search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 122132"

    தனிமனித அறத்தின் வழிநின்று எதிர்த்து நின்றால், நாமும் இயேசுவை போல் துன்பத்தை எதிர்க்கும் தைரியத்துடன் செயல்பட்டால் வெற்றி பெற முடியும்.
    ஒவ்வொரு நாளும் நாம் பல விதமான பிரச்சினைகளை சந்திக்கிறோம். சிலவற்றுக்கு தீர்வும், பலவற்றுக்கு விடையும் கிடைப்பதில்லை. அதனால் நாம் கவலைப்படுகிறோம். நம் நிம்மதி குலைந்து விடுகிறது. ஒருவர் நடக்கையில் சில குரங்குகள் துரத்த அவர் வேகமாக நடக்க முற்படுகிறார். குரங்குகள் அவரை நெருங்கும் போது, ஒரு பெரியவரின் குரல் கேட்டது.

    “ஓடாதே. எதிர்த்து நில்“. ஓடியவர் திரும்பி எதிர்த்து நிற்க வந்த வழியே திரும்பி ஓடிவிட்டன குரங்குகள். நமக்கு வருகிற துன்பங்கள், சவால்கள், எதிர்ப்புகள் கூட இப்படி குரங்குகள் போன்றவை தான். எதிர்த்து நின்றால் ஓடிவிடும். இயேசுவுக்கும் எதிர்ப்புகள் பல வடிவங்களில் வந்தன. உண்மையை பேசி, தவறு செய்தவர்களை எதிர்த்து நின்று, உழைக்கும் வர்க்கத்தை சுரண்டிய, அன்றைய யூத தலைவர்களை தனிமனிதனாக சத்தியத்தின் வழியில் நின்று சத்தமாக குரல் கொடுத்தார் இயேசு.

    வெளியில் நடமாட முடியாதவாறு அவரை கொலை செய்ய யூத தலைவர்கள் திட்டம் வகுத்தனர் (யோவான் 7:1-2). பிரச்சினைகள், துன்பங்கள், மிரட்டல்கள் எந்த வடிவில் வந்தாலும் நாம் பயப்படவேண்டியதில்லை. தப்பித்து ஓட எண்ண வேண்டியதில்லை. அவற்றை பகுத்துப் பார்த்து தனிமனித அறத்தின் வழிநின்று எதிர்த்து நின்றால், நாமும் இயேசுவை போல் துன்பத்தை எதிர்க்கும் தைரியத்துடன் செயல்பட்டால் வெற்றி பெற முடியும் என்பதை அறிந்து இத்தவக்காலத்தில் செயல்பட வேண்டும்.

    - வில்லியம், பங்குத்தந்தை, தூய லூர்து அன்னை ஆலயம், வடகரை.
    இயேசுவை இறைமகனாகவும், ஆண்டவராகவும் ஏற்றுக்கொள்கின்ற ஒவ்வொருவரும், அவரது வார்த்தைகளைத் தங்கள் வாழ்வில் கடைப்பிடிக்க கடமைப்பட்டவர்கள்.
    இறைமகன் இயேசு இவ்வுலகில் வாழ்ந்தபோது, தந்தையாகிய கடவுளிடம் தனிமையில் ஜெபித்தார் என்று பைபிள் கூறுகிறது.

    ‘இயேசு விடியற்காலைக் கருக்கலில் எழுந்து தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே அவர் இறை வனிடம் வேண்டிக் கொண்டிருந்தார்’ (மாற்கு 1:35) என்றும், இயேசு தனியே இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலையின் மேல் ஏறினார். பொழுது சாய்ந்த பிறகும் அங்கே அவர் தனியே இருந்தார் (மத்தேயு 14:23) என்றும் வாசிக்கிறோம்.

    இயேசு கிறிஸ்து தம் வாழ்வில் கடவுளிடம் தனிமையில் ஜெபிப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்தார்.

    நாம் எப்படி ஜெபிக்க வேண்டும் என்பதை ஆண்டவர் இயேசு கற்றுத்தந்திருக்கிறார். ‘நீங்கள் இறைவனிடம் வேண்டும் பொழுது வெளிவேடக்காரரைப் போல் இருக்க வேண்டாம். அவர்கள் தொழுகைக்கூடங்களிலும் வீதியோரங்களிலும் நின்று கொண்டு மக்கள் பார்க்க வேண்டுமென இறைவேண்டல் செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்று விட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஆனால் நீங்கள் இறைவனிடம் வேண்டும் பொழுது உங்கள் உள்ளறைக்குச் சென்று, கதவை அடைத்துக் கொண்டு, மறைவாய் உள்ள உங்கள் தந்தையை நோக்கி வேண்டுங்கள். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்’ (மத்தேயு 6:5,6) என்று அவர் கூறு கிறார்.

    தங்களை பக்தியுள்ள மனிதர்கள், கடவுளுக்கு நெருக்கமான பிள்ளைகள் என்று காட்டும் எண்ணத்துடன், விளம்பரம் செய்கின்ற வகையில் ஜெபிக்கிறவர்களை இயேசு கிறிஸ்து கண்டிக்கிறார். தெருக்களிலும் ஆலயங்களிலும் வீண் பகட்டுக்காக சத்தம் போட்டு, ஜெபிப்பது போல நடிக்கின்றவர்களை ஆண்டவர் வெளிவேடம் போடுகிறவர்கள் என்று குறை கூறுகிறார். இப்படி செய்கிறவர்களுக்கு கைமாறாக, ஏற்கனவே தண்டனைத் தீர்ப்பு கிடைத்து விட்டது என்றும் அவர் கூறு கிறார்.

    ஆனால், தனிமையில் வைக்கப்படும் மறைவான வேண்டுதலை கடவுள் இரக்கத்தோடு கேட்டு, அவர்களுக்குத் தேவையானதை செய்வார் என்றும் ஆண்டவர் உறுதி அளிக்கிறார்.

    இயேசு கிறிஸ்து தொடர்ந்து சொல்வதைக் கேளுங்கள்: “நீங்கள் இறைவனிடம் வேண்டும் பொழுது பிற இனத்தவரைப் போலப் பிதற்ற வேண்டாம். மிகுதியான சொற்களை அடுக்கிக் கொண்டே போவதால் தங்கள் வேண்டுதல் கேட்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்கள். நீங்கள் அவர்களைப் போல் இருக்க வேண்டாம். ஏனெனில் நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையை உங்கள் விண்ணகத் தந்தை அறிந்திருக்கிறார்.” (மத்தேயு 6:7,8)

    நாம் கேட்பதற்கு முன்பே கடவுள் நமது தேவைகளை அறிந்திருக் கிறார் என்று இயேசு கூறுவதை நாம் உறுதியாக நம்ப வேண்டும். ஒருவர் அறிந்த காரியத்தைப் பற்றி நாம் அதிகமாக விளக்கம் அளிப்பது தேவையற்ற ஒன்று.

    நமக்கு கடவுள் மீது முழுமையான நம்பிக்கை இருந்தால், ஜெபிக்கும் வேளையில் மிகுதியான சொற்களை பயன்படுத்தக் கூடாது என்பதே இயேசு தரும் போதனை.

    மிகுதியான வார்த்தைகளைக் கொண்டு பிதற்றுவதில் அல்ல, கடவுள் மீது நாம் கொள்கின்ற நம்பிக்கையின் மூலமே நமது தேவைகளுக்கு பதில் கிடைக்கும் என்பதே அவரது வழிகாட்டுதல்.

    ஆகவே, நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள்: “விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக! இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளது போல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீயோனிடமிருந்து எங்களை விடுவியும். ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமக்கே. ஆமென்” (மத்தேயு 6:9-13) என்று இயேசு கற்பித்தார்.

    ஒரு ஜெபத்தில் இருக்க வேண்டிய முக்கிய அம்சங்களை, ஆண்டவர் கற்பித்த இந்த ஜெபத்தில் இருந்து நாம் கற்றுக் கொள்கிறோம்.

    முதலில் நாம் கடவுளை மகிமைப்படுத்த வேண்டும். அவரது பெயரைப் போற்றி, அவரது ஆட்சியை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும். நமது விருப்பத்திற்கும் மேலாக கடவுளின் விருப்பத்தை நாட வேண்டும். பல தலைமுறைகளுக்கு சொத்து சேர்ப்பதற்கல்ல, அன்றாட உணவுக்காக மட்டுமே ஜெபிக்க வேண்டும்.

    நாம் பிறரை மன்னித்த பிறகே, நமக்கான கடவுளின் மன்னிப்பை கேட்க வேண்டும். சோதனைக்கு உட்படாமல் இருக்கவும், தீமையில் இருந்து விலக்கி காக்குமாறும் நாம் கடவுளிடம் கேட்க வேண்டும். ஏனெனில், ஆட்சியும் மாட்சியும் என்றென்றும் அவருடையன.

    நமது வாழ்வும் ஜெபமும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே இயேசு கிறிஸ்துவின் போதனையாக இருந்தது. ஆகவேதான், அவர் கற்றுக்கொடுத்த இந்த ஜெபத்தில் ஒரு வாழ்வியல் பாடத்தையும் பொதிந்து வைத்துள்ளார்.

    “மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னித்தால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களை மன்னிப்பார். மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில் உங்கள் தந்தையாகிய கடவுளும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்” என்ற எச்சரிக்கை மிகுந்த அறிவுரையையும் ஆண்டவர் வழங்குகிறார்.

    இயேசுவை இறைமகனாகவும், ஆண்டவராகவும் ஏற்றுக்கொள்கின்ற ஒவ்வொருவரும், அவரது வார்த்தைகளைத் தங்கள் வாழ்வில் கடைப்பிடிக்க கடமைப்பட்டவர்கள். தங்கள் தேவைகளை ஆண்டவரிடம் கூறுவது மட்டுமே ஜெபம் என்ற தவறான சிந்தனையில் இருந்து விடுபட்டு, நமது வாழ்வால் கடவுளை மகிமைப்படுத்துவதே ஜெபம் என்பதை உணர்வோம்.

    “என்னை நோக்கி, ‘ஆண்டவரே, ஆண்டவரே’ எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல் படுபவரே செல்வர்” (மத்தேயு 7:21) என்பதே இயேசு கிறிஸ்துவின் எச்சரிக்கை.

    ஆகவே, வெளிவேடம் மிகுந்த ஜெபங்களை விடுத்து, நமது தூய வாழ்வால் கடவுளுக்கு மாட்சி அளிப்போம்.

    டே. ஆக்னல் ஜோஸ் 
    தீமைக்கு நன்மை செய்யும் பாடத்தை சிலுவை கற்றுத் தருகிறது. இறைமகன் இயேசுவின் ரத்தம் பழிக்குப் பழி கேட்கும் ரத்தமல்ல, வாழ்வை நோக்கி நம் இதயத்தைத் திரும்பச் சொல்லும் ரத்தம்.
    முற்பிதாக்களில் ஒருவர் யாக்கோபு. அவர் தனது பிள்ளைகளில் ‘யோசேப்பு’ மீது அதிக பாசம் வைக்கிறார். அது மற்ற சகோதரர்களுக்குப் பிடிக்கவில்லை. ஒரு நாள் அவனைப் பிடித்து அடிமையாய் விற்று விட்டு, அவனுடைய ஆடையில் ஒரு விலங்கின் ரத்தத்தைப் பூசி தந்தையிடம் வருகின்றனர். ஏதோ காட்டு விலங்கு யோசேப்புவைக் கொன்று விட்டதாக கதை விடுகின்றனர். யாக்கோபு அதிர்ந்து போகிறார்.

    இங்கே ரத்தம் ஒரு பொய்யின் அடையாளமாய் இருக்கிறது. அந்த பொய் ஈடு கேட்கிறது. காலம் கடக்கிறது. யோசேப்பு எகிப்து நாட்டில் பெரிய அதிகாரியாகிறார். அவனுடைய சகோதரர்கள் உதவிக்காக அவரைத் தேடி வருகின்றனர். அவர் தான் தங்கள் சகோதரர் என்பது அவர்களுக்குத் தெரியாது.

    யோசேப்பு சட்டென கண்டுபிடித்து விடுகிறார். ஆனால் தெரியாதது போல் நடிக்கிறார்.

    ‘நீங்கள் ஒற்றர்கள்’ என சகோதரர்களை குற்றம் சாட்டுகிறார். மூன்று நாட்கள் சகோதரர்கள் சிறையில் வாடுகின்றனர். அவர்களுடைய மனசாட்சி விழித்தெழுகிறது. தனது சகோதரனுக்குச் செய்த துரோகம் தான் தங்களை விரட்டுகிறது என உணர்கின்றனர்

    அடிமையாய் எகிப்துக்கு வந்த யோசேப்பு நல்லவனாய் வாழ்ந்த ஒரே காரணத்துக்காக இரண்டு ஆண்டுகள் சிறையில் வாடினார். சகோதரர்கள் மூன்று நாட்கள் சிறையில் இருந்தார்கள். ‘உன் பாவம் உன்னை துரத்தி பிடிக்கும்’ எனும் விவிலிய சிந்தனை சகோதரர்கள் வாழ்வில் நடக்கிறது.

    “கசப்பானவற்றை எனக்கெதிராய் எழுதுகின்றீர்; என் இளமையின் குற்றங்களை எனக்கு உடைமையாக்குகின்றீர்” (யோபு 13:26) என யோபு நூல் கூறுகிறது. பாவத்தின் விளைவுகளிலிருந்து யாரும் தப்பி விட முடியாது.

    1. காலம் கடந்தும் வெளிப்பட்டு வருகின்ற பாவம்

    யோசேப்புக்கு எதிராக சகோதரர்கள் செய்த பாவம் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்பும் அவர்களைத் துரத்திப் பிடிக்கிறது.

    2. ரகசியமாய் நிகழ்த்தப்பட்டு வெளிப்பட்டு வரும் பாவம்

    ஆதி மனிதன் ஆதாமின் மகன் காயீன் தனது சகோதரன் ஆபேலைக் கொன்று விடுகிறார். வயல்வெளியில் யாருக்கும் தெரியாமல் நிகழ்த்தப்பட்ட பாவம் அது. ஆனால் அது இறைவன் முன்னால் வெட்ட வெளிச்சமாகிறது.

    3. தற்காலிக ஆசையை நிறைவேற்ற எழும் பாவம்.

    கொஞ்சம் கூழுக்கு ஆசைப்பட்டு தனது தலைமகன் உரிமையை இளையவன் யாக்கோபுவுக்கு விற்று விடுகிறார் ஏசா. அது பாவமாய் மாறிவிட்டது.

    எபிரேயர் 12;16-17 வசனங்களில் இது, “ஏசாவைப்போல் உலகப் போக்கைப் பின்பற்றுபவராயும் இராதபடி கவனமாயிருங்கள். இந்த ஏசா, ஒரே ஒரு வேளை உணவுக்காகத் தம் தலைப்பேற்று உரிமையை விற்றுப் போட்டார். பின்னர் அவர் தமக்குரிய ஆசியை உரிமைப் பேறாக்கிக் கொள்ள விரும்பியும் அது அவருக்குக் கிடைக்கவில்லை” என குறிப்பிடப்பட்டுள்ளது.

    4. அழகாக புதைக்கப்பட்ட பின்னரும் வெளிப்பட்டு வருகிற பாவம்

    கடவுள் கொடுத்த கட்டளையை மீறி பொருட்களை அபகரித்துக் கொண்ட ஆக்கான் என்பவர் மீது கடவுளின் கோபம் எழுகிறது. மறைத்து வைத்த பொருட்கள் வெளிப்படுகின்றன. ஆக்கான் கொல்லப்படுகிறான். இதை யோசுவா 7-ம் அதிகாரம் விளக்குகிறது.

    பாவ உணர்வுகளும் அதனால் எழுகின்ற விளைவுகளும் மறைக்க முடியாதவை.

    பாலை நிலத்தில் நாற்பது ஆண்டுகள் அலைந்து திரிந்தனர் இஸ்ரயேல் மக்கள். ‘இதற்காகவா எங்களை இங்கே கொண்டு வந்தீர்கள்?’ என கடவுளுக்கும் மோசேக்கும் எதிராக அவர்கள் குரல் கொடுக்கின்றனர். கடவுள் கொள்ளி வாய் பிசாசுகளை அனுப்பி அவர்களைத் தண்டிக் கிறார். கடவுளுக்கு எதிராய் தாங்கள் செய்த பாவத்தை அவர்கள் உணர்கின்றனர். மன்னிப்பு வேண்டுகின்றனர்.

    தாவீது தனது திருப்பாடல்களில், (40:12) “எண்ணிறைந்த தீமைகள் எனைச் சூழ்ந்து கொண்டன” என தனது தவறை உணர்ந்து பாடுகிறார்.

    பாவம் மறைக்க முடியாதது. அது வெளிப்பட்டே தீரும். வெளிப்படும் போது அது பல விளைவுகளை ஏற்படுத்தும். முக்கியமாக அது கலக்கத்தை ஏற்படுத்தும், ஆத்மாவில் பாரத்தை ஏற்படுத்தும், துடிதுடிப்பை ஏற்படுத்தும் என்கிறது விவிலியம்.

    பாவத்துடனும், அது தருகின்ற விளைவுகளுடனும் நமது வாழ்க்கை முடிந்து விடக் கூடாது. அதைவிட்டு வெளியே வருகின்ற நிகழ்வுகளுடன் தொடரவேண்டும்.

    தன்னை நிராகரித்து, அடிமையாய் விற்ற சகோதரர்களைக் கட்டியணைத்து கண்ணீர் விட்டார் யோசேப்பு. இழந்த உறவுகள் இணைந்தன.

    தனக்கு எதிராக எழுந்தவர் நலம் பெற வேண்டுமென கடவுளிடம் விண்ணப்பம் செய்தார் மோசே. தீமைக்கு நன்மையை பதிலாய் செய்தார்.

    தன்னைக் கொல்லத் தேடிய சவுலையும் கொல்லாமல் விட்டு விட்டார் தாவீது.

    சிலுவை நமக்கு இதைத் தான் சொல்கிறது. தீமைக்கு நன்மை செய்யும் பாடத்தை சிலுவை கற்றுத் தருகிறது. இறைமகன் இயேசுவின் ரத்தம் பழிக்குப் பழி கேட்கும் ரத்தமல்ல, வாழ்வை நோக்கி நம் இதயத்தைத் திரும்பச் சொல்லும் ரத்தம். 
    இயேசு தன்னை தாழ்த்தி கொண்டு, சிலுவைச்சாவை ஏற்றார். அது எதற்காக? நாம் வாழ்வு பெற, நம்மை வாழ வைக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
    இயேசு, சாவை ஏற்கும் அளவுக்கு அதுவும் சிலுவைச்சாவை ஏற்கும் அளவுக்கு கீழ்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். (பிலிப் 2:6)

    நாம் வாழ்வதற்கும், வாழ வைப்பதற்கும் தான் படைக்கப்பட்டிருக்கிறோம். வாழ்வதற்காக வரம், அருள் ஆகியவற்றை இறைவனிடத்தில் நாள்தோறும் பெறுகிறோம். அதனை பிறரோடு பகிர்ந்து, அவர்களையும் வாழ வைக்க வேண்டும் என்பதே தவக்காலத்தின் நோக்கம் ஆகும். அதற்கு, ‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்‘ என்ற முதுமொழி மிகவும் பொருத்தமானது. நம்மை பிலிப்பயரின் இறைவார்த்தையோடும், முதுமொழியோடும் இணைத்து பார்ப்போம்.

    இயேசு தன்னை தாழ்த்தி கொண்டு, சிலுவைச்சாவை ஏற்றார். அது எதற்காக? நாம் வாழ்வு பெற, நம்மை வாழ வைக்க வேண்டும் என்பதற்காகத்தான். நம்மை, பிறர் முன் தாழ்த்திக்கொள்ள முடிகிறதா? பிறரை வாழ வைக்க நம்மை இழக்க முடிகிறதா? பணம், பதவி, பட்டம், புகழ், நான், தன் குடும்பம் என்று மட்டும் வாழ்ந்தால் போதும் என்றிருக்கிறோம். அடுத்தவர் பற்றி கவலைப்படுவதில்லை. அறிவு, ஞானம், அருள், பொருள் என பல செல்வங்களை இறைவன் நமக்கு தாராளமாக வழங்கிய போதும், அதை பிறரோடு பகிர்ந்து கொள்ள நமக்கு மனமில்லை.

    பணம், வழிகாட்டுதல், பரிந்து பேசுதல், உடனிருந்து நேரத்தை செலவிடுதல் போன்ற சிறு உதவியை ஒருவருக்கு செய்தால், அவர் வாழ்வில் முன்னேறுவார் என்பதை நாம் உணர்ந்திருப்போம். ஆனால் அவர் நம்மை விட உயர்ந்து விடுவாரோ? என்ற அச்சத்தால் அந்த உதவியை செய்ய மாட்டோம். பொறாமை, சுயநலம் போன்ற அற்ப குணங்கள் தான் அதற்கு காரணம். நம்மில் உதவியை பெற்றவர் வாழ்வில் உயர்ந்தால், அவர் வழியே நமக்கும் உயர்வு கிட்டும் என்பதை உணர மறுக்கிறோம்.

    நாம் வாழாவிட்டாலும் பரவாயில்லை. அடுத்தவன் வாழ கூடாது என்ற கெட்ட குணம் பலரிடம் உள்ளது. இதைத்தான் இயேசு சாடுகிறார். ‘நீங்களும் நுழைவதில்லை. நுழைவோரையும் தடுக்கிறீர்கள்’ (லூக் 11:52), என்பதுடன், ‘உன்மீது அன்பு கூர்வது 6போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக’ (மாற்கு 12:31) என்கிறார். இந்த இறை வசனங்கள் இன்று நமக்கு சொல்ல விரும்புவதும் இதைத்தான். எனவே, தன்னை தாழ்த்தி பிறருக்காக தியாகம் செய்து வாழ்வோம்.

    அருட்சகோதரி.இ.சவரி, அமலவை சபை, திண்டுக்கல். 
    தூக்கம் சிலருக்கு நண்பன், ஆனால் விழித்திருத்தல் எல்லோருக்கும் கடினமானது. அளவுக்கு மீறிய தூக்கம் அலட்சியத்தை தரும். உழைப்புக்கு உயிர் கொடுக்கும் விழித்திருப்பு லட்சியத்தை வெல்லும்.
    தூக்கம் சிலருக்கு நண்பன், ஆனால் விழித்திருத்தல் எல்லோருக்கும் கடினமானது. அளவுக்கு மீறிய தூக்கம் அலட்சியத்தை தரும். உழைப்புக்கு உயிர் கொடுக்கும் விழித்திருப்பு லட்சியத்தை வெல்லும்.

    இறைமகன் இயேசு தம் சீடர்களிடம் விழித்திருக்கும்படியான ஒரு அழைப்பைக் கொடுக்கிறார்.

    எருசலேமில் இயேசு ஆற்றிய இறுதிஉரையில் ‘விழிப்பாயிருங்கள்’ என்ற அறைகூவலை விடுப்பதோடு விழித்திருத்தலின் முக்கியத்துவத்தையும் அவர்களுக்கு உணர்த்துகிறார்.

    மானிட மகன் வரும் நாளையும் வேளையையும் பற்றி தந்தையை தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஆதலால் நீங்கள் விழிப்பாயிருக்க வேண்டும். கவனமாயிருங்கள், விழிப்பாயிருங்கள். ஏனெனில் அந்நேரம் எப்போது வரும் என உங்களுக்குத் தெரியாது (மாற்கு 13:33). என் கிறார்.

    இறைமகன் இயேசு ஆற்றின பணிகளின் முழுமை அவருடைய பாடுகளிலும், மரணத்திலும், உயிர்ப்பிலும் விளங்க இருக்கும் நிலையில் இவ்வாறு கூறுகிறார்.

    இனி நிகழவிருக்கும் பாடு, மரணம், உயிர்ப்பின் முன்னேற்பாடாகவும் தம் வாழ்வின் நோக்கம் நிறைவு பெற்று விட்டது என்பதைக் காட்டவும், இனித் தம் சீடருக்கும் நிகழவிருக்கும் எதிர்ப்புகள் எவ்வாறு இருக்கும் என்பதைத் தெரிவிக்கவும் இந்த இறுதி உரையை ஆற்றுகிறார்.

    மேற்கூறிய அறிவுரை திருவெளிப்பாடு நூலில் கூறப்பட்டுள்ள நிகழ்வுகள் பற்றியது. இவை நிறைவேறும் காலம் எவ்வளவு உண்மையோ, அவை நிகழும் காலமும் மறைபொருளாய் இருக்கிறது என்பதும் அவ்வளவு உண்மை. மானிடமகனின் வெற்றி வருகையின் மாட்சியும் அதுவே. இந்த வருகை தான் கடவுள் மக்களைத் தீர்ப்பிடும் நாள் என்று கருதப்படுகிறது (லூக்கா 21:34).

    இத்தகைய தீர்ப்புகள் மறைபொருள் போல் பாதுகாக்கப்பட வேண்டியதால் அது யாருக்குமே தெரியாது என்றும், மக்கள் என்றுமே தங்கள் கடமைகளை ஆற்றி, இந்த தீர்ப்புகளை எதிர்நோக்கியிருக்க வேண்டும்.

    கிறிஸ்தவ வாழ்வில் ஒரு நிரந்தரமான ஒழுக்க நிலை இருத்தல் வேண்டும். ஒவ்வொரு நாளும் இறைமகனின் வருகை நாளாகவே கருதப்பட வேண்டும்.

    இயேசு ஆற்றிய இறுதி உரையின் முடிவுரை ஒரு சிறப்பான எச்சரிக்கை வார்த்தையுடன் அமைந்துள்ளது. ‘அழிவு’ என்ற சிந்தனையுடன் இவ்வுரை தொடங்குகிறது. இந்த அழிவு எப்போது வரும் என்று தம் சீடர்கள் கேட்ட கேள்விக்கு இயேசு அளித்த முதல் பதில் “அவர்கள் கவனமாயிருக்க வேண்டும்” என்பது தான்.

    இந்த உரையின் இறுதிக்கட்டத்தில் இறை மகன் இயேசு மீண்டும் அதே எச்சரிக்கை சொற்களைப் பயன்படுத்துகிறார். “சீடர்கள் விழிப்பாயிருக்க வேண்டும்” என்று அவர் நான்கு முறை எச்சரிக்கை விடுக்கிறார் (மாற்கு: 13:33,34,35,37).

    விழித்திருங்கள் (அ) விழித்திருத்தல் என்பதன் கிரேக்க மூலப்பதம் “கிரிகாரியோ” என்பதாகும். இது தொடர்ந்து எப்போதும் ஆயத்த நிலையில் அல்லது விழிப்புடன் இருத்தலைக் குறிப்பிடுகின்றது.

    போர்க்களத்தில் ஆயத்த நிலையில் இருக்கும் வீரர்களிடம் உள்ள விழிப்புணர்வுடன் இது ஒப்புமைப்படுத்தப்படுகிறது.

    முதல் நூற்றாண்டில் கிறிஸ்தவர்கள் இறை மகன் இயேசுவின் மாட்சிமிகு வருகையை மிகுந்த மனோவாஞ்சையோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். எதிர்பார்ப்புக் காலம் நீடித்துக் கொண்டிருந்த காரணத்தினால் கிறிஸ்தவர்கள் தங்கள் கடமைகளில் தளர்ந்து இருந்தார்கள். அவர்களை ஊக்குவிக்கும்படியாகவே இத்தகைய எச்சரிக்கைகள் இடம்பெற்றிருக்கலாம் என கருதப்படுகிறது.

    பொறுமை, நம்பிக்கை, கடமை தவறாமை, தளராத எதிர்பார்ப்பு மனநிலை ஆகிய பண்புகளுடன் கூடியதாகத் தான் இந்த எச்சரிக்கைகளையும் காண வேண்டும்.

    ஒரு ஆயத்த நிலை என்ற கருத்து தான் இயேசுவின் இறுதி உரையில் தொடர்ந்து எதிரொலித்துள்ளதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இத்தகையதொரு ஆயத்த நிலை மனப்பாங்கு கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படை உணர்வாக திகழ வேண்டும். இந்த ஆயத்த நிலையில் ஒவ்வொரு நாளும் இயேசுவின் வருகையை உணரலாம்.

    இறைவன் நம் மானிட பிறப்பு சிறப்புறுவதற்கு நம் திறமைகளை அறிந்து ஒவ்வொரு வருக்கும் ஒரு பொறுப்பை அளித்துள்ளார். அதோடு நம் கடமைகளில் நாம் தவறுகின்ற தருணங்களில் அவர் தம் வாக்கின் வழியாக நம்மை எச்சரித்து ஆற்றுப்படுத்துகிறார்.

    அவர் வருகையை நாம் அறியாதவர்களாக இருக்கிறோம். மாலையிலோ, நள்ளிரவிலோ, சேவல் கூவும் வேளையிலோ, காலையிலோ, அவர் வருகை எந்த நாள், எந்த சமயமென்று, ஆராயாமல் அவர் திடீரென்று வந்து நாம் தூங்குவதை காணாதபடிக்கு, அவர் வருகைக்காக நம் கடமைகளில் கவனமாயிருந்து விழித்திருக்க வேண்டும் என்பதாகும்.

    ஆண்டவர் இயேசு கூறிய ‘தோழியர் பத்து பேர்’ உவமையில் மணவாளன் திடீரென்று நடுஇரவில் வருகிறார் (மத்தேயு 25:1,13)

    விழிப்போடும் அறிவுத் தெளிவோடும் இருப்போம். (I தெச 5:6) என்கிறார் தூய பவுல் அடிகளார்.

    இறைவன் அழைத்த அழைப்பை உணர்ந்து, நமக்கு கொடுக்கப்படுகின்ற கடமைகளை சிறப்புடன் ஆற்ற அவர் ஒவ்வொரு நாளும் நம்மை தகுதிப்படுத்தி வருகிறார். நாளுக்கு நாள் அவருடைய வருகையின் தாகம் நம்மில் அதிகரிக்க வேண்டும். விழிப்புள்ள மக்களாக இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையினை எந்த நேரமுமாயினும் எதிர்கொள்வதற்கு ஆயத்தமான விழிப்புள்ள மக்களாய் வாழ்வோம்.

    அருட்பணி. ம. பென்னியமின், பரளியாறு. 
    நாம் செய்கின்ற பாவச் செயல்கள் நமக்கு எதிராய் கடவுளிடம் மன்றாடும் எனும், சிலுவையிலுள்ள இறைமகன் இயேசுவின் ரத்தம் மட்டுமே நம்மை மீட்க முடியும் எனும் உண்மையையும் நாம் புரிந்து கொள்வோம்.
    உயிர் கடவுளுடையது என்பதால், ரத்தம் சிந்தப்படும் போது அது கடவுளை நோக்கி குரல் எழுப்புகிறது எனும் சிந்தனையை விவிலியம் நமக்கு எடுத்துக் கூறுகிறது.

    ஆதிமனிதன் ஆதாமும், ஏவாளும் ஏதேன் தோட்டத்தில் வசிக்கிறார்கள். அவர்கள் கடவுளுடைய கட்டளையை மீறிய காரணத்தால் ஏதேனை விட்டு கடவுளால் வெளியேற்றப்படுகிறார்கள். ஏதேனை விட்டு வெளியே வந்த அவர்களுக்கு காயீன், ஆபேல் என இரண்டு புதல்வர்கள் பிறக்கின்றனர்.

    இருவரும் கடவுளுக்குக் காணிக்கை செலுத்தும் வழக்கம் உடையவர்களாக இருக்கின்றனர். ஒருமுறை ஆபேல் தனது மந்தை யிலிருந்து கொழுத்த தலையீற்று ஆடுகளைக் கடவுளுக்குப் பலிகொடுக்கிறான். கடவுள் அவனையும் அவன் பலியையும் அங்கீகரிக்கிறார்.

    காயின் காய்கறிகளைப் பலியிடுகிறான். அவனையும் அவன் பலிகளையும் கடவுள் அங்கீகரிக்கவில்லை. இதனால் கோபம் கொண்ட காயீன் கடவுளின் எச்சரிப்பையும் மீறி ஆபேலைக் கொன்று விடுகிறான். இப்போது ஆபேலின் ரத்தம் பூமியிலிருந்து நீதிக்காக கடவுளை நோக்கி கதறுகிறது. கடவுளின் தண்டனை காயின் மேல் விழுகிறது.

    இது தொடக்ககால மனித வரலாற்றில் நிகழ்ந்த ஒரு கதை.

    இந்த நிகழ்வு, ‘ரத்தம் குரலெழுப்பி நீதிகேட்கும்’ எனும் வலிமையான உண்மையை நமக்கு விளக்குகிறது. கடவுள் தந்த வாழ்வான உயிரை நாம் அழிக்கும் போது, அது கடவுளை நோக்கி விண்ணப்பிக்கிறது. கடவுளும் செவி கொடுக்கிறார்.

    ‘ஆபேல் காயீனுடைய பலியைவிட மேலான பலியைக் கடவுளுக்குச் செலுத்தினார். அதனால் அவர் நேர்மையானவர் எனக் கடவுளிடமிருந்து நற்சான்று பெற்றார்’ (எபி.11:4) என்கிறது பைபிள். ஆபேலின் பலி, உயிர்ப்பலியாய் இருந்தது கூட அதன் காரணமாய் இருக்கலாம்.

    இதற்கு முன்பே ஒரு பலி, ஒரு ரத்தம் சிந்துதல் ஏதேனில் நடந்தது. அது தான் முதல் ரத்தம். ஆதாமும், ஏவாளும் கடவுளுடைய கட்டளையை மீறினர். அப்போது தாங்கள் நிர்வாணிகள் எனும் நிலையை புரிந்து கொண்டனர். இலைகளால் தங்களை மூடிக்கொண்ட அவர் களுக்காக இறைவன் தோல் ஆடையை கொடுக்கிறார். அதற்காக ஏதோ ஒரு விலங்கு தனது உயிரை விட்டிருக்க வேண்டும். அது தான் முதல் ரத்தம் சிந்துதல் நிகழ்வு.

    அந்த பலி, பாவங்களை மறைப்பதன் அடையாளம். அது நமது மீட்புக்கான அடையாளம்.

    காயீன் குற்றம் செய்ய வேண்டும் என முடிவெடுத்த உடனே கடவுள் அவனை தண்டிக்கவில்லை. அவனுக்கு வாய்ப்பு கொடுக்கிறார். எச்சரிக்கையின் ஒலியை அனுப்புகிறார்.

    “நீ ஏன் சினமுற்றிருக்கிறாய்? உன் முகம் வாடி இருப்பது ஏன்? நீ நல்லது செய்தால் உயர்வடைவாய் அல்லவா?. நீ நல்லது செய்யாவிட்டால், பாவம் உன்மேல் வேட்கை கொண்டு உன் வாயிலில் படுத்திருக்கும். நீ அதை அடக்கி ஆளவேண்டும்” என கடவுள் மிகத்தெளிவான எச்சரிக்கையை காயீனுக்குக் கொடுக்கிறார். ஆனால் காயீன் அதற்குச் செவிகொடுக்கவில்லை.

    போதுமான அளவுக்கு கால அவகாசம் கொடுத் திருந்தும் அதை காயீன் கண்டுகொள்ளவில்லை. அதை அவன் பொருட்படுத்தவில்லை. ஆபேலைக் கொல்கிறான்.

    “ஆபேல் எங்கே?” என கேட்கிறார் கடவுள். ஆதாம், பாவம் செய்த போது கடவுளை விட்டு விலகி பயந்து போய் ஓடி ஒளிந்தான். ஆனால் காயீனோ கொஞ்சமும் பயம் இல்லாமல், கடவுள் முன்னால் நின்று, “என் சகோதரனுக்கு நான் என்ன காவலாளியா?” என பதில் கொடுக்கிறான்.

    இது துணிகரமான பாவமாகிறது. பாவம் இன்னொரு நிலை அதிகரிக்கிறது. சாத்தான் ஆதாமிடம் பொய் சொன்னான், காயீனோ, கடவுளிடமே பொய் சொல்கிறான்.

    பாவம் கடவுளையும் மனிதனையும் பிரிக்கிறது. ஆதாம் ஏவாள் ஏதேனை விட்டு, கடவுளின் அருகாமையை விட்டு வெளியே வருகின்றனர். பாவம் சக மனிதனையும் பிரிக்கிறது. காயீன் ஆபேல் பிரிகின்றனர்.

    “என் சகோதரனுக்கு நானென்ன காவலாளியா?” என கேட்கிறான் காயீன். உண்மையில் கடவுள் பூமியில் மனிதரைப் படைக்கும் போது அடுத்தவருக்குக் காவலாளியாய் தான் படைக்கிறார்.

    கொலை செய்யப்பட்டவனின் ரத்தம் பழிவாங்கவேண்டும் எனும் நோக்கத்தோடு குரல் எழுப்புகிறது. ரத்தமே மரணத்தின் சாட்சியாகவும், மரணத்துக்கு நீதி கேட்கும் குரலாகவும் இருக்கிறது.

    ரத்தம் ரத்தத்துக்காக குரலெழுப்புகிறது. நாம் செய்கின்ற பாவம் எல்லாம் நம்மைச் சுற்றி இருக்கிறது. நமக்கு எதிராக அது குரலெழுப்பிக் கொண்டே இருக்கிறது. இந்த சிந்தனை நமக்கு நிச்சயம் இருக்க வேண்டும்.

    “காயீனைப்போல் நீங்கள் இராதீர்கள்; அவன் தீயோனைச் சார்ந்தவன்; ஏனெனில் தன் சகோதரரைக் கொலை செய்தான். எதற்காக அவரைக் கொலை செய்தான்? ஏனெனில் அவன் செயல்கள் தீயனவாக இருந்தன. அவன் சகோதரருடைய செயல்கள் நேர்மையானவையாக இருந்தன” என்கிறது பைபிள்.

    நாம் செய்கின்ற பாவச் செயல்கள் நமக்கு எதிராய் கடவுளிடம் மன்றாடும் எனும், சிலுவையிலுள்ள இறைமகன் இயேசுவின் ரத்தம் மட்டுமே நம்மை மீட்க முடியும் எனும் உண்மையையும் நாம் புரிந்து கொள்வோம். 
    கிறிஸ்துவை ஆதாயமாக்கிக் கொள்ள அனைத்தையும் குப்பையென கருதுகிறேன் என்று தூய பவுலடியார் சொன்னது போல நம் ஒவ்வொருவரின் மன நிலையும் மாற வேண்டும்.
    இன்றைய காலச்சூழலில் வாழ்க்கை என்பது பலவிதமான எதிர்பார்ப்புகளோடு இயங்கிக் கொண்டு இருக்கிறது. “என்னால் எல்லாம் முடியும். எனக்கு எல்லாம் வேண்டும்“ என்ற சிந்தனையே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் உள்ளத்தையும் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. ஆனால் பொருள் படைத்தவர்களும், அதிகாரம் படைத்தவர்களும் கூட முதுமையின் போது இயலாமையால் தவிக்கிறார்கள். அந்த சமயத்தில், வாழ்வில் பெற்ற அனைத்து நலன்களும் வீண் என்றே அவர்கள் கருதுகின்றனர். இதே சிந்தனையை உள்வாங்கி வாழ்வை நகர்த்தினால் நாம் இயல்பாக வாழ முடியும்.

    அதே போல எதிர்பார்ப்புகள் இல்லாத வாழ்க்கையை வாழ முயற்சிக்க வேண்டும். நாம் செய்யும் உதவிக்கு நன்றியை கூட எதிர்பார்க்க கூடாது. எதிர்பார்ப்புகள் அற்று வாழ்வது மிகவும் அவசியம். எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும்போது ஏமாற்றமும், உயர்ந்த விரக்தியும் உருவாகும்.

    தன் வாழ்வில் நான் நினைப்பது எதுவுமே நடப்பதில்லை என்ற புலம்பலோடு இளைஞன் ஒருவர் துறவியை தேடிச் செல்கிறான். அவரை பார்த்ததும் தன் அனைத்து குறைகளையும் கொட்டித்தீர்க்கிறான். சில நிமிட மவுனத்துக்கு பிறகு அந்த துறவி, ‘இளைஞனை பார்த்து உன் வாழ்வின் எதிர்பார்ப்பு என்ன?‘ என்று கேட்கிறார். உடனே இளைஞன், ‘எனக்கு மகிழ்ச்சி வேண்டும்‘ என்று துறவியிடம் கூறினான். பின்னர், ‘மகிழ்ச்சிக்காக என்ன செய்தாய்? எதையெல்லாம் இழந்திருக்கிறாய்‘ என்று துறவி கேட்டார். ஆனால் துறவி கேட்டதற்கு இளைஞனால் எந்த பதிலும் கூற முடியவில்லை. அவன் அப்படியே அமைதியாக நிற்கிறான்.

    இன்றைய உலகில் நாமும் ஏராளமான எதிர்பார்ப்புகளை உள்ளத்தில் வைத்துக்கொண்டு வாழ்கின்றோம். ஆனால் நல்லது எதையும் இழப்பதற்கு நாம் முன் வருவதில்லை. அது வேண்டும், இது வேண்டும் என்று ஆசைப்படும் நாம் எதுவுமே வேண்டாம் என சிந்திப்பது இல்லை. கிறிஸ்துவை ஆதாயமாக்கிக் கொள்ள அனைத்தையும் குப்பையென கருதுகிறேன் என்று தூய பவுலடியார் சொன்னது போல நம் ஒவ்வொருவரின் மன நிலையும் மாற வேண்டும்.

    அருட்பணி. குருசு கார்மல்,

    தூய பிரான்சிஸ் அசிசியார் ஆலயம், மார்த்தால், கோட்டார் மறைமாவட்டம்
    இழந்து நிற்கும் நியாயமான சொத்து-உரிமையை மீண்டும் இறைவன் மீட்டுத் தருவார் என்ற எண்ணத்தில், அவரது செயல்பாட்டுக்காக விசுவாசத்துடன் காத்திருக்க வேண்டும்.
    தற்போதய உலகம் மிகமிக அவசரமானதாக மாற்றப்பட்டுவிட்டது. காலையில் விதைத்ததை மாலையில் நல்ல லாபத்தோடு அறுவடை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இயங்கும் மக்களை அதிகம் கொண்ட உலகம் இது.

    ‘காத்திருத்தல்’ என்ற ஒரு அம்சத்தை வெறுக்கும் கோட்பாடு, இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தொற்றிக்கொண்டுள்ளது.

    எந்தத் தொழிலில் இறங்கினாலும் லாபத்தை மட்டுமே நோக்கமாக வைத்து செயல்படுவதால், மனசாட்சிக்கு உட்பட்ட தர்மத்தை பெரும்பாலானோர் மறந்தே போய்விட்டனர்.

    இதனால் குற்றங்களும், பாவங்களும் கணக்கில்லாமல் பெருகிக்கொண்டே இருக்கின்றன. லாபம் அதிகமாக கிடைக்கிறது என்றால், நம்பிக்கைத் துரோகம் உடனே, எளிதில் நடந்தேறிவிடுகிறது.

    இப்படி லாபத்தை நோக்கி அவசரமாக சென்றுகொண்டிருக்கும் உலகத்தில், கிறிஸ்தவ ஆன்மிகத்தின் ஒரு முக்கிய அம்சமான காத்திருத்தல் என்பதை கடைப்பிடிப்பது மிகவும் பாரமானதாக உணரப்படுகிறது.

    ஏதாவது நன்மையை பெறுவதற்காக உலக வழிகளில் செல்லாமல், வேத வழிகாட்டுதல்படி காத்திருப்பதால், பெருத்த நஷ்டம் ஏற்பட்டுவிடுமோ என்று அச்சம் இன்று பெரும்பாலான கிறிஸ்தவர்களிடம் உண்டு.

    ஆனால், உலகத்தின் அவசரத்துக்கு ஏற்ப வேதத்தின் கட்டளைகளை மாற்றிக்கொள்ள முடியாது. இறைவனிடம் இருந்து கிடைக்க வேண்டிய நன்மைகளை, நம்பிக்கையோடும் பொறுமையோடும் காத்திருந்து பெற வேண்டுமென்பதே வேத கட்டளையாக உள்ளது. (லூக்கா 12:36, ரோமர் 8:23,25, எபி. 6:15, யூதா 1:21).

    காத்திருத்தல் என்றால் என்ன?

    பாவமன்னிப்பைப் பெற்று (இறைவனிடமும், நமது பாவத்தினால் பாதிக்கப்பட்டவர்களிடமும்) உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கைக்குள் நுழைந்த பிறகுதான், இறைவன் செயல்பாட்டுக்காக காத்திருத்தல் என்பதன் அர்த்தத்தை புரிந்துகொள்ள முடியும்.

    இயல்பான வாழ்க்கை வாழும்போது, நம்மை திட்டுபவர்களை பதிலுக்கு உடனே திட்டியிருப்போம். அடித்தவர்களை பதிலுக்கு அடித்திருப்போம். குற்றம்சாட்டுபவர்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருப்போம். சந்தர்ப்ப சூழ்நிலைகள் அமையும்போது பாவத்தை நோக்கி சாய்ந்திருப்போம்.

    ஆனால், உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கைக்குள் நுழைந்த பிறகு, பதிலுக்கு திட்டுவது, அடிப்பது, குற்றம்சாட்டுவது என்பதுபோன்ற உலக இயல்பு நடவடிக்கைகளில் இறங்க முடியாது.

    இதுபோன்ற அவமானகரமான நேரங்களில் பதில் செய்யாமல் அவமதித்தவர்களை இறைக்கட்டளைப்படி மன்னித்துவிடுகிறோம்.

    ஆனால், இதுபோன்ற இறைவழியில் நடப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதும், அது எப்போது கிடைக்கும் என்பதும் புரியாத புதிராகவே காணப்படும்.

    ஆனால் அந்த நன்மைகள் கிடைக்கும்வரை இயேசு காட்டியுள்ள வழியைவிட்டு விலகாமல் பொறுமையுடன் சகித்து வாழ்வதன் பெயர்தான் காத்திருத்தல் ஆகும்.

    நன்மைகள் வந்து கிடைத்த பிறகுதான் காத்திருத்தலின் அருமை தெரியவரும். ஆனால் பலரும் காத்திருத்தலை தவிர்த்து உலக வழிகளில் சென்றுவிடுகின்றனர்.

    அபகரித்தவர் மற்றும் இழப்பை ஏற்படுத்தியவரிடம் இருந்து அதை மீட்பதற்காக குற்றச்சாட்டு, புகார், வழக்கு என்ற கிறிஸ்தவத்துக்கு எதிரான வழியில் சென்றுவிடுகின்றனர். திருமண முறிவின்போது, இறைநீதிக்கு உட்படாத மறு மணத்தை நாடுகின்றனர்.

    இழப்பு ஏற்படுவதில் 2 நிலைகள் உள்ளன. இறைப்பாதையில் வருவதற்கு முன்பு பெற்றிருக்கும் அநியாய சம்பாத்தியங்களை, இறைவழிக்கு வந்த பிறகு இழப்பது அல்லது திருப்பிச் செலுத்துவது ஒரு நிலை (சகேயு). விசுவாச சோதனையின்போது எதிர்பாராமல் சொந்த சம்பாத்தியத்தை இழப்பது மற்றொரு நிலை (யோபு).

    அநியாய சம்பாத்தியத்தை இழப்பது, பெரிய அளவில் துன்பத்தை ஏற்படுத்தாது. ஆனால் யோபு போல நியாயமான சம்பாத்தியம்-உரிமையை மற்றவர் பறித்துக்கொள்வதால் இழந்து நிற்பது, மிகக் கடினமானது. இந்த கட்டத்தில்தான் விசுவாசத்துடன் காத்திருத்தல் என்ற பாதையை பக்தன் வந்தடைகிறான் (கலா.5:5). இதில் தான் அவனது விசுவாசம் சோதிக்கப்படுகிறது.

    இழந்து நிற்கும் நியாயமான சொத்து-உரிமையை மீண்டும் இறைவன் மீட்டுத் தருவார் என்ற எண்ணத்தில், அவரது செயல்பாட்டுக்காக விசுவாசத்துடன் காத்திருக்க வேண்டும். ஒருவேளை அது கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் உலக வழிகளை நாடாமல், விசுவாச நடத்தையை காத்துக்கொள்ள வேண்டும். அப்படி காத்துக்கொண்டான் என்றால், அவன் அந்த சோதனையில் ஜெயித்துவிட்டான் என்று அர்த்தம்.

    ரெயில் நிலையத்தில் ரெயிலுக்காக காத்திருப்பதற்கு விசுவாசம் அவசியமில்லை. அங்கு ரெயில் வந்து சேர்ந்துவிடும். ஆனால் தண்டவாளம் இல்லாத இடத்தில், சாலை இல்லாத பகுதியில் ரெயிலுக்கோ, வாகனத்துக்கோ காத்திருப்பதுதான், விசுவாசத்துடனான காத்திருப்பாகும் (ரோமர் 8:25).

    எனவே, இழப்பு எந்தவிதத்தில் வந்தாலும், இழப்பை ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக உலக ரீதியான நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருந்தால், இறைவன் மீது வைத்துள்ள விசுவாசம் காத்துக்கொள்ளப்படும். (1 கொரி.6:7). விசுவாசம்தான் இறுதிவரை காத்துக் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும் (2 தீமோ 4:7).
    இயேசுவின் வார்த்தைகளில் ஊன்றி அவருக்குரிய செயல்களை செய்து வாழ்வதே வலிமை. அத்தகைய உண்மையான ஆவிக்குரிய வாழ்வு வாழ முற்படுவோம். இயேசுவின் சாட்சிகளாவோம்.
    இயேசுவை பற்றி அறிந்து கொள்ள அவருக்கு சாட்சிகளாய் இருப்பது இரண்டு ஆகும். ஒன்று இயேசு சொல்லும் உயிருள்ள இறைவார்த்தைகள். மற்றொன்று இயேசு செய்து காட்டும் வாழ்வு தரும் செயல்கள். இந்த இரண்டும் இயேசு யாராயிருகின்றார் என்று நமக்கு சுட்டிக்காட்டுகின்றன. இவற்றின் மூலம் இயேசுவை அறிந்து அவரை நம்பி வாழ நாம் அழைக்கப்பட்டிருகின்றோம்.

    அந்த வகையில் இயேசுவை பின் தொடர்ந்தவர்கள் இரண்டு பிரிவினர். இயேசுவை தவறாக புரிந்து கொண்டு அவரை விமர்சனப்படுத்தும் பரிசேயர்கள் ஒரு புறம். அவரது வார்த்தைகளை கேட்டும், செயல்களை கண்டும் அவர்மேல் நம்பிக்கை கொண்ட மக்கள் மற்றொருபுறம். முதல்வகையினர் வானியியல் படி வாழ்ந்தவர்கள். எப்பொழுதும் உலகு சார்ந்த வாழ்க்கை வாழ்ந்தவர்கள். உலகிற்குரிய காரியங்கள் குறித்து அதிக அக்கறை கொண்டவர்கள். இவர்கள் வாழ்க்கையை மேலோட்டமாக அணுகி, பாவக்கட்டுப்பாட்டில் வாழ்ந்தவர்கள்.

    இதனால் ஆண்டவரிடமிருந்து அன்னியபட்டு நிற்பவர்கள். ஆனால் இன்னொரு வகையினரோ ஆவிக்குரிய வாழ்வு வாழ்ந்தவர்கள். இவர்கள் உலகுச்சார்ந்த வாழ்க்கையினை கடந்து உள்ளுக்குள் பயணிப்பவர்கள். பாவம், இவர்கள் மேல் ஆட்சி செய்ய விடாதவர்கள். தந்தையாகிய இறைவனை இயேசுவின் சொல்லிலும், செயல்களிலும் கண்டுகொண்டவர்கள். நாம் வாழ்வது ஆவிக்குரிய வாழ்வா? உலகம் சார்ந்த வாழ்வா?

    இத்தவக்காலத்தில் இயேசுவின் வார்த்தைகளில் ஊன்றி அவருக்குரிய செயல்களை செய்து வாழ்வதே வலிமை. அதுவே நம் கடமை. சிறந்த தவம். அத்தகைய உண்மையான ஆவிக்குரிய வாழ்வு வாழ முற்படுவோம். இயேசுவின் சாட்சிகளாவோம்.

    - ரெக்ஸ் அலெக்ஸ் சில்வஸ்டர், தூய இருதய குருமடம், குடந்தை. 
    மனம் மாறுங்கள், நற்செய்தியை நம்புங்கள், இறையாட்சி வந்து விட்டது என்ற இயேசுவின் போதனையை ஏற்று, சொல்லால் அல்ல, செயலால் வாழ்ந்து காட்டுங்கள்.
    இருவர், இறைவனிடம் வேண்டுவதற்காக ஆலயத்துக்கு சென்றனர். அதில் ஒருவர் பரியேசர். மற்றொரு நபர், வரிதண்டுபவர். பரியேசரின் ஜெபமானது, கடவுளே நான் கொள்ளையர், நேர்மையற்றோர் போன்றோ அல்லது மற்ற மக்களைப்போலவோ, இந்த வரிதண்டுபவரை போலவோ இல்லாது இருக்கிறேன். அதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். இதுதவிர வாரத்தில் நான் இரு முறை நோன்பிருக்கிறேன். என் வருவாயில் பத்தில் ஒரு பங்கை பிறருக்கு கொடுக்கிறேன் என்கிற பாணியில் அவரது வேண்டுதல் இருந்தது.

    ஆனால் வரிதண்டுபவரின் ஜெபம் வேறு விதமானது. அது, வானத்தை அண்ணாந்து பார்க்க கூட துணிவில்லாமல், தம் மார்பில் அடித்துக்கொண்டு, கடவுளே, பாவியாகிய என் மீது இரங்கியருளும் என்றிருந்தது. இந்த இரண்டு பேரின் ஜெபங்களில், பரியேசரின் ஜெபத்தை விட, வரிதண்டுபவரின் ஜெபமே கடவுளுக்கு ஏற்புடையதாக இருந்தது.

    இயேசுவுக்கு பிடிக்காதவர்கள் யார்? என்றால், அது பரியேசர்கள் போன்றவர்கள் தான். ஏனெனில் பரியேசரின் மனநிலை என்பது தன்னை ஜெபத்தில் கூட விளம்பரப்படுத்தி கொள்வது போன்று இருந்தது. அது, சொல் ஒன்றாகவும், செயல் மற்றொன்றாகவும் இருக்கும் மனநிலை.

    அத்தகையவர்கள், பிறர் நம்மை பார்க்க, போற்ற, புகழ வேண்டும் என்ற சுயநலத்துடன் ஒவ்வொரு செயலையும் செய்வார்கள். தான் இழிவானதொரு வாழ்க்கை வாழ்ந்தாலும் பிறருக்கு முன்னே தன்னை யோக்கியர் என்று காட்டிக்கொள்வர். ஆண்டவர் இயேசு, உங்கள் செயல்பாடுகளே சிறந்த சான்றுகள் என கூறியுள்ளார்.

    ஒருவரின் தனிப்பட்ட அந்தரங்க வாழ்வினை பார்க்காதே என்று நம்மை நாமே ஏமாற்றி கொள்கிறோம். தனிமனித ஒழுக்கம் இல்லையென்றால் இந்த சமுதாயத்தில் எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டு வர முடியாது. தனி மனித மனமாற்றம் தான் சமுதாய மாற்றத்துக்கு ஆணி வேராகும். அது தன்னிலை உணர்தலில் தான் ஆரம்பம் ஆகிறது.

    எனவே, மனம் மாறுங்கள், நற்செய்தியை நம்புங்கள், இறையாட்சி வந்து விட்டது என்ற இயேசுவின் போதனையை ஏற்று, சொல்லால் அல்ல, செயலால் வாழ்ந்து காட்டுங்கள்.

    அருட்பணி. ஜான்பீட்டர், இயக்குனர்,

    புனித தோமா அருட்பணி மையம், திண்டுக்கல். 
    நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான் என்று சொன்னவரை பிதாவாகிய தேவன் சொன்னபடி மூன்றாம் நாளிலே எழுப்பினார்.
    கிறிஸ்துவின் பாடுகள் பற்றி நாம் தியானித்து வரும் இந்த நாட்களில் கிறிஸ்துவின் பிரதானமான போதனையான தேவன் மேல் வைக்கும் விசுவாசத்தைக் குறித்து நாம் தியானிப்போம். தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்(யோ:3:16) என்று வேதம் கூறுகிறது.

    இன்றைய நாட்களில் தேவைகள், வியாதிகள், பிரச்சனைகளிலிருந்து விடுதலை என்று பலவிதமான காரியங்களுக்கு பதில் தேடி அனேக இடங்களுக்கு அலைகிறவர்கள் உண்டு. இயேசுவின் நாட்களிலும் இப்படிபட்ட ஜனங்கள் அனேகர் காணப்பட்டார்கள். ஆனால் அவர்களில் யாரெல்லாம் இயேசுவின்மேல் விசுவாசமாக இருந்தார்களோ அவர்கள் அற்புதத்தைப் பெற்றார்கள்.

    அவர் தம் வாழ்நாள் முழுவதும் விசுவாசத்தின் மேன்மைகளையும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்பதையும் போதித்தார். இன்றைய உலகில் நாம் தேடும் அனைத்து விதமான காரியங்களுக்கும் இயேசுவின் மேல் வைக்கும் விசுவாசம் நமக்கு நல்ல பதிலை பெற்றுத்தரும். அவரை விசுவாசித்து ஏற்றுக்கொள்ளும் அனைவருக்காகவும் அவர் சிலுவையில் ரத்தம் சிந்தியிருக்கிறார். நாம் தேவனிடத்தில் அற்புதங்களையும், அடையாளங்களையும் பெற்றுக்கொள்ள தகுதியோ, அந்தஸ்தோ தேவை இல்லை. நாம் விசுவாசத்தோடு வேண்டிக்கொண்டாலே போதும்.

    தன்னைத் தேவனுடைய குமாரனென்று சொல்லி, தேவன்மேல் நம்பிக்கையாயிருந்தானே. அவர் இவன்மேல் பிரியமாயிருந்தால் இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் (மத்:27:42,43) என்று சுற்றி இருந்த ஜனங்கள் ஏளனமாய் பேசியபோதிலும், நம்பிக்கையற்ற வார்த்தைகளைக் கூறியபோதும் தம்மை மரணத்திலிருந்து எழுப்ப வல்லமையுள்ள தேவன் மேல் விசுவாசமுள்ளவராகவே இருந்தார்.

    தம்மை மரணத்திலிருந்து எழுப்ப வல்லவரிடத்தில் தம் ஜீவனை ஒப்புக்கொடுத்தார். ‘பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டு, தன் ஜீவனை ஒப்புக்கொடுத்தார். ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார் (எபி:2:15) என்று வேதம் கூறுகிறது.

    நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான் என்று சொன்னவரை பிதாவாகிய தேவன் சொன்னபடி மூன்றாம் நாளிலே எழுப்பினார். தேவன் கடலுக்கும் எல்லையை நியமித்து இம்மட்டும் வா,மிஞ்சி வராதே என்று தம் வார்த்தையையே எல்லையாக நியமித்தவர். அவர் இயற்கைக்கு அப்பாற்பட்ட காரியங்களை நமக்கு செய்ய வல்லமையுள்ளவர். கிறிஸ்துவின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் நாம் எதை கேட்டாலும் அதை செய்ய அவர் வல்லமையுள்ளவர். கிறிஸ்துவை விசுவாசிப்போம், தேவனுடைய அற்புதத்தைப் பெற்றுக்கொள்வோம்.

    - சகோதரி. யு.மேரிஅமல்ராஜ். 
    இயேசுவின் ரத்தத்தால் கழுவப்பட்ட ஒவ்வொருவருக்காகவும் ஆண்டவர் யுத்தம் பண்ணுகிறார். சத்துருவின் கிரியைகளை அழித்து சந்தோஷமான, சமாதானமான வாழ்வு வாழ தேவன் உங்களுக்குக் கிருபை பாராட்டுவார்.
    உண்மையாகவே இயேசு நமக்காக ரத்தம் சிந்தாமல் இருந்திருந்தால் இன்றைக்கு விலையேறப்பெற்ற ரட்சிப்பை பெற்றிருக்கவே முடியாது.

    இயேசுவின் ரத்தத்தினால் நாம் பெறுகிற முக்கியமான ஆசீர்வாதங்களைக் குறித்துத் தியானிப்போமா...

    அன்று இஸ்ரவேல் எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்த போது பஸ்காவை ஆதரிக்கும்படி கட்டளையிட்டார். ஆட்டுக்குட்டியின் ரத்தத்தை எடுத்து நிலைக்கால்களில் பூசும்படி கட்டளையிட்டபோது அநேக ஆசீர்வாதங்களை இஸ்ரவேலர் பெற்றுக்கொண்டார்கள்.

    அதேபோல இன்றும் ஆட்டுக்குட்டியானவருடைய ரத்தத்தால் நாம் விசுவாசத்தோடு கழுவப்படும்போது, நாமும் அநேக ஆசீர்வாதங்களுக்குப் பாத்திரமாய் மாறுகிறோம்.

    துன்பம் அணுகாது

    ‘நீங்கள் இருக்கும் வீடுகளில் அந்த ரத்தம் உங்களுக்காக அடையாளமாய் இருக்கும், அந்த ரத்தத்தை நான் கண்டு உங்களைக் கடந்து போவேன், நான் எகிப்து தேசத்தை அழிக்கும்போது, அழிக்கும் வாதை உங்களுக்குள்ளே வராதிருக்கும்’ யாத்.12:13

    ரத்தம் பூசப்பட்ட வீடுகளில் வாதை அணுகவில்லை. ரத்தம் பூசப்படாத ஒவ்வொரு எகிப்தியரின் வீட்டிலும் பிள்ளைகள் அழிக்கப்பட்டார்கள் என்பது நமக்குத் தெரியுமல்லவா? இயேசுவின் ரத்தம் எவ்வளவு விலையேறப்பெற்றது. உங்கள் வீட்டில், பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர் மேல் இயேசுவின் ரத்தத்தைப் பூசும்போது வாதை உங்கள் கூடாரத்தை அணுகுவதில்லை.

    ‘ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது’ சங்கீதம் 91:10

    எகிப்திலுள்ள ஒவ்வொருவருடைய வீட்டிலும் நடுராத்திரியில் கூக்குரல் உண்டானது. ஆனால் ரத்தம் பூசப்பட்ட இஸ்ரவேலருடைய வீடுகளில் கூக்குரல் உண்டாகவில்லை.

    அடிமைத்தனத்திலிருந்து விடுதலை

    ‘நானூற்றுமுப்பது வருஷம் முடிந்த அன்றையதினமே கர்த்தருடைய சேனைகள் எல்லாம் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டது’ யாத்திராகமம் 12:41

    400 வருஷமாக இஸ்ரவேலர் எகிப்து தேசத்திலே அடிமை களாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். எந்த நாளில் ரத்தம் பூசப்பட்டதோ அன்று ராத்திரியிலேயே அவர்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து வெளியே வந்தார்கள் என்று வேதத்தில் நாம் வாசிக்கிறோமே.

    பாவம், சாபம், உலக சிநேகம், கடன் பிரச்சினை... போன்றவற்றினால் அடிமைப்பட்டுக்கிடக்கிறீர்களா? எனக்கு ஒரு விடுதலை கிடைக்காதா? என ஏங்குகிறீர்களா? இயேசுவின் ரத்தம் சகல பாவம், சாபம், வியாதி, பிரச்சினை இவற்றிலிருந்து உங்களுக்கு விடுதலை கொடுக்கக்கூடியது. எனவே இன்றே ரத்தத்தினால் கழுவ ஒப்புக்கொடுங்கள். இன்றே ஒரு விடுதலையைக் காண்பீர்கள்.

    ‘அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் ரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்’ 1. யோவான் 1:7

    சத்துருவின் பிடியிலிருந்து விடுதலை

    பாவம், சாபத்திலிருந்து விடுதலை பெற்றாலும் சாத்தான் பலவிதங்களில் நம்மைப் பின் தொடர்ந்து கொண்டுதானிருப்பான். அன்று இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து வெளியே வந்தாலும் பார்வோனும், அவன் சேனைகளும் பின்தொடர்ந்தனர். ஆனால் வேதம் சொல்லுகிறது:

    ‘அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி: பயப்படாதிருங்கள், நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள். இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள், கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார். நீங்கள் சும்மா இருப்பீர்கள் என்றான்’ யாத்திராகமம் 14:13,14

    அன்று எகிப்தியரோடு யுத்தம் பண்ணி, அவர்களைக் கலங்கடித்து, செங்கடலில் அழித்துப்போடக் காரணம், இஸ்ரவேலர் வெற்றியாய், விடுதலையாய் வாழ வேண்டுமென்பதற்காகவே.

    இயேசுவின் ரத்தத்தால் கழுவப்பட்ட ஒவ்வொருவருக்காகவும் ஆண்டவர் யுத்தம் பண்ணுகிறார். சத்துருவின் கிரியைகளை அழித்து சந்தோஷமான, சமாதானமான வாழ்வு வாழ தேவன் உங்களுக்குக் கிருபை பாராட்டுவார்.

    பிரியமானவர்களே! இயேசுவின் ரத்தத்தால் கழுவப்பட இன்றே உங்களை ஒப்புக்கொடுங்கள். அற்புதங்களைக் காண்பீர்கள்.

    சகோதரி கிறிஸ்டினா ராபின்சன், சென்னை-54 
    ×