search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீர்மட்டம்"

    தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து 121 அடியாக அதிகரித்துள்ளது.
    கூடலூர்:

    தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவையை முல்லைப் பெரியாறு அணை பூர்த்தி செய்து வருகிறது. இந்த அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் மட்டும் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பளவில் இரு போக நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

    முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் முதல் போக நெல் சாகுபடிக்கும், செப்டம்பர் முதல் வாரத்தில் 2-ம் போக நெல் சாகுபடிக்கும் தண்ணீர் திறக்கப்படும். கடந்த ஆண்டு கேரளாவில் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்க இயலவில்லை.

    இதனால் செப்டம்பர் மாதம் 25-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும் 2 போக நெல் சாகுபடிக்கும் நவம்பர் 1-ந் தேதி வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பெரியாறு பிரதான கால்வாய் பாசன பரப்புகளின் 2-ம் போக செல் சாகுபடிக்கும் தண்ணீர் திறக்கப்பட்டது.

    தற்போது கேரளாவில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது.

    நேற்று காலை 3438 கன அடி தண்ணீர் வந்த நிலையில் இன்று காலை 7506 கன அடியாக உயர்ந்துள்ளது. நேற்று 118 அடியாக நீர் மட்டம் இருந்தது. ஒரே நாளில் 3 அடி உயர்ந்து இன்று காலை 121.10 அடியாக அதிகரித்தது. அணையில் இருந்து 1150 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. 2846 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.

    பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதியில் 124 மி.மீ, தேக்கடியில் 43.2 மி.மீ மழை அளவு பதிவாகி உள்ளது. மேலும் கூடலூரில் 11.6, சண்முகாநதி அணையில் 7, உத்தமபாளையத்தில 9.6 மி.மீ பதிவானது. பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் லோயர் கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து 3 ஜெனரேட்டர்களை கொண்டு 123 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும் நீர்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்கிறது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை களக்காடு மலைப்பகுதியில் உள்ள கொடுமுடியாறு அணைபகுதியில் நேற்று அதிகபட்சமாக 17 சென்டி மீட்டர் மழை பெய்தது. அப்பகுதியில் இன்று காலை வரை 10 செ.மீ. மழை பெய்துள்ளது.

    பாபநாசம் அணைப்பகுதியில் இன்று காலை வரை 12 சென்டி மீட்டரும், சேர்வலாறு அணை பகுதியில் 5 செ.மீ. மழையும், கருப்பாநதி யில் 8 செ.மீ. மழையும், குண்டாறில் 5 செ.மீ. மழையும் பெய்துள்ளது. மழை காரணமாக அனைத்து அணைகளுக்கும் தண்ணீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

    பாபநாசம் அணைக்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 4 ஆயிரத்து 533 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 11 அடி உயர்ந்து இன்று 61.15 அடியாக உள்ளது.

    சேர்வலாறு அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 220 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் நேற்று 65 அடியாக இருந்த நீர்மட்டம் ஒரே நாளில் 26 அடி உயர்ந்து இன்று 91.53 அடியாக உள்ளது.

    மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 996 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் நேற்று 76 அடியாக இருந்த நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து இன்று 81.10 அடியாக உள்ளது.

    கடனாநதி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்ந்து இன்று 59 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து 66.75 அடியாகவும், கருப்பாநதி நீர்மட்டம் ஒரே நாளில் 12 அடி உயர்ந்து 59.06 அடியாகவும் இருக்கிறது.

    இதேபோல் குண்டாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து 28.88 அடியாகவும், அடவி நயினார் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 12 அடி உயர்ந்து 92 அடியாகவும், வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 9 அடியாகவும் உள்ளது.

    களக்காடு அருகே உள்ள கொடுமுடியாறு அணை பகுதியில் இன்றும் கனமழை கொட்டியதால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. நேற்று பெய்த மழையில் 20 அடி உயர்ந்து 32 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று ஒரே நாளில் மேலும் 20 அடி உயர்ந்து 52.50 அடியாகி முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணைக்கு வரும் தண்ணீர் நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு விபரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    குற்றாலம் மலைப்பகுதி மற்றும் சுற்று வட்டார பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி மற்றும் பழைய குற்றால அருவியில் இன்று தண்ணீர் நன்றாக கொட்டியது. அதில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

    இதுபோல் புலியருவி, சிற்றருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டியது. பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவியிலும் வெள்ளப்பெருக்கு குறைந்து தண்ணீர் நன்றாக கொட்டி வருவதால் அங்கும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    களக்காடு தலையணையில் மட்டும் தொடர்ந்து இன்றும் வெள்ளப்பெருக்கு அதிகமாக இருந்தது. இதனால் அங்கு குளிக்க அனுமதிக் கப்படவில்லை. தாமிரபரணி ஆற்றில் இன்று வழக்கத்தை விட அதிகளவு தண்ணீர் ஓடுகிறது.
    தென்பெண்ணையாற்றில் திறந்தவிடப்பட்ட தண்ணீர் அதிகளவு வருவதால் சாத்தனூர் அணை நீர்மட்டம் 90 அடியை கடந்து கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
    தண்டராம்பட்டு:

    திருவண்ணாமலை சாத்தனூர் அணை நீர்மட்ட உயரம் 119 அடி. மொத்த கொள்ளளவு 7,321 மில்லியன் கன அடி. இந்த நிலையில் தொடர் மழை காரணமாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதனால் சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை கடந்து கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 2,463 மில்லியன் கனஅடிக்கு நீர் இருப்பு உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1215 கனஅடியாக உள்ளது.
    தமிழகம் மற்றும் கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 37 அடியை தாண்டியது.
    மேட்டூர்:

    தமிழகம் மற்றும் கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த சில நாட்களாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

    இதனால் ஒகேனக்கலில் மெயின் அருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நாளையுடன் கோடை விடுமுறை முடிய உள்ளதால் ஒகேனக்கலில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

    உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து அங்குள்ள அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள் உற்சாகமாக பரிசலிலும் சவாரி சென்றனர்.

    தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றில் வரும் தண்ணீரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு கடந்த 22-ந் தேதி 479 கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று 5,060 கன அடியானது. இன்று நீர்வரத்து மேலும் அதிகரித்து 5,426 கன அடியாக இருந்தது.

    மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக காவிரி ஆற்றில் 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து 10-ல் ஒரு பங்கு மட்டுமே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

    கடந்த 26-ந் தேதி 33.76 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து நேற்று 35.84 அடியானது. இன்று ஒரே நாளில் மேலும் ஒரு அடி உயர்ந்து காலை 8 மணி நிலவரப்படி 36.72 அடியாக இருந்தது. பிற்பகல் அணையின் நீர்மட்டம் 37 அடியை தாண்டியது. இதனால் கடந்த 4 நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 3 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே கர்நாடக மற்றும் வட கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    ஏற்கனவே அந்த அணைகளில் பாதிக்கும் மேல் நீர் இருப்பு உள்ளதால் அந்த அணைகளில் இருந்து உபரி நீர் விரைவில் திறந்து விட வாய்ப்புள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்து அணையின் நீர்மட்டம் மேலும் வேகமாக உயர வாய்ப்புள்ளது.
    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று கனமழை பெய்ததால் வறண்டு கிடந்த பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 8 அடி உயர்ந்து இன்று 27.40 அடியாக உள்ளது.
    நெல்லை:

    தென்மேற்கு பருவ மழை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கும் என்று வானிலை மையம் அறிவித்தது. இது போலவே இந்த ஆண்டு மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் நேற்று கனமழை கொட்டியது. இன்றும் தொடர்ந்து மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக இன்று காலை வரை அடவி நயினார் அணை பகுதியில் 65 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. பாபநாசம் அணை பகுதியில் 61 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மேலும் குண்டாறு, சேர்வ லாறு, ராமநதி, கருப்பாநதி, கொடுமுடியாறு அணைப் பகுதியிலும் பரவலாக மழை பெய்தது.

    நகர் பகுதிகளில் செங்கோட்டை, தென்காசி, ஆய்க்குடி பகுதியில் நன்றாக மழை பெய்தது. மற்ற இடங்களில் லேசாக சாரல் அடித்தது. இதனால் நெல்லை மாவட்டத்தில் வெப்பம் முற்றிலும் தணிந்து நல்ல இதமான சூழ்நிலை நிலவுகிறது.

    பலத்த மழை காரணமாக பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 1376 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து மொத்தம் 459 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் வறண்டு கிடந்த பாபநாசம் அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. நேற்று காலை 19 அடியாக வெறும் சகதி மட்டுமே இருந்த நிலையில் ஒரே நாளில் 8 அடி உயர்ந்து இன்று 27.40 அடியாக உள்ளது.

    இதுபோல சேர்வலாறு அணையில் சகதி மட்டும் 19.68 அடிக்கு இருந்தது. அங்கு வினாடிக்கு 876 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    இதைத்தொடர்ந்து ஒரே நாளில் சேர்வலாறு அணை நீர்மட்டமும் 8 அடி உயர்ந்தது. இன்று காலை சேர்வலாறு அணை நீர்மட்டம் 27.49 அடியாக உயர்ந்துள்ளது.

    மணிமுத்தாறு அணை பகுதியில் இன்று காலை வரை 3 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 508 கன அடி தண்ணீர் வருகிறது. மணிமுத்தாறு அணையில் இருந்து நேற்று வரை வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் குடிநீருக்காக திறந்து விடப்பட்டது.

    ஆனால் இன்று பாபநாசம் அணையில் இருந்து 459 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால், மணிமுத்தாறு அணை மூடப்பட்டது. இதனால் இன்று மணிமுத்தாறு அணையில் இருந்து எந்த தண்ணீரும் வெளியேற்றப்படவில்லை. அணையின் நீர்மட்டம் இன்று காலை 71.40 அடியாக உள்ளது.

    செங்கோட்டை, அடவி நயினார் அணை பகுதியில் பலத்த மழை காரணமாக அணைக்கு கூடுதல் தண்ணீர் வருகிறது. இதனால் நேற்று 55.50 அடியாக இருந்த நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயர்ந்து இன்று 61 அடியாக உள்ளது.

    இதுபோல ராமநதி அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 51 அடியாகவும், கருப்பாநதி நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 44.95 அடியாகவும், கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 9 அடியாகவும் உள்ளது. மற்ற அணைகளான கடனாநதி அணை 50.60 அடி, குண்டாறு 17.13 அடி, வடக்கு பச்சையாறு 5 அடி, நம்பியாறு அணை 11.84 அடியாகவும் நீர்மட்டம் உள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    அடவிநயினார் - 65
    பாபநாசம்     - 61
    குண்டாறு    - 20
    சேர்வலாறு - 17
    செங்கோட்டை - 17
    ராமநதி - 15
    கொடுமுடியாறு - 15
    கருப்பாநதி - 14
    தென்காசி    - 10
    ஆய்க்குடி - 8
    மணிமுத்தாறு - 3
    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நேற்று 32.94 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் மேலும் உயர்ந்து 33.31 அடியானது.
    மேட்டூர்:

    கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் தமிழக எல்லை பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை மழை பரவலாக பெய்து வருகிறது.

    இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து படிப்படியாக அதிகரித்தது. கடந்த 23-ந் தேதி 1,700 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 3,500 கன அடியாக அதிகரித்தது. பின்னர் மாலையில் இந்த நீர்வரத்து 4,200 கன அடியானது. இன்று காலை 2ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் உள்ள மத்திய நீர் வளத்துறையினர் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    தற்போது கோடை விடுமுறை என்பதால் ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்துள்ளனர். ஒகேனக்கல் மெயின் அருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் அதிக அளவில் கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் எண்ணை மசாஜ் செய்து மெயின் அருவி, சினி பால்ஸ் மற்றும் காவிரி ஆற்றில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்து வருகிறார்கள்.

    நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பரிசல் சவாரி சென்று காவிரி ஆற்றின் அழகை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். மீன் அருங்காட்சியகம், முதலை பண்ணை, சிறுவர் பூங்கா, தொங்கு பாலம் உள்பட என அனைத்து பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருந்தது.

    மேட்டூர் அணைக்கு கடந்த 23-ந் தேதி 603 கன அடி தண்ணீர் வந்தது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அதிகரித்துள்ள தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. இதனால் நேற்று மேட்டூர் அணைக்கு 1,299 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 2,491 கன அடியாக அதிகரித்தது.

    அணையில் இருந்து காவிரி ஆற்றில் குடிநீர் தேவைக்காக 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர தொடங்கி உள்ளது.

    நேற்று முன்தினம் 32.8 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 32.94 அடியாக உயர்ந்தது. இன்று நீர்மட்டம் மேலும் உயர்ந்து 33.31 அடியானது. இன்னும் 2 நாட்களில் தென் மேற்கு பருவ மழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்து அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது.


    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். #cauveryissue #edappadipalanisamy #supremecourt
    நிலக்கோட்டை:

    கோடை விழா மலர் கண்காட்சியை தொடங்கிவைப்பதற்காக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் கொடைக்கானலுக்கு வந்தார். நேற்று அவர் பெரும்பாறை, வத்தலக்குண்டு, நிலக்கோட்டை, அம்மையநாயக்கனூர் வழியாக மதுரைக்கு காரில் சென்றார். பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.

    முன்னதாக வத்தலக்குண்டு, நிலக்கோட்டையில் அவருக்கு அ.தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அப்போது தொண்டர்கள் மத்தியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில் கூறியதாவது:-

    அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்று 15 மாதங்கள் ஆகிறது. இந்த 15 மாதங்களில் எத்தனை பிரச்சினைகள், எவ்வளவு போராட்டங்களை நாங்கள் சந்தித்தோம் என்பது எங்களுக்குத்தான் தெரியும். அத்தனை பிரச்சினைகளையும் சமாளித்து இன்றைக்கு சிறந்த அரசாக செயல்பட்டுக்கொண்டிருக்கின்றது.

    அ.தி.மு.க. தலைமையிலான ஆட்சியை கவிழ்ப்போம் என்று சொன்னவர்கள் எல்லாம் இன்று வியந்து பாராட்டக்கூடிய அளவுக்கு எங்கள் செயல்பாடு உள்ளது. கழகத்தை உடைக்கவேண்டும், ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற பல்வேறு கட்சிகளின் எதிர்பார்ப்பு பகல் கனவாகிவிட்டது.

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மக்களுக்காக என்னென்ன திட்டங்களை தீட்டினாரோ அந்த திட்டங்களை ஒவ்வொன்றாக தற்போதைய அரசு நிறைவேற்றி வருகிறது. கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ததன் மூலம் இந்திய அளவில் கல்விப்புரட்சியை ஏற்படுத்திய மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

    அதுமட்டுமின்றி ஏழை, எளிய மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்காக முழுமூச்சுடன் பாடுபடுகின்ற அரசாகவும் அ.தி.மு.க. அரசு உள்ளது. இதேபோல் விவசாயிகளுக்கு தேவையான அத்தனை உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது. தண்ணீரை சேமிக்க குடிமராமத்து என்ற திட்டத்தை தொடங்கி, அந்தந்த பகுதியில் உள்ள ஏரிகள், குளங்களில் இருக்கின்ற வண்டல் மண்ணை இலவசமாக விவசாயிகள் அள்ளி, அவர்களுடைய நிலங்களுக்கு உரமாக பயன்படுத்தக்கூடிய சூழ்நிலையை அ.தி.மு.க. அரசு உருவாக்கி உள்ளது.

    பருவகாலங்களில் பெய்கின்ற மழைநீர் வீணாக கடலிலே கலக்கின்றது. இவ்வாறு வீணாகும் நீரை சேமிப்பதற்காக தடுப்பணைகளை கட்ட மூன்றாண்டு கால திட்டமாக ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இதில், இந்த ஆண்டு ரூ.350 கோடி, முதல் கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஓடைகள், நதிகளின் குறுக்கே எங்கெங்கெல்லாம் மழைநீர் வீணாக கடலில் கலக்கின்றதோ, அங்கெல்லாம் தடுப்பணைகள் அமைக்கப்படும்.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார். இந்த அளவை 152 அடியாக உயர்த்த தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக முல்லைப்பெரியாறு அணையை பலப்படுத்தும் பணியும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

    இதைத்தவிர விவசாயிகளுக்கு மானிய விலையில் டிராக்டர் வழங்கப்படுகிறது. பண்ணைக் குட்டைகள் அமைத்து கொடுக்கப்படுகிறது. தென்னை மரங்களில் இருந்து நீராபானம் உற்பத்தி செய்ய அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

    விவசாயிகளுக்கான அனைத்து உதவிகளும் உடனுக்குடன் செய்து கொடுக்கப்பட்டுள்ளதால் உணவு தானிய உற்பத்தியில் இந்திய அளவில் தமிழகம் முதலிடம் பிடித்து ‘க்ரிஷ் கர்மாண்’ என்ற விருதையும் பெற்றிருக்கிறது. வேளாண்மை மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் முதன்மை துறையாக தமிழகம் விளங்கிக்கொண்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.  #cauveryissue #edappadipalanisamy #supremecourt
    ×