என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஓணம்"
- மாணவர்கள் போக்குவரத்திற்கு இடையூறாக இருசக்கர வாகனங்களில் பயணம்
- அபராதம் விதிக்கப்பட்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
நாகர்கோவில் :
நாகர்கோவில் பீச்ரோடு-செட்டிகுளம் சாலையில் உள்ள ஒரு கல்லூரயில் ஓணம் பண்டிகை கொண்டாடத்தின்போது கல்லூரி மாணவர்கள் போக்குவரத்திற்கு இடையூறாக இருசக்கர வாகனங்களில் பயணம் செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் நாகர்கோவில் போக்குவரத்து காவல்துறையினர் அங்கு சென்று சோதனை செய்த போது ஆபத்தாக வாகனம் ஓட்டியது, ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டியது, பதிவு எண் இன்றி வாகனம் ஓட்டியது, போக்குவரத்திற்கு இடையூறு செய்தது ஆகிய விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- பண்டிகையை கேரள அரசு 10 நாட்கள் அரசு விழாவாக கொண்டாடிவருகிறது.
- பல்வேறு நிகழ்ச்சிகள் விழாவில் இடம்பெற்றன. அப்போது ஓணம் பாடல்கள் இசைக்கப்பட்டன.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஓணம் திருவிழா. அறுவடை திருநாள் எனப்படும் இந்த பண்டிகையை கேரள அரசு 10 நாட்கள் அரசு விழாவாக கொண்டாடிவருகிறது. அதன்படி இந்த ஆண்டு ஆவணி மாதம் திருவோணம் நட்சத்திர நாளில் (கடந்த 20-ந்தேதி) ஓணம் பண்டிகை தொடங்கியது. வருகிற 29-ந்தேதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஓணம் விருந்து படைத்து மக்கள் மகிழ்வார்கள்.
பண்டிகை தொடங்கிய நாள் முதல் மாநிலத்தின் பல பகுதிகளிலும் ஓணம் திருவிழாவை பலரும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். பள்ளி, கல்லூரிகள் மட்டுமின்றி அரசு அலுவலகங்களிலும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்கள் வீடுகள், அலுவலகங்களில் அத்தப்பூ கோலமிட்டு பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொல்லம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் நேற்று ஓணம் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது. பல்வேறு நிகழ்ச்சிகள் விழாவில் இடம்பெற்றன. அப்போது ஓணம் பாடல்கள் இசைக்கப்பட்டன.
விழாவில் பங்கேற்ற கொல்லம் மாவட்ட கலெக்டர் அப்சனா பர்வீன், ஓணம் பாடலை கேட்டு உற்சாகம் அடைந்தார். அத்துடன் நில்லாமல் அவர், சேலையை வரிந்து கட்டிக்கொண்டு மேடையில் அசத்தல் நடனமும் ஆடினார். அவரை கலெக்டர் அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர். பண்டிகை அனைவருக்கும் சமமானது என்பதை உணர்த்தும் வகையில் அவரது ஆட்டம் அமைந்தது.
இந்தநிலையில் கலெக்டர் நடனம் ஆடிய வீடியோ, தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த பலரும் கலெக்டர் அப்சனா பர்வீனை பாராட்டி வருகின்றனர்.
- கேரளாவின் அறுவடை திருநாள் என்றும் அழைக்கிறார்கள்.
- திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்புமிக்க திருவிழா ஓணம். சாதி, மத வேறுபாடின்றி அனைத்து மலையாளிகளாலும் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை, கேரளாவின் அறுவடை திருநாள் என்றும் அழைக்கிறார்கள்.
கொல்லவர்ஷம் எனும் மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் ஹஸ்த்தம் நட்சத்திரத்தில் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரை இருக்கும் 10 நாட்களாக இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.
ஆவணி திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது ஓணம். சங்ககால ஏடுகளில் விஷ்ணுவின் பிறந்தநாளாகவும், வாமணன் அவதரித்த நாளும் அன்றுதான் எனவும் குறிப்புகள் கூறுகின்றன.
மகாபலி என்ற மன்னர் கேரளத்தை சிறப்போடு ஆண்டு வந்தார். தானம், தருமங்கள் செய்வதில் சிறந்து விளங்கிய இந்த மன்னன் ஒருமுறை வேள்வி செய்யும்போது திருமால் வாமணனாக (குள்ளமான உருவில்) உருவெடுத்து வந்து மூன்றடி மண் கேட்டார். மகாபலியும் தந்தான். ஒரு அடியால் இந்த பூமியையும் மறு அடியால் விண்ணையும் அளந்த திருமாலுக்கு மூன்றாவது அடிக்காக தனது தலையையே கொடுத்தான் பலி மகாராஜா. அவனுக்கு முக்தி அளிக்க வேண்டி அவன் தலையில் கால் வைத்து அவனை பாதாள உலகிற்கு தள்ளினார் திருமால்.
தன் நாட்டுமக்கள் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பதால் வருடம் ஒருமுறை பாதாளத்தில் இருந்து தனது நாட்டுக்கு வந்து மக்களை கண்டு மகிழும் வரம் வேண்டினான் மகாபலி. அதன்படி, ஒவ்வொரு திருவோணத் திருநாள் அன்று மகாபலி பாதாள உலகில் இருந்து பூலோகத்திற்கு வருவதோடு, தங்களது வீடுகளுக்கும் வந்து செல்வதாக கேரள மக்கள் நம்புகிறார்கள் இதனை நினைவு கூர்ந்து, மகாபலியை மீண்டும் வரவேற்கும் வகையில் இந்த திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
ஓணம் ஸ்பெஷல் உணவுகள்
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு உணவுகள் தயார் செய்யப்படும். "கானம் விற்றாவது ஓணம் உண்" என்ற பழமொழி ஓண சாத்யா என்ற உணவின் சிறப்பை கூறுகிறது. ஆறு சுவைகளில் கசப்பு தவிர மற்ற சுவைகளில் 64 வகையான "ஓண சாத்யா"என்ற உணவு தயாரிக்கப்படுகிறது.
புது அரிசி மாவில் தயார் செய்யப்பட்ட அடை, அவியல், அடை பிரதமன், பால் பாயாசம், அரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், காலன், ஓலன், ரசம், மோர், தோரன், சர்க்கரப் புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சிப்புளி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு, பப்படம், காய வறுத்தது, சீடை, ஊறுகாய்கள் என உணவுகள் தயார் செய்யப்பட்டு கடவுளுக்கு படைக்கப்படும்.
ஓணம் ஸ்பெஷல் அத்தப்பூக்கோலம்
ஓணம் பண்டிகையின் சிறப்பு அம்சம், மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக கேரளாவின் ஒவ்வொரு வீட்டு வாசலில் போடப்படும் "அத்தப்பூ" என்ற பூக்கோலம் ஆகும். முதல் நாள் ஒரேவகையான பூக்கள் இரண்டாம் நாள் இரண்டு, மூன்றாம் நாள் மூன்று எனத் தொடர்ந்து பத்தாம் நாள் பத்து வகையான பூக்களால் அழகு செய்வர். கேரளாவில் ஆவணி மாதம் பூக்கள் பூத்துக் குலுங்கும் மாதமாகும். அதனால் இக்காலத்தில் வரும் ஓணத்திருநாளையும் மக்கள் பூக்களின் திருவிழாவாக கொண்டாடுவர்.
புத்தாடை
கசவு எனப்படும் தூய வெண்ணிற ஆடையை பெண்கள் அணிந்தும், பாடல்கள் பாடியும் மகிழ்வார்கள். 10 நாட்களாக நடைபெறும் திருவிழாவில் பலவிதமான போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்கப்படும். முக்கியமாக களறி, படகுப்போட்டிகள், பாரம்பரிய நடனப்போட்டிகள் போன்றவைகள் நடைபெறும்.
திருவிழா பத்து நாட்கள் நீடிக்கும், முதல் நாள் அத்தம் என்றும் மற்றவை சித்திரை, சோதி, விசாகம், அனிசம், திருக்கேடா, மூலம், பூராடம், உத்ராடம் மற்றும் திருவோணம் என்றும் வரிசையாக முத்திரை குத்தப்பட்டு, திருவோணம் மிக முக்கியமானது. இந்த ஆண்டு ஓணம் ஆகஸ்ட் 20 முதல் ஆகஸ்ட் 31 வரை கொண்டாடப்படும்.
- ரேஷன் கடைகள் மூலமாக ஓணம் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.
- கடந்த ஆண்டு 86 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஓணம் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் வருகிற 29-ந் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் திருவனந்தபுரம் தலைமை செயலகத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் மந்திரி சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஓணம் பண்டிகையையொட்டி ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஓணம் பரிசு பொருட்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து முதல்-மந்திரி பினராயி விஜயன் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-
கேரளாவில் நடப்பாண்டில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு அந்த்யோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ், ரேஷன் கார்டுகள் உள்ள வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் 5 லட்சத்து 87 ஆயிரத்து 691 பேர், நல வாழ்வு மையங்களில் வாழும் 20 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு இந்த ஆண்டு ஓணம் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இந்த தொகுப்பில் தேயிலைத்தூள், சிறுபருப்பு, சேமியா பாயாசம் மிக்ஸ், நெய், முந்திரி பருப்பு, தேங்காய் எண்ணெய், சாம்பார் பொடி, மிளகு பொடி, மஞ்சள் பொடி, மல்லிப்பொடி, துவரம் பருப்பு, சிறுபயறு மற்றும் உப்பு ஆகிய பொருட்கள் அடங்கி இருக்கும்.
ரேஷன் கடைகள் மூலமாக ஓணம் பரிசு தொகுப்பு வழங்கப்படும். இதற்காக ரூ.32 கோடி முன்பணமாக சப்ளை கோ நிறுவனத்திற்கு வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல்-மந்திரியின் அறிவிப்பை தொடர்ந்து ஓணம் பரிசு தொகுப்பு விரைவில் ரேஷன் கடைகளுக்கு கொண்டு வரப்பட்டு, கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
கடந்த ஆண்டு 86 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஓணம் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. நடப்பாண்டில் நிதி நெருக்கடி காரணமாக 6 லட்சத்து 7 ஆயிரத்து 691 பேருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு 17 பொருட்கள் வழங்கப்பட்டன. தற்போது உலர் அரிசி, சர்க்கரை வரட்டி, சீனி, ஏலக்காய் ஆகிய 4 பொருட்கள் நீக்கப்பட்டு, 13 பொருட்கள் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
- கேரள மக்களுக்கும், உலகம் முழுவதும் உள்ள மலையாள மக்களுக்கும் இனிய ஓணம் நல்வாழ்த்துக்கள்.
- ஓணம் நம் சமூகத்தில் ஒற்றுமை உணர்வை அதிகரிக்கட்டும் என்றார்.
கேரளா மாநிலத்தில் இன்று ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஓணம் பண்டிகையை யொட்டி, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
கேரள மக்களுக்கும், உலகம் முழுவதும் உள்ள மலையாள மக்களுக்கும் இனிய ஓணம் நல்வாழ்த்துக்கள்.
இந்த திருவிழா இயற்கை அன்னையின் முக்கிய பங்கையும், கடின உழைப்பாளிகளான விவசாயிகளின் முக்கியத்துவத்தையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
ஓணம் நம் சமூகத்தில் ஒற்றுமை உணர்வை அதிகரிக்கட்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
- அனைத்து வீடுகளிலும் அத்தப்பூ கோலம் போட்டு பெண்களும், சிறுவர்-சிறுமிகளும் மகிழ்ந்தனர்.
- கடந்த 30-ந்தேதி ஓணம் பண்டிகை தொடங்கியது.
திருவனந்தபுரம் :
உலகெங்கிலும் உள்ள மலையாள மக்கள் கொண்டாடும் திருவிழா ஓணம்.
முன் காலத்தில் கேரளாவை மகாபலி மன்னர் ஆட்சி செய்த போது மக்கள் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தனர். இந்த நிலையில் 3 அடி நிலம் கேட்ட திருமாலுக்கு தனது தலையை 3-வது அடியாக வழங்கிய மகாபலி, பாதாள உலகம் சென்றார். அப்போது அவர் தான் ஆண்டுக்கு ஒருமுறை வந்து மக்கள் மகிழ்ச்சியாக உள்ளார்களா என்பதை பார்க்க வேண்டும் என இறைவன் திருமாலிடம் வேண்டினார். இதற்கு திருமாலும் அனுமதித்தார்.
அதன்படி ஆண்டுக்கு ஒருமுறை மகாபலி மன்னர் நகர்வலம் வரும் நாள் தான் ஓணம் பண்டிகையாக கேரள மக்களால் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மன்னருக்கு தங்கள் மகிழ்ச்சியை தெரிவிக்கும் வகையில் மலையாள மொழி பேசும் மக்கள், வீடுகளில் அத்தப்பூ கோலம் போட்டு, அறுசுவை விருந்து படைத்து வருகிறார்கள்.
கொல்லம் ஆண்டான மலையாள ஆண்டின் முதல் மாதமான சிங்கம் மாதத்தில் ஓணம் பண்டிகை ஆண்டுதோறும் 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக ஓணம் பண்டிகை பெயரளவிற்கே கொண்டாடப்பட்டது.
இந்த நிலையில் இந்த ஆண்டு ஓணம் பண்டிகையை விமரிசையாக கொண்டாட திட்டமிடப்பட்டது. அதன்படி கடந்த 30-ந்தேதி ஓணம் பண்டிகை தொடங்கியது. அது முதல் கேரள மாநிலம் விழாக் கோலம் பூண்டது. திருவோண திருநாளான இன்று கேரளா முழுவதும் திரு ஓணம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
அனைத்து வீடுகளிலும் அத்தப்பூ கோலம் போட்டு பெண்களும், சிறுவர்-சிறுமிகளும் மகிழ்ந்தனர். வீடுகள் மட்டுமின்றி வர்த்தக நிறுவனங்கள், வணிக வளாகங்கள், கல்விக்கூடங்கள் போன்றவற்றிலும் அத்தப்பூ கோலம் அழகாக போடப்பட்டு இருந்தது.
கேரளா மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மலையாள மக்களும் அத்தப்பூ கோலம் போட்டு புத்தாடை அணிந்து ஓணம் பண்டிகையை விமரிசையாக கொண்டாடினர்.
ஓணம் பண்டிகையின் முக்கிய அம்சமான ஓண சத்யா (அறுசுவை விருந்து) அனைத்து வீடுகளிலும் படைக்கப்பட்டது. வாழைக்காய் துவரன், அவியல், சேனை எரிசேரி ஓலன், புளி இஞ்சி, பீட்ரூட், பச்சடி, மாங்காய் பச்சடி, நார்த்தங்காய் பச்சடி, பருப்பு சாம்பார், புளிசேரி ரசம், மோர், அடை பிரதன், பாயாசம் என 64 வகைகளுடன் ஓண விருந்து தயாரிக்கப்பட்டு உறவினர்களுக்கு கொடுத்து மக்கள் மகிழ்ந்தனர்.
ஓணம் பண்டிகை கொண்டாட்டமாக புலிக்களி (புலி நடனம்), படகுப் போட்டி உள்ளிட்ட பல்வேறு பொழுது போக்கு நிகழ்ச்சிகளும் கேரளாவில் இன்று நடத்தப்பட்டன. இதில் சிறுவர்-சிறுமிகள், முதல் பெரியவர்கள் வரை பலரும் பங்கேற்றனர்.
மேலும் வீடுகளில் ஊஞ்சல் கட்டி அனைவரும் ஆடி மகிழ்ந்தனர். ஓணம் பண்டிகையையொட்டி கேரளாவில் உள்ள சபரிமலை, குருவாயூர், திருவனந்தபுரம் பத்மநாப சாமி கோவில், ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் இன்று திருவோண சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
கேரளாவில் மட்டுமல்லாது குமரி மாவட்டத்திலும் இன்று ஓணம் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது. இங்கும் அத்தப்பூ கோலம், ஓண ஊஞ்சல், கயிறு இழுத்தல் என பல போட்டிகள் நடத்தப்பட்டன. ஓண பண்டிகைக்காக குமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டு உள்ளது. இது போல தமிழகம் முழுவதும் சென்னை உள்பட 9 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டு உள்ளது.
- மகாபலி சக்கரவர்த்திக்கு, மகாவிஷ்ணுவின் மீது பக்தி உண்டு
- கேரளாவில் ஓணத்தை ஒட்டி 64 வகையான உணவுகள் தயாரிக்கப்படுவது சிறப்பாகும்.
கேரள மக்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் திருவோணம் பண்டிகை முக்கியமானதாகும். இந்த பண்டிகையை மட்டும் மலையாள மொழி பேசும் மக்கள் மத, சாதி வேறுபாடு இன்றி உலகமெங்கும் கொண்டாடுகிறார்கள்.
மகாபலி சக்கரவர்த்தி
இந்த பண்டிகை உருவானதற்கு மகாபலி சக்கரவர்த்தியின் வரலாறும், புராண கதையும் தான் முக்கியமாக கூறப்படுகிறது. அதாவது மகாபலி சக்கரவர்த்தி மூவுலகையும் சிறப்பாக ஆட்சி புரிந்து, தன்னை நாடி வந்தவர்களுக்கு கேட்டதை எல்லாம் வாரி வழங்கி, பொற்கால ஆட்சி நடத்தினார்.
முப்பத்து முக்கோடி தேவர்களும் அதிசயப்படும்படியாகவும், பொறாமை கொள்ளும் வகையிலும் மகாபலி சக்கரவர்த்தியின் ஆட்சி இருந்தது. இதனால் பொறாமை அடைந்த தேவர்கள் தேவேந்திரனிடம் முறையிட்டனர். அவர் திருமாலிடம் கூறினார்.
வாமன அவதாரம்
இதனால் தேவர்களின் குறையை போக்கவும், மகாபலி சக்கரவர்த்தி புகழ் பல யுகங்களுக்கு நிலைத்திருக்குமாறு செய்யவும் திருமால் முடிவு செய்தார்.
அதைத்தொடர்ந்து திருமால், குள்ளமான வாமன அவதாரம் எடுத்து பூலோகம் வந்தார். அவர் மகாபலியிடம் 3 அடி நிலத்தை தானமாக கேட்டார். வாமனரை மகாபலி விழுந்து வணங்கி, 3 அடி நிலம் தானே தாராளமாக எடுத்து கொள்ளுங்கள் என்றார். உடனே குள்ள வாமனராக இருந்த திருமால் விஸ்வரூபம் எடுத்து உலகளந்த பெருமாளாக விண்ணுக்கும், மண்ணுக்குமாக ஓங்கி உயர்ந்து நின்றார். வானத்தை ஒரு அடியாகவும், பூமியை மற்றொரு அடியாகவும் அளந்தார் வாமனர். மூன்றாவதுஅடிக்கு இடம் எங்கே என்று கேட்ட போது, மகாபலி சக்கரவர்த்தி, இதோ எடுத்து கொள்ளுங்கள் என்று தலைகுனிந்து தனது தலையை காண்பித்தார். இதனால் வாமனர் தனது 3-வது அடியை மகாபலியின் தலைமீது வைத்து அழுத்தி பாதாள லோகத்துக்கு அனுப்பினார்.
திருவோணம்
அதற்கு முன்பாக மகாபலி சக்கரவர்த்தி, வாமனரிடம் ஒரு வரம் வேண்டினார். அதாவது என் நாட்டு மக்களை பிரிந்து செல்வது எனக்கு வருத்தமாக உள்ளது. எனவே ஆண்டு தோறும் ஒரு நாள் தான் ஆட்சி செய்த இந்த தேசத்தையும், மக்களையும் வந்து கண்டு மகிழ வரம் அருள வேண்டும் என்று வேண்டியதாகவும், அதன்படி வாமனரும், வரத்தை அருளியதாகவும் கூறப்படுகிறது. எனவே மகாபலி மன்னர் திருவோண நன்னாளில் தான் ஆண்ட நாட்டுக்கு வருவதாகவும், அவரை வரவேற்கும் விதமாகத்தான் இந்த ஓணப்பண்டிகை கொண்டாடப்படுவதாகவும், ஓணப்பண்டிகையின் வரலாறு கூறுகின்றது.
இந்த பண்டிகையை பணக்காரர் முதல் ஏழை வரை அனைவரும் ெ்காண்டாடுவது வழக்கம். அப்படி ஏழையாக உள்ள ஒருவரிடம் பணம் இ்ல்லை என்றாலும், தங்கள் வீடுகளில் உணவுக்காக சேர்த்து வைத்திருக்கும் கானப்பயறை விற்றாவது ஓணம் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் "கானம் விற்றேனும் ஓணம் கொண்டாடு" என்று மலையாள பழமொழியும் உள்ளது.
அத்தப்பூ கோலம்
கொல்லம் ஆண்டான மலையாள ஆண்டின் முதல்மாதமான சிங்கம் மாதத்தில் ஓணம் பண்டிகை ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள குமரி மாவட்டத்திலும் ஓணம் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு ஓணப்பண்டிகை கடந்த 30-ந்தேதி தொடங்கியது. ஓணம் பண்டிகை என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது அத்தப்பூ கோலம். இந்த விழாவின் சிறப்பம்சமே இதுதான்.
விருந்து
திருவோணத்தன்று ஓண சத்யா என அழைக்கப்படும் விருந்து நடைபெறும். இதில் அறுசுவைகளில் 64 வகைகளுடன் ஓண விருந்து தயாரிக்கப்பட்டு, நண்பர்கள் உறவினர்களுக்கு பரிமாறப்படும்.
ஓணம் பண்டிகையையொட்டி, சிறுவர் முதல் பெரியவர் வரை ஊஞ்சல் ஆடி மகிழ்வார்கள். மேலும் கேரளாவில் படகு போட்டி உள்பட பல்வேறு போட்டிகளும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
- அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு வருகிற 8-ந் தேதி உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- 17 ந் தேதி அரசு அலுவலகங்கள், அனைத்து கல்வி நிறுவனங்களும் வேலை நாளாக செயல்படும்.
திருப்பூர் :
ஓணம் பண்டிகையை முன்னிட்டு திருப்பூா் மாவட்டத்தில் வருகிற 8-ந்தேதி( வியாழக்கிழமை ) உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஓணம் பண்டிகையை முன்னிட்டு திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு வருகிற 8-ந்தேதி உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாக வரும் செப்டம்பா் 17 ந் தேதி அரசு அலுவலகங்கள், அனைத்து கல்வி நிறுவனங்களும் வேலை நாளாக செயல்படும். திருப்பூா் மாவட்ட கருவூலம் மற்றும் சாா்நிலை கருவூலங்கள், அரசு அவசர அலுவல்களை கவனிக்கும் வகையில் குறிப்பிட்ட பணியாளா்களுடன் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்