search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பும்ரா"

    • இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • பும்ராவின் செயலுக்கு ஐசிசி கண்டனம் தெரிவித்துள்ளது.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதற்கான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என முன்னிலையில் உள்ளது.

    இந்த போட்டியின் போது பும்ரா விதியை மீறலில் ஈடுபட்டதாக அவர் மீது ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது.

    இந்த போட்டியில் 2-வது இன்னிங்சில் இங்கிலாந்து பேட்டிங் செய்த போது ஆட்டத்தின் 81-வது ஓவரை பும்ரா வீசினார். அப்போது 1 ரன் எடுப்பதற்கு ஓடி வந்த ஆலி போப்பை வேண்டுமென்றே பும்ரா தடுத்து நிறுத்த முயற்சித்துள்ளார். இதற்கு ஐசிசி கணடனம் தெரிவித்துள்ளது.

    இந்த செயல் வீரர்கள் மற்றும் வீரர் ஆதரவு பணியாளர்களுக்கான ஐசிசி நடத்தை விதி 2.12ஐ மீறியதாக கருதப்படுகிறது. இந்த சம்பவத்தில் பும்ராவுக்கு எந்த அபராதமும் விதிக்கவில்லை. கடந்த 24 மாதங்களில் முதல் முறையாக அவர் குற்றத்தில் ஈடுபட்டிருப்பதால் அபராதம் விதிக்கப்படவில்லை. ஆனால் அவரது நன்னடத்தை குறைபாட்டுக்கான புள்ளி சேர்க்கப்பட்டது. அடுத்த 1 ஆண்டிற்குள் மேலும் 3 புள்ளிகளை பெற்றால் 1 போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும்.

    கள நடுவர்கள் பால் ரீஃபெல் மற்றும் கிறிஸ் கஃபேனி, மூன்றாவது நடுவர் மரைஸ் எராஸ்மஸ் மற்றும் நான்காவது நடுவர் ரோஹன் பண்டிட் ஆகியோரால் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதையடுத்து, பும்ரா மீது கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பும்ராவின் குற்றத்துக்கு முறையான விசாரணை தேவையில்லை, அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார் எனவும், பும்ரா மீது விதிக்கப்பட்ட கண்டனத்தை ஐசிசி எலைட் பேனல் ஆஃப் மேட்ச் ரெஃப்ரிகளின் ரிச்சி ரிச்சர்ட்சன் ஏற்றுக்கொண்டார்.

    • கேப்டனாக அணியை வழிநடத்துவது மிகவும் சிறந்த ஒன்று.
    • ஆஸ்திரேலியாவில் பேட் கம்மின்ஸ் வேகப்பந்துவீச்சாளராக இருந்து கொண்டு அணியை சிறப்பாக வழி நடத்துகிறார்.

    இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை ஐதராபாத்தில் தொடங்குகிறது.

    இந்நிலையில் தனக்கு கொடுக்கப்பட்ட கேப்டன் பதவி குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாக பும்ரா தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது எப்போதுமே சிறந்த ஒன்று. அதிலும் கேப்டனாக அணியை வழிநடத்துவது மிகவும் சிறந்த ஒன்று. அந்தப் போட்டியில் நாங்கள் தோல்வியை தழுவினாலும் எனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை நினைத்து நான் மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் எல்லா முடிவுகளிலும் ஈடுபடுவதை நான் மிகவும் விரும்பினேன். கேப்டன்ஷிப் வாய்ப்பு கிடைத்தால் யார்தான் செய்ய மாட்டார்கள்.

    ஆஸ்திரேலியாவில் பேட் கம்மின்ஸ் வேகப்பந்துவீச்சாளராக இருந்து கொண்டு அணியை சிறப்பாக வழி நடத்துகிறார். வேகப்பந்துவீச்சாளர்கள் புத்திசாலித்தனமான வீரர்கள். அவர்கள் கடினமான வேலையை பார்க்கிறார்கள். போட்டியில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அவர்களுக்கு நிச்சயம் தெரியும்.

    என்று பும்ரா கூறியுள்ளார்.

    மார்ச் 2022-ல் திட்டமிடப்பட்ட எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் பும்ரா இந்தியாவின் கேப்டனாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன், ஷகிப் அல் ஹசன் ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.
    • பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் விராட் கோலி 6-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.

    துபாய்:

    இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது. மேலும் ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என ஆஸ்திரேலியா அணி முழுமையாக கைப்பற்றியது.

    இந்நிலையில் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் விராட் கோலி 6-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். இதேபோல் இந்திய கேப்டன் ரோகித் சர்மா 10-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இந்திய வீரர் பும்ரா 4-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.

    டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் 10 இடங்களில் கேன் வில்லியம்சன், ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஸ்சாக்னே, டேரில் மிட்செல், விராட் கோலி, ஹாரி புரூக், பாபர் அசாம், உஸ்மான் கவாஜா, ரோகித் சர்மா ஆகியோர் உள்ளனர்.

    டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ரவிச்சந்திரன் அஷ்வின் முதல் இடத்திலும், பேட் கம்மின்ஸ், ககிசோ ரபாடா, பும்ரா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் 2 முதல் 5 இடங்களிலும் உள்ளனர். டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன், ஷகிப் அல் ஹசன் ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.

    • முதல் டெஸ்ட் மேட்சில் இந்தியாவை தென் ஆப்பிரிக்கா வென்றது
    • ஐபிஎல் தோன்றியதும் பல பேஸ் பவுலர்கள் வந்து விட்டனர் என்றார் கவாஸ்கர்

    தென் ஆப்பிரிக்காவில், இந்திய மற்றும் தென் ஆப்பிரிக்க அணியினருக்கு இடையே 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் மேட்ச் தொடர் நடைபெற்றது.

    முதல் டெஸ்டில் இந்தியா தோல்வியுற்றது.

    நேற்று, கேப் டவுன் நகரில் நியூலேண்ட்ஸ் மைதானத்தில் இரண்டாம் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா முதலில் ஆடியது.

    இந்திய வலது கை வேகப்பந்து வீச்சாளரான மொகமது சிராஜ் சிறப்பாக பந்து வீசி 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஜஸ்பித் பும்ரா மற்றும் முகேஷ் குமார், இருவரும் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    சிராஜ், 15 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியது அவரது பவுலிங் வரலாற்றில் சாதனை நிகழ்வாகும்.

    இந்திய வேகப்பந்து தாக்குதலை சமாளிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்க வீரர்கள் ஒவ்வொருவராக ஆட்டமிழந்து 55 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனார்கள்.

    இறுதியில் இந்திய அணி வென்று, தொடரை சமன் செய்தது.


    இது குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவானான சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்தார்.

    அவர் கூறியிருப்பதாவது:

    அனைத்து புகழும் கபில் தேவையே சாரும். இந்தியாவில் சுழற்பந்து வீச்சாளராக மட்டுமே இருக்க வேண்டிய கட்டாயமில்லை என நிரூபித்தவர் அவர்.

    தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் புது பந்து பவுலிங் செய்யும் போது சாதகமான சூழ்நிலை நிலவும்.

    கிரிக்கெட் உலகம் வியக்கும் வகையில் இந்திய அணிக்கு பலம் சேர்க்க வேகப்பந்து வீச்சாளர்கள் தோன்றியுள்ளனர். அதிலும் குறிப்பாக ஐபிஎல் (IPL) தோன்றிய பிறகு கடந்த 10-12 வருடங்களில் இந்தியாவில் பல வேகப்பந்து வீச்சாளர்கள் உருவாகி உள்ளனர்.

    வலது கரம் மற்றும் இடது கரம் என இரண்டு வகையிலும் சிறப்பாக பந்து வீச பவுலர்கள் தற்போது உண்டு. ஒருவர் இல்லையென்றால் அவரின் இடத்தை நிரப்ப மற்றொருவர் இருக்கிறார். பும்ரா இல்லாத போது ஷமி களமிறங்கி திறமையை வெளிப்படுத்தினார்.

    இவையனைத்துமே கபில் தேவிற்கு நாம் செலுத்தும் மரியாதையாகும்.

    இவ்வாறு கவாஸ்கர் தெரிவித்தார்.

    நாளை மறுநாள் இந்தியாவிற்காக கிரிக்கெட்டில் முதல் உலக கோப்பையை வென்ற அணியின் கேப்டன் கபில் தேவின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நான் ஒரு இடத்தை குறி வைத்து நிலையாக பந்து வீசினேன். இதற்கு நல்ல பலன் கிடைத்தது.
    • பும்ராவும் சிறப்பாக பந்து வீசி தென்ஆப்பிரிக்க வீரர்களுக்கு அழுத்தம் கொடுத்தார்.

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜின் பந்து வீச்சில் அனல் பறந்தது. அவர் 9 ஓவர் வீசி 15 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார். தென்ஆப்பிரிக்காவின் சரிவுக்கு முக்கிய காரணமாக இருந்து முகமது சிராஜிக்கு டெஸ்டில் சிறந்த பந்துவீச்சு இதுவாகும்.

    கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்டில் முதல் இன்னிங்சில் 60 ரன் கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றியதே சிறந்ததாக இருந்தது.

    29 வயதான சிராஜ் தனது சிறப்பான பந்து வீச்சு தொடர்பாக கூறியதாவது:-

    நான் ஒரு இடத்தை குறி வைத்து நிலையாக பந்து வீசினேன். இதற்கு நல்ல பலன் கிடைத்தது. முதல் டெஸ்ட் நடைபெற்ற செஞ்சூரியன் ஆடுகளம் போலவே இந்த பிட்சும் இருந்தது. முதல் டெஸ்டில் நாங்கள் ரன்களை வாரி கொடுத்தோம். அதுமாதிரி அமைந்துவிடக் கூடாது என்பதில் கூடுதல் கவனம் செலுத்தி பந்து வீசினோம். எனது தவறை உணர்ந்து அதற்கு ஏற்ற வகையில் பந்து வீசினேன்.

    பும்ராவும் சிறப்பாக பந்து வீசி தென்ஆப்பிரிக்க வீரர்களுக்கு அழுத்தம் கொடுத்தார். ஆனால் அவருக்கு துரதிருஷ்டவசமாக விக்கெட்டுகள் கிடைக்கவில்லை. எனக்கு 6 விக்கெட் கிடைத்தது. எனது கிரிக்கெட் வாழ்க்கையில் டெஸ்ட் போட்டி மிகவும் முக்கியமானதாகும்.

    இவ்வாறு சிராஜ் கூறி உள்ளார்.

    • பும்ரா, தனது இன்ஸ்டா ஸ்டோரியில் அமைதி தான் சில நேரங்களில் சிறந்த பதிலாக அமையும் என பதிவிட்டிருந்தார்.
    • எதற்காக இப்படி வைத்துள்ளார் என ரசிகர்கள் குழப்பத்தில் இருந்து வந்தனர்.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19-ந்தேதி நடக்கிறது. இந்த ஏலத்துக்கு முன்பு ஐ.பி.எல். அணிகள் தங்களது வீரர்களை பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். வீரர்களை தங்களது அணியில் தக்க வைத்துக் கொள்ளவும், விடுவிக்கவும் இயலும்.

    இந்நிலையில் காலையில் இருந்து ஒரு செய்தி இணையத்தில் வைரலாகி வந்தது. அது என்னவென்றால் மும்பை இந்தியன்ஸ் வீரர் பும்ரா, தனது இன்ஸ்டா ஸ்டோரியில் அமைதி தான் சில நேரங்களில் சிறந்த பதிலாக அமையும் என பதிவிட்டிருந்தார்.

    எதற்காக இப்படி வைத்துள்ளார் என ரசிகர்கள் குழப்பத்தில் இருந்து வந்தனர். சில ரசிகர்கள் உலகக் கோப்பை தோல்விக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சாம்பியன் டிராபி இருக்கும் என்பதை தான் இப்படி கூறுகிறார் என தெரிவித்து வந்தனர்.

    இந்த குழப்பம் முடிவுக்கு வருவதற்குள் மேலும் ஒரு குழப்பத்தை பும்ரா ஏற்படுத்தி உள்ளார். அவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் சமூக வலைதள பக்கத்தை unfollow செய்துள்ளார். இதற்காக தான் அவர் அப்படி ஒரு ஸ்டோரியை வைத்துள்ளாரா என சந்தேகங்கள் எழுந்துள்ளது.

    மேலும் அவர் சிஎஸ்கே அணிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதால் சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணியும், கேமரூன் கிரினை பெங்களூர் அணியும் வாங்கியதாக அதிகாரபூர்வ அறிவிப்பை நேற்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியா 357 ரன்கள் குவித்தது
    • இலங்கை 55 ரன்களில் சுருண்டது

    மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியில் இலங்கை அணி 55 ரன்னில் சுருண்டு படுதோல்வியடைந்தது.

    358 ரன் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இந்திய வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை அணி திணறியது. முகமது சமி 5 விக்கெட்டும், முகமது சிராஜ் 3 விக்கெட்டும், பும்ரா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பும்ரா போட்டியின் முதல் பந்தை வீசினார். இந்த பந்தில் இலங்கை பேட்ஸ்மேன் நிசாங்காவை எல்.பி.டபிள்யூ மூலம் வீழ்த்தினார். நிசாங்கா ரிவ்யூ எடுத்தும் பயனில்லை. இதனால் ஆட்டத்தின் முதல் பந்திலேயே பும்ரா விக்கெட்டை கைப்பற்றினார்.

    இதன்மூலம் 48 வருட உலகக் கோப்பை வரலாற்றில், முதன்முறையாக ஆட்டத்தின் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையை பும்ரா பெற்றார். இதற்கு முன் எந்த பந்து வீச்சாளரும் ஆட்டத்தின் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தியது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்திய பேட்ஸ்மேன்கள் விராட் கோலி (88), சுப்மன் கில் (92) ஆகியோர் சதத்தை தவறவிட்டனர்.

    • வாசிம் அக்ரம், மெக்ராத் உடன் ஒப்பிட்டு கேள்வி எழுப்பப்பட்டது
    • பும்ரா சிறந்த பவுலர் இல்லை என ஒருபோதும் நான் சொல்லவில்லை

    இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திர பந்து வீச்சாளராக பும்ரா திகழ்கிறார். தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பையில் 10 விக்கெட்டிற்கும் அதிகமாக வீழ்த்தியுள்ளார்.

    கடந்த இரண்டு மூன்று வருடங்களாக இந்திய வேகப்பந்து வீச்சு குழுவை வழி நடத்தி வருகிறார். பாகிஸ்தான் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டராக திகழ்ந்தவர் அப்துல் ரசாக். சிறந்த வேகப்பந்து வீச்சாளரான இவர், மெக்ராத் உள்ளிட்ட முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துகளை சிறப்பாக எதிர்கொண்டு ரன்கள் சேர்த்தவர்.

    இவரிடம், இந்தியாவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா குறித்து கடந்த 2019-ம் ஆண்டு கேள்வி கேட்கப்பட்டது, டி.வி. நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விக்கு, பும்ரா "பேபி பவுலர்" எனத் தெரிவித்திருந்தார்.

    இதனால் கடும் விமர்சனத்திற்கு உள்ளார். தற்போது 4 ஆண்டுகள் கழித்து உலகக் கோப்பையில் பும்ரா சிறப்பாக விளையாடி வரும் நிலையில், அப்துல் ரசாக்கிடம், பும்ரா குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, அவரை "பேபி பவுலர்" என அழைத்ததை நியாயப்படுத்தினார்.

    இதுகுறித்து அப்துல் ரசாக் கூறியதாவது:-

    கடந்த 2019 பேட்டியின்போது நான் மெக்ராத், வாசிம் அக்ரம் போன்ற தலைசிறந்த பந்து வீச்சாளர்களுக்கு எதிராக விளையாடியுள்ளேன். ஆகவே, பும்ரா எனக்கு முன் ஒரு "பேபி பவுலர்". அவரை நான் எளிதாக எதிர்கொண்டு, பந்தை அடித்து துவம்சம் செய்திருப்பேன் என்று கூறினேன்.

    நான் என்னக் கூறினேனோ, அதை தவறான முறையில் விளக்கப்பட்டுள்ளது. என்னிடம் மெக்ராத், வாசிம் அக்ரம், பும்ரா, அக்தர் போன்றோரை எப்படி பார்க்கிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. அவர்களுக்கு முன் பும்ரா "பேபி பவுலர்" எனத் தெரிவித்தேன்.

    பும்ராவை சிறந்த பந்து வீச்சாளர் இல்லை என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை. ஆனால் வாசிம் அக்ரம், மெக்ராத்துடன் தொடர்புப்படுத்தி பாருங்கள். அப்போது நான் சொன்னதில் தவறு உள்ளதா? என்று தெரிவியுங்கள். நான் பாகிஸ்தான் அணிக்கு வரும்போது, வாசிம் அக்ரம் முன் நான்கு எப்போதுமே பேபிதான்.

    இவ்வாறு அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார்.

    • இன்றைய போட்டியும் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
    • சூப்பர் 4 சுற்று தொடங்குவதற்கு முன்பு பும்ரா இந்திய அணியோடு இணைந்து கொள்வார்.

    பல்லேகலே:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) பாகிஸ்தான், இலங்கையில் நடைபெற்று வருகிறது.

    ஆசிய கோப்பை போட்டியில் 6 நாடுகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளாம் அணிகளும், பி பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெறும்.

    தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் 238 ரன் வித்தியாசத்தில் நேபாளத்தை வீழ்த்தியது. 2-வது ஆட்டத்தில் இலங்கை 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்காள தேசத்தை தோற்கடித்தது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய 3-வது லீக் ஆட்டம் மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது.

    நேற்று நடந்த 4-வது போட்டியில் வங்காளதேசம் 89 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. 5-வது லீக் ஆட்டம் இலங்கையில் உள்ள பல்லேகலே மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் இந்தியா- நேபாளம் அணிகள் மோதுகின்றன.

    இன்றைய போட்டியும் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

    இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீரரான ஜஸ்பிரீத் பும்ரா நேபாளத்துக்கு எதிரான போட்டியில் ஆடவில்லை. அவருடைய மனைவிக்கு குழந்தை பிறப்பதையொட்டி அவர் நேற்று நாடு திரும்பினார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அனுமதியுடன் அவர் நாடு திரும்பினார்.

    இந்நிலையில் பும்ராவின் மனைவி சஞ்சனாவுக்கு இன்று காலை ஆண் குழந்தை பிறந்தது. இதை அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். சூப்பர் 4 சுற்று தொடங்குவதற்கு முன்பு பும்ரா இந்திய அணியோடு இணைந்து கொள்வார்.

    காயம் காரணமாக பும்ரா கிட்டத்தட்ட 11 மாதங்களுக்கு பிறகு சர்வதேச போட்டியில் விளையாடினார். அயர்லாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் கேப்டனாக பணியாற்றினார்.

    இதற்கிடையே ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் கொழும்பில் நடைபெற இருக்கும் ஆட்டங்களை வேறு இடத்துக்கு மாற்றுவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சூப்பர் 4 சுற்றில் 5 ஆட்டங்கள் மற்றும் இறுதிப் போட்டி அங்கு நடக்கிறது.

    கொழும்பில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு நடைபெற இருக்கும். போட்டிகள் தமுல்லா அல்லது ஹம்பன் டோடாவுக்கு மாற்றப்படலாம் என்று தெரிகிறது. இதுகுறித்து நாளை இறுதி முடிவு செய்யப்படுகிறது.

    • அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
    • அத்துடன், டி20 தொடரை இந்தியா 2-0 என கைப்பற்றியுள்ளது.

    டப்ளின்:

    இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதும் 2வது டி20 போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற அயர்லாந்து பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய இந்தியா 185 ரன்களை சேர்த்தது. ருத்ராஜ் கெய்க்வாட் அரை சதமடித்து 58 ரன்கள் எடுத்தார். சஞ்சு சாம்சன், ரிங்கு சிங் ஆகியோர் அதிரடியாக ஆடினர்.

    அடுத்து ஆடிய அயர்லாந்து 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 33 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றதுடன் டி20 தொடரை 2-0 என கைப்பற்றியது. ஆட்ட நாயகன் விருது ரிங்கு சிங்குக்கு வழங்கப்பட்டது.

    இந்நிலையில், இந்திய அணியின் வெற்றிக்கு பின் கேப்டன் பும்ரா பேசியதாவது:

    வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது மகிழ்ச்சியாக உள்ளது. இன்றைய நாள் பிட்ச் கொஞ்சம் உலர்ந்திருந்தது. அதனால் இரண்டாம் பாதியில் பிட்ச் மித வேகத்தில் இருக்கும் என்று கருதினோம். அதன் காரணமாகவே முதலில் பேட்டிங் செய்யும் திட்டத்துடன் களமிறங்கினோம். அது எங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. இந்திய அணியின் அனைத்து வீரர்கள் சிறப்பாக செயல்படுவது மகிழ்ச்சியாக உள்ளது.

    விளையாடும் அணியை தேர்ந்தெடுப்பது சில நேரங்களில் கடினமாக இருக்கும். ஏனென்றால் அனைத்து வீரர்களும் நம்பிக்கையுடன் இருப்பார்கள்.

    ஒவ்வொரு வீரருக்கும் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற ஆசை உள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை மனதில் ஏற்றிக் கொண்டால் நீங்கள் அழுத்தத்திற்கு உள்ளாவீர்கள். எதிர்பார்ப்புகளை ஓரம்வைத்து சுதந்திரமாக களத்தில் விளையாட வேண்டும்.

    திரும்பி வந்ததில் மகிழ்ச்சி என தெரிவித்தார்.

    • பும்ராவுக்கும், ஹர்த்திக் பாண்ட்யாவுக்கும் இடையே போட்டி நிலவுகிறது.
    • திலக் வர்மா தேர்வு பெற அதிகமான வாய்ப்பு உள்ளது.

    புதுடெல்லி:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) வருகிற 30-ந் தேதி முதல் செப்டம்பர் 17-ந் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடக்கிறது. இதில் 6 நாடுகள் பங்கேற்கின்றன.

    இந்தப் போட்டிக்கான பாகிஸ்தான், வங்காளதேசம், நேபாளம் ஆகிய நாட்டு அணிகள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுவிட்டன.

    ஆசிய கோப்பை போட்டிக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி நாளை அறிவிக்கப்படுகிறது. அஜீத் அகர்கர் தலைமையிலான தேர்வு குழு வீரர்களை தேர்வு செய்கிறது.

    பொதுவாக 15 வீரர்கள் தான் தேர்வு செய்யப்படுவார்கள். உலக கோப்பை போட்டிக்கான உத்தேச அணி அறிவிக்க வேண்டி இருப்பதால் அணி வீரர்களின் தேர்வு எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

    உலக கோப்பைக்கு முன்பு நடைபெறும் ஆசிய கோப்பை போட்டிக்கான இந்த தேர்வு மிகவும் முக்கியமானது.

    இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, தேர்வுக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.தாஸ் ஆகியோர் காணொலி மூலம் தேர்வுகுழு கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.

    இதேபோல தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் முதல் முறையாக தேர்வு குழு கூட்டத்தில் கலந்து கொள்கிறார். கும்ப்ளே, ரவி சாஸ்திரி ஆகியோர் பயிற்சியாளராக இருந்த காலத்தில் தேர்வுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

    காயத்துக்காக ஆபரேசன் செய்துகொண்ட லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் இந்திய அணியில் இடம்பெறுவார்களா? என்று எதிர்பார்க்கப் படுகிறது. உடல் தகுதியை பொறுத்துதான் அவர்களது தேர்வு இருக்கும். திலக் வர்மா தேர்வு பெற அதிகமான வாய்ப்பு உள்ளது.

    துணை கேப்டன் பதவி ஜஸ்பிரீத் பும்ராவுக்கு வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. 11 மாதங்களுக்கு பிறகு அணிக்கு திரும்பிய வேகப் பந்து வீரரான அவர் தற்போது அயர்லாந்து 20 ஓவர் தொடரில் கேப்டனாக பணியாற்றி வருகிறார்.

    துணை கேப்டன் பதவி தொடர்பாக பும்ராவுக்கும், ஹர்த்திக் பாண்ட்யாவுக்கும் இடையே போட்டி நிலவுகிறது.

    இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் வீரர்கள் வருமாறு:-

    ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், வீராட் கோலி, லோகோஷ் ராகுல் (விக்கெட் கீப்பர்-உடல் தகுதியை பொறுத்து), ஸ்ரேயாஸ் அய்யர் (உடல் தகுதியை பொறுத்து), ஹர்த்திக் பாண்ட்யா, ரவிந்திர ஜடேஜா, ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், இஷான் கிஷன் (2-வது விக்கெட் கீப்பர்), அக்ஷர் படேல், ஷர்துல் தாக்கூர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, யசுவேந்திர சாஹல் அல்லது ஆர்.அஸ்வின்.

    • டிஎல்எஸ் முறைப்படி இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • இதனால் 3 போட்டிகள் கொண்ட தொடரில்இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதற்கான முதல் டி20 போட்டி நேற்று இந்திய நேரப்படி 7.30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணி முதலில் சொதப்பினாலும் பின்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கெளரவமான ரன்களை எடுத்தது. அந்த அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் கேப்டன் பும்ரா, பிரதிஷ் கிருஷ்ணா, ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    இதனையடுத்து களமிறங்கிய இந்தியா 6.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 47 ரன்கள் இந்திய அணி எடுத்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. மழை தொடர்ந்து பெய்ததால் போட்டியை மீண்டும் தொடங்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் டிஎல்எஸ் முறைப்படி இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் 3 போட்டிகள் கொண்ட தொடரில்இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    இந்த போட்டியில் ஆட்டநாயகனாக பும்ரா தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டியில் கேப்டனாக அறிமுகமான முதல் ஆட்டத்திலேயே, ஆட்ட நாயகன் விருதை வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பும்ரா பெற்றுள்ளார்.

    இந்திய டி20 அணியின் கேப்டனாக சேவாக், டோனி, ரெய்னா, ரகானே, விராட் கோலி, ரோகித் சர்மா, தவான், ரிஷப் பண்ட், கேஎல் ராகுல், பாண்ட்யா ஆகியோர் செயல்பட்டுள்ளனர். ஆனால் இந்த சாதனையை பும்ரா மட்டுமே நிகழ்த்தியுள்ளார்.

    ×