search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெளிநடப்பு"

    பொங்கல் பரிசு வழங்கியது தொடர்பாக துணை முதல்வர் அளித்த விளக்கம் திருப்தி அளிக்காததால், திமுக எம்எல்ஏக்கள் இன்று சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். #DMKWalkout #TNAssembly
    சென்னை:

    சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலளித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அப்போது, பொங்கல் பரிசுக்கான நிதி தொடர்பாக அவர் அளித்த விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்று கூறி திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    வெளிநடப்பு செய்த பின்னர், திமுக எம்எல்ஏக்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பொன்முடி எம்எல்ஏ கூறியதாவது:-



    ரேசன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு 1,000 ரூபாய் வழங்கியது தொடர்பான நிதி கணக்கில் தவறு உள்ளது. மொத்தம் உள்ள 2.01 கோடி ரேசன் கார்டுகளுக்கும் தலா 1.000 ரூபாய் வழங்கினால்கூட, 2010 கோடி ரூபாய் தான் ஆகும்.

    இதற்காக பட்ஜெட்டில் ரூ.1,985 கோடி ஒதுக்கிய நிலையில், துணை பட்ஜெட்டில் பொங்கல் பரிசுக்காக ரூ.2019.11 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முரண்பாடு குறித்து கேட்டதற்கு எந்த பதிலும் இல்லை. எனவே, வெளிநடப்பு செய்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கூட்டத் தொடரில் திமுக எம்எல்ஏக்கள் முதல் முறையாக வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது. #DMKWalkout #TNAssembly
    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த மந்திரி பங்கேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் இருந்து இந்திய தூதரக உயரதிகாரி வெளிநடப்பு செய்தார். #Indiaboycotts #Indiandiplomat #SAARCmeeting
    இஸ்லாமாபாத்:

    சார்க் என்று சுருக்கமாக அழைக்கப்படும் தெற்காசிய கூட்டமைப்பு மாநாட்டை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு உறுப்பு நாடு பொறுப்பேற்று நடத்தும்.

    அதன்படி இந்த ஆண்டு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் சார்க் மாநாட்டில் பாகிஸ்தானுக்கான இந்திய தூதரக உயரதிகாரி சுபம் சிங் கலந்து கொண்டார். அப்போது, பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீர் பகுதியின் மந்திரி சவுத்ரி முஹம்மது சயீத் இந்த மாநாட்டு அரங்கத்தில் இருந்தார்.

    அவரது வருகைக்கு இந்தியாவின் எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் மாநாட்டில் இருந்து சுபம் சிங் வெளிநடப்பு செய்தார்.



    முன்னதாக, இந்த மாநாட்டில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் அனுப்பிய அழைப்பை இந்தியா நிராகரித்து விட்டது.

    மேலும், கடந்த 2016-ம் ஆண்டு பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் சார்க் மாநாடு நடைபெற இருந்தது. அந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உரி பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

    இதனால், பாகிஸ்தானில் அப்போது நடப்பதாக இருந்த சார்க் மாநாட்டை இந்தியா புறக்கணித்தது. இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக இந்த அமைப்பில் பங்கேற்றுள்ள வங்காளதேசம், பூடான், ஆப்கானிஸ்தான் ஆகிய உறுப்பு நாடுகளும் பங்கேற்க மறுத்துவிட்டதால் கடந்த சார்க் மாநாடு நிறுத்திவைக்கப்பட்டது நினைவிருக்கலாம். #Indiaboycotts #Indiandiplomat  #SAARCmeeting 
    சட்டசபையில் எஸ்.வி.சேகரை கைது செய்யாதது ஏன் என்பது பற்றிய விவாதத்தின்போது சபாநாயகர் பேச அனுமதிக்காததால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். #DMK #MKStalin #TNassembly
    சென்னை:

    சட்டசபையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து நடிகர் எஸ்.வி.சேகரை இதுவரை கைது செய்யாதது ஏன்? என்று ஒரு பிரச்சினையை கிளப்பினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-

    மு.க.ஸ்டாலின்: முன்னாள் எம்.எல்.ஏ. நடிகர் எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளரை தரக்குறைவாக பேசியதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    சபாநாயகர்: நான் அரசிடம் இதுபற்றி விசாரித்தேன். இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. இதில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு 20-ந்தேதி அவர் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே அதுபற்றி விவாதிக்க வேண்டாம்.

    ஸ்டாலின்: எஸ்.வி.சேகர் போலீஸ் துணையுடன் சுதந்திரமாக நடமாடி வருகிறார்.



    சபாநாயகர்: இது எதிர்க்கட்சி தலைவருக்கு தெரியாதது அல்ல. நீதிமன்ற நடவடிக்கையில் இருப்பதை நாம் இங்கு விவாதிப்பது சரியாக இருக்காது.

    ஸ்டாலின்: நீதிமன்ற நடவடிக்கை பற்றி நான் பேச விரும்பவில்லை, அதற்குள் போக விரும்பவில்லை. காவல்துறை ஏன் கைது செய்யவில்லை என்று கேட்கிறேன்.

    சபாநாயகர்: நீதிமன்றத்திற்கு 20-ந்தேதி வருமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    ஸ்டாலின்: ஏற்கனவே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை போலீஸ் ஏன் நிறைவேற்றவில்லை.

    சபாநாயகர்: நீங்கள் திரும்ப திரும்ப இதுபற்றி விவாதித்து வருகிறீர்கள். நீதிமன்ற உத்தரவு இருப்பதால் அவையில் இதை விவாதிப்பது சரியாக இருக்காது. 20-ந்தேதி வரை பொறுத்திருந்து அதன்பிறகு இதுபற்றி பேசலாம்.

    ஸ்டாலின்: போலீஸ் ஏன் அவரை கைது செய்யவில்லை என்பதைத்தான் கேட்கிறேன்.

    (சபாநாயகர் தொடர்ந்து அவருக்கு பேச அனுமதி மறுத்ததால் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் எழுந்து நின்றனர். அவர்களை ஸ்டாலின் உட்கார வைத்தார்).

    சபாநாயகர்:- இந்த வி‌ஷயத்தில் நீதிமன்றம் உத்தரவு கொடுக்கவில்லை என்றால் உங்களை பேச அனுமதித்து இருப்பேன்.

    ஸ்டாலின்:- இந்த வழக்கு ஏப்ரல் மாதம் முதல் நடந்து வருகிறது. ஏன் அவரை இதுவரை கைது செய்யவில்லை. அவரை போலீஸ் கைது செய்யாததால்தான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

    சபாநாயகர்:- இந்த வி‌ஷயத்தை இங்கு இப்போது பேச அனுமதித்தால் நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாகிவிடுவோம். வேறு வி‌ஷயம் இருந்தால் பேசுங்கள் அனுமதிக்கிறேன். இந்த வி‌ஷயம் குறித்து விவாதிக்க வேண்டாம்.

    சபாநாயகர் பேச அனுமதி அளிக்காததால் மு.க.ஸ்டாலின் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். அவரைத் தொடர்ந்து தி.மு.க.வினரும் வெளிநடப்பு செய்தனர்.

    இந்த விவாதம் நடந்து கொண்டு இருந்தபோதும், தி.மு.க. வெளிநடப்பு செய்த போதும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவையில் இருந்து விவாதங்களை கவனித்துக் கொண்டு இருந்தார்.

    சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான எஸ்.வி.சேகர் பத்திரிகை துறையில் பணிபுரிந்து கொண்டிருக்கக்கூடிய பெண் ஊழியர்களை தரங்கெட்ட வகையில் சில விமர்சனங்களை செய்திருக்கிறார். அதை முகநூலில் அவருடைய பெயரிலேயே பதிவு செய்திருக்கிறார்.

    இதுகுறித்து பத்திரிகையாளர்கள் மாநகர காவல் துறையை சந்தித்து கடந்த ஏப்ரல் 20-ந்தேதி அவர் மீது புகார் கொடுத்திருக்கிறார்கள். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவரை கைது செய்வதற்கான முயற்சிகளில் காவல்துறை ஈடுபட்டிருக்கிறது.

    ஆனால் அதை எதிர்த்து எஸ்.வி.சேகர் முன்ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். முன் ஜாமீன் வழங்க முடியாது என்று அவரது மனுவை உயர்நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்திருக்கிறது.

    அவர் தலைமைச் செயலாளரின் உறவினர் என்பதால் அவரை இதுவரை கைது செய்யவில்லை. போலீஸ் பாதுகாவலுடன் சென்று சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஓட்டு போட்டு இருக்கிறார். பல்வேறு பொது நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்று இருக்கிறார்.

    ஆனால் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை. சபையில் இதுபற்றி பிரச்சினை கிளப்பியபோது இது நீதிமன்ற நடைமுறையில் இருப்பதாக கூறி சபாநாயகர் பேச அனுமதிக்கவில்லை. எனவே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாங்கள் வெளிநடப்பு செய்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #DMK #MKStalin #TNassembly #SVeShekar

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக பேச அனுமதி மறுக்கப்பட்டதால் தமிழக சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று வெளிநடப்பு செய்தனர்.
    சென்னை:

    தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோருவது தொடர்பாக சட்டசபையில் இன்று பேசுவதற்கு தி.மு.க. அனுமதி கேட்டது. ஆனால் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சபை நிகழ்வுகளை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.



    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் திட்டமிட்ட சதி. அதிகாரிகளை ஆள்மாறாட்டம் செய்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு அமைத்துள்ள விசாரணைக் கமிஷன் என்பது கண்துடைப்பு வேலை. அந்த கமிஷன் மீது நம்பிக்கை இல்லை. விசாரணைக் கமிஷனால எந்த பயனும் கிடைக்கப்போவதில்லை. எனவே, சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று நேரமில்லா நேரத்தில் பேசுவதற்கு அனுமதி கேட்டோம்.

    அவை தொடங்குவதற்கு முன்பே இது தொடர்பாக பேரவைத் தலைவரிடம் இதனை தெரிவித்தோம். ஆனால் முதல்வர் ஒப்புதல் அளிக்காததால் இதுபற்றி பேச வேண்டாம் என பேரவைத் தலைவர் கூறினார். துப்பாக்கி சூடு குறித்து பேரவையில் பேசக்கூடாது என்றால் நாங்கள் ஏன் அவைக்கு வரவேண்டும்? எனவே, வெளிநடப்பு செய்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #ThoothuKudiFiring #DMKWalkout
    தமிழக சட்டசபையில் நீட் தேர்வு தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து அமைச்சர் விஜயபாஸ்கரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். #TNAssembly #DMKCongressWalkout #NEETissue
    சென்னை:

    நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தமிழக மாணவி பிரதீபா தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக சட்டசபையில் இன்று தி.மு.க. சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானம் மீது பேசிய மு.க.ஸ்டாலின், நீட் தேர்விற்கு 2017ல் அனிதாவையும் இந்த ஆண்டு பிரதீபாவையும் இழந்திருப்பதாக கூறினார். மேலும், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு அரசு என்ன செய்தது? என்றும் கேள்வி எழுப்பினார்.

    நீட் தேர்வு தொடர்பாக சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என்றும் கேள்வி எழுப்பினார்.



    இதற்கு பதிலளித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார். அப்போது நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிகள் குறித்து விளக்கினார். தீர்ப்புக்கு கட்டுப்பட்டு நீட் தேர்வை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.

    அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ.க்களும் சபை நிகழ்வுகளை புறக்கணித்து வெளியேறினர்.  #TNAssembly #DMKCongressWalkout #NEETissue

    புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து அ.தி.மு.க. எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததை தொடர்ந்து வெளிநடப்பு செய்தனர். #PuducherryAssembly #ADMK
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபை இன்று காலை 10 மணிக்கு கூடியது.

    கூட்டம் தொடங்கியவுடன் சபாநாயகர் வைத்திலிங்கம் குறள் வாசித்து சபை நிகழ்வுகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிக்கை நகல்களை முதல்-அமைச்சர் நாராயணசாமி சபையில் தாக்கல் செய்தார்.

    அப்போது அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் குறுக்கிட்டு பேசினார்.

    அவர் பேசும் போது, மக்கள் நல திட்டங்கள் எதையும் இந்த அரசு செயல்படுத்தவில்லை. ஆட்சியமைத்து 24 மாதங்களில் 6 மாதம் மட்டுமே அரிசி போடப்பட்டுள்ளது. கடந்த சட்டசபை கூட்டத் தொடரில் புதிதாக 10 ஆயிரம் முதியோருக்கு பென்‌ஷன் தரப்படும் என அறிவித்தனர். 14 ஆயிரம் பேர் விண்ணப்பித்தும் ஒருவருக்குகூட புதிதாக பென்‌ஷன் தரப்படவில்லை. ஏ.டி.எம். கொள்ளையில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. சட்ட ஒழுங்கு கெட்டுப் போயுள்ளது.

    நேற்றைய தினம்கூட முத்தியால்பேட்டையில் ரூ.1 கோடி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என தொடர்ந்து பேசினார். ஆனால் அவரை தொடர்ந்து பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை. இதற்கிடையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்.கள் பாஸ்கர், அசனா, வையாபுரி மணிகண்டன் ஆகியோர் எழுந்து பேனர்களை தூக்கி காட்டினர். அந்த பேனரில் இலவச அரிசி எங்கே? முதியோர் பென்‌ஷன் எங்கே? ஏமாற்றாதே, ஏமாற்றாதே, மக்களை ஏமாற்றாதே என எழுதப்பட்டிருந்தது.

    பின்னர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 4 பேரும் சபாநாயகர் இருக்கை நோக்கி சென்றனர். அவர்களை சபை காவலர்கள் தடுத்தனர். அப்போது சபாநாயகரிடம் பேனர்களை தூக்கிப்பிடித்து காட்டினர். பின்னர் சபா நாயகர் இருக்கை முன்பு சென்று தரையில் அமர்ந்து தர்ணா செய்ய முயன்றனர். ஆனால் அவர்களை சபை காவலர்கள் தடுத்து நிறுத்தினர்.

    அப்போது உறுப்பினர் அன்பழகன், சட்டமன்றத்தை கண் துடைப்பு நாடகமாக நடத்துகின்றனர். மருத்துவக் கல்லூரியில் அரசுக்கான இடங்களை பெறவில்லை. சட்ட ஒழுங்கு சீரழிந்துள்ளது. செயல்படாத மக்கள் விரோத அரசாக உள்ளது. இதை கண்டித்து வெளிநடப்பு செய்வதாகக்கூறி வெளியேறினார். அவருடன் மற்ற 3 எம்.எல்.ஏ.க்களும் வெளியேறினர். #PuducherryAssembly #ADMK
    சாராய ஆலை குற்றச்சாட்டு தொடர்பாக டி.டி.வி. தினகரன் பேச சபாநாயகர் அனுமதி மறுத்ததால் சட்டசபையில் இருந்து அவர் வெளிநடப்பு செய்தார்.
    சென்னை:

    சட்டசபையில் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. ஒரு பிரச்சினையை முன்வைத்து பேசினார்.

    2016-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் 6,672 மதுக்கடைகளை குறைப்பேன் என்று மறைந்த ஜெயலலிதா குறிப்பிட்டு இருந்தார். அதன்படி பதவி ஏற்றதும் 500 மதுக்கடைகளை மூட உத்தரவிட்டார்.

    பிப்ரவரி மாதம் பிறந்த நாளன்று 500 மதுக்கடைகளை மூடினார். பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி 3,321 மதுக்கடைகள் மூடப்பட்டன. தற்போது 3.866 கடைகள் உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

    கடந்த மே 21-ந்தேதி வெளியிடப்பட்ட அரசாணைப்படி 810 கடையை மீண்டும் திறக்க இந்த அரசு முயற்சிக்கிறது. அம்மா வழியில் நடப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்த அரசு மீண்டும் மதுக்கடைகளை திறக்க முயற்சி செய்வது சரியா? இதற்கு காரணம் என்ன என்றார்.

    உடனே அ.தி.மு.க. உறுப்பினர்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினார்கள். ஒரு உறுப்பினர் “உர்..ர்.. என்று சத்தம் எழுப்பினார். தொடர்ந்து டி.டி.வி. தினகரன் பேச முயன்றார். அவருக்கு மைக் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அப்போது சபாநாயகருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

    சபாநாயகர்:- யாரும் உங்கள் பெயரை குறிப்பிட்டு சொல்லவில்லை. பொதுவாக சொல்வதற்கெல்லாம் பதில் அளிக்க வாய்ப்பு கொடுக்க முடியாது. மதுவிலக்கு மற்றும் துறை சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு அமைச்சரிடம் பதில் இருந்தால் விளக்கம் அளிப்பார்.

    (அதன் பிறகு தினகரன் மீண்டும் பேச எழுந்தார். அவருக்கு மைக் இணைப்பு கொடுக்கவில்லை.)



    அமைச்சர் தங்கமணி:- 2016 தேர்தல் அறிக்கையில் படிப்படியாக மதுக்கடைகளை குறைத்து பூரண மது விலக்கு கொண்டு வருவதுதான் நமது கொள்கை என்று அம்மா அறிவித்தார். அதன்படி 23.5.2016-ல் 500 மதுக்கடையை மூட கையெழுத்திட்டார். அதன் பிறகு அம்மா பிறந்த நாளில் 500 கடைகள் மூடப்பட்டது. இப்போது 3.866 கடைகள் உள்ளன. பக்கத்து மாநிலங்களில் இருந்து கள்ளச்சாராயம் வந்து விடக் கூடாது என்பதில் அரசு மிகவும் கவனமுடன் உள்ளது. 2002-ல் இருந்து தமிழ்நாட்டில் உள்ள மதுபான கடைகளுக்கு 25 சதவீதம் மது பானம் சப்ளை செய்தது யாருடைய ஆலையில் இருந்து அவர்களது குடும்பத்தை சார்ந்ததுதானே. மது விலக்கை பற்றி பேசுபவர்கள் அவர்களது மதுபான ஆலையை அப்போது மூடசொல்லி இருக்க வேண்டியதுதானே.

    இவ்வாறு அவர் கூறியதும் தினகரன் பதில் அளிக்க முற்பட்டார். சபாநாயகர் அவருக்கு அனுமதி அளிக்கவில்லை. மைக் இல்லாமலேயே சிறிது நேரம் பேசினார். வாக்குவாதத்திலும் ஈடுபட்டார். மைக் இல்லாமல் பேசிய பேச்சு அவை குறிப்பில் இடம் பெறாது என்று சபாநாயகர் கூறினார்.

    இதையடுத்து தினகரன் வெளிநடப்பு செய்தார். சட்டசபைக்கு வெளியே வந்த தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த அரசு 810 மதுக்கடையை புதிதாக திறக்க முயற்சி செய்கிறது என்று கூறினால் நிதானம் இல்லாமல் பேசுவதாக என்னைப் பார்த்து கூறுகிறார்கள். எனது குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு மது ஆலை இருப்பதாக கூறுகிறார்கள். எனக்கு எந்த சாராய ஆலையும் கிடையாது. என் குடும்பம் என்றால் நானும் என் மனைவியும்தான். ஒரு வேளை எங்கள் உறவினர் குடும்பத்தினருக்கு மது ஆலை இருப்பதாக வைத்துக் கொண்டாலும் அந்த ஆலையில் இருந்து மது வாங்க மாட்டோம் என்று இவர்களால் சொல்ல முடியவில்லை.

    கோவை அருகில் உள்ள தொழிற்சாலைகளில் இவர்களுக்குத்தான் நிறைய பங்கு உள்ளது. இந்த ஆட்சி போகும் போது தொழிற்சாலைகளில் யார்-யார் பினாமி என்பது தெரிந்துவிடும். ஹவாலா பணத்தை காட்டி நான் ஜெயித்ததாக அமைச்சர் கூறுகிறார்.

    ஆர்.கே.நகர் தொகுதியில் ரூ.6,000 வீதம் ஓட்டுக்கு பணம் கொடுத்து ரூ.180 கோடி வரை செலவு செய்தது யார் என்பது மக்களுக்கு தெரியும்.

    நாங்கள் ரூ.20 நோட்டு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் அப்படி எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை. வாக்குறுதி கொடுத்து இருந்தாலும் அதை நிறைவேற்றுவோம். மதுசூதனன் ஆட்கள்தான் ரூ.20 நோட்டை காட்டி மக்களை தூண்டி விடுகிறார்கள்.

    தனக்கு போன் மூலம் மிரட்டல் வருவதாக அமைச்சர் தங்கமணி கூறியிருக்கிறார். இவர்கள் ஆட்கள்தான் இவரை மிரட்டி இருப்பார்கள். எங்கள் கட்சி ஆட்கள் இவரை ஒரு பொருட்டாக எடுக்கவில்லை. யார் மிரட்டினார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×