேரின் ஜாமீன் மனுக்களையும் இரவு முழுவதும் அமர்ந்து விசாரிக்குமாறு மாவட்ட நீதிபதி சாருஹாசினிக்கு மதுரை ஐகோர்ட்டு பதிவாளர் உத்தரவிட்டார்.

    அதை ஏற்று, ஜாமீன் மனுக்களை விசாரித்து 65 பேரையும் நீதிபதி சாருஹாசினி விடுதலை செய்தார். மேற்கொண்டு யாராவது ஜாமீன் மனு போடக்கூடும் என்று எதிர்பார்த்து, அவர் நள்ளிரவுவரை கோர்ட்டில் அமர்ந்திருந்தார். வேறு யாரும் ஜாமீன் மனு போட வரவில்லை என்று அறிந்த பிறகு, இரவு 11 மணிக்கு புறப்பட்டு சென்றார். யாராவது ஜாமீன் மனு போட்டால், தனது வீட்டுக்கு அழைத்து வாருங்கள் என்று வக்கீல்களிடம் கூறிவிட்டு சென்றார். அவரது அணுகுமுறையை வக்கீல்கள் பாராட்டினர்.

    ஜாமீனில் விடுவிக்கப்பட்ட 65 பேரும் மருத்துவ பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். பலர் ரத்தக்காயத்துடன் காணப்பட்டனர். தாங்க முடியாத வலியுடனும், காயங்களுடனும் நடந்து சென்றனர். சட்டவிரோத காவலில் அவர்கள் சித்ரவதை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    மேலும், இந்த சித்ரவதை பற்றி மாஜிஸ்திரேட்டு அண்ணாமலையிடம் அவர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். இது, மனித உரிமை ஆணைய விசாரணையின்போது, போலீசாருக்கு பாதகமாக அமையும் என்று கூறப்படுகிறது.
    ×