search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "படகுகள்"

    ராமேசுவரத்தில் மீனவர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் மீன்களின் விலை சற்று உயர்ந்துள்ளது.

    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தில் இருந்து கடந்த வாரம் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் 18 பேரை எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்தது. மேலும் ரோந்து கப்பல்களையும், மீனவர்களின் படகுகள் மீது மோதச்செய்தது.

    இந்த விபத்தில் முனியசாமி என்ற மீனவர் கடலில் விழுந்து இறந்தார். இலங்கை கடற்படையினரின் இந்த செயலை கண்டித்தும், இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியும், ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று (15-ந் தேதி) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இன்றும் 2-வது நாளாக வேலை நிறுத்தம் தொடருகிறது. இதன் காரணமாக 500-க்கும் மேற்பட்ட படகுகள் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. 5,000 மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.

    ராமேசுவரம் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது. நாட்டுப் படகு மீனவர்கள் மட்டுமே மீன் பிடிக்கச் செல்வதால் மீன் வரத்து குறைவாக இருந்தது. இதனால் மீன் விலை சற்று உயர்ந்துள்ளது.

    பொங்கலைத் தொடர்ந்து விடுமுறை நாட்கள் என்பதால் மீனுக்கு அதிக தேவை உள்ளது. ஆனால் தற்போது ராமேசுவரத்தில் வேலை நிறுத்தம் நடந்து வருவதால் மீன்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்ந்துள்ளது.

    கடலூரில் கடல் சீற்றம் காணப்பட்டதால் மீனவர்கள் கரையோரம் நிறுத்தி வைத்திருந்த படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளையும் பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றனர்.
    கடலூர்:

    கடலூரில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்து வந்தாலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசான மழைபெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று காலையில் இருந்தே வெயில் அடித்தது. என்றாலும் காற்று வீசியதால் வெயிலின் தாக்கம் சற்று தணிந்து காணப்பட்டது. இதுதவிர கடல் சீற்றமாக காணப்பட்டது. 

    கடலூர் நகர மக்களின் முக்கிய பொழுது போக்கு இடமான தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் ஆக்ரோஷத்துடன் பொங்கி எழுந்த கடல் அலைகள் கரையை நோக்கி பல அடி தூரத்துக்கு சீறிப்பாய்ந்தது. இதனால் கடற்கரைக்கு வந்த பொதுமக்கள் கரையில் இருந்து சற்று தொலைவில் நின்றபடியே வங்கக்கடலின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர். மீனவர்கள் கரையோரம் நிறுத்தி வைத்திருந்த தங்களின் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளையும் பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றனர். 

    வழக்கத்தை விட காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் கடல் சீற்றம் காணப்பட்டதாகவும், இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    கடலில் சூறாவளி காற்று வீசுவதால் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. மீனவர்கள் தங்களது படகுகளை துறைமுகங்களில் பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனர்.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மீமிசல், மணமேல்குடி  உள்ளிட்ட ஏராளமான மீனவ கிராமங்கள் உள்ளன.
    இங்கிருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் தினமும் கடலுக்கு மீன் பிடிக்க சென்று  வருகிறார்கள். மேலும் பாய்மர படகு, பைபர் படகு, கட்டு மரங்களிலும் மீனவர்கள் கடலுக்கு செல்கிறார்கள். 

    தற்போது வங்கக்கடலில் உருவாகியுள்ள சூறாவளி காற்று காரணமாக 50 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்  எனக் கூறி ஒட்டுமொத்த தமிழக மீனவர்களையும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. எனவே மீன்வளத்துறை அதிகாரிகள் அனுமதி டோக்கன் வழங்கவில்லை. இதனால் வழக்கம்போல் கடலுக்கு செல்ல வேண்டிய புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்களுக்கு அனுமதி டோக்கன் வழங்கப்படாததால் இன்று  மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.தொடர்ந்து கடல் கொந்தளிப்பாக காணப்பட்டு வருகிறது. 

    இதனால் மீனவர்கள் சுமார் 3 ஆயிரம் பேர் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வேலை இழந்துள்ளனர். கடலுக்கு செல்லாததால் மீனவர்கள் தங்களது படகுகளை துறைமுகங்களில் பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனர். தொடர்ந்து அந்த பகுதிகளில் காற்று பலமாக வீசுவதால் கடல் அலைகள் ஆர்ப்பரித்த வண்ணம் உள்ளன. அவ்வப்போது லேசான சாரல் மழையும் பெய்து வருகிறது.
    ×