search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 118381"

    ஒட்டனந்தல் ரத்னவேல் முருகன் கோவிலில் நடந்த திருவிழாவில் பூஜை செய்த எலுமிச்சம் பழங்களை பக்தர்கள் போட்டா போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். இதில் ஒரு எலுமிச்சம் பழம் ரூ.41 ஆயிரத்துக்கு ஏலம் போனது.
    அரசூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே ஒட்டனந்தல் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ரத்னவேல் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவில் சின்னமயிலம் என்றும், இரட்டை குன்றின் மீது அமைந்துள்ளதால் இரட்டை குன்று முருகன் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவின்போது பூஜை செய்த எலுமிச்சம் பழங்கள் ஏலம் விடும் நிகழ்ச்சி நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டும் பங்குனி உத்திர திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும், இரவில் சாமி வீதி உலாவும் நடந்து வந்தது.

    விழாவின் முதல் 9 நாட்கள், முருகன் அருகில் அமைந்துள்ள வேல் மீது தினசரி ஒன்று வீதம் மொத்தம் 9 எலுமிச்சம் பழங்களை குத்தி வைப்பார்கள். பின்னர் அந்த பழங்களை பத்திரமாக எடுத்து வைத்து பூஜை செய்வார்கள். இந்த பழச்சாற்றை குழந்தையில்லாத தம்பதியினர் அருந்தினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    அதன்படி 9 நாட்களும் வேல் மீது குத்தி வைக்கப்பட்ட எலுமிச்சம் பழங்களுக்கு பூஜை செய்யப்பட்டது. விழாவின் 11-ம் நாளான நேற்று முன்தினம் இரவு 11 மணி முதல் 12.45 மணி வரை இடும்பன் பூஜை நடைபெற்றது. அப்போது இடும்பன் சாமிக்கு கருவாடுசோறு படையல் வைத்து சிறப்பு பூஜை, அபிஷேகம் செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து கிராம மக்கள் முன்னிலையில் 9 எலுமிச்சம் பழங்கள் ஏலம் விடும் நிகழ்ச்சி நடந்தது. ஊர் தலைவர் பாலகிருஷ்ணன், மரத்தினால் செய்யப்பட்ட ஆணி செருப்பில் நின்றபடி இந்த எலுமிச்சம் பழங்களை ஏலம் விட்டார்.

    இதனை ஏலம் எடுப்பதற்காக விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மட்டுமின்றி, சென்னை, திருச்சி, புதுச்சேரி, குஜராத், பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமான குழந்தையில்லாத தம்பதியினர் கோவிலுக்கு வந்திருந்தனர். அதுபோல் வியாபாரிகள், வீடு கட்ட முயற்சி செய்பவர்கள், தொழில் செய்ய முனைவோர்களும் வந்திருந்தனர்.

    ஏலம் தொடங்கியவுடன் முருகனின் வேலில் திருவிழாவின் முதல் நாளன்று குத்தி வைக்கப்பட்ட எலுமிச்சம் பழம் ஏலம் விடப்பட்டது. இதனை ஏராளமானோர் போட்டி போட்டு ஏலம் கேட்டனர். இதனால் ஏலத்தொகை உயர்ந்து கொண்டே போனது.

    முடிவில் அந்த எலுமிச்சம் பழத்தை விழுப்புரத்தை சேர்ந்த ஜனார்த்தனன்- வெனிஷா தம்பதியினர் அதிகபட்ச தொகையாக ரூ.41 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்தனர்.

    இதேபோல் 2-ம் நாள் திருவிழாவின்போது வேலில் குத்தி வைக்கப்பட்ட எலுமிச்சம் பழத்தை கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள டி.ஏந்தல் கிராமத்தை சேர்ந்த அய்யாக்கண்ணு- பானுப்பிரியா தம்பதியினர் ரூ.22 ஆயிரத்துக்கும், 3-ம் நாள் பழத்தை திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஒட்டனந்தல் கிராமத்தை சேர்ந்த மாணிக்கம்- சசிகலா தம்பதியினர் ரூ.19 ஆயிரத்துக்கும், 4-ம் நாள் பழத்தை பெங்களூரு ஆனந்தன்- சத்யா தம்பதியினர் ரூ.8 ஆயிரத்து 100-க்கும், 5-ம் நாள் பழத்தை திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுளாப்பட்டு கிராமத்தை சேர்ந்த ராஜீவ்காந்தி- சூர்யா தம்பதியினர் ரூ.16 ஆயிரத்துக்கும், 6-ம் நாள் பழத்தை மண்டகமேடு கிராமத்தை சேர்ந்த ரத்தினம்-தேவி தம்பதியினர் ரூ.10 ஆயிரத்துக்கும், 7-ம் நாள் பழத்தை திருமுண்டீச்சரத்தை சேர்ந்த முத்துராஜ் ரூ.21 ஆயிரத்துக்கும், 8-ம் நாள் பழத்தை மேட்டுக்குப்பத்தை சேர்ந்த முகுந்தன்- நித்யா தம்பதியினர் ரூ.9 ஆயிரத்துக்கும், 9-ம் நாள் பழத்தை பெங்களூரு அருகே உள்ள பெல்காம் காண்டேஸ்புரம் பகுதியை சேர்ந்த ராவ்சாகிப்- ரூபாதேவி தம்பதியினர் ரூ.9 ஆயிரத்துக்கும் ஏலம் எடுத்தனர்.

    இவர்களில் முத்துராஜ் மட்டும் தனக்கு திருமணம் நடைபெற வேண்டி எலுமிச்சம் பழத்தை ஏலம் எடுத்துள்ளார். மற்றவர்கள் குழந்தை பேறுக்காக எலுமிச்சம் பழத்தை ஏலம் எடுத்துள்ளனர். ஆக மொத்தம் 9 நாள் திருவிழாவின்போது பூஜை செய்யப்பட்ட எலுமிச்சம் பழங்கள் ரூ.1 லட்சத்து 55 ஆயிரத்து 100-க்கு ஏலம் போனது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இவர்களுடன் கடந்த ஆண்டுகளில் எலுமிச்சம் பழத்தை ஏலம் எடுத்து வேண்டிய வரம் கிடைத்தவர்களும் இவ்விழாவில் கலந்துகொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும் கருவாடு சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
    பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடி வழக்கில் சிக்கியுள்ள வைர வியாபாரி நிரவ் மோடியின் சொகுசு கார்களையும், 173 ஓவியங்களையும் ஏலத்தில் விற்பனை செய்வதற்கு வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்தது. #NiravModi #ArtCollection #Auction #PNBFraud
    புதுடெல்லி:

    பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடி வழக்கில் சிக்கியுள்ள வைர வியாபாரி நிரவ் மோடியின் சொகுசு கார்களையும், 173 ஓவியங்களையும் ஏலத்தில் விற்பனை செய்வதற்கு வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்தது. இதற்கான அனுமதியை மும்பை தனிக்கோர்ட்டு வழங்கியது.



    இதையடுத்து அவற்றை அடுத்த சில தினங்களில் மத்திய அமலாக்கத்துறையும், வருமான வரித்துறையும் ஏலத்தில் விற்பனை செய்ய உள்ளன. ஓவியங்கள் மட்டுமே ரூ.57 கோடியே 72 லட்சம் மதிப்புடையவை என தகவல்கள் கூறுகின்றன. ரோல்ஸ் ராய்ஸ், போர்ஸ், மெர்சிடஸ், டயோட்டா பார்ஜூனர் என 11 சொகுசு கார்களும் ஏலத்தில் விற்பனை செய்யப்பட உள்ளன. இவற்றின் விற்பனை தொகை, அரசு கருவூலத்தில் டெபாசிட் செய்யப்படும்.    #NiravModi #ArtCollection #Auction #PNBFraud
    குன்னூர் ஏல மையத்தில் ரூ.10 கோடியே 84 லட்சத்துக்கு தேயிலைத்தூள் விற்பனை செய்யப்பட்டது.
    குன்னூர்:

    நீலகிரி மாவட்ட பொருளாதாரத்தில் தேயிலை விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை நம்பி ஏராளமான விவசாயிகளும், தொழிலாளர்களும் பிழைப்பு நடத்தி வருகின்றனர். மேலும் மாவட்டம் முழுவதும் 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளும், 100-க்கும் மேற்பட்ட தனியார் தேயிலை தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைத்தூள், குன்னூரில் உள்ள ஏல மையம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு தேயிலை வர்த்தகர் அமைப்பு சார்பில் ஆன்லைனில் ஏலம் நடைபெறுகிறது.

    இந்த ஏலத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் கலந்துகொண்டு தேயிலைத்தூளை வாங்குகின்றனர். ஆனால் தேயிலை வர்த்தகர் அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. வாரந்தோறும் வியாழன், வெள்ளி ஆகிய 2 நாட்கள் தேயிலை ஏலம் நடத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான 4-வது ஏலம் கடந்த 24, 25-ந் தேதிகளில் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு 13 லட்சத்து 12 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் வந்தது. இதில் 7 லட்சத்து 61 ஆயிரம் கிலோ இலை ரகமாகவும், 5 லட்சத்து 51 ஆயிரம் கிலோ டஸ்ட் ரகமாகவும் இருந்தது. ஏலத்தில் 10 லட்சத்து 71 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனையானது. இது 82 சதவீத விற்பனை ஆகும்.

    விற்பனையான தேயிலைத்தூளின் ரொக்க மதிப்பு ரூ.10 கோடியே 84 லட்சம் ஆகும். சி.டி.சி. தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.256 எனவும், ஆர்தோடக்ஸ் தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.253 எனவும் இருந்தது. சராசரி விலையாக இலை ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.84 முதல் ரூ.90 வரையும், உயர் வகை ரூ.125 முதல் ரூ.140 வரையும் ஏலம் போனது. டஸ்ட் ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.84 முதல் ரூ.88 வரையும், உயர் வகை ரூ.125 முதல் ரூ.140 வரையும் விற்பனையானது. விற்பனையான அனைத்து தேயிலைத்தூள் ரகங்களுக்கும் கடந்த ஏலத்தை விட இந்த ஏலத்தில் ரூ.1 விலை உயர்வு இருந்தது. அடுத்த ஏலம் வருகிற 31, 1-ந் தேதிகளில் நடைபெறுகிறது. அந்த ஏலத்தில் 13 லட்சம் கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வருகிறது.
    பரமத்தி வேலூரில் தேங்காய் பருப்பு விலை சரிவடைந்தது. இதனால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
    பரமத்தி வேலூர்:

    பரமத்தி வேலூர் தாலுகாவில் கபிலர்மலை, பாண்டமங்கலம், பொத்தனூர், வேலூர், அனிச்சம்பாளையம், பாலப்பட்டி, மோகனூர், சோழசிராமணி, ஜேடர்பாளையம், அய்யம்பாளையம், பிலிக்கல்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை பயிர் செய்யப்பட்டு உள்ளது.

    இங்கு விளையும் தேங்காய்களை உடைத்து அதன் பருப்புகளை சிறு வியாபாரிகள் வியாழக்கிழமை தோறும் பரமத்தி வேலூர் வெங்கமேட்டில் உள்ள சேலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்து, தரத்திற்கு தகுந்தார்போல் ஏலம் விடப்படுகிறது.

    கடந்த வாரம் பொங்கல் பண்டிகையையொட்டி தேங்காய் பருப்பு ஏலம் நடைபெறவில்லை. அதற்கு முந்தைய வாரம் நடைபெற்ற தேங்காய் பருப்பு ஏலத்தில் 1,803 கிலோ தேங்காய் பருப்புகள் ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று 119 ரூபாய் 12 பைசாவிற்கும், குறைந்தபட்சமாக 108 ரூபாய் 90 பைசாவுக்கும், சராசரியாக 117 ரூபாய் 12 பைசாவிற்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1 லட்சத்து 83 ஆயிரத்து 178-க்கு வர்த்தகம் நடைபெற்றது.

    இந்த நிலையில் நேற்று நடைபெற்ற தேங்காய் பருப்பு ஏலத்தில் 1,752 கிலோ தேங்காய் பருப்புகள் ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று 112 ரூபாய் 65 பைசாவிற்கும், குறைந்தபட்சமாக 108 ரூபாய் 85 பைசாவுக்கும், சராசரியாக 110 ரூபாய் 85 பைசாவிற்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1 லட்சத்து 51 ஆயிரத்து 756-க்கு வர்த்தகம் நடைபெற்றது. நேற்று தேங்காய் பருப்பு வரத்து குறைந்ததோடு, அதன் விலையும் சரிவடைந்து இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
    மத்தியபிரதேசத்தில் தொழிலாளி கண்டெடுத்த 42.59 காரட் எடையுள்ள வைரம் 2.55 கோடிக்கு விலை போனது. #MadhyaPradesh #Diamond #Auction
    பன்னா:

    மத்தியபிரதேசம் மாநிலம் பன்னாவில் அமைந்துள்ள உதாலி சுரங்கத்தில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, மோதிலால் பிராஜபதி என்ற தொழிலாளி, வைரம் ஒன்றை கண்டெடுத்தார். அந்த வைரம் அதிகாரிகள் முன்னிலையில் நேற்று ஏலம் விடப்பட்டது.

    பல்வேறு வகையான வைரங்கள் ஏலம் விடப்பட்ட அந்த ஏலச்சந்தையில், கண்டெடுக்கப்பட்ட 42.59 காரட் எடையுள்ள இந்த வைரம் 2.55 கோடிக்கு விலை போனது. உத்தரபிரதேசத்தை சேர்ந்த ராகுல் அகர்வால் என்ற தொழிலதிபர் வைரத்தை ஏலத்துக்கு எடுத்தார்.

    பின்னர் கிடைத்த ஏலத்தொகையில் 12 சதவீதம் வரித்தொகைபோக மீதமுள்ள தொகை அந்த தொழிலாளியிடமே வழங்கப்படுகிறது.   #MadhyaPradesh #Diamond #Auction
    சென்னை மாநகரப்பகுதிகளில் சாலையோரம் கேட்பாரற்ற நிலையில் நின்ற 8000 வாகனங்களை பறிமுதல் செய்து ஏலம் விட்டத்தில் மாநகராட்சிக்கு ரூ.2 கோடி வருமானம் கிடைத்துள்ளது. #chennaicorporation
    சென்னை:

    சென்னை மாநகரப்பகுதிகளில் ஆட்டோ, கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டு வருகின்றன.

    இதனால் போக்குவரத்திற்கும், பொது மக்களுக்கும், பொது சுகாதரத்திற்கும் இடையூறாக உள்ளன.

    நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் யாரும் கண்டு கொள்ளாமல் வீதியில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை மாநகராட்சி எடுத்து வருகிறது.

    சாலையின் ஓரங்களிலும், தெருக்களின் முக்கிய பகுதிகளிலும் இது போன்ற வாகனங்கள் யாரும் பயன்படுத்தப்படாமல் கிடப்பதை அகற்ற அதிகாரிகள் களம் இறங்கி பறிமுதல் செய்தனர்.

    சுமார் 8 ஆயிரம் வாகனங்கள் நகரம் முழுவதும் இருந்து கைப்பற்றப்பட்டன. அந்த வாகனங்களின் விவரங்களை மாநகராட்சியின் வெப்சைட்டில் வெளியிட்டுள்ளனர்.

    வாகனங்களின் உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களை பார்த்து எடுத்து செல்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான வாகனங்களை தேடி யாரும் வரவில்லை. 31 பேர் மட்டுமே வந்து தங்கள் வாகனங்களுக்கான ஆவணங்களை காட்டி திரும்ப பெற்று சென்றனர்.

    இது குறித்து மாநகராட்சி அதிகாரி கூறியதாவது:-

    சாலையோரங்களில் நிறுத்தப்பட்டு ஆண்டு கணக்கில் யாராலும் கண்டு கொள்ளாமல் உள்ள வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 7877 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதில் 31 வாகனங்கள் அதன் உரிமையாளர்களுக்கு திருப்பி கொடுக்கப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில் 7687 மோட்டார் சைக்கிள்களும், 90 ஆட்டோக்களும், 104 நான்கு சக்கர வாகனங்களும் அடங்கும்.

    இந்த வாகனங்களை தனித்தனியாக டெண்டர் விடுவதற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதற்காக அமைக்கப்பட்ட கமிட்டி டெண்டர் நடைமுறைகளை வகுத்து வாகனங்களை ஏலம் விட நடவடிக்கை எடுத்தது. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களுக்கு கமிட்டி ஒரு கோடியே 57 லட்சம் விலை நிர்ணயம் செய்திருந்தது. ஆனால் வாகனங்களை ஏலத்தில் எடுக்க கடும் போட்டி நிலவியதால் எதிர்பார்த்ததைவிட கூடுதலாக ஏலம் போனது. ரூ.2 கோடியே 21 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது.

    ஒரே தவணையில் முழு பணத்தையும் செலுத்தி வாகனங்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தணையின் அடிப்படையில் ஏலம் எடுத்தவருக்கு வாகனங்களை வழங்க முடிவு செய்யப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சாலையோரம் கேட்பாரற்று நின்ற வாகனங்களை அப்பறப்படுத்தியதில் மாநகராட்சிக்கு ரூ.2 கோடி வருவாய் கிடைத்ததோடு மட்டுமல்லாமல் அந்த வாகனங்களால் கொசுக்கள் உற்பத்தி ஆகி பொதுமக்கள் பாதிக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. காலம் கடந்து எடுக்கின்ற நடவடிக்கையால் சுகாதார பிரச்சினைகள் ஏற்பட்டு உயிர் இழப்பும் உண்டாகிறது. #chennaicorporation
    நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தத்துவ அறிஞர் எரிக் குட்னிட் என்பவருக்கு எழுதிய கடிதம் ரூ.20 கோடிக்கு ஏலம் போனது. #AlbertEinstein
    நியூயார்க்:

    ஜெர்மனியை சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். நோபல் பரிசு பெற்றவர். இவர் கடந்த 1954-ம் ஆண்டு தனது 74-வது வயதில் ஜெர்மனியை சேர்ந்த தத்துவ அறிஞர் எரிக் குட்கின்ட் என்பவருக்கு ஒரு கடிதம் எழுதினார்.

    அவர் தான் இறப்பதற்கு ஒரு ஆண்டுக்கு முன்பு எழுதப்பட்டது. அறிவியலுக்கும், மதத்துக்கும் இடையேயான விவாத பொருளை மையமாக கொண்டது.

    எனவே, இதை ‘கடவுள் கடிதம்’ என அழைக்கின்றனர். அந்த கடிதம் நியூயார்க்கின் கிறிஸ்டி மையத்தில் சமீபத்தில் ஏலம் விடப்பட்டது.

    இக்கடிதத்தை வாங்க ஆன்லைனில் கடும் போட்டி நிலவியது. முடிவில் அது ரூ.20 கோடிக்கு ஏலம் போனது.

    அந்த கடிதம் ரூ.7 கோடி முதல் ரூ.7 கோடியே 70 லட்சம் வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரூ.20 கோடிக்கு ஏலம் போனதாக கிறிஸ்டி ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ஐன்ஸ்டீன் கடிதங்கள் ஏலம் விட்டது இது முதன் முறையல்ல. ஏற்கனவே அவரது கடிதங்கள் ஏலம் விடப்பட்டுள்ளன. #AlbertEinstein
    பிளேபாய் கவர்ச்சி பத்திரிகை நிறுவனர் ஹெப்னரின் 14 காரட் ‘வயாகரா’ தங்க மோதிரம் 22 ஆயிரத்து 400 டாலருக்கு விலை போனது. #PlayBoy #GoldViagra #Hefner
    லாஸ் ஏஞ்சல்ஸ்:

    உலகின் முன்னணி கவர்ச்சி பத்திரிகையான ‘பிளேபாய்’ பத்திரிகையின் நிறுவனர் ஹியூ ஹெப்னர். சொகுசான ஒரு வாழ்க்கையை நடத்தி வந்த இவர், கடந்த ஆண்டு, தனது 91-வது வயதில் மரணம் அடைந்து விட்டார்.

    இந்த நிலையில் அவர் பயன்படுத்தி வந்த பொருட்கள், சாதனங்கள் மட்டுமல்லாது ‘பிளேபாய்’ பத்திரிகையின் முதல் இதழ் ஆகியவை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், ஜூலியன் நிறுவனத்தின் மூலம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.அவற்றை அவரது ரசிகர்கள் அதிக தொகை கொடுத்து மகிழ்ச்சியுடன் வாங்கி குவித்திருக்கிறார்கள். இதுபற்றிய சுவாரசியமான தகவல்கள் இதோ:-

    ஹாலிவுட் கவர்ச்சிப்புயல் மர்லின் மன்றோவின் அட்டைப்படம் தாங்கி வெளிவந்த ‘பிளேபாய்’ பத்திரிகையின் முதல் இதழ் பிரதி 31 ஆயிரத்து 250 டாலருக்கு விற்பனையானது. (ஒரு டாலரின் மதிப்பு சுமார் ரூ.70).

    ‘வயாகரா’ மாத்திரையை மறைத்து வைத்து, தயாரிக்கப்பட்டிருந்த ஹெப்னரின் 14 காரட் தங்க மோதிரம், 22 ஆயிரத்து 400 டாலருக்கு விலை போனது.

    ஹெப்னர், ‘பிளேபாய்’ பத்திரிகையின் முதல் இதழ் கட்டுரைகளை தட்டச்சு செய்வதற்கு பயன்படுத்திய தட்டச்சு எந்திரம், 1 லட்சத்து 62 ஆயிரத்து 500 டாலருக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.

    அவர் புகை பிடிக்கும் போது பயன்படுத்திய மேலாடை உள்ளிட்ட நிறைய பொருட்களை அவரது ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் எடுத்திருக்கிறார்கள். #PlayBoy #GoldViagra #Hefner
    சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் மிக அழகிய இளஞ்சிவப்பிலான வைரக்கல் ரூ.370 கோடிக்கு ஏலம் போனது. #pinkdiamond #GenevaAuction
    ஜெனீவா:

    சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் மிக அழகிய இளஞ்சிவப்பு வைரக்கல் ஏலம் நடைபெற்றது. இதை கிறிஸ்டி, ஏல மையம் நடத்தியது.

    10 காரட் எடை கொண்ட இந்த வைரக்கல் சுமார் ரூ.370 கோடிக்கு (50 மில்லியன் டாலர்) ஏலம் போனது. இது நீள் சதுரவடிவம் கொண்டது. பளிச்சென்ற இளஞ்சிவப்பு நிறம் கொண்டது.

    இந்த வைரத்தை பலர் போட்டி போட்டு ஏலம் கேட்டனர். முடிவில் ஒருவர் அதிக விலை கொடுத்து வாங்கினார். அவரின் பெயரை வெளியிட கிறிஸ்டி ஏல மையம் மறுத்து விட்டது.

    கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1920-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க சுரங்கத்தில் இது கண்டு பிடிக்கப்பட்டது. பொதுவாக வைரங்கள் வெள்ளை நிறத்தில்தான் இருக்கும். ஆனால் இந்த வைரம் அரிய இளஞ்சிவப்பு நிறத்தில் ஜொலிக்கிறது. #pinkdiamond #GenevaAuction
    லண்டனில் சீக்கிய ராணியின் பச்சை மரகத கல் மற்றும் முத்துக்களால் ஆன நெக்லஸ் ரூ.1¾ கோடிக்கு ஏலம் போனது. #JindanKaur
    லண்டன்:

    கடந்த 1843-ம் ஆண்டில் பஞ்சாபை ஆண்ட மன்னர் ரஞ்சித்சிங்கின் மனைவி ஜிந்தன் கவுர். மகாராஜா ரஞ்சித்சிங் ஆங்கிலேயருடன் போரிட்டு தோல்வி அடைந்தார். அதை தொடர்ந்து ராணி ஜிந்தன் கவுர் அங்கிருந்து தப்பி நேபாள தலைநகர் காத்மாண்டுக்கு சென்றார்.

    அங்கு அவரை நேபாள மன்னர் கைது செய்து வீட்டு காவலில் வைத்தார். பின்னர் அங்கிருந்து இங்கிலாந்து சென்றார். அப்போது தன்னுடன் விலை உயர்ந்த நெக்லசையும் எடுத்து சென்றார். பச்சை மரகத கல் மற்றும் முத்துக்களால் ஆன அந்த நெக்லஸ் கலை நயத்துடன் கூடியது.

    அந்த நெக்லஸ் லண்டனில் ஏலம் விடப்பட்டது. அது கடுமையான போட்டிக்கு பின் ரூ.1 கோடியே 80 லட்சத்துக்கு (1,87,000 பவுண்டு) ஏலம் போனது.

    ஆனால் அதை ஏலம் எடுத்தவர் விவரம் அறிவிக்கப்படவில்லை. இந்த நெக்லஸ் ரூ.75 லட்சம் முதல் ரூ.1 கோடியே 15 லட்சத்துக்கு ஏலம் போகும் என முதலில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக ரூ.1¾ கோடிக்கு ஏலம் போனது. #JindanKaur
    பாகிஸ்தானில் பிரதமரின் சொகுசு வாகனங்கள் அனைத்தையும் ஏலத்தில் விற்பனை செய்து அரசின் கருவூலத்தில் சேர்க்க இம்ரான்கான் அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஏலம் வரும் 17-ந் தேதி நடக்கிறது. #Pakistan #LaxuryVehicles
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் உள்ளது. அந்த நாட்டின் நிர்வாகத்தை நடத்துவதற்கு 9 பில்லியன் டாலர் (சுமார் ரூ.63 ஆயிரம் கோடி) நிதி தேவைப்படுகிறது என அந்த நாட்டின் நாடாளுமன்ற செனட் சபையில் பேசிய நிதி மந்திரி ஆசாத் உமர் தகவல் வெளியிட்டார். பாகிஸ்தானில் மாற்றங்களை கொண்டு வருவதாக வாக்குறுதி அளித்து உள்ள புதிய பிரதமர் இம்ரான்கான் சிக்கன நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    முதலில் பிரதமருக்கான அதிகாரப்பூர்வ பங்களாவில் தான் வசிக்கப்போவதில்லை என அறிவித்தார். தனக்கு 2 ஊழியர்கள் போதும், 2 கார்கள் போதும் என கூறினார்.

    பாகிஸ்தான் பிரதமருக்கு நிறைய சொகுசு கார்கள் இருக்கின்றன. அவற்றில் விலை உயர்ந்த 8 பி.எம்.டபிள்யு கார்கள், 4 மெர்சிடஸ் பென்ஸ் கார்கள், குண்டு துளைக்காத லேண்ட் குரூசர் வாகனங்கள் 4, 2003-2013 மாடல் கார்கள் 8 அடங்கும். இந்த வாகனங்கள் அனைத்தையும் ஏலத்தில் விற்பனை செய்து அரசின் கருவூலத்தில் சேர்க்க இம்ரான்கான் அரசு முடிவு செய்துள்ளது.

    இதற்கான ஏலம் வரும் 17-ந் தேதி இஸ்லாமாபாத்தில் நடக்கிறது.  #Pakistan #LaxuryVehicles 
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தலைமுடி ரூ.7.94 கோடிக்கு ஏலம் போனது. #TirupatiTemple
    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.

    அவர்களில் பெரும்பாலானோர் முதலில் கல்யாண கட்டாவில் தலைமுடி காணிக்கை செலுத்திய பின்னர் நீராடிவிட்டு தரிசனம் செய்கின்றனர். தினமும் பக்தர்கள் செலுத்தும் தலைமுடி டன் கணக்கில் சேருகிறது.

    இந்த தலைமுடிகள் ரகம் வாரியாக பிரிக்கப்பட்டு இ-டெண்டர் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி நேற்று இ-டெண்டர் மூலம் தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு மூலம் ஏலம் விடப்பட்டது. இதில் 31 இன்ச் நீளம் வரை உள்ள தலைமுடிக்கு கிலோ ரூ.22 ஆயிரத்து 94 என்ற விலையில் 8 ஆயிரத்து 300 கிலோ ஏலத்துக்கு வைக்கப்பட்டது. இந்த ஏலத்தில் 1, 600 கிலோ தலைமுடி ரூ.3 கோடியே 56 லட்சத்துக்கு ஏலம் போனது.

    அதேபோல் 16 இன்ச் முதல் 30 இன்ச் வரை உள்ள தலைமுடி கிலோ ரூ.17 ஆயிரத்து 223 என்ற விலையில் மொத்தம் 2 ஆயிரம் கிலோ ஏலம் விடப்பட்டது. இந்த ரக தலைமுடி 2 ஆயிரம் கிலோ ரூ.3 கோடியே 44 லட்சத்துக்கு ஏலம் போனது.

    3-வது ரக தலைமுடி 10 இன்ச் முதல் 15 இன்ச் வரை உள்ளது தரம்பிரிக்கப்பட்டு கிலோ ரூ.5 ஆயிரத்து 462 என்ற விலையில் 3 ஆயிரத்து 14 கிலோ ஏலம் விடப்பட்டது.

    இந்த ரகம் மொத்தம் 1,200 கிலோ ரூ.65 லட்சத்து 55 ஆயிரத்துக்கு ஏலம் போனது. இதேபோல் 1200 கிலோ வெள்ளை தலைமுடி ரூ.65 லட்சத்து 85 ஆயிரத்துக்கு ஏலம் போனது. மேலும் சில ரக தலைமுடிகளும் ஏலம்போனது.

    இவ்வாறு தலைமுடி மொத்தம் ரூ.7 கோடியே 94 லட்சத்துக்கு ஏலம்போனதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.  #TirupatiTemple
    ×