search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுத்தைப்புலி"

    குஜராத்தில் கோர்ட்டில் சிறுத்தைப்புலி புகுந்ததால் இதை பார்த்த பொதுமக்களும், கோர்ட்டு ஊழியர்களும் அலறியடித்து ஓடினார்கள்.

    அகமதாபாத்:

    குஜராத்தின் சுரேந்தர் நகர் மாவட்டம் சோட்டிலா நகரில் கோர்ட்டு உள்ளது. நேற்று கோர்ட்டு அருகே உள்ள குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை ஒன்று புகுந்தது.

    இதை பார்த்த பொது மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து சிறுத்தைப்புலியை பிடிக்க முயன்றபோது அது கோர்ட்டு வளாகத்துக்குள் புகுந்தது. அங்கும் இங்கும் ஓடியது. இதை பார்த்த பொதுமக்களும், கோர்ட்டு ஊழியர்களும் அலறியடித்து ஓடினார்கள்.

    சிறுத்தை கோர்ட்டில் உள்ள ஒரு அறைக்குள் புகுந்து கொண்டது. அங்கு 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இருந்தனர்.

    அவர்கள் சிறுத்தையை பார்த்ததும் வெளியே ஓடி வந்து கதவை பூட்டி விட்டனர். 2 ஊழியர்கள் மட்டும் அங்கிருந்த மற்றொரு அறையில் கதவை பூட்டிக் கொண்டு உள்ளேயே இருந்தனர்.

    உடனே வனத்துறை அதிகாரிகள் அந்த அறையின் ஜன்னலை உடைத்து 2 பேரையும் மீட்டனர்.

    அதன்பின் வனத்துறை அதிகாரிகள் கோர்ட்டு அறைக்குள் மயக்க ஊசியை துப்பாக்கி மூலம் செலுத்தி சிறுத்தையை பிடித்தனர்.

    குன்னூர் அருகே கம்பி வேலியில் சிறுத்தைப்புலி சிக்கி தவித்தது.
    குன்னூர்:

    குன்னூர்-கோத்தகிரி சாலையில் வண்டிச்சோலை குடியிருப்பு பகுதி உள்ளது. இதன் அருகில் தேயிலை தோட்டங்களும் வனப்பகுதிகளும் உள்ளன. குன்னூர் வனசரகத்திற்கு உட்பட்ட வண்டிச்சோலை வனபகுதியில் வரையாடு, காட்டெருமை, சிறுத்தைப்புலி போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    வனப்பகுதியில் இருந்து சில நேரங்களில் உணவு தேடி காட்டெருமை, சிறுத்தைப்புலி உள்ளிட்ட வனவிலங்குள் குடியிருப்புக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் அந்த பகுதியில் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வனவிலங்குகள் குடியிருப்புக்குள் புகாமல் இருக்க வண்டிச்சோலை அருகே உள்ள தேயிலை தோட்டம் ஒன்றில் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது.

    நேற்று காலை 7.30 மணியளவில் சிறுத்தைப்புலி ஒன்று அந்த பகுதியில் நடமாடியது. அப்போது கம்பி வேலியை தாண்டி தேயிலை தோட்டத்திற்குள் செல்ல முயற்சித்தபோது, சிறுத்தைப்புலியின் முன்னங்கால் கம்பி வேலியில் சிக்கி கொண்டது.

    பலமுறை முயற்சி செய்தும் கம்பி வேலியில் சிக்கிய காலை சிறுத்தைப்புலி எடுக்க முடியாமல் தவித்தது. இதனால் வலி தாங்க முடியாமல் உருமி கொண்டே இருந்தது. சிறுத்தைப்புலியின் உருமல் சத்தத்தை கேட்ட அந்த பகுதி மக்கள் அங்கு திரண்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்து குன்னூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவல் அறிந்த குன்னூர் வனச்சரகர் பெரியசாமி தலைமையில், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் கம்பி வேலியில் சிக்கி தவித்த சிறுத்தைப்புலியை மீட்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

    அதற்குள் சிறுத்தைப்புலி கம்பி வேலியில் சிக்கிய தனது காலை எடுத்துக்கொண்டு தேயிலை தோட்டத்திற்குள் புகுந்து அங்கிருந்து தப்பி சென்றது. சிறுத்தைப்புலி சுமார் 2 மணி நேரம் கம்பி வேலியில் சிக்கி போராடிக்கொண்டிருந்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து வனசரகர் பெரியசாமி கூறியதாவது:- கம்பி வேலியில் சிக்கியது 3 வயதுடைய ஆண் சிறுத்தையாகும். சிறுத்தைப்புலியை மயக்க மருந்து செலுத்தி மீட்பதற்கு நடவடிக்கை எடுத்துக்கொண்டிருந்தோம். அதற்குள் சிறுத்தைப்புலி தனது காலை கம்பி வேலியில் இருந்து எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தைப்புலியால், பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
    கோத்தகிரி:

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டுயானை, காட்டெருமை, காட்டுப்பன்றி, சிறுத்தைப்புலி, கரடி உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. வனவிலங்குகளின் வழித்தடம் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டிடங்கள் கட்டப்படுவதால், அவை திசை மாறி அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடுகின்றன. இதனால் மனித-வனவிலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்வது வழக்கமாகி வருகிறது. வனத்துறையில் போதுமான ஊழியர்கள் இல்லாத காரணத்தால், குடியிருப்புக்குள் புகும் வனவிலங்குகளை கண்காணித்து விரட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டு வருகிறது.

    கோத்தகிரியில் இருந்து அளக்கரை செல்லும் சாலையில் உள்ள காமராஜ் நகர், புதூர், சேலாடா உள்ளிட்ட கிராம பகுதிகளில் கடந்த சில வாரங்களாக சிறுத்தைப்புலி நடமாட்டம் இருந்து வருகிறது. குடியிருப்புக்குள் புகுந்து வளர்ப்பு நாய்களையும், கால்நடைகளையும் சிறுத்தைப்புலி அடித்துக்கொன்று வருவதால், பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு காமராஜ் நகரில் ஜெயபால், பாண்டியன், சேக் முகமது, கல்வி ஆகியோரது வீடுகளில் புகுந்து வளர்ப்பு நாய்களை சிறுத்தைப்புலி கவ்வி சென்றது. கடந்த வாரம் அதே பகுதியை சேர்ந்த சங்கர் என்பவரது வீட்டில் நள்ளிரவில் புகுந்து வளர்ப்பு நாயை சிறுத்தைப்புலி கடித்து காயப்படுத்திவிட்டு சென்றது. நேற்று முன்தினம் இரவு புதூர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தைப்புலி பாஸ்கரன் என்பவருக்கு சொந்தமான ஆட்டை அடித்துக்கொன்று, அட்டகாசம் செய்தது.

    முன்னதாக மதிய வேளையில் அளக்கரை செல்லும் வழியில் புதூர் விநாயகர் கோவில் அருகே உள்ள ஒரு தேயிலை தோட்டத்தில் சிறுத்தைப்புலி ஒன்று நின்று கொண்டிருந்தது. இதை பார்த்த தோட்ட தொழிலாளர்கள் அலறியடித்துக்கொண்டு குடியிருப்புகளுக்கு ஓட்டம் பிடித்தனர். பகலில் தேயிலை தோட்டங்களிலும், இரவில் குடியிருப்பு பகுதியிலும் தொடர்ந்து நடமாடி வளர்ப்பு நாய்களையும், கால்நடைகளையும் சிறுத்தைப்புலி வேட்டையாடி வருவதால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தைப்புலியால் குழந்தைகளுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் இருந்து வருகிறோம். மேலும் தோட்ட தொழிலாளர்களுக்கு உயிருக்கும் பாதுகாப்பு இல்லை. எனவே அந்த சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
    சிங்காரா வனப்பகுதியில் 4 வயது சிறுத்தைப்புலி இறந்து கிடந்தது. இது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மசினகுடி:

    கூடலூர், முதுமலை புலிகள் காப்பகம் இணையும் பகுதியில் அடர்ந்த வனம் உள்ளது. நேற்று சிங்காரா வனச்சரகத்துக்குட்பட்ட நார்தன்ஹே பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது 4 வயதான ஆண் சிறுத்தைப்புலி ஒன்று இறந்து கிடப்பது தெரியவந்தது.

    இதையடுத்து முதுமலை புலிகள் காப்பக வெளிமண்டல துணை களஇயக்குனர் புஸ்பாகரன் தலைமையில் வனச்சரகர் காந்தன், வனத்துறை ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர் டேனியல் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் மற்றொரு சிறுத்தைப்புலியுடன் ஏற்பட்ட சண்டையில் படுகாயம் அடைந்து அந்த சிறுத்தைப்புலி இறந்து இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    கால்நடை டாக்டர்கள் ராஜன், கலைவாணி ஆகியோர் வரவழைக்கப்பட்டு சிறுத்தைப்புலியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் முக்கிய உடற்பாகங்கள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டன. இதன் அறிக்கையின் முழு விவரம் கிடைத்த பின்னரே சிறுத்தைப்புலி சாவுக்கான உண்மையான காரணம் தெரிய வரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

    இதனிடையே முதுமலை புலிகள் காப்பகத்தில் கால்நடை டாக்டர் பணியிடம் தொடர்ந்து பல மாதங்களாக காலியாக உள்ளது. இதனால் உடல் நலம் பாதிக்கப்படும் வனவிலங்குகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாத நிலை காணப்படுகிறது. இதேநிலை கூடலூர் வன கோட்டத்திலும் உள்ளது. இதனால் கால்நடை டாக்டர் பணியிடத்தை உடனடியாக நிரப்ப சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனவிலங்கு நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    வால்பாறையில் சிங்கோனா எஸ்டேட் பகுதியில் பெண்களை தாக்கி வந்த சிறுத்தைப்புலி வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. பின்னர் அது சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டது.
    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சிங்கோனா எஸ்டேட் மற்றும் பெரியகல்லார் எஸ்டேட் பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தைப்புலி ஒன்று சுற்றித்திரிந்து வந்தது. இந்த சிறுத்தைப்புலி மாலை மற்றும் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து தொழிலாளர்களையும் தாக்கி படுகாயப்படுத்தியது.

    கடந்த மே மாதம் 25-ந் தேதி சத்யா(வயது10) என்ற சிறுமியையும், சிங்கோனா எஸ்டேட் பகுதியில் ஜூன் மாதம் 1-ந் தேதி சந்திரமதி (45) என்ற பெண் தொழிலாளியையும் தாக்கியது. ஜூன் 14-ந் தேதி சிங்கோனா எஸ்டேட் பகுதியில் மாதவி (35) என்ற இன்னொரு பெண் தொழிலாளியை கடித்துக் குதறியது. இவர்கள் அனைவரும் பலத்த காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதனால் ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கணேசன் மற்றும் உயர் வனத்துறை அதிகாரிகளின் உத்தரவின்பேரில் வனத்துறையினர் சிங்கோனா எஸ்டேட் பகுதியில் கூண்டுகள் வைத்தனர். மேலும் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். ஆனால் கேமராவில் சிறுத்தைப்புலியின் உருவம் எதுவும் பதிவாகவில்லை. இந்தநிலையில் காஞ்சமலை எஸ்டேட் பகுதியில் கைலாசவதி என்ற பெண் தொழிலாளியை சிறுத்தைப்புலி கடித்துக் கொன்றது.

    இதனால் அப்பகுதி தொழிலாளர்கள் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களுடன் இணைந்து வால்பாறைநகர் பகுதியில் சாலைமறியல் போராட்டமும் நடத்தினர்.

    இந்தநிலையில் சிங்கோனா எஸ்டேட் முதல்பிரிவு பகுதியில் மாதவி என்ற பெண் தொழிலாளியை சிறுத்தைப்புலி தாக்கிய இடத்திற்கு அருகில் மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணித்து வந்தனர். அந்த கூண்டில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு சிறுத்தைப் புலி சிக்கியது. இதனால் சிங்கோனா எஸ்டேட் தொழிலாளர்கள் நிம்மதியடைந்துள்ளனர். வால்பாறை பகுதியை பொறுத்தவரை கடந்த 10 மாதங்களில் 10 குழந்தைகளை சிறுத்தைப்புலி கடித்துக் கொன்றுள்ளது.

    சிறுத்தைப்புலி கூண்டில் சிக்கிய தகவல் அறிந்ததும் மாவட்ட வன அலுவலர் மாரிமுத்து தலைமையில் வனத்துறை கால்நடை டாக்டர் மனோகரன் மற்றும் வனச்சரக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் கூண்டில் சிக்கிய சிறுத்தைப்புலியை பார்வையிட்டனர். இதை அறிந்த சிங்கோனா, வால்பாறை, காஞ்சமலை எஸ்டேட் பகுதி பொதுமக்கள் சிங்கோனாவில் குவிந்தனர்.

    இதுபற்றி வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், “கூண்டில் சிக்கியது 7 வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தைப்புலி ஆகும். இப்போது அதிநவீன கூண்டுகள் இருப்பதால் சிறுத்தைப்புலிக்கு மயக்க ஊசி செலுத்தவேண்டிய அவசியமில்லை. எனவே சிறுத்தைப்புலி சிக்கிய கூண்டையே அப்படியே லாரியில் ஏற்றி சென்னை வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு அனுப்பி வைத்திருக்கிறோம்” என்றனர். பிடிபட்ட சிறுத்தைப்புலி நேற்று இரவு வண்டலூர் உயிரியல் பூங்கா அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. #tamilnews
    ×