search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 113362"

    • 35 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் கட்டிலுக்கு அடியில் பிணமாக கிடந்தார்.
    • கண்காணிப்பு காமிராக்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    கோவை,

    கோவை காந்திபுரம் சத்தி சாலையில் ஆம்னி பஸ் நிலையம் அருகே பயன்பாடு இல்லாத காலி இடத்தில் ஓலை குடிசை ஒன்று இருந்தது. அங்கிருந்து நேற்று திடீரென துர்நாற்றம் வீசியது. இதுபற்றி அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    ரத்தினபுரி போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது 35 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் கட்டிலுக்கு அடியில் பிணமாக கிடந்தார். அவரது உடல் பாதி எரிந்த நிலையில் அரை நிர்வாண கோலத்தில் காணப்பட்டது. மேலும் அருகில் மதுபாட்டில்களும் கிடந்தன. அந்த நபரின் உடலை போலீசார் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அந்த நபர் யார், அவர் எப்படி இறந்தார் என்பது பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இறந்து கிடந்தவர் திருநங்கை என்பது தெரியவந்தது.

    அந்த திருநங்கை எந்த ஊரைச் சேர்ந்தவர், அவர் எப்படி அந்த இடத்துக்கு சென்றார் என்று தெரியவில்லை. அவரை யாராவது அழைத்துச் சென்று கொலை செய்து அதனை மறைப்பதற்காக தீ வைத்து எரித்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுதொடர்பாக காந்திபுரம் பகுதியில் வசிக்கும் திருநங்கைகளிடம் போலீசார் விசாரிக்கிறார்கள். உங்களுடன் வசித்த திருநங்கைகளில் யாராவது மாயமாகி இருக்கிறார்களா என்பது பற்றி விசாரணை நடக்கிறது.

    மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இறந்து கிடந்த திரு நங்கை செல்லும் காட்சிகள் கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ளதா என ஆய்வு செய்ய ப்படுகிறது.

    • தடுப்பணை கட்டும் பணியை நிறுத்த வேண்டும்.
    • போதை பொருள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கோவை,

    கோவை புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளரரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி வேலுமணி எம்எல்.ஏ தலைமையில் 9 எம்.எல்.ஏக்கள் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடியை சந்தித்து மனு அளித்தனர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கோவை மாவட்டத்தில் நடைபெற்று வரும் கனிம வளங்கள் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போதை போதைப் பொருள் விற்பனை எப்போதும் இல்லாத வகையில் தற்போது அதிகரித்து வருகிறது இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சட்ட ஒழுங்கு பாதுகாத்தல் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கேரளா அரசு கட்டி வரும் தடுப்பணையால் கோவை ஈரோடு திருப்பூர் மாவட்டங்களில் உள்ள பாசன பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்படும் கோவை மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் எனவே அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து தடுப்பணை கட்டும் பணியை நிறுத்த வேண்டும்.

    கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய உயர் மட்ட மேம்பால பணிகள், குடிநீர் திட்ட பணிகள், சாலை பணிகள், சீர்மிகு நகர திட்ட பணிகள், மக்களின் முக்கிய அடிப்படை வசதிகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், வாழை விவசாயிகளுக்கு இழப்பீடு உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    அவருடன் அ.தி.மு.க.தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ., அம்மன் கே. அர்ச்சுணன் எம்.எல்.ஏ., அமைப்புச் செயலாளர்கள் செ.தாமோதரன் எம்.எல்.ஏ., ஏ.கே. செல்வராஜ் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர் விபி.கந்தசாமி எம்.எல்.ஏ., இளைஞரணி துணைச் செயலாளர் டி.கே.அமுல் கந்தசாமி எம்.எல்.ஏ., மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி செயலாளர் கே.ஆர். ஜெயராம் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சாந்திமதி தோப்பு அசோகன் ஆகியோர் வந்திருந்தனர்.

    • வீட்டு சமையல் கியாஸ் சிலிண்டரின் விலையை ரூ.1,100 ஆக உயர்த்தியதுதான் பா.ஜனதாவின் சாதனை.
    • குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை வருகிற செப்டம்பர் 15-ந் தேதி முதல் முதல்-அமைச்சர் வழங்க உள்ளார்.

    கோவை,

    தி.மு.க. அரசின் 2-ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் கோவை ஆர்.எஸ். புரம் தெப்பக்குளம் மைதானத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் நா. கார்த்திக் தலைமை தாங்கினார்.

    இதில் அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு பேசியதாவது:-

    திராவிட மாடல் ஆட்சி என்றால் பா.ஜனதாவிற்கு பிடிக்காது. திராவிட மாடல் ஆட்சிதான் தமிழகத்திற்கு எண்ணற்ற வளர்ச்சி திட்டங்களை தந்துள்ளது. தி.மு.க. அரசு பொறுப் பேற்றதும் பெண்களுக்கு இலவச பஸ் பயண திட்டத்தை கொண்டு வந்தது. உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்குகிறது. பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்குகிறது.

    இதுபோன்ற ஒரு திட்டத்தையாவது பா.ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களில் பெண்களுக்காக செயல்படுத்தப்பட்டு உள்ளது என்று கூற முடியுமா? ஒரே ஒரு சாதனையை தான் பா.ஜனதா அரசு செய்து உள்ளது. ரூ.450 என்று இருந்த வீட்டு சமையல் கியாஸ் சிலிண்டரின் விலையை ரூ.1,100 ஆக உயர்த்தியதுதான் அவர்களின் சாதனை.

    234 தொகுதிகளிலும் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் முதல்- அமைச்சர் செயல்பட்டு வருகிறார். முதல்-அமைச்சர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஆகியோர் கோவைக்கு ஒவ்வொரு முறையும் வரும்போது இங்குள்ள மக்களுக்கு எண்ணற்ற வளர்ச்சி திட்டங்களை தந்துள்ளனர். அதுதான் திராவிட மாடல் அரசு.

    குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை வருகிற செப்டம்பர் 15-ந் தேதி முதல் முதல்-அமைச்சர் வழங்க உள்ளார். திராவிட மாடல் அரசு செயல்படுத்தும் திட்டங்கள் மற்ற மாநிலங்களில் தேர்தல் வாக்குறுதியாக இடம் பெறுகின்றன. ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளில் 222 புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, ரூ.2 லட்சத்து 72 ஆயிரத்து 322 கோடி மதிப்பிலான முதலீடுகளை தமிழகத்திற்கு கொண்டு வந்தவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    இவ்வாறு அவர்பேசினார்.

    இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர்.
    • கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர்.

    பொள்ளாச்சி,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன் பட்டியை சேர்ந்தவர் 31 வயது இளம்பெண். இவர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார்.

    அதில் கூறியிருப்பதாவது:-

    எனது கணவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். எங்களுக்கு 6 வயதில் ஒரு மகனும், 3 வயதில் மகளும் உள்ளனர்.

    சம்பவத்தன்று எனது 3 வயது மகள் வீட்டு முன்பு விளையாடிக்கொண்டு இருந்தார். அப்போது எங்களது வீட்டின் அருகே வசிக்கும் 16 வயது சிறுவன் எனது மகளை அவரது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

    அங்கு வைத்து அவர் எனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். எனது மகள் சத்தம் போடவே சிறுவன் அங்கு இருந்து தப்பிச்சென்றார்.

    பின்னர் எனது மகள் அழுதபடியே வீட்டிற்கு வந்தார். என்ன நடந்தது என்று கேட்ட போது சிறுவன் பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது.

    எனவே எனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 16 வயது சிறுவன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் புகாரில் கூறி இருந்தார்.

    புகாரின் பேரில் 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 16 வயது சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர்.

    • வேலை செய்யும் இடத்தில் வைத்து தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறார்.
    • போலீசார் கட்டிட தொழிலாளி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள வெள்ளாளபாளையத்தை சேர்ந்தவர் 35 வயது இளம்பெண். இவர் நெகமம் போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    நான் கட்டிட வேலை செய்து வருகிறேன். எனக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர். நான் எனது ஊரைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி விஜயன் (வயது 45) என்பவருடன் கட்டிட வேலைக்கு சென்று வருகிறேன். வேலை செய்யும் இடத்தில் வைத்து அவர் எனது கை பிடித்து இழுத்தும், கட்டி பிடித்து முத்தம் கொடுத்தும் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறார். இது குறித்து நான் கட்டிட உரிமையாளரிடம் தெரிவித்தேன். அவர் விஜயனை கண்டித்து அனுப்பினார்.

    சம்பவத்தன்று நான் சம்பள பணம் வாங்குவதற்காக விஜயனின் வீட்டிற்கு சென்றேன். அப்போது அங்கு இருந்த அவர் என்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதில் அதிர்ச்சியடைந்த நான் சத்தம் போட்டேன். அப்போது நடந்த சம்பவத்தை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக என்னை மிரட்டினார். எனவே எனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வரும் கட்டிட தொழிலாளி விஜயன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் அளித்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் வேலை செய்யும் இடத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிட தொழிலாளி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஊராட்சி மன்ற தலைவர் தங்களை மதிப்பதில்லை எனவும் ஊராட்சி மன்றத்தில் முறைகேடு நடைபெறுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர்
    • அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமாதானப்படுத்தியதால் போராட்டத்தை கைவிட்டனர்.

    சூலூர்,

    சூலூர் அருகே செலக்கரச்சல் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் ஊராட்சி அதிகாரிகள் வந்திருந்தனர்.

    ஊராட்சி மன்றத்தில் 9 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். நேற்று காலை திடீரென தி.மு.க.வைச் சேர்ந்த 5 வார்டு உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து மாவட்ட பஞ்சாயத்து உதவி இயக்குனர் பஷீர் அகமது தலைமையில் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    இந்த பேச்சு வார்த்தை நீண்ட நேரம் நடைபெற்றதால் அப்பகுதியில் சம்பந்தப்பட்ட தி.மு.க. உறுப்பினர்களின் வார்டுகளில் உள்ள பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு முன்பாக திரண்டனர். அப்பகுதியில் திரண்ட பொதுமக்கள் தங்களது வார்டுகளில் ஊராட்சி மன்றத்தின் சார்பாக பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.

    அப்பகுதியில் அதிகளவில் பொதுமக்கள் திரண்டதால் கருமத்தம்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்த ஆரோக்கியராஜ் தலைமையில் சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையன், சூலூர் போலீசார் மற்றும் சுல்தான்பேட்டை போலீசார் குவிக்கப்பட்டனர். அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க சிறப்பு காவல் படையினரும் அப்பகுதிக்கு விரைந்து வந்தனர்.

    ஊராட்சி மன்ற தலைவர் மரகதவடிவு கருப்புசாமி தங்களை மதிப்பதில்லை எனவும் ஊராட்சி மன்றத்தில் முறைகேடு நடைபெறுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. வார்டு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.இது பற்றி ஊராட்சி மன்ற தலைவர் மரகதவடிவு கருப்புசாமி கூறுகையில் ஊராட்சி மன்ற பணிகளுக்கான கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தால் போராட்டத்தில் ஈடுபடும் உறுப்பினர்கள் யாரும் தங்களது அலைபேசியை எடுப்பதில்லை மேலும் எவ்வித கூட்டத்திற்கும் வருவது கிடையாது. ஆறு மாதத்திற்கு ஒருமுறை வருகை பதிவேட்டில் மட்டும் கையெழுத்துகின்றனர். போராட்டத்தில் ஈடுபடும் உறுப்பினர்களுக்கு பொதுமக்களின் நலன் மீது அக்கறை இல்லை என தெரிவித்தார்.

    அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இனி வரும் நாட்களில் மூலம் அனைவருக்கும் தகவல் பரிமாறப்படும். ஊராட்சி பணிகளில் வார்டு உறுப்பினர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என பேசி சமாதானப்படுத்தினர். இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட வார்டு உறுப்பினர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • அனுசியாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
    • குழந்தையையும், தாயையும் பரிசோதனை செய்த டாக்டர்கள் இருவரும் நலமாக இருப்பதாக தெரிவித்தனர்

    கோவை,

    கோவை அருகே உள்ள தொப்பம்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி அனுசியா (வயது 21). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு இன்று காலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அவர் வலியால் அலறி துடித்தார். இதனையடுத்து அவரது உறவினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக சாய்பாபா காலனியில் இருந்து ஆம்புலன்சு புறப்பட்டு சென்றது. ஆம்புலன்சில் மருத்துவ நிபுணர் தமிழழகன், டிரைவர் சக்திகுமார் ஆகியோர் விரைந்து சென்றனர். அவர்கள் அனுசியாவின் வீட்டிற்கு சென்று பார்த்த போது குழந்தையின் தலை வெளியே தெரிந்தது.

    உடனடியாக அனுசியா ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மற்றும் உறவினர்கள் உதவியுடன் ஆம்புலன்சில் வைத்து பிரசவம் பார்க்கப்பட்டது. அப்போது அனுசியாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

    இதனையடுத்து ஆம்புலன்சு ஊழியர்கள் தாயையும், குழந்தையையும் சிகிச்சைக்காக துடியலூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு குழந்தையையும், தாயையும் பரிசோதனை செய்த டாக்டர்கள் இருவரும் நலமாக இருப்பதாக தெரிவித்தனர்.

    அவசரம் கருதி ஆம்புலன்சில் வைத்து பிரசவம் பார்க்க நடவடிக்கை மேற்கொண்ட மருத்துவ நிபுணர் தமிழழகன், டிரைவர் சத்திகுமார் ஆகியோருக்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

    • ஒரு மாதமாக அரவிந்தசாமி வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
    • கணவன் மனைவி இருவரும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சையில் உள்ளனர்

    கோவை,

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள ஓரைக்கால்பாளையத்தை சேர்ந்தவர் அரவிந்தசாமி (வயது 28). இவரது மனைவி சந்தியா (25). 2 பேரும் ஐ.டி. நிறுவனத்தில் ஊழியர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.

    இவர்கள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் ஓரைக்கால்பாளையத்தில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வருகின்றனர். ஒரு மாதமாக அரவிந்தசாமி வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

    கடந்த சில நாட்களாக கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று சந்தியா தனது கணவரை மாதம்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று வரலாம் என அழைத்தார். அதற்கு அரவிந்தசாமி தற்போது கையில் பணம் இல்லை. எனவே பிறகு போகலாம் என கூறினார்.

    அப்போது சந்தியா தனது கணவரிடம் இப்போதே வரவில்லை என்றால் நான் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வேன் என கணவரை மிரட்டினார். உடனடியாக அரவிந்தசாமி நீ மட்டும் தான் விஷம் குடிப்பாயா, நானும் குடிக்கிறேன் என கூறி அங்கு இருந்த விஷத்தை எடுத்து குடித்தார். இதனை பார்த்த சந்தியா தனது கணவரிடம் இருந்து விஷத்தை வாங்கி அவரும் குடித்தார்.

    சிறிது நேரத்தில் 2 பேரும் மயங்கினர். கணவன்-மனைவி இருவரும் விஷம் குடித்து மயங்கி கிடப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் 2 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அரவிந்தசாமி, சந்தியா ஆகியோரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இதுகுறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கோவை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் இன்று நடந்தது.
    • நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் தற்கொலைக்கு முயன்றார்

    கோவை,

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் இன்று நடந்தது. பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை கலெக்டர் அலுவலகத்தில் அளித்தனர். கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் பொது மக்களை நுழைவாயில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசார் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த ஒருவர் தான் மறைத்து கொண்டு வந்திருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி திடீரென தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தார். இதனை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனை பிடுங்கினர். பின்னர் தற்கொலைக்கு முயன்ற அவர் மீது தண்ணீர் ஊற்றினர். விசாரணையில் அவர், கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பூச்சியூர் ரோட்டை சேர்ந்த கட்டிட தொழிலாளி முத்துராஜ் (வயது53) என்பது தெரியவந்தது.

    அப்போது அவர் போலீசாரிடம் கூறியதாவது:- எனக்கு சொந்தமான 1 அரை சென்ட் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து விட்டனர். இது தொடர்பாக பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே போலீசார் நில ஆக்கிரமிப்பு தொடர்பாக விசாரணை நடத்தி எனக்கு சொந்தமான நிலத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.கலெக்டர் அலுவலகம் முன்பு கட்டிட தொழிலாளி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • இதன் மூலம் கலவரம் செய்யக்கூடிய நபர்களை கண்டறிவதுடன், அவர்களை புகைப்படம் எடுக்க முடியும்
    • போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இந்த ஒத்திகை நிகழ்வை பார்வையிட்டார்

    கோவை,

    கோவை மாநகர போலீஸ் பயன்பாட்டிற்கு என தனியார் நிறுவன பங்களிப்புடன் டிரோன்கள் வாங்கப்பட்டது. கலவர சூழல்களில் கூட்டத்தை கண்ணீர்புகை குண்டு வீசி கலைக்க இந்த டிரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த டிரோன்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு ஒத்திகை நிகழ்வானது இன்று கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடத்தப்பட்டது.

    கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் முன்னிலையில் நடத்தப்பட்ட இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் போலீசார் கலவரக்காரர்கள் போல ஒன்று கூடி போலீசாருக்கு எதிராக கோஷமிட்டனர், டிரோன் மூலம் அந்த இடத்திற்கு சென்று கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டது. இந்த ஒத்திகை நிகழ்வை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பார்வையிட்டார்.

    பின்னர் அவர் நிறுபவர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- இந்த டிரோன்கள் மூலம் கலவரம் நடக்கும் பகுதிகளுக்கு சென்று கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைக்க முடியும். ஒரே நேரத்தில் 4 கண்ணீர் புகை குண்டுகளை வீச முடிவதுடன், 2 நிமிடத்தில் மாற்றுக் கண்ணீர் புகை குண்டுகளை பொருத்திக் கொள்ள முடியும். மேலும் இந்த ட்ரோன்களில் காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

    இதன் மூலம் கலவரம் செய்யக்கூடிய நபர்களை துல்லியமாக கண்டறிவதுடன், அவர்களை புகைப்படம் எடுக்க முடியும். ஓடிச் செல்பவர்களையும் டிரோன் மூலம் பின் தொடர்ந்து சென்று அவர்களை புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை எடுக்க முடியும். தமிழகத்தில் போலீஸ் துறையில் டிரோன்கள் பயன்படுத்தவது கோவையில் தான் முதல் முறை இவ்வாறு அவர் கூறினார்.

    • பெற்றோரிடம் கடைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார்.
    • இளம்பெண்ணின் பெற்றோர் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தனர்.

    கோவை,

    கோவை சரவணம்பட்டியை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். இவர் பீளமேட்டில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இளம்பெண்ணுக்கு கடந்த 1 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவரது கணவர் விவசாய தொழில் செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று இளம்பெண் தனது பெற்றோரிடம் கடைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை. அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து இளம்பெண்ணின் பெற்றோர் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமணமான 1 மாதத்தில் மாயமான இளமபெண்ணை தேடி வருகிறார்கள். 

    • ரூ.721 ஊதியம் வழங்க வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்
    • இதுகுறித்து கோவை மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கையை முன் வைப்பதாக தெரிவித்துள்ளனர்.

    கோவை,

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் அரசு அறிவித்த ஊதியம் வழங்க கோரியும், பணி நிரந்தரம் செய்யகோரியும் பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கோவை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களாக சுமார் 300க்கும் மேற்பட்டோர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்தநிலையில் அவர்களுக்கு அரசாங்கம் கூறிய ரூ.721 ஊதியம் வழங்க வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். இதனையடுத்து 3 மாதங்களுக்கு முன்பு மாவட்ட கலெக்டர் ரூ.721 வழங்க அறிவுறுத்தியதையடுத்து போராட்டங்களை கைவிட்டனர்.

    ஆனால் மாவட்ட கலெக்டர் அறிவித்த ஊதியம் தற்போது வரை வழங்கப்படவில்லை. எனவே ஊதியத்தை தங்கள் நிறுவனம் உடனடியாக வழங்க வலியுறுத்தியும், இன்று கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணி புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் இதுகுறித்து கோவை மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கையை முன் வைப்பதாக தெரிவித்துள்ளனர்.

    ×