search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவ"

    11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டுள்ளது. 95 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். #Plus1Result
    சென்னை:

    தமிழகத்தில் 11-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 6-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடந்தது. இந்த தேர்வினை சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதியுள்ளனர். விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்ததையடுத்து தேர்வு முடிவு இன்று வெளியிடப்படுள்ளது.



    11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 95 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 96.5 சதவீதமும், மாணவர்கள் 93.3 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசுப் பள்ளிகள் 90.6 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 2636 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
     
    www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவு எண், பிறந்த தேதி, மாதம், வருடத்தை பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துகொள்ளலாம். மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

    பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். (குறுஞ்செய்தி) மூலமாக தேர்வு முடிவு அனுப்பப்படும். தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ். மூலமாக அனுப்பப்படுகிறது.

    இணையதளம் வழியாக மதிப்பெண் பட்டியலும் வழங்கப்படும். அரசு தேர்வுத் துறையால் அச்சடிக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் வரை மட்டுமே இந்த மதிப்பெண் பட்டியல் செல்லுபடியாகும். வருகிற 14-ந் தேதி பிற்பகல் முதல் தாங்கள் படித்த மற்றும் தேர்வு எழுதிய தேர்வு மையத்தின் தலைமை ஆசிரியர் மூலமாக மதிப்பெண் பட்டியலை மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம். 16-ந் தேதி பிற்பகல் முதல் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

    விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு வருகிற 10, 11-ந் தேதி மற்றும் 13-ந் தேதிகளில் விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகலுக்கு ஒரு பாடத்துக்கு ரூ.275-ம், மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்துக்கு ரூ.305-ம், மற்ற பாடங்களுக்கு ரூ.205-ம் கட்டணமாக செலுத்தவேண்டும். விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான கட்டணத்தை அந்தந்த பள்ளிகளிலேயே மாணவர்கள் பணமாக செலுத்தவேண்டும்.

    11-ம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்களுக்கும், வருகை புரியாதவர்களுக்கும் ஜூன் மாதம் 14-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை சிறப்பு துணைத்தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்பிக்க வேண்டிய தேதிகள் குறித்து விரைவில் தனியே அறிவிப்பு வெளியிடப்படும். #Plus1Result
     
    பள்ளிபாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 7 அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளின் மாணவ, மாணவிகள் 1,694 பேருக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா பள்ளிபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
    பள்ளிபாளையம்:

    பள்ளிபாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 7 அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளின் மாணவ, மாணவிகள் 1,694 பேருக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா பள்ளிபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

    இந்த விழாவிற்கு நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா வரவேற்றார். சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா வாழ்த்தி பேசினார். சிறப்பு அழைப்பாளராக மின்துறை அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு சைக்கிள்களை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசும்போது, குமாரபாளையத்தில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. மேலும் பொறியியல் கல்லூரி கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. நமது மாநிலத்தில் இவ்வாறு வழங்கப்படுவதை பார்த்து மற்ற மாநிலங்கள் இதை பின்பற்றுகின்றன. மாணவ, மாணவிகள் அரசின் உதவிகளை பெற்று பயனடைந்து தமிழகத்தை முன் மாதிரி மாநிலமாக திகழ செய்ய வேண்டும், என்றார்.

    முடிவில் தலைமை ஆசிரியர் கருப்பண்ணன் நன்றி கூறினார்.

    விழாவில் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் தங்கவேல், ஊராட்சி ஒன்றிய குழு முன்னாள் தலைவர் செந்தில், நகராட்சி முன்னாள் தலைவர் வெள்ளிங்கிரி, டி.சி.எம்.எஸ். தலைவர் மூர்த்தி, நகராட்சி முன்னாள் துணை தலைவர் சுப்பிரமணியம், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
    கொளத்தூர் அருகே மாதிரி பள்ளியில் தேனீக்கள் கொட்டியதில் காயம் அடைந்த 30 மாணவ, மாணவிகளுக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
    கொளத்தூர்:

    கொளத்தூரை அடுத்த மாங்காடு பகுதியில் அரசு மாதிரி பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 237 மாணவர்களும், 213 மாணவிகளும் படித்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று உலக கை கழுவும் தினம் என்பதால் அப்பள்ளி ஆசிரியர்கள் கை கழுவதை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவ-மாணவிகளுக்கு சோப் வழங்கி கை கழுவ செய்ததாக கூறப்படுகிறது. அப்போது பள்ளியின் பின்புறம் இருந்து வந்த தேனீக்கள் கூட்டம் அங்கிருந்த மாணவ-மாணவிகளை கொட்டியது. இதில் மாணவ-மாணவிகள் அலறியடித்து ஓடினர்.

    இதைத்தொடர்ந்து அங்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு தேனீக்கள் கொட்டியதில் பாதிக்கப்பட்டு காயம் அடைந்த 30 மாணவ- மாணவிகளும் கொளத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மேட்டூர் அரசு ஆஸ்பத்திரி மருத்துவர்களும் பள்ளிக்கு வந்து பாதிக்கப்பட்ட மாணவ- மாணவிகளுக்கு சிகிச்சை அளித்தனர். தேனீக்கள் கொட்டியதில் அதிகம் பாதிப்படைந்த குபேரன் என்ற 9-ம் வகுப்பு மாணவனும், அவனை பள்ளிக்கு அழைத்து வந்த அவனது தந்தை ராஜவேல் என்பவரும் மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தால் பள்ளிக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது. தகவல் அறிந்த மேட்டூர் எம்.எல்.ஏ. செம்மலை பாதிப்புக்குள்ளான மாணவ-மாணவிகளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று சந்தித்து பேசினார்.
    ×