search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 113362"

    • இன்று காலை 4.30 மணிக்கு மங்கள இசையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.
    • இன்றில் இருந்தே கும்பாபிசேக நாள் வரை அன்னதான நிகழ்ச்சிகளும் வெகு விமர்ச்சியாக நடைபெறுகிறது.

    கவுண்டம்பாளையம்,

    கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் பிரசித்தி பெற்ற மகாமாரியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா வருகிற 24-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை ஒட்டி இன்று காலை 4.30 மணிக்கு மங்கள இசையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

    தொடர்ந்து 5 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, புனித நீர் வழிபாடு, விநாயகர் வேள்வி, கோமாதா வழிபாடு, அடியார்கள் காப்பணிதல், மதியம் 2 மணிக்கு முளைப்பாளியை ஊர்வலம், தீர்த்த குடங்கள், விமான கலசங்கள் ஊர்வலம் நடைபெறுகிறது.

    அதனைத் தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, நிலத்தவர் வழிபாடு, புற்று மண் எடுத்து வருதல், திருக்குடங்கள் கேள்வி சாலைக்கு புறப்பாடு, இரவு 7.30 மணிக்கு முதலாம் கால வேள்வி பூஜைகள், 108 வகையான காய்கனி கிழங்கு உள்ளிட்ட மூலிகை பொருட்கள், மலர் வழிபாடு, திருமுறை இசைத்தல் நடைபெறுகிறது.

    நாளை காலை 6 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி, 10 மணிக்கு இரண்டாம் கால வேள்வி, ராகம், தாளம் வாசித்தல், பிரசாதம் வழங்குதல், மாலை 6 மணிக்கு மூன்றாம் கால வேள்வி பூஜைகள், நடைபெறுகிறது.

    வருகிற 23-ந் தேதி காலை 8 மணிக்கு திருமஞ்சனம், 9 மணிக்கு விமான கலசம் நிறுவுதல், 10 மணிக்கு நான்காம் கால வேள்வி பூஜைகள், மலர் வழிபாடு, திருமுறை இசைத்தல் மாலை 6 மணிக்கு ஐந்தாம் கால வேள்வி பூஜைகள், இரவு 7 மணிக்கு அம்மனுக்கு என் வகை மருந்து சாற்றுதல் நடைபெறுகிறது.

    24-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு 6-ம் கால வேள்வி பூஜைகள், 6 15 மணிக்கு திருக்குடங்கள் கோவிலை வந்து அடைதல், 6.45 மணிக்கு விமான கலசங்களுக்கும், 7.15 மணிக்கு மூர்த்திகளுக்கும் புனித நீரூற்றி கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.

    9 மணிக்கு அலங்கார பூஜைகள், 10 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. மேலும் இன்றில் இருந்தே கும்பாபிசேக நாள் வரை அன்னதான நிகழ்ச்சிகளும் வெகு விமர்ச்சியாக நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள், இந்துசமய அறநிலைத்துறை, பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி நிர்வாகம், ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

    • கோடைவிழா கடந்த 6-ந் தேதி கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது.
    • பிற மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    கோவை,

    மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டத்திற்கு தினந்தோறும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக கோடை மாதமான ஏப்ரல், மே மாதங்களில் நீலகிரிக்கு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும்.

    அப்படி சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கோடைவிழா கடந்த 6-ந் தேதி கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது.

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் கோடைவிழாவின் முக்கிய நிகழ்வான மலர்கண்காட்சி நேற்று முன்தினம் தொடங்கியது. மலர் கண்காட்சி தொடங்கியதையொட்டி கண்காட்சியை கண்டு களிக்க தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களாக கேரளா, கர்நாடகா மற்றும் பல்வேறு மாநிலங்களிலும் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதனால் ஊட்டியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களுமே எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக காணப்படுகிறது.

    நீலகிரிக்கு சுற்றுலா வரும் அனைவரும் மேட்டுப்பாளையம் வழியாக தான் செல்ல வேண்டும். இதனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி மற்றும் கோத்தகிரி செல்லும் சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது.

    கோவையில் இருந்து ஊட்டி, குன்னூர், கோத்தகிரிக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது கோடைகாலம் என்பதாலும், கண்காட்சி நடந்து வருவதாலும் இந்த பஸ்களில் வழக்கத்தை விட பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

    இன்று காலை கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள புதிய பஸ் நிலையத்தில் ஊட்டிக்கு செல்வதற்காக அதிகாலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பம், குடும்பமாக குவிந்து இருந்தனர்.

    அவர்கள் நீலகிரிக்கு செல்லக்கூடிய பஸ்களில் ஒருவருக்கொருவர் முண்டியத்து கொண்டு ஏறி நீலகிரிக்கு பயணித்தனர். இதனால் நீலகிரிக்கு செல்லும் அனைத்து பஸ்களுமே நிரம்பி காணப்பட்டது.

    • சுகாதாரமான உணவு வகைகள் கிடைப்பதை உறுதி செய்ய உணவு பாதுகாப்புத்துறை மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
    • புகார் அளித்த 24 முதல் 48 மணி நேரம் ஆய்வு நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும்.

    கோவை,

    கோவை மாவட்டத்தில் அனைத்து வகையான தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் உணவு உற்பத்தி நிறுவனங்கள், மொத்த கொள்முதல் விற்பனை நிறுவனங்கள் மற்றும் மறுபொட்டலமிடுபவர், ஓட்டல், பேக்கரி உள்ளிட்ட உணவகங்கள் மற்றும் கடைகளில் பொதுமக்களுக்கு தரமான சுகாதாரமான உணவு வகைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் உணவு பாதுகாப்புத்துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    மேலும், உணவின் தரம் குறித்து நுகர்வோர் புகார்களை நிவர்த்தி செய்ய தொலைபேசி மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் புகார்கள் பெறப்பட்டு 72 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதில், தற்போது உணவு தொடர்பான பொதுமக்களின் புகார் நடவடிக்கைகளை எளிதாக்கும் விதமாகவும், விரைவு நடவடிக்கைக்கு 'ஏதுவாக www.foodsaftey.tn.gov.in என்ற புதிய இணையதளத்தையும், tn food safety consumer app என்ற செயலியையும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.

    இதில், பொதுமக்கள் தங்களது புகார்களை டைப் ஏதும் செய்யாமல் மிக எளிமையாக விவரங்களை தேர்ந்தெடுக்கும் வசதிகளுடனும், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் ஸ்கீரீன் ரீடர் அணுகள் வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை ஆண்டராய்டு ஐஓஎஸ்ஸில் பதிவிறக்கம் செய்யலாம்.

    மேலும், இந்த இணையத்தில், உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் தொடர்பு எண்கள், சேவைகள் மற்றும் முக்கிய துறை சார்ந்த இணைய இணைப்புகள் குறிப்பாக பதிவு மற்றும் உரிமம் விண்ணப்பித்தல், உணவு கலப்படங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் புத்தகங்கள், புகார் வசதிகள் போன்ற அனைத்து தகவல்களையும் பொதுமக்கள் தெரிந்துகொள்ளலாம்.

    இது குறித்து உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் கூறியதாவது தரமற்ற உணவு, கலப்படம் உள்ளிட்ட புகார்கள் குறித்த விவரங்கள்பொது மக்கள் இதற்கான இணையதளம் மற்றும் கைபேசி செயலி மூலமும் தெரிவித்து பயனடையலாம்.

    மேலும், புகார்தாரரின் விபரங்கள் ரகசியம் பாதுகாக்கப்படும்.

    புகார் அளித்த 24 முதல் 48 மணி நேரம் ஆய்வு நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட்டு புகார்தாரருக்கு ஆய்வு அறிக்கை அளிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் கூறியதா வது:-

    "நுகர்வோர் குறை தீர்ப்பு செயலி, ஆர்யுசிஒ, உணவு செரிவூட்டல் ஆகியவை குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக குறும்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த விழிப்புணர்வு குறும்படங்கள் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், லிங்க்ட்இன், யூடியூப் போன்ற சமூக வலை தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் உணவு பாதுகாப்புத் துறையால் உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் மற்றும் நுகர்வோர் குறைதீர்ப்பு செயலி ஆகிய சேவைகளை முழுவதும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • அடுத்த மாதம் பள்ளிக்கூடங்கள் மீண்டும் திறக்கப்பட உள்ளன.
    • அனைத்து பள்ளிக்கூடங்களுக்கும் பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    பொள்ளாச்சி,

    பொள்ளாச்சி கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு, ஆனை மலை, சுல்தான்பேட்டை, மதுக்கரை உள்ளிட்ட தாலுகாக்களில் அரசு மற்றும் அரசு உதவிபெற்ற பள்ளிக்கூடங்கள் உள்ளன.

    இங்கு கடந்த மாதம் 23-ந்தேதி வரை முழு ஆண்டு தேர்வு நடந்தது. அதன்பிறகு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அடுத்த மாதம் பள்ளிக்கூடங்கள் மீண்டும் திறக்கப்பட உள்ளன.

    இந்த நிலையில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு நடப்பாண்டு கல்வி ஆண்டுக்கான இலவச பாடப்புத்தகங்கள் அனைத்தும் அந்தந்த கல்வி மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

    பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்கள், நகராட்சி, சுயநிதி பள்ளிக்கூடங்கள் மற்றும் ஆதிதிராவிடர் நல பள்ளிக்கூடங்கள் உள்ளன.

    இங்கு 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வழங்குவதற்காக, அனைத்து பாடப்புத்தகங்களுமான புதிய பாடப்புத்தகங்கள் வந்து சேர்ந்து உள்ளன. அவை கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் தனித்தனி அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.

    அதேபோல ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தொடக்க- நடுநிலைப் பள்ளிக்கூடங்களில் ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள், அந்தந்த ஒன்றிய வட்டார கல்வி அலுவலக கட்டுப்பாட்டில் பத்திரமாக வைக்கப்பட்டு உள்ளன.

    பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை தாலுகாவுக்கு உட்பட்ட அனைத்து பள்ளிக்கூடங்களுக்கும் பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் முதல் நாளிலேயே அனைத்து மாணவர்களுக்கும் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என்று கல்வி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • தாராபுரம் சாலையில் உள்ள திருமண மண்டப வளாகத்தில் ஆய்வு நடந்தது.
    • டிரைவர்களுக்கு கண் மற்றும் முழு உடல் பரிசோதனை நடத்தப்பட்டது.

    பொள்ளாச்சி,

    பொள்ளாச்சியில் உள்ள தனியார் பள்ளிக்கூட பஸ்களுக்கான போக்குவரத்து ஆய்வு, தாராபுரம் சாலையில் உள்ள திருமண மண்டப வளாகத்தில் நடந்தது.

    உதவி கலெக்டர் பிரியங்கா, வட்டார போக்குவரத்து அதிகாரி முருகானந்தம், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகனசுந்தரம், மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர்கள் கோகுலகிருஷ்ணன், செல்வி உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    அப்போது டிரைவர்களுக்கு கண் மற்றும் முழு உடல் பரிசோதனை நடத்தப்பட்டது. கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை வட்டாரத்தில் உள்ள 66 தனியார் பள்ளிக்கூடங்களில் 374 பஸ்கள் இயங்கி வருகின்றன.

    அந்த வாகனங்களில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்கள். அப்போது 30 வாகனங்களில் கண்காணிப்பு காமிரா, வேகக்கட்டுப்பாடு கருவி, முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவி ஆகியவை இடம்பெறாதது தெரியவந்தது.

    படிக்கட்டுகளிலும் உறுதித்தன்மை இல்லை. எனவே அந்த வாகனங்களை இயக்க போக்குவரத்து அதிகாரிகள் தற்காலிக தடை விதித்து உள்ளனர்.

    அப்போது பள்ளிக்கூட வாகனங்களில் மேற்கண்ட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி அந்த வாகனங்களை மீண்டும் தணிக்கைக்கு கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

    • 3 போலீஸ் நிலையங்கள் அமைக்க தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
    • தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கோவை வந்து புதிய போலீஸ் நிலையங்களை திறந்து வைக்க உள்ளார்.

    கோவை,

    கோவை மாநகரில் 15 சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு போலீஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுதவிர 3 அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்களும் உள்ளன.

    இந்தநிலையில், கோவை மாநகரில் நிலவும் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளை கண்காணிக்கவும், பதற்றம் மிகுந்த பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பை அதிகமாக்கி ரோந்து பணியை மேற்கொள்ள 3 போலீஸ் நிலையங்கள் அமைக்க தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

    அதன்படி, கவுண்டம்பாளையம், கரும்புக்கடை, சுந்தராபுரம் என 3 புதிய போலீஸ் போலீஸ் நிலையங்களுக்கான இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் பணியிடங்கள் குறித்த விவரங்களை டிஜிபி அலுவலகம் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

    கவுண்டம்பாளையம் போலீஸ் நிலையத்தில் 2 இன்ஸ்பெக்டர்கள், 5 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், உட்பட 25 பேர் போலீசார், கரும்பு கடை போலீஸ் நிலையத்தில் 2இன்ஸ்பெக்டர்கள், 7 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 25 பேர் மற்றும் சுந்தராபுரம் போலீஸ் நிலையத்தில் 2 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 11 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 25 பேர் என போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இது குறித்து கோவை மாநகர போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    கரும்புக்கடை போலீஸ் நிலையம் ஆயிஷா மஹால் அருகேயும், கவுண்டம்பாளையத்தில் மின் வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் வாடகை கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சுந்தராபுரத்தில் வாடகை கட்டிடத்தில் செயல்பட உள்ளது.

    இதனைத் தொடர்ந்து இந்த புதிய 3 போலீஸ் நிலையங்களும் பயன்பாட்டுக்கு வர தயார் நிலையில் உள்ளன.

    இதனைத் தொடர்ந்து வருகிற 26ந்தேதி (வெள்ளிக்கிழமை) தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கோவை வந்து புதிய போலீஸ் நிலையங்களை திறந்து வைக்க உள்ளார்.

    • போலீசார் அபுதாஹீரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்
    • ஜனவரி 1-ந்தேதி முதல் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 314 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கோவை,

    பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா சாக்லெட்களை பதுக்கி வைத்து விற்பதாக ரகசிய தகவல் வந்தது.

    இதனையடுத்து பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கரட்டுமேடு பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சா சாக்லெட் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த உக்கடத்தை சேர்ந்த அபுதாகீர்(வயது45) என்பவரை கைது செய்தனர்.

    அவரிடமிருந்து ரூ.43 ஆயிரம் மதிப்புள்ள 6.250 கிலோகிராம் எடையுள்ள கஞ்சா சாக்லேட், ரூ.77 ஆயிரம் மதிப்புள்ள 77.700 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் அபுதாஹீரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்

    கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கையின் பேரில் கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் தற்போது வரை நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 314 பேர் கைது செய்யப்பட்டனர்.

    அவர்களிடமிருந்து சுமார் 483.301 கிலோ எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 177 மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களிடமிருந்து 1925.950 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    • மர்ம நபர் பிரபல ஓட்டல் குறித்து சிறந்த முறையில் ரிவ்யூ கொடுத்தால் மிகப்பெரிய தொகை கிடைக்கும் என்றார்.
    • இது குறித்து விஜயகுமார் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

    கோவை,

    கோவை ராமநாதபுரம் ஒலம்பசை சேர்ந்தவர் விஜயகுமார்(40). இவரது செல்போனுக்கு டெலிகிராம் மூலமாக ஒரு குறுஞ்செய்தி வந்தது.

    அதில், பகுதி நேர வேலை இருப்பதாகவும், அதில் கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் என கூறப்பட்டிருந்தது.

    இதையடுத்து அவர், லிங்க்கை கிளிக் செய்து உள்ளே நுழைந்தார். பின்னர் அவரை தொடர்பு கொண்ட மர்ம நபர் பிரபல ஓட்டல் குறித்து சிறந்த முறையில் ரிவ்யூ கொடுத்தால் மிகப்பெரிய தொகை கிடைக்கும் எனவும், அதற்கு ஆன்லைனில் பணம் முதலீடு செய்ய வேண்டும் என கூறி அதற்கான வழி–முறைகளை தெரிவித்தார்.

    இதனையடுத்து அவருக்கு முதலில் 858 ரூபாய் கமிஷன் கிடைத்தது. பின்னர் அவர் ரூ.10,500 முதலீடு செய்தார்.

    அதற்கு அவருக்கு கமிஷன் தொகையுடன் சேர்த்து ரூ.17,948-ம், 3-வதாக முதலீடு செய்த ரூ.38,686க்கு கமிஷனுடன் சேர்த்து ரூ.51,015 கிடைத்தது.

    இதனை தொடர்ந்து சிறிது, சிறிதாக அவர் அந்த மர்ம நபர் கூறிய வங்கி கணக்கில் ரூ.7.24 லட்சம் செலுத்தினார். ஆனால் அதன் பிறகு அவருக்கு கமிஷன் தொகை வரவில்லை.

    மேலும் அவருக்கு ஏற்கனவே வந்த கமிஷன் தொகை மற்றும் முதலீடு செய்த பணத்தை ஆன்லைன் மூலம் திரும்ப தனது கணக்கிற்கு வரவு வைக்க முடியவில்லை.

    மர்ம நபர் அதிக கமிஷன் கிடைக்கும் என நம்ப வைத்து மொத்தம் ரூ. 7.24 லட்சத்தை நூதன முறையில் மோசடி செய்து விட்டார். இது குறித்து விஜயகுமார் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மேட்டுப்பாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் தலைமை வகித்தார்.
    • பள்ளி வாகனங்கள் இயக்கும் ஓட்டுனர்கள் 10 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையத்தில் வட்டார போக்குவரத்து சார்பில் தனியார் பள்ளி வாகனங்கள் நேஷனல் பள்ளி மைதானத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

    இதற்கு மேட்டுப்பாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் (பொறுப்பு) தலைமை வகித்தார். வட்டாட்சியர் சந்திரன், மேட்டுப்பா–ளையம் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாலாஜி, காவல் ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன், மோட்டார் வாகன ஆய்வாளர் சிவகுமார் ஆகியோர் முன்னிலையில் ஆய்வு செய்தனர்.

    கோடை விடுமுறை முடிந்து வருகின்ற ஜூன் மாதம் 1-ந் தேதி பள்ளிகள் திறக்க உள்ளதால் தமிழக அரசு தனியார் பள்ளி வாகனங்கள் அனைத்தை–யும் ஆய்வு செய்ய கூறி அறிக்கை வெளியிட்டு–ள்ளது.

    இதையடுத்து மேட்டு–ப்பாளையம் நேஷனல் பள்ளி மைதானத்தில் மேட்டுப்பா–ளையம் சுற்றுவட்டார பகுதிகளான காரமடை, சிறுமுகை, பெரியநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 56 பள்ளிகளில் இயங்கி வரும் 393 பள்ளி பஸ்களை ஆய்வு செய்தனர்.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    வாகனங்கள் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டுள்ளதா, வாகனங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் ஜி.பி.ஆர்.எஸ் கருவிகள், தீயணைப்பு கருவிகள் அவசரகால வழி கதவுகள் சரியாக செயல்படுகிறதா, முதலுதவி பெட்டி உள்ளதா என ஆய்வு செய்தனர்.

    மேலும் பள்ளி வாகனங்கள் இயக்கும் ஓட்டுனர்கள் 10 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

    ஆண்டுதோறும் கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். நகர் பகுதியில் 40 கிலோ மீட்டர் வேகத்தில் பள்ளி பஸ்களை இயக்க வேண்டும்.

    மாணவர்கள் காலையில் வாகனத்தில் ஏறும் போதும் மாலையில் வாகனத்தில் இருந்து இறங்கும்போதும் சாலையை கடந்து பெற்றோரிடம் மாணவர்கள் செல்லும் வரையில் வாகன உதவியாளர்கள் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் தெரிவித்தார்.

    • டிரைவர் கந்தசாமி உயிர் தப்புவதற்காக, மினி லாரியில் இருந்து கீழே குதித்தார்.
    • சிறுமுகை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்,

    சிறுமுகை அருகே உள்ள பொகளூர் பகுதியைச்சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் கந்தசாமி (வயது69). இவர் மினி லாரி வைத்து ஓட்டி வருகிறார்.

    இந்த நிலையில் அவர் நேற்று மினி லாரியில் சென்றார். அப்போது பொகளூர் அருகே இவர் வாகனத்தை அசுர வேகத்தில் ஓட்டியதாக தெரிகிறது. இதனால் வாகனம் நிலைதடுமாறி விபத்துக்கு உள்ளானது. எனவே டிரைவர் கந்தசாமி உயிர் தப்புவதற்காக, மினி லாரியில் இருந்து கீழே குதித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் மீது மோதி படுகாயம் அடைந்தார்.

    எனவே அவரை சிறுமுகை போலீசார் மீட்டு, மேட்டுப்பாளையம் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருந்து டிரைவர் கந்தசாமி, மேல் சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கந்தசாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்து உள்ளனர். இது குறித்து சிறுமுகை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து கோவை மாநகராட்சியினர் பட்டியில் அடைக்க வேண்டும்.
    • இருசக்கர வாகனத்தில் செல்லும் பெண்கள் தடுமாறி கீழே விழுவதை அன்றாடம் காண்கிறோம்.

    குனியமுத்தூர்,

    உக்கடம் பஸ் நிலையம் அருகே எந்த நேரமும் பஸ்களும், கார்களும், மோட்டார் சைக்கிள்களும் சென்று கொண்டே இருக்கும்.

    இதனால் அந்த பகுதியில் எப்போதுமே போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும். அப்பகுதியை கடப்பதற்குள் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு போதும் போதும் என்றாகி விடும்.

    இப்படி போக்குவரத்து நெருக்கடிக்கு மத்தியிலும் அந்த சாலைகளில் மாடுகள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. இதனால் சாலைகளில் வருபவர்கள், மாடுகளை பார்த்து பயந்து, கீழே விழுந்து எழுந்து செல்லும் நிலை உள்ளது. சில நேரங்களில் விபத்துக்களில் சிக்கி விடுவதும் வாடிக்கையாகி வருகிறது.

    இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

    மாடுகளை வளர்ப்பவர்கள் வீட்டில் வைத்து வளர்க்க வேண்டும். இது போன்று சாலையில் சுற்றி திரிய விடக்கூடாது. சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து கோவை மாநகராட்சியினர் பட்டியில் அடைக்க வேண்டும்.

    மேலும் அந்த மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே சாலையில் சுற்றி திரியும் மாடுகளை கட்டுப்படுத்த முடியும். ஆயிரக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் உக்கடம் பஸ் நிலையம் அருகே மாடுகள் சுற்றித் திரிவது மிகவும் கண்டனத்திற்குரியது.

    இந்த நிலையானது தற்போது அல்ல காலகாலமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்லும் பெண்கள் தடுமாறி கீழே விழுவதை அன்றாடம் காண்கிறோம். எனவே கோவை மாநகராட்சி விரைந்து இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • குடிபோதையில் நின்ற வாலிபரை உதயபிரகாஷ் கண்டித்துள்ளார்.
    • மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சவுந்தர்ராஜனை கைது செய்தனர்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மேட்டுப்பாளையம் அருகே உள்ள மகாதேவபுரத்தை சேர்ந்தவர் உதயபிரகாஷ்(24). டான்ஸ் மாஸ்டர்.

    சம்பவத்தன்று இவரது வீட்டு முன்பு வாலிபர் ஒருவர் குடிபோதையில் நின்ற வாலிபர் ஒருவர் அந்த வழியாக சென்றவர்களிடம் தகராறு செய்தார். இதனை பார்த்த உதயபிரகாஷ் அந்த வாலிபரின் அருகே சென்று அவரை கண்டித்தார். இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர் தகாத வார்த்தைகளால் பேசினார். அப்போது 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து உதயபிரகாஷை குத்தினார். பின்னர் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த டான்ஸ் மாஸ்டரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து டான்ஸ் மாஸ்டரை கத்தியால் குத்திய பத்திரகாளியம்மன் கோவில் வீதியை சேர்ந்த கூலித் தொழிலாளி சவுந்தர்ராஜன் (23) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    ×