search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 150704"

    • கூலி வேலைக்கு சென்று பிழைப்பை நடத்த முடியாமல் தள்ளாத வயதில் கடும் சிரமம்பட்டு வருகிறோம்.
    • கணவரிடம் இருந்து சொத்தை மீட்டு, எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா டேனீஸ்பேட்டை பெரியவடகம்பட்டியை சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 90). இவருடைய மனைவி பொன்னம்மாள் ( 82).

    இவர், தன்னுடைய மகள் கமலா (60) என்பவருடன் கலெக்டர் அலுவலகம் வந்து ஒரு பரபரப்பு புகார் மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    எனது கணவர் பழனியப்பனுக்கு 90 வயதாகிறது. எங்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் உடல் நலக்குறைவால் இறந்து விட்டாார்.

    எனது கணவர் ஏற்கனவே குப்பாயி (70) என்பவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். இந்த தொடர்பை கைவிடுமாறு நாங்கள் பலமுறை கண்டித்தும் அவர் கேட்கவில்லை.

    தற்போது 3-வதாக பழனியம்மாள் (70) என்பவருடன் தொடர்பு வைத்துள்ளார். எங்களுக்கு சொந்தமான பல லட்ச ரூபாய் மதிப்பு உள்ள 6.5 ஏக்கர் நிலத்தை கணவர், ஆசைநாயகி பழனியம்மாளுக்கு எழுதி வைத்துள்ளார்.

    மேலும், நாங்கள் பேரனுடன் வசித்து வந்த வீட்டை இடித்து விட்டு எங்களை மிரட்டுகிறார்.

    கூலி வேலைக்கு சென்று பிழைப்பை நடத்த முடியாமல் இந்த வயதில் கடும் சிரமம்பட்டு வருகிறோம். கணவரிடம் இருந்து சொத்தை மீட்டு, எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் என்னை கருணை கொலை செய்து விடுங்கள்.

    இவ்வாறு அவர் அதில் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த காவல்துறைக்கு கலெக்டர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

    • தேவராஜ் கொலையில் தொடர்புடைய கூலிப்படையினரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
    • தந்தை கொலை செய்யப்பட்டதாலும் தாய் ஜெயிலுக்கு சென்றுள்ளதால் 2 குழந்தைகளும் பரிதவித்தப்படி நிற்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே கோழிக்கால்நத்தத்தை சேர்ந்த ஆரோன் மகன் தேவராஜ் என்ற தேவா (வயது 32). எலக்ட்ரீசியன். இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    இந்த நிலையில் தேவா கடந்த 20-ந் தேதி இரவு மர்மநபர்களால் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

    இந்த கொலை தொடர்பாக திருச்செங்கோடு ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். கொலையுண்ட தேவா செல்போன் எண்ணில் யாரெல்லாம் பேசினார்கள் என்ற விவரங்களை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், தேவராஜின் மனைவி சரண்யா, தன்னுடைய கள்ளக்காதலனுடன் சேர்ந்து இந்த கொலையை அரங்கேற்றி இருப்பது தெரியவந்துள்ளது. இதைதொடர்ந்து சரண்யா மற்றும் கள்ளக்காதலன் விமல்குமார், அவருடைய நண்பர் கோபாலகிருஷ்ணன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

    கைதான சரண்யா போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் வருமாறு-

    நானும், கணவரும், குழந்தைகளுடன் கோழிக்கால்நத்தம் பகுதியில் பெற்றோருடன் கூட்டுக்குடித்தனமாக இருந்து வந்தோம்.

    இந்த நிலையில் தொழில் தொடர்பாக தேவாவுடன் சங்ககிரி பகுதியைச் சேர்ந்த விமல் குமார் பழகி வந்தார். இதனால் அவர் எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றார். இதில் எனக்கும், விமல் குமாருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

    என்னை, அக்கா என விமல் குமார் அழைத்து வந்ததால் வீட்டில் எந்த சந்தேகமும் ஏற்படவில்லை. நாளடைவில் எங்களது கள்ளத்தொடர்பு பெற்றோருக்கு தெரியவந்தது.

    இதனால், எனது கணவர் தேவராஜன் என்னை கோழிக்கால் நத்தம் பகுதியில் தனி குடித்தனம் நடத்த அழைத்து சென்றார். அங்கு தனி குடித்தனம் நடத்தி வந்தோம்.

    அப்போது அந்த பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் தேவாவுக்கு தொடர்பு ஏற்பட்டது. இதை நான் கண்டித்தபோது நீ வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளாய், அதனால் பதிலுக்கு நானும் வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளேன் என கூறினார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த நான், விமல் குமாரை வீட்டுக்கு வருமாறு அழைத்தேன். எங்களது கள்ளத்தொடர்பு மீண்டும் தொடர்ந்தது.

    இதனால் எனக்கும் தேவாவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டு வந்தது. இதனால் நானும், விமல் குமாரும் சேர்ந்து தேவாவை தீர்த்து கட்ட முடிவு செய்து திட்டம் தீட்டினோம். விமல் குமார் தனக்கு தெரிந்த குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த மெக்கானிக் கோபாலகிருஷ்ணன் என்பவரிடம் பேசி கூலிப்படையை நியமித்தார். கூலிப்படைக்கு முதற்கட்டமாக ரூ.2 லட்சம் கொடுத்தோம்.

    தேவா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 10 லட்சம் ரூபாய்க்கு இன்சூரன்ஸ் செய்தார். அடுத்த ஆண்டு இன்சூரன்ஸ் பணம் மெச்சூரிட்டி ஆகிவிடும். தேவாவை கொலை செய்த பிறகு இந்த பணத்தை தருவதாக கூலி படையினரிடம் தெரிவித்தோம். இதையடுத்து கூலிப்படையினர் தேவாவை தீர்த்துக்கட்டினர்.

    ஆனால் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்த என்னையும் கள்ளக்காதலனையும் கண்டுபிடித்து கைது செய்து விட்டனர்.

    இவ்வாறு சரண்யா வாக்குமூலம் போலீசாரிடம் அளிக்கப்பட்டது.

    கைது செய்யப்பட்ட 3 பேரும் திருச்செங்கோடு நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    தேவராஜ் கொலையில் தொடர்புடைய கூலிப்படையினரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். தந்தை கொலை செய்யப்பட்டதாலும் தாய் ஜெயிலுக்கு சென்றுள்ளதால் 2குழந்தைகளும் பரிதவித்தப்படி நிற்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த 19-ந்தேதி 2 வயதான குழந்தை தினேஷ் அங்குள்ள அண்டா தண்ணீரில் திடீரென்று பிணமாக மிதந்தான்.
    • தகவல் அறிந்து போலீசார் வந்து விசாரித்தபோது, தினேஷ் அண்டாவுக்குள் தவறி விழுந்து இறந்து விட்டதாக அனிதா கூறியுள்ளார்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குண்டடத்தை அடுத்த முண்டுவேலம்பட்டியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 22). கூலி தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அனிதா (20) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர். இதனால் அனிதா கர்ப்பமானார்.

    அதன்பின்னர் அனிதாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறக்கும்போது அனிதாவுக்கு வயது 17 என்பதால் போலீசார் விசாரித்து மோகன்ராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். குழந்தை பிறந்த பின்னர் அந்த குழந்தைக்கு தினேஷ் என்று பெயர் வைத்து அனிதா வளர்த்து வந்தார்.

    கடந்த 19-ந்தேதி 2 வயதான குழந்தை தினேஷ் அங்குள்ள அண்டா தண்ணீரில் திடீரென்று பிணமாக மிதந்தான். தகவல் அறிந்து போலீசார் வந்து விசாரித்தபோது, தினேஷ் அண்டாவுக்குள் தவறி விழுந்து இறந்து விட்டதாக அனிதா கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் குழந்தை தினேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அனிதா குடியிருந்த வீட்டின் அருகில் வசித்த ஒருவர், குழந்தை தினேஷ் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அனிதாவுக்கும், அவளுடைய கள்ளக்காதலன் மோகன்ராஜிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் புகார் கொடுத்தார்.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது (பொறுப்பு) அனிதாவையும், கள்ளக்காதலன் மோகன்ராஜையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தார். விசாரணையில் 2பேரும் சேர்ந்து குழந்தை தினேசை கொலை செய்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து 2பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் குழந்தையை கொலை செய்ததற்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல் கிடைத்தது. அதன் விவரம் வருமாறு:-

    மோகன்ராஜூடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாக அனிதா கர்ப்பமான நிலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு தினேஷ் என்று பெயர் வைத்து அனிதா வளர்த்து வந்தார்.

    இந்தநிலையில் தனது குழந்தையுடன் அடிக்கடி அனிதா உடுமலை பகுதிக்கு வேலைக்கு சென்று வந்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த ஒருவருடன் அனிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மலர்ந்தது. அதன்பின்னர் அனிதா, அவரிடம் தனக்கு குழந்தை இருப்பதை கூறி அவரை முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

    திருமணத்திற்கு பின்னர் அனிதா தனது குழந்தை தினேசுடன் உடுமலையில் உள்ள கணவர் வீட்டில் வசித்து வந்தார். மேலும் அனிதா 2-வதாக கர்ப்பம் அடைந்தார். இதையடுத்து பிரவசத்திற்காக முண்டுவேலம்பட்டியில் உள்ள வீட்டிற்கு வந்தார். அவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஆஸ்பத்திரியில் மற்றொரு ஆண் குழந்தை பிறந்தது. அதன்பின்னர் அவர் உடுமலை போகாமல் முண்டுவேலம்பட்டியில் தனது 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். அப்போது மறுபடியும் தனது காதலன் மோகன்ராஜூடன் அனிதாவுக்கு தொடர்பு ஏற்பட்டு ஒன்றாக இருந்துள்ளனர்.

    இந்தநிலையில் மோகன்ராஜ் மீதான போக்சோ வழக்கு விசாரணைக்கு வர இருந்த நிலையில் அனிதாவும், மோகன்ராஜூம் அச்சத்தில் இருந்துள்ளனர். குழந்தை தினேசிடம் டி.என்.ஏ. பரிசோதனை செய்தால் மாட்டிக்கொள்வோம் என நினைத்து, குழந்தையை கொல்ல அனிதாவும், மோகன்ராஜூம் முடிவு செய்துள்ளனர். அந்த திட்டத்தை நிறைவேற்ற கள்ளக்காதலன் மோகன்ராஜை தான் தங்கி இருந்த வீட்டிற்கு அனிதா வரவழைத்துள்ளார். அங்கு அவர் வந்ததும் குழந்தை தினேசை கழுத்தை நெரித்து கொன்று, உடலை அண்டாவுக்குள் போட்டு விட்டு, குழந்தை அண்டாவில் தவறி விழுந்து இறந்ததாக நாடகம் ஆடியது தெரியவந்தது.

    இதனைத்தொடர்ந்து அனிதா மற்றும் அவருடைய கள்ளக்காதலன் மோகன்ராஜ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்ததுடன், தாராபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பெற்ற குழந்தையை தாயே கொலை செய்த சம்பவம் திருப்பூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மனைவியுடனான கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் தீர்த்துக்கட்டினேன்.
    • சிவக்குமார் தொடர்ந்து மனைவி புஷ்பாவிற்கு தொல்லை கொடுத்து வந்தார்.

    ஏற்காடு.

    சேலம் மாவட்டம் ஏற்காடு மாரமங்கலம் கும்மிப்பாடி பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 40). கூலிதொழிலாளி.

    அதே பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (51) என்பவருடைய மகன் தங்கராஜ் (35). விவசாய கூலி தொழிலாளி. இவருடைய மனைவி புஷ்பா (வயது 32).

    இந்த நிலையில் நேற்று முன்தினம் சிவக்குமாருக்கும், தங்கராஜிற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தங்கராஜ் மற்றும் அவரது தந்தை மாணிக்கம் ஆகியோர் சேர்ந்து சிவக்குமாரை கொடுவாளால் வெட்டினர். மேலும் இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.படுகாயம் அடைந்த சிவக்குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஏற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சிவக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஏற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த தங்கராஜ், அவரது தந்தை மாணிக்கம் ஆகியோரை நேற்று இரவு கைது செய்தனர்.

    இதில் சிவக்குமாரை எதற்காக கொலை செய்தோம் என்பது குறித்து தங்கராஜ் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விபரம் வருமாறு:-

    எனது மனைவி புஷ்பாவுக்கும், சிவக்குமாருக்கும் வேலைக்கு சென்ற இடத்தில் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கத்தை பயன்படுத்தி புஷ்பாவிடம் என்னை பற்றியும், எனது குடும்பத்தை பற்றியும் சிவக்குமார் தவறாக பேசி, பொய்களை சொல்லி புஷ்பா மனதில் தவறான எண்ணத்தை விதைத்தார். இதனால் வீட்டில் தினமும் பிரச்சினை ஏற்பட்டு வந்தது. சிவக்குமார் நல்லவர்போல் நடிக்கிறார். அவரை நம்பாதே, அவர் சொல்வதை கேட்காதே என நாங்கள் பலமுறை அறிவுரை கூறினோம்.

    ஆனால், சிவக்குமார் தொடர்ந்து எனது மனைவி புஷ்பாவிற்கு தொல்லை கொடுத்து வந்தார். எனது மனைவி நல்லவள். தொடர்ந்து ஆசைவார்த்தைகளை அள்ளிவிட்டு எனது மனைவியின் மனதை மாற்றினார். இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கு இடையே கள்ளக்காதலாக மாறியது. இதனால் அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர்.

    இதை அறிந்த நான், எனது மனைவியையும், சிவக்குமாரையும் கண்டித்தேன். மேலும் சிவக்குமாரிடம் எனது மனைவியுடன் உள்ள தொடர்பை முறித்துக்கொள்ளுமாறு எச்சரித்தேன். ஆனால் சிவக்குமார் கேட்கவில்லை.

    இதனால் நானும், எனது தந்தை மாணிக்கமும் சேர்ந்து, சிவக்குமாரை வெட்டிக் கொன்றோம். போலீசாரிடம் பிடிபடாமல் இருக்க தலைமறைவாக இருந்தோம். ஆனால் எங்களை போலீசார் பிடித்துவிட்டனர்.

    இவ்வாறு தங்கராஜ் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.

    கைதான தங்கராஜ், மாணிக்கம் ஆகிய இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    கள்ளக்காதல் விவகாரத்தில் தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் ஏற்காட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • சங்கீதாவுக்கும் அதே பகுதியில் சேர்ந்தவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
    • மணி, கண்ணன் ஆகியோர் சங்கரை ஆபாசமாக திட்டி திட்டி தாக்கினர்.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் அருகே உள்ள கல்லாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவருடைய சகோதரி சங்கீதாவுக்கும் அதே பகுதியில் சேர்ந்தவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கல்லாநத்தம் கிராமத்தை சேர்ந்த மணி என்பவருக்கும் சங்கீதாவுக்கும் 1.1/2 வருடங்களாக நட்பாக பழகி வந்தனர். . இது பற்றி கணவனுக்கு தெரிய வந்தது. இதனால் சின்னசேலம் அருகே உள்ள வி. கூட்ரோடு கிராமத்தில் தங்கி வசித்து வந்தனர்.

    கடந்த 24- ந் தேதி அன்று சங்கீதாவை பார்க்க மணி சென்றுள்ளார். இது பற்றி கணவனுக்கு தெரிந்ததால் சங்கீதா நேற்று எலிபேஸ்ட் சாப்பிட்டார். பின்னர் அவரை சின்னசேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இதனால் கோபமடைந்த சங்கரும் கல்லாநத்தம் சென்று கேட்டார். அப்போது மணி, கண்ணன் ஆகியோர் சங்கரை ஆபாசமாக திட்டி திட்டி தாக்கினர். இதுகுறித்து சங்கர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து சின்ன சேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஜேக்கப் ஆனந்தராஜ் சொந்தமாக வீடுகள் கட்டி பின்னர் அதனை விற்கும் தொழில் செய்து வந்தார். டவுனிலும் வீடு கட்டி வந்தார்.
    • ஜான்சி அளித்த புகாரின்பேரில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜேக்கப் ஆனந்தராஜை தேடி வந்தனர்.

    நெல்லை:

    நெல்லை பழைய பேட்டையை அடுத்த அபிஷேகப்பட்டியை சேர்ந்தவர் ஜேக்கப் ஆனந்தராஜ்(வயது 63). கட்டிட காண்டிராக்டர்.

    கடந்த 22-ந்தேதி காலை ஜேக்கப் ஆனந்தராஜ் டவுன் பகுதியில் நடைபெற்று வந்த கட்டிட பணிகளை பார்வையிடுவதற்காக காரில் புறப்பட்டு சென்றார். அதன்பின்னர் அவர் வீட்டுக்கு திரும்பவில்லை. அவரது செல்போன் 'சுவிட்ச்-ஆப்' ஆகியிருந்தது.

    இதுகுறித்து அவரது மகள் ஜான்சி அளித்த புகாரின்பேரில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜேக்கப் ஆனந்தராஜை தேடி வந்தனர்.

    இந்நிலையில் நேற்று காலை பேட்டை எம்.ஜி.ஆர். நகர் குளக்கரையில் அவர் கொலை செய்யப்பட்டு, உடல் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இதுதொடர்பாக பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷோபா ஜென்சி நடத்திய விசாரணையில், பேட்டை நரசிங்கநல்லூர் பகுதியை சேர்ந்த தேவி(32) என்பவரும், அவரது கள்ளக்காதலனான சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த பிரின்ஸ் ஜேக்கப்பும் சேர்ந்து ஜேக்கப் ஆனந்தராஜை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    தேவியிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கொலைக்கான காரணம் குறித்து தேவி போலீசாரிடம் கூறியதாவது:-

    ஜேக்கப் ஆனந்தராஜ் சொந்தமாக வீடுகள் கட்டி பின்னர் அதனை விற்கும் தொழில் செய்து வந்தார். டவுனிலும் வீடு கட்டி வந்தார். அப்போது அவருக்கு எனது தாயுடன் பழக்கம் ஏற்பட்டது. எனது தாய் மூலம் கிடைத்த அறிமுகத்தால் ஜேக்கப் ஆனந்தராஜ் என்னிடம் நெருங்கி பழகினார்.

    நான் சில ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், ஜேக்கப் ஆனந்தராஜின் அறிமுகம் கிடைத்ததால் 2 பேரும் நெருக்கமாக பழகி வந்தோம். நாங்கள் 2 பேரும் அடிக்கடி காரில் வெளியூர்களுக்கு சென்று உல்லாசமாக இருந்து வந்தோம்.

    எனக்கு ஏற்கனவே சங்கரன்கோவில் அருகே சம்சிகாபுரத்தை சேர்ந்த பிரின்ஸ் ஜேக்கப்புடன் தொடர்பு இருந்தது. அவரும் அடிக்கடி எனது வீட்டுக்கு வந்து செல்வார். இந்த விஷயம் ஜேக்கப் ஆனந்தராஜிக்கு தெரியாது.

    கடந்த 22-ந்தேதி பிரின்ஸ் ஜேக்கப்பும், நானும் எனது வீட்டில் உல்லாசமாக இருந்தோம். அப்போது அங்கு ஜேக்கப் ஆனந்தராஜ் திடீரென வந்தார். அவர் என்னை உல்லாசத்திற்கு அழைத்ததால், பிரின்ஸ் ஜேக்கப்புக்கு கோபம் வந்தது. இதுதொடர்பாக அவர்கள் 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    உடனே பிரின்ஸ் ஜேக்கப் ஆத்திரத்தில் ஜேக்கப் ஆனந்தராஜை மிதித்து கீழே தள்ளினார். நான் அவரது கைகளை பிடித்து கொண்டேன். பின்னர் பிரின்ஸ் ஜேக்கப் அங்கு கிடந்த நைலான் கயிற்றால் அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்தார். பின்னர் உடலை சாக்கு மூட்டையில் கட்டி கட்டிலுக்கு அடியில் வைத்தோம். மறுநாள் அதிகாலையில் யாருக்கும் தெரியாமல் பேட்டை எம்.ஜி.ஆர். நகரில் உள்ள குளக்கரையில் அவரது உடலை மொபட்டில் எடுத்து சென்று வீசினோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து தேவி கூறியவற்றை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர்.

    பின்னர் அவர்கள் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
    • கூலிப்படை தலைவன் சாந்தகுமார் உள்ளிட்டவர்களை தேடி வருகிறார்கள்.

    மதுரை :

    மதுரை திருப்பாலை ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது35). என்ஜினீயரான இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் ராமநாதபுரத்தை சேர்ந்த வைஷ்ணவிக்கும்(24) திருமணம் முடிந்து ஒரு பெண் குழந்தை உள்ளது. செந்தில்குமார் ஆண்டுக்கு ஒரு முறை ஊருக்கு வந்து செல்வது வழக்கம்.

    இதன்படி மதுரைக்கு வந்த அவர் கடந்த மாதம் 27-ந் தேதி மகளை பள்ளியில் விட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது ஜி.ஆர்.நகர், பொன்விழா நகர் அருகே மோட்டார் சைக்கிளில் தலைகவசம் அணிந்த 2 பேர் அவரை பட்டாக்கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பினர்.

    இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையில் செந்தில்குமாரின் மனைவி வைஷ்ணவி, தனது கணவர் மீதான தாக்குதல் வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க வேண்டும் என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்தநிலையில் செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி செல்போன் எண்களை வைத்து போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். அதில் வைஷ்ணவி ஒருவரிடம் பல மணி நேரம் பேசியது தெரியவந்தது. வைஷ்ணவிக்கும், சிவகங்கையை சேர்ந்த அவரது தாய்மாமா மகன் என்ஜினீயரான வெங்கடேசனுக்கும்(25) கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. செந்தில்குமார் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்ததால் அவர்களால் சரிவர சந்திக்க முடியவில்லை. எனவே அவரது ஒரு கை, காலை வெட்டினால் அவரால் வீட்டை விட்டு வெளியே வரமுடியாது என்று வைஷ்ணவி கொடூரமாக எண்ணினார். இதுகுறித்து வெங்கடேசனிடம் தெரிவித்தார்.

    எனவே அவர் தனது நண்பரான, கூலிப்படையை சேர்ந்த சாந்தகுமாரிடம் கூறினார். அதற்கு அவர் ரூ.1 லட்சம் கேட்டதாக கூறப்படுகிறது. வைஷ்ணவி தனது நகைகளை கள்ளக்காதலன் வெங்கடேசன் மூலம் சிவகங்கையில் அடகு வைத்து ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தார். அவர்கள் தெரிவித்தப்படி சாந்தகுமாரும், மற்றொருவரும் மோட்டார் சைக்கிளில் வந்து செந்தில்குமாரை வெட்டி விட்டு தப்பி சென்றது தெரியவந்தது. எனவே நேற்று இரவு வைஷ்ணவி, அவரது கள்ளக்காதலன் வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர். மேலும் கூலிப்படை தலைவன் சாந்தகுமார் உள்ளிட்டவர்களை தேடி வருகிறார்கள்.

    • வடிவேல் முருகனின் ரத்த மாதிரியை ஆய்வு மையத்திற்கு அனுப்பியுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    • அதன் முடிவு வந்த பின்பு என்ன வகையான மருந்து அல்லது விஷம் கொடுக்கப்பட்டுள்ளது என தெரியவரும் என தெரிவித்தனர்.

    இரணியல்:

    கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள ஆழ்வார் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் முருகன் (வயது 32), கட்டுமான தொழிலாளி. இவரது மனைவி சுஜா. இவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 31-ந்தேதி திருமணம் நடைபெற்றது.

    கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வடிவேல் முருகன், திடீரென இரவில் வீட்டில் மயங்கி விழுந்தார். இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். தற்போது மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ள வடிவேல் முருகன், தனது மனைவி மீது புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.

    தனது மனைவிக்கு திருமணத்துக்கு முன்பு வாலிபர் ஒருவருடன் காதல் இருந்ததாகவும் தற்போது அவருடன் சேர்ந்து தனக்கு மெல்லக் கொல்லும் விஷத்தை மனைவி கொடுத்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் வடிவேல் முருகன் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

    அந்த வீடியோவில் வடிவேல் முருகன் தனது மனைவியின் செல்போனை தற்செயலாக பார்த்த போது தான் கொலை சதி பற்றி தெரிய வந்ததாகவும் தனது மனைவி கள்ளக்காதலனுடன் உரையாடிய வாட்ஸ்அப் ஆதாரம் தனக்கு கிடைத்து இருப்பதாகவும் கூறுகிறார்.

    இந்த உண்மை தனக்கு சரியான நேரத்தில் தெரியாமல் இருந்தால், தான் கொல்லப்பட்டு இருப்பேன் என்றும், அல்லது விபத்தில் சிக்கி இருப்பேன் என்றும் கூறியுள்ளார்.

    தனது கணவனுக்கு அளித்த மருந்தில் ஏதோ கலந்து கொடுத்ததாக முன்னாள் காதலனுடன் சுஜா பேசிக்கொண்ட தகவல் வாட்ஸ்-அப்பில் பதிவாகி உள்ளதாக தெரிகிறது.

    இதுகுறித்து வடிவேல்முருகன் போலீசிலும் புகார் அளித்தார். தனது மனைவியையும் அவரது காதலனையும் கைது செய்து தனக்கு அளித்த மருந்தை அறிந்து அதற்குரிய சிகிச்சை அளிக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் அவர் கூறியிருந்தார்.

    இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்ட போது... வடிவேல் முருகனின் ரத்த மாதிரியை ஆய்வு மையத்திற்கு அனுப்பியுள்ளோம். அதன் முடிவு வந்த பின்பு என்ன வகையான மருந்து அல்லது விஷம் கொடுக்கப்பட்டுள்ளது என தெரியவரும் என தெரிவித்தனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குமரி மாவட்டத்தில் காதலன், மாணவர் மெல்லக் கொல்லும் விஷத்தால் கொல்லப்பட்டதாக ஏற்கனவே வழக்குகள் உள்ள நிலையில் தற்போது மனைவியே கணவனுக்கு விஷம் கொடுத்து கொல்ல முயன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த 11-ந்தேதி இரவு செல்வத்திடம் வாங்கிய பணத்தை கொடுத்து விட்டு வருவதாக கூறி விட்டு, பாண்டியம்மாள் தனது வீட்டில் இருந்து சென்றுள்ளார்.
    • நள்ளிரவு ஆகியும் பாண்டியம்மாள் வீட்டுக்கு திரும்பி வராததால் மகன் கண்ணன் அவரை தேடி செல்வத்தின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

    மதுரை:

    மதுரை வில்லாபுரம் மீனாட்சிநகர் அண்ணாமலையார் வீதியை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜா. இவரது மனைவி பாண்டியம்மாள் (43). இவர்களுக்கு கண்ணன் (27) என்ற மகன் உள்ளார். பாண்டியம்மாள் மேலஅனுப்பானடி தீயணைப்பு நிலையம் அருகே உள்ள மாவு மில்லில் வேலை பார்த்து வந்தார்.

    அப்போது அவருக்கும், அதே மில்லில் வேலை பார்த்த அனுப்பானடி பூம்புகார் நகரை சேர்ந்த செல்வம் (57) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இது கள்ளக்காதலாக மாறியிருக்கிறது. அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்திருக்கின்றனர்.

    இந்நிலையில் கடந்த 11-ந்தேதி இரவு செல்வத்திடம் வாங்கிய பணத்தை கொடுத்து விட்டு வருவதாக கூறி விட்டு, பாண்டியம்மாள் தனது வீட்டில் இருந்து சென்றுள்ளார். நள்ளிரவு ஆகியும் அவர் வீட்டுக்கு திரும்பி வராததால் மகன் கண்ணன் அவரை தேடி செல்வத்தின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

    அப்போது அவரது வீடு உள்பக்கமாக பூட்டி கிடந்துள்ளது. வீட்டினுள் பார்த்தபோது பாண்டியம்மாள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து கீரைத்துறை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்த பாண்டியம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் பிணமாக கிடந்த வீட்டில் வசித்து வந்த செல்வத்தை காணவில்லை.

    அவர் தான் பாண்டியம்மாளை கொன்றுவிட்டு தப்பி சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடிக்க போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் ஆகியோரின் உத்தரவின்பேரில் தெற்குவாசல் உதவி கமிஷனர் சண்முகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    தலைமறைவாகிய செல்வத்தை தனிப்படை போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த அவரை போலீசார் இன்று கைது செய்தனர். அவரிடம் பாண்டியம்மாளை கொன்றதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

    பாண்டியம்மாளுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்ததாக தனக்கு சந்தேகம் ஏற்பட்டதாகவும், அது தொடர்பாக கேட்டபோது தங்களுக்குள் தகராறு ஏற்பட்டதாகவும், அதில் ஆத்திரம் அடைந்து கத்தியால் கழுத்தை அறுத்து அவரை கொன்று விட்டதாகவும் செல்வம் கூறியிருக்கிறார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
    • தேங்காய் வியாபாரி தனது கள்ளக்காதலுக்கு மனைவி இடையூறாக இருப்பதாக நினைத்தார்.

    கோவை:

    கோவை மலுமச்சம்பட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 29 வயது தேங்காய் வியாபாரி. இவருக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது 1½ வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    கடந்த 6 மாதங்களுக்கு முன் தேங்காய் வியாபாரிக்கு அவரது மனைவியின் தங்கையான திருமணமாகாத இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர்.

    இந்த கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலமாக தேங்காய் வியாபாரியின் மனைவிக்கு தெரியவந்தது.

    அவர் தனது கணவரை கண்டித்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனையடுத்து தேங்காய் வியாபாரி தனது கள்ளக்காதலுக்கு மனைவி இடையூறாக இருப்பதாக நினைத்தார். எனவே அவரை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும் விஷத்தை கொடுத்து தீர்த்து கட்ட முடிவு செய்தார். அதன்படி ஆன்லைன் மூலமாக தனது மனைவியை கொல்வதற்கு விஷத்தை வாங்கி உள்ளார். பின்னர் அதனை வீட்டில் மறைத்து வைத்தார்.

    இந்தநிலையில் கடந்த அக்டோபர் மாதம் 17-ந் தேதி தேங்காய் வியாபாரி தனது கள்ளக்காதலியுடன் ஓட்டம் பிடித்தார். இது குறித்து அவரது மனைவி மாயமான தனது கணவர் மற்றும் தங்கையை கண்டுபிடித்து தரும்படி செட்டிப்பாளையம் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவியின் தங்கையுடன் ஓட்டம் பிடித்த தேங்காய் வியாபாரியை தேடி வந்தனர்.

    இந்தநிலையில் 2 பேரும் மதுரை ஜெய்ஹிந்புரத்தில் தங்கி இருப்பது தெரியவந்தது. அங்கு விரைந்து சென்ற போது போலீசார் மனைவியின் தங்கையுடன் குடும்பம் நடத்தி வந்த தேங்காய் வியாபாரியை பிடித்தனர். பின்னர் அவரை கோவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரியா குடும்பத் தகராறில் கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.
    • கடந்த சில ஆண்டுகளாக மனைவி தனக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்திருப்பதாக பாறசாலை போலீசில் சுதீர் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாணவருக்கு காதலி குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் இருந்து மீள்வதற்குள் கள்ளக்காதலுக்காக கணவருக்கு மனைவியே விஷம் கொடுத்தள்ளதாக புகார் எழுந்துள்ளது.

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பாறசாலை அருகே உள்ள முறியங்கரை பகுதியைச் சேர்ந்தவர் சுதீர் (வயது 49). கேரள அரசு போக்குவரத்துக் கழக டிரைவர். இவரது மனைவி பிரியா. இவர் தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரியா குடும்பத் தகராறில் கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மனைவி தனக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்திருப்பதாக பாறசாலை போலீசில் சுதீர் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

    இதற்கு ஆதாரமாக வீட்டின் பீரோவில் இருந்து கைப்பற்றப்பட்ட அம்மோனியம் பாஸ்பேட் மற்றும் சிரிஞ்சை அவர் காண்பித்துள்ளார். மனைவி பிரியாவுக்கும் திருநெல்வேலியைச் சேர்ந்த முருகன் என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது என்றும் அவர் தான் விஷத்தை கொரியர் மூலம் அனுப்பி இருக்கிறார் என்றும் சுதீர் கூறினார். மேலும் கடந்த 10 ஆண்டுகளாக எனக்கு வீட்டில் சாப்பிட்டால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. இதற்கு காரணம் மனைவி உணவில் விஷம் கலந்து கொடுத்தது தான் என்றும் அவர் கூறியுள்ளார்.

    அதன்பேரில் விசாரணை நடத்திய பாறசாலை போலீசார், பிரியா, முருகன் ஆகியோர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கள்ளக்காதலனுடன் உல்லாச வாழ்க்கை வாழ, கணவருக்கு மனைவி விஷம் கொடுத்ததாக கூறப்படும் இந்த சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • புல்லட் ராஜா கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜாமினில் வெளியே வந்தார்.
    • மனைவிக்கும் சின்னராசுவுக்கும் இருந்த கள்ளத்தொடர்பை அறிந்து இருவரையும் கண்டித்தார்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் காமராஜர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சின்னராசு (வயது 35). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த ஆண்டு சின்னராசுவின் மனைவி கலைச்செல்வி நோய் வாய்ப்பட்டு இறந்தார்.

    இந்த நிலையில் மண்ணச்சநல்லூர் காந்தி நகரைச் சேர்ந்த புல்லட் ராஜா என்கிற நளராஜா (41) என்பவரின் மனைவி கிருஷ்ணவேனியுடன் சின்னராசுவுக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே நளராஜா கடந்த ஜனவரி மாதம் காந்தி நகரைச் சேர்ந்த லாரி உரிமையாளர் சதீஷ்குமார் என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    இவர் ஜெயிலில் இருந்ததால் சின்னராசுவும், கிருஷ்ணவேணியும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். கண்டிக்கவோ, கேள்வி கேட்கவோ யாரும் இல்லை என்ற தைரியத்தில் கள்ளக்காதல் ஜோடி கணவன்-மனைவி போல் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

    இந்த நிலையில் புல்லட் ராஜா கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜாமினில் வெளியே வந்தார். பின்னர் மனைவிக்கும் சின்னராசுவுக்கும் இருந்த கள்ளத்தொடர்பை அறிந்து இருவரையும் கண்டித்தார்.

    இருந்தபோதிலும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் சின்னராசு, கிருஷ்ணவேணியை தனது ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். இதை அடுத்து புல்லட் ராஜாவும் அவர்களை பின்தொடர்ந்து சமயபுரம் சென்றார். பின்னர் சமயபுரம் மாரியம்மன் கோவில் முடி காணிக்கை மண்டபம் அருகே அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.

    இதைக் கண்டு ஆத்திரம் அடைந்த ராஜா, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சின்னராசுவை சரமாரியாக குத்திவிட்டு தப்பி சென்றார். இதில் பலத்த காயம் அடைந்த சின்னராசு துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்த சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு சீதாராமன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தப்பி ஓடிய புல்லட் ராஜாவை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று காலை சமயபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதி அருகாமையில் வைத்து அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    பின்னர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் புல்லட் ராஜா போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், நான் ஜெயிலில் இருக்கும்போதே என் மனைவியுடன் சின்னராசு கள்ளத்தொடர்பு வைத்திருந்தது அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். பின்னர் ஜாமினில் வந்த பின்னர் இருவரையும் கண்டித்து பார்த்தேன். ஆனால் என்னை அவர்கள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை.

    இது எனக்கு மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்தியது. மேலும் கோவில் அருகாமையில் வைத்தும் அவர்களை கண்டித்தேன். அப்போதும் சின்னராசு என் பேச்சைக் கேட்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த நான் அவரை குத்தி கொலை செய்தேன் எனக் கூறியுள்ளார்.

    கைது செய்யப்பட்டுள்ள புல்லட் ராஜாவை இன்று மாலைக்குள் திருச்சி 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கொலை வழக்கில் கைதாகி உள்ள புல்லட் ராஜா மண்ணச்சநல்லூர் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பரமேஸ்வரி முருகனின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் சமயபுரம் மற்றும் மண்ணச்சநல்லூர் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×