search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அ.தி.மு.க"

    அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. இதற்கு அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், அரசு தலைமை கொறடாவுமான தாமரை ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கட்சியின் மாவட்ட மாணவரணி செயலாளர் சங்கர் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முன்னாள் மத்திய மந்திரி செஞ்சி ராமச்சந்திரன் பேசினார்.

    இதில் ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ., கட்சியின் மாவட்ட பொருளாளர் அன்பழகன், துணை செயலாளர் தங்க.பிச்சைமுத்து, இலக்கிய அணி செயலாளர் சிவசுப்பிரமணியன், எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் சிவசங்கர், பொய்யூர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மொழிப்போர் தியாகிகளின் உருவப்படங்களுக்கு அ.தி.மு.க.வினர் மலர் தூவி மரியாதை செய்தனர். 
    அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், உறுப்பினர் சேர்க்கை குறைந்தது குறித்து முக்கிய ஆலோசனை செய்யப்படுகிறது.
    சென்னை:

    அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணியளவில் நடைபெறுகிறது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், உறுப்பினர் சேர்க்கை குறைந்தது குறித்து முக்கிய ஆலோசனை செய்யப்பட இருக்கிறது.

    ஏற்கனவே, மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா, அ.தி.மு.க.வில் 1½ கோடி தொண்டர்கள் இருப்பதாக கூறிவந்தார். இந்த எண்ணிக்கையை 2 கோடியாக உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை தொடங்கப்பட்டது. மேலும், பழைய உறுப்பினர்களை தக்கவைத்துக்கொள்ளவும் உறுப்பினர்கள் புதுப்பிப்பு பணியும் நடைபெற்றது.

    ஆனால், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு, டி.டி.வி.தினகரன், திவாகரன், ஜெ.தீபா ஆகியோர் தலைமையில் புதிய அணிகள் உருவானதால், எதிர்பார்த்த அளவுக்கு உறுப்பினர்கள் சேர்க்கையை நடத்த முடியவில்லை. இதனால், உறுப்பினர்கள் சேர்க்கைக்கான காலக்கெடு அதிகரிக்கப்பட்ட போதிலும், அந்தப் பணி மந்தகதியிலேயே நடைபெற்றது.

    நேற்று முன்தினம் வரை புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, பழைய உறுப்பினர்கள் புதுப்பிப்பு என 90 லட்சம் பேர் மட்டுமே அ.தி.மு.க.வில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இருந்த 1½ கோடி தொண்டர்களில் இருந்து பெரும் பாலானவர்கள் விலகியதை கேட்டு, அ.தி.மு.க. தலைமை அதிர்ச்சியடைந்துள்ளது.

    இந்த நிலையில்தான், அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், உறுப்பினர்கள் சேர்க்கை குறைந்தது குறித்து கட்சி நிர்வாகிகளிடம் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கருத்து கேட்க இருக்கின்றனர். அவர்களின் கருத்துகளின் அடிப்படையில் உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கை அ.தி.மு.க. தலைமை எடுக்கும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
    அ.தி.மு.க. அரசு அழிவை நோக்கி செல்கிறது என்று கோபியில் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. கூறினார். #TTVDinakaran
    ஈரோடு:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஈரோடு மாவட்டம் கோபிக்கு வந்தார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நீதிமன்றத்தின் மீது நம்பகத்தன்மை இல்லாததால் தங்க தமிழ்செல்வன் மட்டும் வழக்கை வாபஸ் பெறுகிறார். மற்ற எம்.எல்.ஏ.க்கள் சட்டப்படி வழக்கை சந்திப்பார்கள். சட்டசபையில் வாக்கெடுப்பு நடக்கும் போது ஸ்லீப்பர் செல் யார் என்று தெரியவரும்.

    சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் எங்கள் கட்சி சந்திக்க தயாராக உள்ளது. ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். தலைமையிலான அ.தி.மு.க. அரசு அழிவை நோக்கி செல்கிறது. அந்த கட்சியை மீட்கும் பொறுப்பை பொதுமக்கள் எங்களிடம் கொடுத்துள் ளார்கள். இனிவரும் தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்று அ.தி.மு.க.வை மீட்டு எடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதன்பின்னர் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவிட்டு நேற்று முன்தினம் இரவு கோவைக்கு செல்வதற்காக வேனில் புஞ்சைபுளியம்பட்டி வழியாக டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. வந்தார். அப்போது பஸ் நிலையம் முன்பு அவருக்கு கட்சியினர் வரவேற்பு அளித்தார்கள். பின்னர் அங்கு திரண்டிருந்த கூட்டத்துக்கு மத்தியில் அவர் பேசியதாவது:-

    தற்போது வெளியான 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு சம்பந்தமான தீர்ப்பு மக்களை எவ்வளவு வேதனைப்படுத்தியிருக்கும் என்பது தெரியும். விரைவில் அனைத்து தரப்பினரும் விரும்பும் ஒரு ஆட்சி தமிழகத்தில் அமையும் என்பதை உங்களிடம் தெரிவித்துக்கொள்கிறேன். 2 மாதங்களில் வரும் தீர்ப்பில் அ.தி.மு.க. ஆட்சி முடிவுக்கு வரும். அதன்பின்னர் அம்மாவின் ஆட்சி மலரும் என உறுதி அளிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    சிறுபான்மையின மக்களுக்கு அ.தி.மு.க. அரசு பாதுகாப்பாக திகழ்கிறது என்று இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் பி.தங்கமணி பேசினார்.
    பரமத்திவேலூர்:

    பரமத்தி மற்றும் வேலூர் பள்ளிவாசல்களில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் முன்னிலை வகித்தார்.

    இந்த இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் பி.தங்கமணி, தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அன்வர்ராஜா எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டு, ஏராளமான முஸ்லிம்களுக்கு இப்தார் நோன்பு நலத்திட்ட உதவிகள் மற்றும் 9 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை உள்ளிட்ட உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார்கள்.

    இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பி.தங்கமணி பேசும் போது கூறியதாவது:-

    முஸ்லிம்களுக்கு எண்ணற்ற திட்டங்களை அறிவித்து தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மறைந்த ஜெயலலிதாவின் ஆசியுடன் செயல்படும் இந்த அ.தி.மு.க. அரசு அனைத்து சமுதாயத்திற்கும் பொதுவான அரசாக திகழ்கிறது. அவரின் கொள்கை சாதி, மதம் இல்லாமல், அனைத்து மக்களையும் பாதுகாக்க வேண்டும் என்பதாகும். அந்த கொள்கையிலிருந்து சிறிதும் விலகி செல்லாமல் சிறுபான்மையின மக்களை முழுமையாக பாதுகாக்கும் அரசாக திகழ்கிறது.

    இவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அன்வர்ராஜா எம்.பி. பேசும் போது, ‘தமிழ்நாடு சமூக நல்லிணக்கத்திற்கான அடையாளமாக விளங்குகின்றது. மாற்று மதத்தினரின் வழிபாட்டு தலம் அமைக்க தங்களின் நிலங்களை வழங்கி சிறப்பித்த பெருமை தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ளது. பெண்களுக்கு முழு உரிமை வழங்கியது ஷரியத் சட்டம் தான் ஆகும். இதன்படி இஸ்லாமிய பெண்களுக்கு கணவனை தேர்வு செய்யும் உரிமை, மணவிலக்கு பெறும் உரிமை, மறுமணம் செய்து கொள்ளும் உரிமை, சொத்துரிமை ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. தலைமை ஹாஜிக்கள் இல்லாத மாவட்டங்களில் அந்தப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்’ என்றார்.

    நிகழ்ச்சியில் முஸ்லிம்களின் கோரிக்கையை ஏற்று வேலூர் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்திற்கு (கபர்ஸ்தான்) ரூ.7 லட்சத்தில் சுற்றுச்சுவரும், ரூ.1½ லட்சத்தில் பேவர் பிளாக் தரையும், மோகனூர் பள்ளிவாசலுக்கு ரூ.6½ லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவரும் தனது நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் மூலம் அமைத்து தரப்படும் என நாமக்கல் பி.ஆர்.சுந்தரம் எம்.பி. தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் திருச்செங்கோடு கோட்டாட்சியர் (பொறுப்பு) பால்பிரின்லி ராஜ்குமார் உள்பட அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகள், முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.


    ×