search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வகுப்பறை"

    சிவகாசியில் உள்ள தனியார் பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்து பிளஸ்-2 மாணவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி முனீஸ்வரன் காலனியை சேர்ந்தவர், சக்தி கணேஷ் (வயது 48). இவர் சிவகாசியில் அச்சகம் நடத்தி வருகிறார். அவருடைய மனைவி அருணாதேவி. இவர் களுடைய மகள் அருள் கார்த்தீசுவரி (20), மகன் சதீஷ் (17).

    அருள்கார்த்தீசுவரி சிவகாசியில் உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். சதீஷ் அங்குள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 படித்து வந்தார். மாணவர் சதீஷ் நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கூடத்துக்கு சென்றார். வகுப்பறையில் இருந்த போது திடீரென அவர் மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார். அவரை அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர் பரிசோதனை செய்த போது, சதீஷ் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.

    மாணவர் மயங்கி விழுந்து இறந்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து சிவகாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக ஆசிரியர்களிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
    அருப்புக்கோட்டை அருகே மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படிக்கும் நிலை தொடர்வதால் வகுப்பறை கட்டு மானப்பணியை விரைந்து முடிக்க கோரி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
    விருதுநகர்:

    அருப்புக்கோட்டை அருகே உள்ள தமிழ்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படிக்கும் நிலை தொடர்வதால் இரண்டாண்டுக்கு முன்பு தொடங்கப்பட்ட வகுப்பறை கட்டு மானப்பணியை விரைந்து முடிக்க கோரி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

    கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதில் மாவட்டத்தின் பல இடங்களில் இருந்தும் வந்து மனு கொடுத்தனர். அருப்புக்கோட்டை அருகேயுள்ள தமிழ்பாடி கிராம மக்கள் பள்ளி மாணவர்களுடன் வந்து கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    அருப்புக்கோட்டை அருகே உள்ள தமிழ்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி கடந்த 2010- ம் ஆண்டு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த பள்ளி கடந்த 8 ஆண்டுகளாக எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகிறது. பள்ளியில் மாணவர் சேர்க்கையும் அதிகரித்துள்ளது.

    எங்கள் பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் 10 வகுப்பறைகள் மற்றும் அறிவியல் ஆய்வகம் கட்டுமானப்பணி 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால் இன்னும் பணி முடிவடையாத நிலையில் மாணவ-மாணவிகள் போதிய இடவசதி இல்லாததால் மரத்தடியில் அமர்ந்து படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதே போன்று பிற பள்ளிகளில் 2 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட கட்டுமானபணிகள் முடிவடைந்து வகுப்பறைகள் பயன்பாட்டிற்கு வந்து விட்டது. எனவே மாணவ-மாணவிகளின் நலன் கருதி வகுப்பறை கட்டுமான பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள நரையன்குளம், ஒத்தப்பட்டி, காந்திநகர், இந்திராநகர் காலனி ஆகிய கிராம மக்களும் நேச்சுரல் பாய்ஸ் இளைஞர் நற்பணி மன்றத்தினரும் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில், ஆங்கில வழி கல்வி கற்பிக்கும் நரையன்குளம் அரசு நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் அவருக்கு உதவியாக உள்ள சில ஆசிரியர்களின் செயல்பாட்டால் பள்ளியின் நலன் பாதிக்கப்படுவதாகவும் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளின் நலன் கருதி தலைமைஆசிரியை மற்றும் ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் கம்மாபட்டியில் மகளிர் மேம்பாட்டு நல்வாழ்வு சங்கத்தின் சார்பில் கடந்த 2001-ம் ஆண்டு முதல் ரேஷன் கடை செயல்பட்டு வந்தது. இந்த கடை மூலம் 791 கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வினியோகிக்கப்பட்டு வந்தது. இந்த கடையின் செயல்பாடு பல்வேறு அமைப்புகளால் பாராட்டப்பட்டு வந்த நிலையில் தற்போது இக்கடை செயல்பட தடை விதிக்கப்பட்டு கூட்டுறவு கடையாக மாற்றப்பட உள்ளது. எனவே தொடர்ந்து இக்கடையினை மகளிர் மேம்பாட்டு நல்வாழ்வு சங்கம் நடத்திட அனுமதி வழங்கிட வேண்டும் என்று அந்த கிராமத்தினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். 
    ஒடசல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.1.64 கோடி மதிப்பீட்டில் வகுப்பறைகள் கட்டும் பணியை அமைச்சர் கே.பி.அன்பழகன் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா ஒடசல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.1.64 கோடி மதிப்பீட்டில் வகுப்பறைகள் மற்றும் அறிவியல் ஆய்வுக்கூடம் கட்டும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணிக்கான அடிக்கல் நாட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராமசாமி, அரூர் உதவி கலெக்டர் டெய்சி குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு பூமிபூஜை செய்து கட்டுமான பணியை தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக அரசு கல்வித்துறை மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடபுத்தகம், சீருடைகள் உள்ளிட்ட 14 வகையான பொருட்கள் வழங்கப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக ஒடசல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளின் வசதிக்காக 8 புதிய வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம், கழிவறைகள் புதிதாக கட்டப்படுகின்றன. இந்த பணிகளை விரைவாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் டி.ஆர்.அன்பழகன், முன்னாள் நகராட்சி தலைவர் வெற்றிவேல், பொதுப்பணித்துறை உதவிசெயற்பொறியாளர் தியாகராஜன், இளநிலை பொறியாளர் சரோஜாதேவி, கூட்டுறவுசங்கத்தலைவர்கள் மதிவாணன், செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    வேலூர் மாவட்ட அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆய்வு செய்ய சென்ற கலெக்டர் ராமன் பள்ளி வகுப்பறையில் மாணவரை போன்று அமர்ந்து, ஆசிரியை பாடம் நடத்துவதை கவனித்தார். #vellorecollector #collectorraman
    வேலூர்:

    எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் வேலூர் மாவட்டம் பின்தங்கியே உள்ளது. அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. எனவே நடப்பு கல்வியாண்டில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க மாணவ, மாணவிகளின் கற்றலில் கூடுதல் கவனம் செலுத்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும் 36 ஆண்கள் பள்ளியின் தேர்ச்சி சதவீதம் மிகவும் குறைவாக இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. எனவே வேலூர் மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதம் குறைவாக இருக்கும் அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளின் அருகில் உள்ள தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்களை கொண்டு ஆய்வு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க வேலூர் மாவட்டத்தில் வேலூர், திருப்பத்தூர் என 2 கல்வி மாவட்டங்கள் இருந்ததை தற்போது அரக்கோணம், ராணிப்பேட்டை, வாணியம்பாடி என கூடுதலாக 3 கல்வி மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தேர்ச்சி சதவீதம் குறைவாக உள்ள பள்ளிகளில் கலெக்டர் ராமன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

    வேலூர் கொணவட்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் ராமன் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் ஆகியோர் நேற்று திடீர் ஆய்வு செய்தனர். அப்போது பிளஸ்-2 வகுப்பறைக்கு சென்ற அவர்கள் மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து, ஆசிரியை ஒருவர் வேதியியல் பாடம் கற்பித்ததை மாணவர்கள் போன்று கவனித்தனர். சுமார் 45 நிமிடம் மாணவரை போலவே கலெக்டர் பாடத்தை கவனித்தார்.

    பிறகு மற்ற வகுப்புகளுக்கு சென்று மாணவ, மாணவிகளை படிக்க சொல்லியும், கற்றதை எழுத சொல்லியும் அவர்களின் கல்வித்திறனை கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது, வாசிப்புத்திறன் குறைவாக உள்ள மாணவ, மாணவிகள் மீது சிறப்பு கவனம் செலுத்த ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து, ஆசிரியர்களின் வருகை பதிவேட்டை பார்வையிட்டார். அதில் ஒரு ஆசிரியை விடுமுறை எடுத்துள்ளது கண்டறியப்பட்டது. மேலும் காலை 10 மணிக்குள் வருகை பதிவேட்டை முடிக்காததும் தெரியவந்தது. இதுகுறித்து தலைமை ஆசிரியர் மற்றும் விடுமுறை எடுத்த ஆசிரியை ஆகிய 2 பேருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப முதன்மை கல்வி அலுவலர் மார்சுக்கு, கலெக்டர் ராமன் உத்தரவிட்டார்.

    மேலும் உரிய நேரத்திற்கு பள்ளிக்கு வராத ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வேலூர் மாவட்டத்தை கல்வியில் முன்னோடி மாவட்டமாக மாற்ற ஆசிரியர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கலெக்டர் கேட்டுக்கொண்டார். #vellorecollector #collectorraman

    ×