search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 109600"

    • பேரூராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்ததால் பரபரப்பு
    • பேரூராட்சி செயல் அலுவலர் மாவட்ட கலெக்டரிடம் எடுத்து கூறி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்

    கன்னியாகுமரி:

    வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை பொது இடத்தில் விடாமல் வீட்டுக்குள்ளேயே உறிஞ்சிக் குழாய் அமைத்து விட வேண்டும் என்று பொதுமக்களை அரசு அறிவுறுத்தி உள்ளது.இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துஉள்ளனர். இருப்பினும் அதை பேரூராட்சி நிர்வாகம் நிறைவேற்றி வருகிறது.

    இந்த நிலையில் கொட்டாரம் பேரூராட்சிக்கு உட்பட்ட சில வார்டு பகுதிகளில் உள்ள ஒரு சில வீடுகளில் கழிவு நீர் வெளியேறும் குழாய் பேரூராட்சி சார்பில் அடைக்கப்பட்டது.

    இதற்கு அந்தப் பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து கொட்டாரம் ராமநாதபுரம் ஸ்ரீ கற்பக விநாயகர் தேவஸ்தான தலைவர் சிவசுப்பிரமணியம், கொட்டாரம் கீழத்தெரு ஸ்ரீ சந்தனமாரியம்மன் கோவில் நிர்வாக குழு தலைவர் ஐயப்பன் மற்றும் கொட்டாரம் வடக்கு தெரு ஸ்ரீ தேவி முத்தாரம்மன் கோவில் நிர்வாக குழு தலைவர் ஏ. பிச்சமுத்து ஆகியோர் தலைமையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொட்டாரம் பேரூராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இது பற்றி தகவல் அறிந்ததும் கொட்டாரம் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜ நம்பி கிருஷ்ணன், கொட்டாரம் பேரூராட்சி 7-வது வார்டு கவுன்சிலர்செல்வன் ஆகியோர் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    அப்போது இந்த 3 தெரு நிர்வாகம் சார்பில் கொட்டாரம் பேரூராட்சி பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து கழிவு நீர் வெளியேறும் குழாயை நிரந்தரமாக அடைப்பதற்கு பதிலாக பாதாள சாக்கடை திட்டம் அல்லது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து மாற்று ஏற்பாடு செய்யும்படி பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு கொடுக்கப்பட்டது. மனுவை பெற்றுக் கொண்ட பேரூராட்சி செயல் அலுவலர் இது பற்றி மாவட்ட கலெக்டரிடம் எடுத்து கூறி அதற்கான நடவடிக்கை எடுக்க இருப்பதாக அவர்களிடம் உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து பேரூராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்த பொதுமக்கள் அங்குஇருந்து கலைந்து சென்றனர்.

    • எரிவாயு தகண மேடை டென்டர் குறித்து உறுப்பினர்கள் வாக்குவாதம் செய்யும் நிலை தலைகுணிவாக உள்ளது.
    • பழைய பஸ் நிலையத்தில் கட்டண கழிப்பறையில் கழிவு நீர் வெளியேறி தேங்கி நிற்கிறது.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சி அவை கூடத்தில் நகர மன்ற கூட்டம் நடைபெற்றது. நகரமன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர் தலைமை வகித்தார். ஆணையர் (பொ) ராஜகோபாலன், மேலாளர் காதர்கான், சுகாதார ஆய்வாளர் செந்தில் ராம்குமார், நகர அமைப்பு ஆய்வாளர் நாகராஜன், வருவாய் ஆய்வாளர் சார்லஸ், நகர மன்ற துணைத் தலைவர் சுப்பராயன் முன்னிலை வகித்தனர். மன்ற பொருள்களை கணக்கர் ராஜகணேஷ் வாசித்தார். கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு,

    உறுப்பினர் ரம்யாதன்ராஜ் பேசுகையில், எனது வார்டில் கடந்த ஐந்து மாதங்களாக மின்விளக்குகள் எரியவில்லை பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.

    கவுன்சிலர் வள்ளிமாரிமுத்து: மேட்டு தெருவில் சிமெண்ட் சாலை அமைத்து தர வேண்டும். கவுன்சிலர் வேல்முருகன்: சீர்காழி தீயணைப்புநிலையத்திற்கு தீயணைப்பு வாகனம் எளிதாக சென்று வரும் வகையில் சாலை அமைத்திடவேண்டும்.

    கவுன்சிலர் ராஜசேகர்: நகரில் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கின்ற நிலையில் எரிவாயு தகண மேடை டென்டர் குறித்து உறுப்பினர்கள் வாக்குவாதம் செய்யும் நிலை தலைகுணிவாக உள்ளது என்றார். குறைந்த விலையில் ஒப்பந்தப்புள்ளி கோரூபவர்களுக்கு டெண்டர் கொடுப்பதுதான் முறையாகும்.

    கவுன்சிலர் முழுமதி இமயவரம்பன்: எனது வார்டில் பள்ளி கட்டிடம் பழுதாய் உள்ளது. இதை போல் சத்துணவு கூடமும் பழுது அடைந்துள்ளது இதனை சரி செய்ய வேண்டும். பனமங்கலம் பகுதி மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும்.

    கவுன்சிலர் சுவாமிநாதன்: பழைய பஸ் நிலையத்தில் கட்டணக் கழிப்பறையில் கழிவு நீர் வெளியேறி தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது.

    கவுன்சிலர் ரமாமணி : முன்பு எரிவாயு தகணமேடை நடத்திவந்தவரிடம் பணியாற்றி தற்போது டென்டர் கோரூம் பாபு கொரோனா காலகட்டத்தில் சிறப்பாக சேவை செய்ததால் அவருக்கு டென்டர் விடவேண்டும்.

    நகரமன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி பேசுகையில், சீர்காழி நகராட்சி பகுதியில் பொது நிதியின் மூலம் மின்விளக்குகள் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். வடிகால் வசதி விரைந்து கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடத்தப்படும் என்றார்.

    தொடர்ந்து நகராட்சி கூட்டத்தில் ஈசானிய தெருவில் நகராட்சிக்கு நிர்வாகத்திற்கு கீழ் சேவை அமைப்பால் நடத்தப்பட்டு வரும் எரிவாயு தகணமேடை டென்டர் விடுவது தொடர்பாக நகர்மன்ற உறுப்பினர்கள் இடையே கட்சி பாகுபாடு இல்லாமல் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் வாக்குவாதம் ஏற்பட்டது. நகர்மன்ற உறுப்பினர்கள் பலர் நகர்மன்ற தலைவர் மேஜையை சூழ்ந்துக் கொண்டு மேஜையை தட்டி ஆட்சேபனை செய்து விவாதத்தில் ஈடுப்பட்டனர்.

    குறைந்த ஒப்பந்தப்புள்ளி கோரியிருந்த காமராஜர் மக்கள் நலசேவை அறக்கட்டளைக்கு ஒப்பந்தம் வழங்கப்படும் என தலைவர் துர்காபரமேஸ்வரி அறிவித்தார். இதனால் நகராட்சியில் பரபரப்பு ஏற்பட்டது. டென்டரை நேசக்கரங்கள் அமைப்பிற்கு தரவலியுறுத்தி நகர்மன்ற உறுப்பினர்கள் பாலமுருகன், முழுமதி இமயவரம்பன், ராமு, ராஜேஷ், நித்யாதேவி, வள்ளி, கலைசெல்வி, ரம்யா, ரேணுகாதேவி ஆகிய 9 உறுப்பினர்கள் கவுன்சிலர்கள் முழங்கங்கள் எழுப்பியவாறு வெளிநடப்பு செய்தனர்.

    • வீடுகள், வர்த்தக கட்டிடங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து கழிவு நீர் மிக அதிக அளவில் வெளியேற்றப்படுகிறது.
    • சுகாதார சீர்கேடு ஏற்படு வதிலிருந்து நிலத்தையும், நீரையும் காப்பது நமது தலையாய கடமையாகும். இது குறித்து தற்போது மிகவும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகை, பருவநிலை மாற்றம், நாகரீகத்தின் நவீன பாதிப்பு, அதிகரித்து வரும் கட்டு மானங்கள், ஏனைய காரணங்களினால் வீடுகள், வர்த்தக கட்டிடங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து கழிவு நீர் மிக அதிக அளவில் வெளியேற்றப்படுகிறது.

    இது மனித ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக உள் ளது. குடியிருப்பு பகுதி களில் இருந்தும், வணிகம் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்தும் வெளியேற்றப்ப டும் கழிவுநீர் கால்வாய்களிலும், குழாய்கள் மூலம் வாய்க்கால்களிலும் கலக்கப்படுவதால் நீர் மாசடைந்து, பாசன நிலங்களும் மாசடைந்து சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

    விவசாய நிலம் பாதிக்கப்பட்டு உற்பத்திலும், உணவிலும் நச்சு கலக்கும் அபாயம் ஏற்படுகிறது. மனிதர்கள் குடிக்கும், குளிக்கும் நீரில் சாக்கடைநீர் கலந்து வருவதால் நோய் பாதிப்புகள் ஏற்படும் சூழ்நிலையும் உருவாகி வருகிறது. மேலும் பொது இடங்களில் கழிவு நீர் வெளியேற்றப்படுவதால் அவ்விடம் மழைக்கா லங்களில் சேறும் சகதியு மாக காட்சியளித்து கொசுக் கள் உற்பத்தியாக வழி வகுக்கிறது.

    சுகாதார சீர்கேடு ஏற்படு வதிலிருந்து நிலத்தையும், நீரையும் காப்பது நமது தலையாய கடமையாகும். இது குறித்து தற்போது மிகவும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இதன் பொருட்டு நகராட்சி மற்றும் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பு கட்டிடங்கள், வணிக நிறுவனங்கள், தொழிற்கூடங்கள் ஆகிய வற்றில் இருந்து உருவாகும் கழிவுநீரினை அதனை உருவாக்குபவர்களாலேயே முறையாக கையாளும் வகையில் அக்கட்டிடங்களில் இருந்து கழிவுநீர் பொது இடத்தில் வெளியேறாமல் தடுக்க கட்டிட உரிமையா ளரால் கழிவுநீர் உறிஞ்சு குழி அமைக்கவும், மீறும் இடங்களில் நிர்வாக அலுவலர்கள் மூலம் கழிவு நீர் வெளியேறும் முகப்பினை அடைக்கவும் 01.09.2022 முதல் 09.09.2022 வரை சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது.

    எனவே, இதற்கு பொது மக்கள் உரிய ஒத்துழைப்பு வழங்கி கன்னியாகுமரி மாவட்டத்தை நன்னீரில் கழிவுநீர் கலக்காத மாவட் டமாக மாற்றிட முன்வர வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறி யுள்ளார்.

    • வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் உறிஞ்சு குழி மூலம் நிலத்துக்குள் செலுத்தப்படுகிறது.
    • குப்பை, கழிவுகளும் குளம், குட்டையில் கலப்பதால் நீர்நிலை மாசுபடுகிறது

    அவிநாசி :

    கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் உறிஞ்சு குழி மூலம் நிலத்துக்குள் செலுத்தப்படுகிறது. பல இடங்களில் கழிவுநீர் நேரடியாக குளம், குட்டைகளில் கலக்கிறது. கழிவுநீருடன் குப்பை, கழிவுகளும் குளம், குட்டையில் கலப்பதால் நீர்நிலை மாசுபடுகிறது.இதனை குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளில் கழிவுநீரை வெளியேற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கால்வாய் கட்டமைப்பில், செங்குத்து உறிஞ்சுகுழி அமைக்க ஊரக வளர்ச்சி முகமை துறையினர் ஊக்குவித்து வருகின்றனர்.

    அவ்வகையில் கால்வாய் அல்லது வடிகாலில் பொருத்தப்பட்டுள்ள சல்லடையில் தண்ணீருடன் வழிந்தோடி வரும் குப்பை, பாலிதீன் போன்ற பொருட்கள் தேங்கி நின்று தண்ணீர் மட்டும் உறிஞ்சுகுழியில் விழுந்து நிலத்தடிக்கு செல்லும் வகையில் வடிமைக்கப்பட்டுள்ளது.இருப்பினும் பல இடங்களில் இத்திட்டம் உரிய பலன் தருவதில்லை என்ற புகார் உள்ளது. குறைந்த அளவு தண்ணீர் வழிந்தோடி வரும் கால்வாயில் ஏற்படுத்தப்படும் இந்த கட்டமைப்பு உரிய பலன் தருவதாகவும் இயற்கை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

    • திருமங்கலம் அருகே சாலை அகலப்படுத்தும் பணியால் புதியதாக அமைக்கப்பட்ட கழிவுநீர்உறிஞ்சு குழாய் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
    • தற்போது அரசுநிதி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது என வேதனை தெரிவித்தனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் ஒன்றியத்தி ற்குட்பட்ட நடுக்கோட்டை கிராமத்தில் பொதுநிதியில் ரூ. 1 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் கழிவுநீர் உறிஞ்சுகுழாய் கடந்த 4 தினங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இதன் மூலமாக நடுக்கோட்டை ஊராட்சி கீரியகவுண்டபட்டி காலனியில் இருந்து வரத்து கால்வாய் வழியாக வரும் கழிவு நீர் இந்த புதிய உறிஞ்சுகுழாயில் சுத்திகரிக்கப்பட்டு அங்கிருந்து நடுக்கோட்டை மைக்குடி அருகே கால்வாயில் கலக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மேலக்கோட்டையில் இருந்து பாரபத்தி வரையில் செல்லும் திருமங்கலம் - காரியாபட்டி ரோட்டி னை அகலப்படுத்த நெடுஞ்சாலைத்துறையினர் முடிவு செய்துள்ளனர். தற்போது 5 மீட்டர் அகலத்திலுள்ள இந்த ரோடு 7 மீட்டராக அகலப்படுத்தும் பணிகளை தொடங்கி யுள்ளனர். இதன் மூலமாக வாகன போக்குவரத்து மைக்குடி விலக்கில் இருந்து கீழக்கோட்டை, நடுக்கோட்டை, மேலக்கோ ட்டை விலக்கு வரையில் சாலை பணிகள் தொடங்கி யுள்ளன.

    முதற்கட்டமாக தற்போது கீழக்கோட்டை கிராமத்தில் சாலையோரத்தில் பள்ளம் தோண்டப்பட்டு ரோடு அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு நாள்களில் இந்த பணி அடுத்துள்ள நடுக்கோட்டை பஞ்சாயத்து எல்லையில் நடைபெறும். அப்போது புதியதாக நடுக்கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் உறிஞ்சு குழாய் அருகே சாலைபணி நடைபெறும் உள்ளதால் உறிஞ்சுகுழாய் இடிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசுநிதி ரூ. 1 ஒரு லட்சத்து 30 ஆயிரம் வீணாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை பொறி யாளர் சுந்தரவடிவே லுவிடம் கேட்ட போது சாலை அகலப்படுத்தும் பணிகள் விரைவில் நடைபெறும் என நாங்கள் ஏற்கனவே திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் நடுக்கோட்டை ஊராட்சியில் தகவல் கூறிவிட்டோம். ஆனால் அவர்கள் கண்டுகொள்ளாமல் சாலை அகலப்படுத்தும் இடத்தில் உறிஞ்சுகுழாய் அமைத்துள்ளனர். அதன்மீது தான் சாலை அகலப்படுத்தும் பணிகள் செல்லும் என்றார்.

    கீழக்கோட்டை கிராம மக்கள் கூறுகையில் இரண்டு துறை அதிகாரிகளும் முதலிலேயே கலந்து ஆலோசித்து பணிகளை தொடங்கி இருக்கலாம். தற்போது அரசுநிதி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது என வேதனை தெரிவித்தனர்.

    • வீடுகளில் கழிவுநீர் மேலாண்மைக்கான உறிஞ்சிக்குழிகள் அமைக்கும் முறைகள் குறித்து கொத்தனார்களுக்கு செயல்விளக்கம் அளித்தனர்.
    • உறிஞ்சிக்குழி அமைக்கும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து கையேடுகளையும் கொத்தனார்களுக்கு வழங்கினர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் ஊராட்சிகளில் கழிவுநீர் மேலாண்மைக்கான உறிஞ்சிக்குழிகள் அமைப்பது குறித்து கொத்தனார்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    தமிழக அரசு நித்தடிநீர் மட்டத்தை உயர்த்துவதற்கு மழைநீர் சேகரிப்பு திட்டத்தை பல ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறது.

    அதேபோல் வீடுகளில் சமையல் அறை, குளியல் அறைகளில் பயன்படுத்தப்பட்ட கழிவுநீரை சாலைகள் மற்றும் மழைநீர் வடிகால்கள் சுகாதார சீர்கேடு ஏற்படுவதை தடுக்கும் வகையில், கழிவுநீரை சுத்திகரித்து உறிஞ்சிக்குழிகள் மூலம் கழிவுநீர் மேலாண்மை செய்யும் திட்டத்தையும் செயல்படுத்தி வருகின்றனர்.

    இத்திட்டத்திற்கு மயிலாடுதுறை ஒன்றியக்குழு தலைவர் காமாட்சிமூர்த்தி தலைமை தாங்கினார்.

    ஒன்றிய ஆணையர் அன்பரசன், வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஊரக வளர்ச்சித்துறை மாவட்ட இணை இயக்குனர் முருகண்ணன், செயற்பொறியாளர் பிரேம்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு கழிவுநீரை மேலாண்மை செய்வதற்கு உறிஞ்சிக்குழிகள் அமைப்பது குறித்து மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கட்டுமான பணியில் ஈடுபடும் கொத்தனார்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    வீடுகளில் கழிவுநீர் மேலாண்மைக்கான உறிஞ்சிக்குழிகள் அமைக்கும் முறைகள் குறித்து கொத்தனார்களுக்கு நேரடி செயல்விளக்கம் அளித்தனர்.

    மேலும் உறிஞ்சிக்குழி அமைக்கும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து கையேடுகளையும் கொத்தனார்களுக்கு வழங்கினர்.

    இதில் பல்வேறு ஊராட்சிகளில் இருந்து கொத்தனார்கள் கலந்துகொண்டு மயிலாடுதுறையில் ஊராட்சிகளில் கழிவுநீர் மேலாண்மைக்கான உறிஞ்சிக்குழிகள் அமைப்பது குறித்து கொத்தனார்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    ஒன்றிய கவுன்சிலர்கள் சிவக்குமார், அர்ஜுனன், மேலாளர் ஜெயராமன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • மதுரை பைக்காரா பகுதியில் வீதிகளில் பாதாள சாக்கடை கழிவுநீர் ஆறு போல ஓடுகிறது.
    • துர்நாற்றம் வீசுவதால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

    மதுரை

    பைக்காரா பகுதிகளில் வீதிகளில் பாதாள சாக்கடை கழிவுநீர் ஆறு போல ஓடுவதால் பொதுமக்கள் நடமாட முடியாமல் பெரும் தவிப்பில் உள்ளனர்.

    மதுரை மாநகராட்சி 72-வது வார்டு பைக்காரா பகுதியில் உள்ள விவேகானந்தர் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேற வழி இன்றி வீதிகளில் ஆறு போல ஓடி வருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    வீதிகளில் நடந்து கூட செல்ல முடியாமல் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தவித்து வருகிறார்கள். கடும் துர்நாற்றம் வீசுவதால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் வீதிகளின் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு உருவாகி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    72-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் பைக்காரா கருப்புசாமி பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு பொதுமக்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இது சம்பந்தமாக உரிய அதிகாரிகளிடம் கவுன்சிலர் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.

    இது குறித்து கவுன்சிலர் கருப்புசாமி கூறியதாவது:-

    இந்த வார்டில் பல்வேறு இடங்களில் பாதாளசாக்கடை கழிவுநீர் வீதிகளில் ஆங்காங்கே பெருக்கெடுத்து ஓடுகிறது. சாக்கடைகளில் மலம் உள்ளிட்ட கழிவுகளும் வருவதால் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மதுரை மாநகராட்சி நிர்வாகம் இந்த பகுதிகளில் விரைந்து செய்து தர வேண்டும். பல்வேறு இடங்களில் குடிநீரில் சாக்கடை கலப்பதாக புகார் எழுந்துள்ளன.

    இது தொடர்பாகவும் மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் நடவடிக்கை இல்லை.

    எனவே பொதுமக்களின் நலன் கருதி விரைவாக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தற்போது பரவலாக மழையும் பெய்து வருவதால் மழை நீரும் சாக்கடை நீரும் கலந்து அந்த பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பார்வையிட்டு அதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்பதும் அவர்களின் கோரிக்கையாக உள்ளது.

    • பல்லடம் செல்லும் சாலை போக்குவரத்து நெருக்கடி நிறைந்த சாலையாகும்.
    • சில மாதங்களாக சாக்கடை வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.

    வீரபாண்டி :

    திருப்பூரில் இருந்து பல்லடம் செல்லும் சாலை போக்குவரத்து நெருக்கடி நிறைந்த சாலையாகும். அதிக வாகனங்கள் சென்று வந்து கொண்டிருக்கின்றன. திருப்பூர் மாநகராட்சி 53 -வது வார்டுக்குட்பட்ட இந்த சாலையில் நொச்சிப்பாளையம் பிரிவு, மூலக்கடை அருகே சாக்கடை நீர் செல்லும் வாய்க்கால் அமைக்கப்பட்டு கழிவுநீர் வெளியேற்றப்பட்டு வந்தது.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சாக்கடை வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து சம்பத்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் இன்று வரை எந்த நடவடிக்கையும் இல்லை. தற்போது அடிக்கடி மழை பெய்து வருவதால் சாக்கடை அடைப்பினால் தேங்கிய நீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சாக்கடை நீரில் செல்ல வேண்டியுள்ளது. மேலும் நடந்து செல்பவர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    • 15-வது வார்டு தெருக்களிலும் மெயின் ரோட்டில் உள்ள கானல்களிலும் மண்மூடி இருப்பதால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் அடித்து வருகிறது.
    • பழுதுபட்ட சாக்கடை கால்வாய்களை சீரமைத்து தேங்கியுள்ள கழிவுநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் பகுதியில் கழிவுநீர் செல்லும் சாக்கடை கால்வாய்கள் சேதமடைந்தும், உடைந்தும் உள்ளதால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசிவருகிறது.

    முதலூர்ரோடு மெயின் பஜாரில் அதிக அளவில் கடைகள், உணவகங்கள் மற்றும் குடியிருப்புகள் உள்ளன. இதனால் கழிவுநீர் செல்லும் இந்த சாலையில் உள்ள கானல்களில் பாதி அளவு கட்டப்படாமல் பழுது ஏற்பட்டு சகதி தண்ணீர் தேங்கி இருப்பதால் மிகவும் அவதிப்படுகின்றனர்.

    இது தொடர்பாக சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் புகார் கூறியும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது போன்று 15-வது வார்டு தெருக்களிலும் மெயின் ரோட்டில் உள்ள கானல்களிலும் மண்மூடி இருப்பதால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் அடித்து வருகிறது. இதனால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பழுதுபட்ட சாக்கடை கால்வாய்களையும், பாதி கட்டி முடிக்காமல் உள்ள சாக்கடைகளையும் சீரமைத்து தேங்கியுள்ள கழிவுநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மழை பெய்யாமலேயே பாலத்தின் அடியில் ரெயில் தண்டவாளத்தில் வழிந்து வரும் கழிவுநீர் குளம்போல் தேங்கி உள்ளது.
    • வாகனங்களில் செல்வோர், பள்ளி குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் கழிவுநீரை கடந்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் கோர்ட்டு வீதி சுரங்க பாலத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம் மற்றும் நடந்து செல்வோர் , தள்ளுவண்டி வியாபாரிகள் பயணிக்கின்றனர் .

    இந்த பாலத்தில் மழை பெய்யாமலேயே பாலத்தின் அடியில் ரெயில் தண்டவாளத்தில் வழிந்து வரும் கழிவுநீர் குளம்போல் தேங்கி உள்ளது.இதனால் வாகனங்களில் செல்வோர் ,பள்ளி குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் கழிவுநீரை கடந்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. பாலத்தில் அடிக்கடி தண்ணீர் தேங்கி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே தண்ணீர் தேங்காதவாறு இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   

    • கழிவு நீர் அடைப்பை சரிசெய்ய முடியாமல் ஊழியர்கள் திணறிவருகிறார்கள்.
    • பணிமாற்றம் காரணமாக முன் அனுபவம் இல்லாத ஊழியர்கள் வேலைகளை முடிப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது.

    அம்பத்தூர்:

    சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியம் சார்பில் ஒவ்வொரு வார்டுக்கும் 10-க்கும் மேற்பட்ட குடிநீர் மற்றும் கழிவுநீர்வாரிய ஊழியர்கள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர்.

    அவர்கள் அந்தந்த வார்டில் உள்ள பொது மக்களின் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் கழிவுநீர் அடைப்பு, சாலையில் வழிந்தோடும் கழிவு நீர்களை சரி செய்வது உட்பட பல்வேறு பணிகளை செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த பணியாளர்களாக பணிபுரியும் ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய கோரி கடந்த மே மாதம் பட்டினபாக்கத்தில் உள்ள குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தை ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் முற்றுகையிட்டு உண்ணாவிரதம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்களுடைய போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில் அதிகாரிகள் பேச்சு வார்த்தைக்கு வராததால் போராட்டத்தை கை விட்டு அவர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பினர்.

    இந்தநிலையில் அயனாவரம், வில்லிவாக்கம், அம்பத்தூர், போன்ற பகுதிகளில் பணிபுரியும் குடிநீர் மற்றும் கழிவு நீர் வாரிய ஒப்பந்த ஊழியர்களை அப்பகுதி குடிநீர் மற்றும் கழிவு நீர் வாரிய அதிகாரிகள் மாற்றுப் பணியை வழங்கி வருவதாக கூறப்படுகிறது.

    கழிவுநீர் அடைப்பை சரி செய்யும் ஊழியர்களுக்கு மண்டல அலுவலகத்தில் டிரைவர், கிளீனர் போன்ற பணிகளும் அங்கு டிரைவர்- கிளீனராக பணிபுரிந்தவர்களுக்கு கழிவுநீர் அடைப்பை சரி செய்யும் பணிகளும் ஒதுக்கப்படுகிறது.

    இதனால் கழிவு நீர் அடைப்பை சரிசெய்ய முடியாமல் ஊழியர்கள் திணறிவருகிறார்கள். பணிமாற்றம் காரணமாக முன் அனுபவம் இல்லாத ஊழியர்கள் வேலைகளை முடிப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக தினந்தோறும் நூற்றுக்கணக்கான புகார்கள் தொடர்ந்து குவிந்து வருகின்றன.

    • சீர்காழி அடுத்த தேனூர் கிராமத்தில் புது மண்ணியாற்றிலிருந்து பிரிந்து சீர்காழி நகர் வழியாக பல்வேறு கிராமங்களுக்கு செல்கிறது.
    • இதனால் பாசனத்திற்கு தண்ணீர் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

    சீர்காழி:

    சீர்காழி கழுமலையாற்று தண்ணீர் மூலம் திருத்தோணி புரம், சிவனார்விளாகம், திட்டை, தில்லைவிடங்கன், செம்மங்குடி, கொண்டல், வள்ளுவக்குடி, அகணி உட்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 6 ஆயிரம் ஏக்கரில் பாசனவசதி நடைபெற்று வருகிறது. சீர்காழி அடுத்த தேனூர் கிராமத்தில் புது மண்ணியாற்றிலிருந்து பிரிந்து சீர்காழி நகர் வழியாக பல்வேறு கிராமங்களுக்கு செல்கிறது. சீர்காழி நகர் பகுதி மற்றும் அகணி, நந்தியநல்லூர், கொள்ளிட முக்கூட்டு ஆகிய பகுதியில் கழுமலையாற்றில் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதியிலிருந்து கழிவுநீர் விடப்படுகிறது.

    இதனால் பாசனத்திற்கு தண்ணீர் பயன்ப டுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் ஊராட்சி மற்றும் நகர் பகுதிகளில் அனைத்து குப்பைகளையும் கழுமலையாற்றில் கொட்டப்படுவதால் பாசனஆறு பாழடைந்து வீணாகிறது. அகணி ஊராட்சி நந்தியநல்லூர் பகுதியில் கழுமலையாற்றில் தினந்தோறும் குப்பைகள் கொட்டப்பட்டும், கழிவுநீர் விடப்பட்டும் மிகவும் மோசமாக சுகாதாரசீர்கேடு ஏற்பட்டுவருகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. படித்துறையும் உடைந்து பயன்படுத்திடமுடியாத சூழலில் உள்ளது.ஆகையால் பொதுப்பணித்துறையினர் களஆய்வு செய்து கழுமலையாறில் கழிவுநீர் விடப்படுவதை தடுக்கவும், பிளாஸ்டிக்உள்ளிட்ட குப்பைகள் கொட்டப்ப டுவதை தடுத்திடவும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ×