search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூலூர்"

    அரவக்குறிச்சி, சூலூர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமனம் செய்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. #electioncommission #aravakurichiconstituency
    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் கடந்த 18ம் தேதி நடைபெற்றது. இதில் வேலூர் மக்களவை தொகுதி தவிர்த்து மற்ற 38 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடந்தது. 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்களுக்கும் மக்கள் வாக்களித்தனர்.

    இதேபோல், மே 19-ம் தேதி அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.
     
    இதற்கிடையே, அரவக்குறிச்சி, சூலூர் உள்ளிட்ட தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

    இந்த 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் வரும் 29-ம் தேதியாகும்.

    மனுக்கள் மீதான பரிசீலனை 30-ம் தேதி நடக்கிறது. மே மாதம் 2-ம் தேதி வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளாகும். அன்று மாலை 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வேட்பாளர் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும்.

    மே 19-ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படும் நிலையில்,பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளான மே 23-ம் தேதி இந்த 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும், ஏற்கனவே தேர்தல் நடத்தி முடிக்கப்பட்ட 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது. #electioncommission #aravakurichiconstituency
    சூலூர் பகுதியில் தொடர் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 4 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சூலூர்:

    சூலூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்து வந்தது. இதுகுறித்து கருமத்தம்பட்டி டி.எஸ்.பி. பாஸ்கரன் உத்தரவின் பேரில் சூலூர் இன்ஸ்பெக்டர் தங்கராஜ், சப்-இன்ஸ்பெக்டர் பாண்டிராஜ் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து சூலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தினர்.

    சூலூர் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டிராஜ் மற்றும் போலீசார் சூலூர் அடுத்துள்ள காசிகவுண்டன் புதூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் 2 பேரும் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தினர்.

    அப்போது சூலூர் பகுதிகளில் சில மாதங்களாக நடந்த தொடர் சங்கிலி பறிப்பில் தொடர்புடையவர்கள் என தெரிந்தது. அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பாப்பம்பட்டி பகுதியில் பதுங்கி இருந்த மேலும் 2 பேரை போலீசார் பிடித்தனர்.  விசாரணையில் அவர்கள் பள்ளபாளையம் பகுதியில் வசித்து வரும் ஆகாஷ் (19), சூலூர் மதியழகன் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் கணேஷ் மணி (27 ), பாலமுருகன் (22), காளையார்கோவில் பகுதியை சேர்ந்த காளீஸ்வரன் (24)என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.

    மேலும் அவர்கள் பதுக்கி வைத்திருந்த சுமார் 19 பவுன் தங்க நகைகளையும் மீட்டனர். இதை தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் சூலூர் கோர்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    தமிழகத்தில் காலியாக உள்ள மேலும் 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக-அதிமுக இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இரண்டு கட்சிகளும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியை தொடங்கியுள்ளனர். #Bypolls #TNByelections

    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் காரணமாக திருவாரூர் சட்டசபை தொகுதியும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. போஸ் மரணம் காரணமாக திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதியும் காலி இடங்கள் ஆனது.

    இதற்கிடையே டி.டி.வி. தினகரனை ஆதரித்ததால் பெரம்பூர், சோளிங்கர், ஒட்டப்பிடாரம், சாத்தூர், விளாத்திக்குளம், பரமக்குடி, திருப்போரூர், பூந்தமல்லி, நிலக்கோட்டை, ஆம்பூர், குடியாத்தம், அரவக்குறிச்சி, பாப்பிரெட்டிபட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், தஞ்சை, அரூர், மானாமதுரை ஆகிய 18 சட்டசபை தொகுதி இடங்கள் காலி இடங்களாக அறிவிக்கப்பட்டன.

    இந்த நிலையில் அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டி, பழைய வழக்கு ஒன்றில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதால் அவர் எம்.எல்.ஏ. பதவி பறிபோனது. இதனால் அவர் வெற்றி பெற்றிருந்த ஓசூர் தொகுதியும் காலி இடமாக அறிவிக்கப்பட்டது. மொத்தம் 21 இடங்கள் காலி இடங்களாக இருந்தன.

    கடந்த மாதம் பாராளுமன்ற தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டபோது தமிழகத்தில் ஏப்ரல் 18-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் போது 18 சட்டசபை தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகள் தொடர்பான வழக்குகள் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால் இடைத்தேர்தல் நடத்த இயலாது என்று தேர்தல் ஆணையம் கூறியது.

    தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை தி.மு.க., காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. ஆளும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாக தி.மு.க. தரப்பில் புகார் கூறப்பட்டது. இதை மறுத்த தேர்தல் ஆணையம், “அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் வழக்குகள் வாபஸ் பெறப்பட்டால் தேர்தல் நடத்த தயார்” என்று அறிவித்தது.

    இதைத் தொடர்ந்து அந்த 3 தொகுதிகளிலும் தேர்தல் தொடர்பான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன. இதனால் அந்த 3 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவது பற்றி தேர்தல் ஆணையம் ஆலோசித்து வந்தது. இதற்கிடையே சூலூர் சட்ட சபை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கனகராஜ் மாரடைப்பால் மரணம் அடைந்ததால் காலியாக இருக்கும் தொகுதிகள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.

    இந்த 4 தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் (மே) 19-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. பாராளுமன்ற தேர்தலின் கடைசி கட்ட 7-வது ஓட்டுப்பதிவு தினமான 19-ந்தேதியை 4 தொகுதி இடைத்தேர்தல் தேதியாக தேர்தல் ஆணையம் தேர்வு செய்துள்ளது.

    4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 29-ந்தேதி மனுத்தாக்கலுக்கு கடைசி நாளாகும். ஏப்ரல் 30-ந்தேதி மனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும். மனுக்களை வாபஸ் பெற மே மாதம் 2-ந்தேதி கடைசி நாளாகும்.

    திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய 4 தொகுதிகளிலும் 2016-ம் ஆண்டு தேர்தலின்போது அ.தி.மு.க. வெற்றி பெற்றது. தி.மு.க. அந்த தேர்தலில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி இரு தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது. சூலூர் தொகுதியை காங்கிரசுக்கும், ஒட்டப்பிடாரம் தொகுதியை புதிய தமிழகம் கட்சிக்கும் விட்டுக் கொடுத்திருந்தது.

     


    ஆனால் இந்த தடவை இடைத்தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி இருப்பதால் 4 தொகுதிகளிலும் தனது வேட்பாளர்களையே களம் இறக்க தி.மு.க. முடிவு செய்துள்ளது. இதனால் 4 தொகுதி இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. - தி.மு.க. இடையே நேரடி போட்டி உருவாகி இருக்கிறது.

    4 தொகுதி இடைத்தேர்தலிலும் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற தீவிர முனைப்புடன் அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் உள்ளன. எனவே அதற்கு ஏற்ப தகுதியான வேட்பாளர்களை களம் இறக்க இரு கட்சிகளிலும் இப்போதே விவாதமும், ஆலோசனைகளும் தொடங்கி விட்டது.

    மனுத்தாக்கல் தொடங்கும் 22-ந்தேதிக்கு முன்னதாக வேட்பாளர்களை அறிவிக்க அ.தி.மு.க., தி.மு.க. தலைவர்கள் தயாராகி வருகிறார்கள். தி.மு.க.வில் திருப்பரங்குன்றம் தொகுதியில் டாக்டர் சரவணன், அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில் பாலாஜி மீண்டும் போட்டியிடுவது உறுதியாகி விட்டது.

    ஒட்டப்பிடாரம் தொகுதியில் ஒன்றிய தி.மு.க. செயலாளர் சண்முகையா, சூலூர் தொகுதியில் தி.மு.க. பிரமுகர்கள் ராஜேந்திரன், மன்னவன், தளபதி முருகேசன் ஆகிய மூவரில் ஒருவர் வேட்பாளராக வாய்ப்புள்ளது. அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க.வும் வேட்பாளர் தேர்வு ஆலோசனையை தொடங்கி விட்டன.

    வருகிற 18-ந்தேதி நடக்கும் 18 தொகுதிகள் இடைத்தேர்தல் வாக்குகளும், மே 19-ந்தேதி நடக்கும் 4 தொகுதி இடைத்தேர்தல் வாக்குகளும் மே 23-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அந்த தேர்தல் முடிவுகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியின் தலைவிதியை நிர்ணயம் செய்வதாக இருக்கும். இதனால் ஆளும் அ.தி.மு.க. அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

    தமிழக சட்டசபையில் மொத்தம் 234 எம்.எல்.ஏ.க்கள் இருக்கும் பட்சத்தில் தனிப் பெரும்பான்மை பெற 117 பேர் ஆதரவு தேவை. தற்போது சட்டசபையில் அ.தி.மு.க.வுக்கு 114 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். எனவே 22 தொகுதிகளில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றாலே போதும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் அ.தி.மு.க. 4 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றால் போதாது.

    அ.தி.மு.க.வின் தற்போதைய 114 எம்.எல்.ஏ.க்களில் அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்தின சபாபதி, விருத்தாச்சலம் எம்.எல்.ஏ. கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு ஆகிய மூன்று பேரும் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்களாக உள்ளனர். அது போல இரட்டைஇலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கொங்கு இளைஞர் பேரவையின் தனியரசு, மனிதநேய ஜன நாயக கட்சியின் தமிமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படையின் கருணாஸ் ஆகிய மூன்று எம்.எல்.ஏ.க்களும் அ.தி.மு.க.வுக்கு எதிரான மன நிலையில் உள்ளனர்.

    இந்த 6 எம்.எல்.ஏ.க்களையும் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் நம்ப தயாராக இல்லை. அந்த 6 எம்.எல்.ஏ.க்களையும் கழித்துப் பார்த்தால் அ.தி.மு.க.வின் பலம் 108 ஆக குறைந்து விடும். இத்தகைய நிலையில் இடைத்தேர்தல் நடக்கும் 22 இடங்களில் குறைந்தபட்சம் 10 இடங்களில் வெற்றி பெற்றால்தான் அ.தி.மு.க.வின் நம்பகத்தன்மை பலம் 118 ஆக உயரும். எனவே 10 முதல் 15 தொகுதிகளில் வெற்றியை குறி வைத்து அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் காய்களை நகர்த்த தொடங்கி உள்ளனர்.

    சட்டசபையில் தற்போது தி.மு.க.வுக்கு 88 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். காங்கிரசுக்கு 8, முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்களையும் சேர்த்தால் தி.மு.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 97 ஆக உள்ளது.

    தனி பெரும்பான்மைக்கு 117 இடங்கள் தேவை என்பதால் இடைத்தேர்தல் நடக்கும் 22 தொகுதிகளில் 21 இடங்களில் வெற்றி பெற வேண்டிய நிலை தி.மு.க.வுக்கு உள்ளது. இந்த எண்ணிக்கையில் தி.மு.க.வால் வெற்றி பெற முடியுமா? என்பது மே 23-ந் தேதி தெரிந்து விடும். #Bypolls #TNByelections

    தமிழக சட்டசபையில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளுக்கு மே 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. #EC #Bypolls #TNByelections #Sulur #Aravakurichi #Thiruparankundram #Ottapidaram
    சென்னை:

    தமிழ்நாட்டில், பாராளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து தமிழக சட்டசபையில் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கு வரும் 18-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

    இதே தேதியில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர். ஆனால் இந்த கோரிக்கையை தேர்தல் கமிஷன் நிராகரித்து விட்டது. இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கும் தள்ளுபடி ஆனது.

    இந்நிலையில்,  திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளுக்கு மே 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் இன்று அறிவித்துள்ளது.

    ஏப்ரல் 22-ம் தேதி - வேட்பு மனுதாக்கல் தொடக்கம், 29-ம் தேதி - வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாள்,  30-ம் தேதி வேட்புமனு பரிசீலனை நிறைவடைகிறது. மே 2ம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாளாகும்.

    மேற்கண்ட நான்கு தொகுதிகளில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை பாராளுமன்ற தேர்தல் மற்றும் தமிழகத்தின் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளுடன் சேர்த்து மே 23-ம் தேதி நடத்தப்படும்  என தேர்தல் கமிஷன் இன்று வெளியிட்டுள்ள் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.  #EC #Bypolls #TNByelections #Sulur #Aravakurichi #Thiruparankundram #Ottapidaram
    சூலூர் அருகே சிறுவர்கள் தகராறில் முதியவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சூலூர்:

    சூலூர் அருகே உள்ள தென்னம்பாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 41 ). கம்ப்யூட்டர் பழுது பார்க்கும் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு கல்பனா(31) என்ற மனைவியும்,7 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

    இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் எட்வின் (48) கட்டிட மேஸ்திரி. இவருக்கு3 மகன்கள் உள்ளனர். நேற்று எட்வினின் இளைய மகன், கிருஷ்ணகுமாரின் மகன் ஆகியோர் அந்த பகுதியில் உள்ள கோவில் அருகே விளையாடி கொண்டிருந்தனர். அப்பொழுது 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதனை பார்த்த அங்கு இருந்தவர்கள் 2 பேரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கிருஷ்ணகுமாரின் மகன் தனது தாய் கல்பனாவிடம் கூறியுள்ளார். இதனையடுத்து கல்பனா அவரது தந்தை நாகராஜ் (56) ஆகியோர் எட்வினின் வீட்டுக்கு சென்று சிறுவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு குறித்து பேசினர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த எட்வின், அவரது மகன் பிரபாகர் (29) ஆகியோர் சேர்ந்து அங்கு இருந்த உருட்டு கட்டையால் நாகராஜன் தலையில் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதில் பயந்த எட்வின் தனது மோட்டார் சைக்கிளில் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    இந்த தகவல் கிடைத்ததும் சூலூர் போலீசார் சம்பவஇடத்துக்கு வந்தனர். பின்னர் இறந்த நாகராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து சோமனூர் பகுதியில் பதுங்கி இருந்த எட்வின், அவரது மகன் பிரபாகர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    சூலூர் அருகே வெவ்வேறு விபத்தில் டீ மாஸ்டர் உள்பட 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    சூலூர் அருகே உள்ள சங்கோதி பாளையத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 36). டீ மாஸ்டர். சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் மேட்டுப்பாளையம்- நெல்லித்துறை ரோட்டில் சென்றார். அப்போது திடீரென மொபட்டில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் செல்வம் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சூலூர் அருகே உள்ள செங்காட்டை சேர்ந்தவர் தினேஷ்குமார் (25). சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் பொள்ளாச்சி- செஞ்சேரிமலை ரோட்டில் சென்றார். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் சம்பவஇடத்திலேயே தினேஷ்குமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சூலூர் அருகே விபத்தில் எலக்ட்ரீசியன் உள்பட 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சூலூர்:

    கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள வெங்கிட்டாபுரத்தை சேர்ந்தவர் ராஜன் (50). எலக்ட்ரீசியன். இவரது நண்பர் மூர்த்தி (40). நீலாம்பூரை சேர்ந்தவர்.

    இவர்கள் இருவரும் நேற்று மாலை வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தனர். சூலூர் அருகே உள்ள கரியாம் பாளையம் பிரிவில் சென்ற போது எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் ராஜன் சம்பவ இடத்திலே பலியானார். பலத்த காயம் அடைந்த மூர்த்தி கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

    விபத்தை ஏற்படுத்திய கார் நிற்காமல் சென்று விட்டது. சூலூர் போலீசார் விசாரணை நடத்தி காரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சூலூர் அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சூலூர்:

    கோவை சூலூர் அருகே உள்ளது குளத்தூர். இந்த பகுதியை சேர்ந்தவர் சித்ரா (வயது 31). இவருக்கும் தங்கராஜ் என்பவருக்கும் திருமணமானது. கருத்துவேறுபாட்டால் 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து விட்டனர்.

    சித்ராவின் தங்கை மகேஷ். இவர் வேலூர் மாவட்டம் ஆம்பூரில் கணவருடன் வசித்து வருகிறார். மகேசுக்கும் அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கோபித்துக்கொண்டு கடந்த 2 நாட்களுக்கு முன்பு குளத்தூரில் உள்ள அக்காள் சித்ரா வீட்டுக்கு வந்தார்.

    நேற்று இரவு சித்ராவுக்கும், மகேசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் சித்ரா கோபித்துக்கொண்டு தனது அறைக்கு சென்று விட்டார். இன்று காலை எழுந்து பார்த்தபோது சித்ரா தூக்கில் பிணமாக தொங்கினார்.

    சூலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சித்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சூலூர் அருகே பள்ளி மாணவர் கிணற்றில் மூழ்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சூலூர்:

    கோவை சூலூர் அருகே உள்ள பள்ளபாளையம். இந்த பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரன். இவரது மகன் விஸ்வகுமார் (வயது 15). அங்குள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி தொடர் விடுமுறை என்பதால் நண்பர்களுடன் அருகில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றார். விஸ்வகுமார் ஓரத்தில் நின்று குளித்து கொண்டிருக்கும் போது கால் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினார்.

    இது குறித்து சூலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நீரில் மூழ்கிய விஸ்வகுமாரை சடலமாக மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சூலூரில் நீதிபதி மனைவியிடம் 9 பவுன் நகையை கொள்ளையடித்த சம்பவம் குறித்து கண்காணிப்பு காமிரா காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சூலூர்:

    கோவை மாவட்டம் சூலூர் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி செல்வபாண்டி.

    இவர் சூலூர் அருகே ரங்கநாதபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    நேற்று இரவு செல்வபாண்டி தனது மனைவி மகேஷ்வரியுடன்( 40) கடைக்கு சென்றுவிட்டு தங்களது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

    சூலூர் பெரிய குளத்தின் அருகே வரும் போது திடீரென்று பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் மகேஸ்வரி அணிந்திருந்த 9 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

    இதுபற்றி சூலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கூறி மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. எனினும் சந்தேகத்திற்கிடமாக யாரும் சிக்கவில்லை.

    சம்பவ இடத்தின் அருகே உள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா காட்சிகளை சேகரித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி நகை பறித்த வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    சூலூர் பகுதியில் தொடர் திருட்டு, நகை பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருவது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கொள்ளை சம்பவங்களை தடுக்கக்கோரி சமீபத்தில் பொதுமக்கள் கையெழுத்து இயக்கம் நடத்தினர். பின்னர் அனைத்துகட்சி சார்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து மனு கொடுத்தது குறிப்பிடத்தக்கது. #tamilnews
    சூலூரில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சூலூர்:

    கோவை சூலூர் ஜீவா நகரை சேர்ந்தவர் அருண்குமார். இவரது மனைவி பிரீத்தி (வயது 35). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் அருண்குமார் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். பிரீத்தி பட்டுப்புடவை மற்றும் கவரிங் நகை வாங்கி விற்பனை செய்து வருகிறார்.

    பள்ளி விடுமுறையையொட்டி ராஜபாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு மகன்களை அனுப்பி வைத்தார். பள்ளி திறக்க உள்ள நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராஜபாளையம் சென்றார்.

    நேற்று காலை அக்கம் பக்கத்தினர் பிரீத்தியின் வீட்டை பார்த்தபோது வீடு திறந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்த அவர்கள் இது குறித்து செல்போன் மூலம் பிரீத்திக்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனே கோவை விரைந்து வந்தார்.

    வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவை உடைக்கப்பட்டிருந்து. உள்ளே சென்று பார்த்தபோது பள்ளியில் மகன்கள் வாங்கிய 3 தங்கப்பதக்கம், விலை உயர்ந்த செல்போன், ரூ.1 லட்சம் மதிப்புள்ள பட்டுப்புடவை, ரூ.20 ஆயிரம் உண்டியல் பணம் கொள்ளை போயிருந்தது. இது குறித்து அவர் சூலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    ×