search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டென்னிஸ்"

    • நேற்று நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 2-1 என்ற கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தியது.
    • இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் இன்று உஸ்பெகிஸ்தானை சந்திக்கிறது.

    பில்லி ஜீன் கோப்பைக்கான பெண்கள் அணிகள் டென்னிஸ் போட்டியின் ஆசிய-ஓசியானா குரூப்-1 சுற்று ஆட்டம் உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கென்டில் நடந்து வருகிறது.

    இதில் நேற்று நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 2-1 என்ற கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தியது. இந்திய அணியில் ஒற்றையர் பிரிவில் அங்கிதா ரெய்னா வெற்றியும், ருதுஜா போசாலே தோல்வியும் கண்டனர்.

    பின்னர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா-ருதுஜா போசாலே கூட்டணி வெற்றி பெற்றது. இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் இன்று உஸ்பெகிஸ்தானை சந்திக்கிறது.

    • கலப்பு இரட்டையர் பிரிவில் விளையாடிய சானியா மிர்சா-போபண்ணா ஜோடி இறுதி போட்டியில் தோல்வியை தழுவியது.
    • போட்டியில் வெற்றி பெற்றாலும், தோற்றாலும் நான் அதிக உணர்ச்சிகளை காட்டுவதில்லை.

    புதுடெல்லி:

    இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா இம்மாதம் நடக்கும் ஒரு போட்டி தொடருக்கு பிறகு டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து உள்ளார்.

    சமீபத்தில் தனது கடைசி கிராண்ட்சிலாம் போட்டியாக ஆஸ்திரேலிய ஓபனில் விளையாடினார். அதில் கலப்பு இரட்டையர் பிரிவில் விளையாடிய சானியா மிர்சா-போபண்ணா ஜோடி இறுதி போட்டியில் தோல்வியை தழுவியது.

    போட்டிக்கு பிறகு பேசிய சானியா மிர்சா உணர்ச்சிவசமாக காணப்பட்டார். இந்த நிலையில் சானியா மிர்சா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஓய்வுக்கு பிறகு அடுத்த தலைமுறை வீரர்-வீராங்கனைகளுக்கு உதவ விரும்புகிறேன். இளம் வீரர்களை ஊக்கப்படுத்தவும், என்னால் முடிந்த உதவியை செய்யவும் விரும்புகிறேன்.

    போட்டியில் வெற்றி பெற்றாலும், தோற்றாலும் நான் அதிக உணர்ச்சிகளை காட்டுவதில்லை. பொதுவாக என் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி கொண்டிருக்கிறேன்.

    ஆனால் ஆஸ்திரேலிய ஓபன் போட்டிக்கு பிறகு நான் பேசிய போது மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தேன். கிராண்ட்சிலாம் போட்டியில் பங்கேற்பது இதுவே கடைசி முறை என்ற வகையில் அரை இறுதி போட்டியுடன் முடித்ததற்கு நன்றியுடன் இருப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பந்து எடுத்து போடும் சிறுவன் அதனை எடுத்து சென்றுவிட்டான் என புகார் கூறியுள்ளார்.
    • பொறுமை இழந்த நடால் எனது டென்னிஸ் பேட் திரும்ப வரவேண்டும் என கூறுகிறார்.

    மெல்போர்ன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தின்போது, நடப்பு சாம்பியனான ரபேல் நடால், தனது விருப்பத்திற்குரிய பேட் காணாமல் போய் விட்டது என்றும் பந்து எடுத்து போடும் சிறுவன் அதனை எடுத்து சென்றுவிட்டான் எனவும் புகாராக கூறியுள்ளார்.

    இதனால், போட்டி தொடங்க காலதாமதம் ஏற்பட்டது. அது சர்வதேச பரபரப்பு செய்தியாகவும் மாறியது. போட்டி பாதிக்கப்பட்டது பற்றி ஆஸ்திரேலிய ஓபன் நிர்வாகம் டுவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில், பொறுமை இழந்த நடால் தனது டென்னிஸ் பேட்டை தேடி பார்க்கிறார். எனக்கு, எனது டென்னிஸ் பேட் திரும்ப வரவேண்டும் என நடுவரிடம் கூறுகிறார்.

    தனது பேட் கிடைக்காமல் போகவே, வழியின்றி வேறொரு டென்னிஸ் பேட்டை எடுத்து கொண்டு நடால் விளையாட சென்றார். அதன்பின் போட்டி தொடர்ந்தது. எனினும், போட்டியில் ஜாக் டிரேப்பருக்கு எதிராக கடுமையாக போராடி 7-5, 2-6, 6-4, 6-1 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மூன்றரை மணிநேரம் நீடித்த இந்த போட்டியில் பெற்ற வெற்றியானது, நடப்பு ஆண்டில் நடாலுக்கு கிடைத்த முதல் வெற்றி ஆகும்.

    நடால் பயன்படுத்திய பேட்டை, பந்து எடுத்து போடும் சிறுவன் தவறுதலாக எடுத்தது பின்னர் தெரியவந்தது. ரிப்பேர் செய்யவேண்டும் என நினைத்து எடுத்துச் சென்றிருக்கிறான். பின்னர் நடாலிடம் பேட்டை ஒப்படைத்ததும் குழப்பம் தீர்ந்தது.



    • தேசிய டென்னிஸ் போட்டியில் கரூர் பரணி வித்யாலயா பள்ளி மாணவி 4 பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளார்.
    • குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் நடைபெற்ற 16-வது தேசிய சாப்ட் டென்னிஸ் போட்டியில் பரணி வித்யாலயா மாணவி யாழினி கலந்து கொண்டார்.

    கரூர்:

    அண்மையில் குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் நடைபெற்ற 16-வது தேசிய சாப்ட் டென்னிஸ் போட்டியில் பரணி வித்யாலயா மாணவி யாழினி கலந்து கொண்டார்.தேசிய சப் ஜூனியர் போட்டிகளில் குழு பிரிவு மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் 2 தங்கப் பதக்கங்களும், தனி நபர் பிரிவில் வெண்கலப்பதக்கமும் சாதனைப் படைத்தார். இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் என தேசிய அளவில் 4 பதக்கங்கள் பெற்றார். சாதனை புரிந்த மாணவி யாழினிக்கு அஹமதாபாத்தில் நடந்த பரிசளிப்பு விழாவில் சாப்ட் டென்னிஸ் பெடரேசன் ஆஃப் இந்தியாவின் தேசியத் தலைவர் மகேஷ் காஸ்வாலா, தேசிய பொதுச்செயலாளர் சகுந்தலா கடோதரா ஆகியோர் பதக்கங்கள் அணிவித்து, பரிசு வழங்கி பாராட்டினர். தேசிய அளவில் சாதனை படைத்து கரூருக்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த மாணவி யாழினி, அவரது டென்னிஸ் பயிற்சியாளர் வினோத்குமார் ஆகியோரை பள்ளியின் தாளாளர் மோகனரங்கன், செயலர் பத்மாவதி மோகனரங்கன், முதன்மை முதல்வர் ராமசுப்ரமணியன், முதல்வர் சுதாதேவி, துணை முதல்வர் பிரியா மற்றும் இருபால் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டி வாழ்த்தினர்.

    • மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் சங்கம் இணைந்து போட்டியை நடத்தியது.
    • மேலும், அவர் மாணவர்களோடு ேடபிள் டென்னிஸ் விளையாடினார்.

     தஞ்சாவூர்:

    தஞ்சையில் முன்னாள் மாணவர்கள் சங்கம் மற்றும் மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் சங்கம் ஆகியவை இணைந்து டேபிள் டென்னிஸ் விளையாட்டு போட்டியை நடத்தியது. நிகழ்ச்சியில் மாவட்ட டேபிள் டென்னிஸ் சங்க தலைவர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் ஹெர்பர்ட் ஜோன்ஸ் வரவேற்றார்.

    புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஜெரோம் அடிகளார், மாவட்ட டேபிள் டென்னிஸ் சங்கம் செயலர் அண்ணாமலை, புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி தலைவர் கிளமெண்ட் அந்தோணிராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    இந்த போட்டியை மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் தொடங்கி வைத்தார்.

    மேலும் அவர் மாணவர்களோடு மேபிள் டென்னிஸ் விளையாடினார்.

    இந்த நிகழ்ச்சியை எழுத்தாளர் தஞ்சை ராமதாசு தொகுத்து வழங்கினார். முடிவில் உடற்கல்வி இயக்குனர் பால்பிண்டோ நன்றி கூறினார்.

    • ரம்யா சத்தியநாதன் சீனியர் செகண்டரி பள்ளியில் தென்னிந்திய அளவிலான பள்ளியில் டென்னிஸ் போட்டி தொடங்கியது.
    • 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு விளையாட்டு போட்டிகளை தொடக்கி வைத்தனர்.

    பூதலூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், ஆலக்குடி- வல்லம் சாலையில் செயல்பட்டு வரும் ரம்யா சத்தியநாதன் சீனியர் செகண்டரி பள்ளியில் தென்னிந்திய அளவிலான சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கிடையிலான டென்னிஸ் போட்டி தொடங்கியது.

    இதில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 1000 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

    தொடக்க விழாவிற்கு ரம்யா சத்தியநாதன் கல்வி குழும தலைவர் பொறியாளர் சத்தியநாதன் தலைமை தாங்கினார். ரம்யா சத்தியநாதன் கல்வி குழும செயலாளர் ஜெனட் ரம்யா முன்னிலை வகித்தார்.

    தஞ்சாவூர் தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர் லோகநாதன், தஞ்சாவூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு விளையாட்டு போட்டிகளை தொடக்கி வைத்தனர்.

    ரம்யா சத்தியநாதன் சீனியர் செகண்டரி பள்ளி முதல்வர் ஜோன் ஃபெர்னாண்டஸ், துணை முதல்வர் அம்பேத்கர் போட்டியை ஒருங்கிணைத்து நடத்தி வருகின்றனர்.

    பள்ளி டென்னிஸ் பயிற்சியாளர் சிலம்பரசன் மற்றும் குழுவினர் விளையாட்டு போட்டி பணிகளை செய்து வருகின்றனர்.

    • கால் இறுதி ஆட்டத்தில் கேத்தே சுவான்- ஹிபினோ மோதினார்கள்.
    • இன்று இரவு அரை இறுதி ஆட்டங்கள் நடக்கின்றன.

    சென்னை:

    சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் கால் இறுதி ஆட்டங்கள் நேற்று நடந்தன.

    ஒரு கால் இறுதி ஆட்டத்தில் இந்த போட்டியின் 3-வது வரிசையில் உள்ள மக்டா லினெட் (போலந்து) ஏழாம் நிலை வீராங்கனையான ரெபேக்கா மரினோ (கனடா) மோதினார்கள்.

    முதல் செட்டில் இருவரும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி மாறி மாறி புள்ளிகளை எடுத்தனர். இதனால் 6-6 என்ற சமநிலை ஏற்பட்டு டை பிரேக்கருக்கு சென்றது. இதில் லினெட் 12-10 என்ற கணக்கில் வென்றார்.

    2-வது செட்டிலும் அவரது ஆதிக்கமே இருந்தது. இந்த செட்டிலும் மக்டா லினெட் 6-3 என்ற கணக்கில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். ஸ்கோர் 7-6 (12-10), 6-3

    மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் கேத்தே சுவான் (இங்கிலாந்து)-ஹிபினோ (ஜப்பான்) மோதினார்கள்.

    கேத்தே சுவான் முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் வென்றார். அதற்கு பதிலடியாக ஹிபினோ 2-வது செட்டை 6-3 என்று கைப்பற்றினார். இருவரும் தலா ஒரு செட்டை கைப்பற்றியதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 3-வது செட்டை கேத்தே சுவான் 6-3 என்ற கணக்கில் வென்று அரை இறுதிக்கு முன்னேறினார். ஸ்கோர் 6-3, 3-6, 6-3


    போட்டியின் முடிவில் கைகுலுக்கிக் கொண்ட லிண்டா (இடது)-வார்வரா கிராசெவா.

    முன்னதாக நடந்த கால் இறுதி ஆட்டங்களில் நாடியா போடோ ரோஸ்கா (அர்ஜென்டினா) 1-6, 6-4, 6-2 என்ற கணக்கில் யூஜின் பவுச்சர்ட்னடயும் (கனடா), லிண்டா புருவிர்தோவா (செக் குடியரசு) 6-4, 6-3 என்ற கணக்கில் வார்வரா கிராசேவாவையும் (ரஷியா)வீழ்த்தினார்கள்.

    இன்று இரவு 7 மணிக்கு அரை இறுதி ஆட்டங்கள் நடக்கின்றன. ஒரு அரை இறுதியில் நாடியா போடோ ரோஸ்கா (அர்ஜென்டினா)-லிண்டா (செக்குடியரசு) மோதுகிறார்கள்.

    அதைத்தொடர்ந்து நடை பெறும் 2-வது அரை இறுதியில் மக்டா லினெட் (போலந்து)-கேத்தே சுவான் (இங்கிலாந்து) மோதுகிறார்கள்.

    • இரண்டாவது சுற்று ஆட்டத்தில் கனடாவின் கரோல் ஜாவோ-ரஷியாவின் வர்வரா கிராச்சேவா மோதினர்.
    • காலிறுதியில் இந்திய ஜோடியான கர்மன் தண்டி-ருதுஜா தோல்வியை தழுவினர்.

    சென்னை:

    சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டிஏ.டி. ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

    ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் கனடாவின் கரோல் ஜாவோ-ரஷியாவின் வர்வரா கிராச்சேவா மோதினர். இதில் கிராச்சேவா 6-1, 7-5 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.

    மற்ற ஆட்டங்களில் போடோரோஸ்கா (அர்ஜென்டினா), மெக்டா லினெட் (போலந்து) கேட்டி ஸ்வான் (இங்கிலாந்து) ஆகியோர் கால் இறுதிக்கு முன்னேறினர்.

    இன்று ஒற்றையர் பிரிவு கால் இறுதி ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 5 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் புசார்ட் (கனடா)-போடோரோஸ்கா (அர்ஜென்டினா) மோதுகிறார்கள். 6.15 மணிக்கு நடக்கும் கால் இறுதி ஆட்டம் ஒன்றில் கிராச்சேவா (ரஷியா)-லின்டா ப்ருஹ்விர்டோவா (செக் குடியரசு) மோதுகிறார்கள்.

    இரவு. 7.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் மெக்டாலினெட் (போலந்து)-மரினோ (கனடா), இரவு 8.45 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ஸ்வான் (இங்கிலாந்து)-நாவ் ஹிபினோ (ஜப்பான்) ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

    அனுபவம் வாய்ந்த வீராங்கனையான புசார்ட் அரை இறுதிக்கு தகுதி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இரட்டையர் பிரிவில் இன்று நடக்கும் அரை இறுதி போட்டியில் புசார்ட் (கனடா)-விக்மேயர் (பெல்ஜியம்) ஜோடி, அன்னா பிஸிங்கோவா (ரஷியா)-டிசலமிட்ஜ் (ஜார்ஜியா) ஜோடி பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

    நேற்று நடந்த கால் இறுதியில் இந்திய ஜோடியான கர்மன் தண்டி-ருதுஜா தோல்வியை தழுவினர். இதன் மூலம் இரட்டையர் பிரிவிலும் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது. ஏற்கனவே ஒற்றையர் பிரிவிலும் இந்திய வீராங்கனைகள் வெளியேறி விட்டனர்.

    • 2003ம் ஆண்டு பெடரர் தனது முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றார்.
    • அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர்கள் வரிசையில் பெடரர் 3வது இடத்தில் உள்ளார்.

    சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் தனது ஓய்வு முடிவை அறிவித்திருக்கிறார். 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்ற ரோஜர் பெடரர், 2022 லேவர் கோப்பைக்குப் பிறகு விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இத்தகவலை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    2003ம் ஆண்டு விம்பிள்டனில் சாம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம் பெடரர் தனது முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை பெற்றார். அதன் பிறகு அடுத்தடுத்து பல சர்வதேச போட்டிகளில் சாதனை படைத்தார். 6 ஆஸ்திரேலிய ஓபன், 1 பிரெஞ்ச் ஓபன், 8 விம்பிள்டன் மற்றும் 5 அமெரிக்க ஓபன் என மொத்தம் 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்ற வீரர்கள் வரிசையில் பெடரர் தனது முக்கிய போட்டியாளர்களான ரபேல் நடால் மற்றும் நோவக் ஜோகோவிச் ஆகியோரைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் உள்ளார்.

    தனது ஓய்வு முடிவு குறித்து கூறி உள்ள பெடரர், 'கடந்த மூன்று ஆண்டுகளாக காயங்கள் மற்றும் அறுவை சிகிச்சைகள் போன்ற கடுமையான சவால்கள் இருந்தன. இதனால் முழுமையான உடற்தகுதியுடன் போட்டிக்கு திரும்ப கடுமையாக உழைத்தேன். ஆனால் என் உடல் திறன் குறித்து எனக்குத்தான் தெரியும்' என்றார்.

    • தமிழகத்தைச் சேர்ந்த சாய் சமர்தி, தனது முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை நாவ் ஹிபினோவுடன் மோதினார்.
    • ஆஸ்திரேலியாவின் ஓலிவியா டிஜென்ட்ரா முலியா 6-3, 6-1 என்ற நேர் செட்டில் கசியோனோவாவை தோற்கடித்தார்.

    சென்னை ஓபன் சர்வதேச பெண்கள் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. டென்னிஸ் ஸ்டேடியத்தில் வருகிற 12-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை நடக்கிறது.

    முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கும் இப்போட்டியில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் ஆட்டங்கள் நடக்கிறது.

    இதன் தகுதி சுற்று போட்டி இன்றும், நாளையும் நடக்கிறது. இதில் இந்தியாவின் சாய்சமர்தி, லட்சுமி பிரபா, சவ்ஜன்யா பவி செட்டிரியா பாட்டியா ருதுஜா போசாலி உள்பட 24 வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    2 சுற்றுகள் கொண்ட தகுதி சுற்று முடிவில் 6 வீராங்கனைகள் பிரதான சுற்றுக்கு முன்னேறுவார்கள். தகுதி சுற்று ஆட்டங்கள் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

    இதில் தமிழகத்தைச் சேர்ந்த சாய் சமர்தி, தனது முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை நாவ் ஹிபினோவுடன் மோதினார். இதில் சாய் சமர்தி 1-6, 0-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.

    மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் ஓலிவியா டிஜென்ட்ரா முலியா 6-3, 6-1 என்ற நேர் செட்டில் கசியோனோவாவை தோற்கடித்தார்.

    மற்ற ஆட்டங்களில் இந்தியாவின் சவ்ஜன்யா பவிசெட்டி, ஜப்பானின் கியோகா ஓஹமுகரவுடனும், லட்சுமி பிரபா ஜப்பானின் யுகி நைய்டோவுடனும் மோதினர்.

    • இறுதி போட்டியில் கிரீசின் சிட்சிபாஸ்-குரோஷிய வீரர் போர்னா கோரிச் பலப்பரீட்சை நடத்தினர்.
    • பெண்கள் பிரிவில் கார்சியா வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்த இறுதி போட்டியில் 4-ம் நிலை வீரரான கிரீசின் சிட்சிபாஸ்-குரோஷிய வீரர் போர்னா கோரிச் பலப்பரீட்சை நடத்தினர்.

    இதில் கோரிச் 7-6 (7-0), 6-2 என்ற நேர்செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை வென்றார். தரவரிசையில் 152-வது இடம் வகிக்கும் கோரிச் முன்னணி வீரர் சிட்சிபாசுக்கு அதிர்ச்சி அளித்தார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் கரோலின் கார்சியா (பிரான்ஸ்)-பெட்ரா கிவிடோவா (செக் குடியரசு) மோதினர். இதில் கார்சியா 6-2, 6-4 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று பட்டத்தை கைப்பற்றினார்.

    கார்சியா தகுதி சுற்றில் விளையாடி பிரதான சுற்றை அடைந்து தற்போது சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் நடந்தது.
    • சென்னையில் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நடைபெற இருக்கிறது.

    இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் நடந்தது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இந்த வரலாற்று சிறப்பு மிக்க போட்டி நடைபெற்றது.

    அடுத்து சென்னையில் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நடைபெற இருக்கிறது.

    ஏ.டி.பி. டென்னிஸ் போட்டி சென்னையில் 1997-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 1997 முதல் 2001 வரை கோல்டு பிளேக் ஓபன் என்ற பெயரிலும், 2002 முதல் 2004 வரை டாடா ஓபன், 2005 முதல் 2009 வரை சென்னை ஓபன், 2010 முதல் 2017 வரை ஏர்செல் சென்னை ஓபன் என்ற பெயரிலும் இந்த போட்டி நடைபெற்றது.

    21 ஆண்டுகள் ஏ.டி.பி. ஆண்கள் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. 2018-ம் ஆண்டு இந்த போட்டி மராட்டிய மாநிலம் புனேக்கு மாற்றப்பட்டது.

    இந்த நிலையில் சென்னையில் முதல் முறையாக சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நடத்தப்படுகிறது. சென்னை ஓபன் டபிள்யு.டி.ஏ. 250 சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கம் ஸ்டேடியத்தில் செப்டம்பர் 12-ந்தேதி தொடங்குகிறது. செப்டம்பர் 18-ந்தேதி வரை இந்த போட்டி ஒரு வாரம் நடக்கிறது.

    விளையாட்டை மேம்படுத்தும் நோக்கில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். அதன்படி சமீபத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழக அரசு மிகவும் பிரம்மாண்ட முறையில் நடத்தி முடித்தது. தற்போது சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியை நடத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதரவு கொடுத்துள்ளார். இந்த போட்டியின் முக்கிய ஸ்பான்சராக தமிழக அரசு உள்ளது.

    இதுகுறித்து தமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைவரும், முன்னாள் வீரருமான விஜய் அமிர்தராஜ் கூறியதாவது:-

    செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தி முடித்த தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அடுத்து செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள மகளிர் டென்னிஸ் போட்டி தொடரை வெற்றிகரமாக நடத்த ஆர்வமாக உள்ளோம். தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்திய அளவில் மகளிர் டென்னிஸ் பிரபலமாகவும், வளர்ச்சி அடையவும் இந்த போட்டி உதவும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி சோனி டெலிவிஷன் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    ×