search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாதனை"

    • முயற்சியில் பல கட்ட இடர்பாடுகளை சந்தித்து சந்தித்து நிறைவாக அவர் எட்டியுள்ளதுதான் சாதனை.
    • 2 மணி நேரம் 'சார்ஜ்' செய்தால் 14 கிலோமீட்டர் தொலைவிற்கு பயணிக்க முடிகிறது.

    ஆறுமுகநேரி:

    தமிழக அரசின் விலையில்லா சைக்கிளை பெறக்கூடிய 10-ம் வகுப்பு மாணவர்தான் அவர். ஆனால் தனது திறமையினால் சாதாரண சைக்கிள் ஒன்றை அதிக விலை மதிப்புள்ள சைக்கிளாக மாற்றி அசத்தியது தான் இங்கு ஆச்சரியமானது.

    தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் குத்துக்கல் தெருவை சேர்ந்த காதர் ஷாமுனா என்பவரின் மகன் சுல்தான் அப்துல்காதர் (வயது16). இவர் காயல்பட்டினம் சென்ட்ரல் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் சிறு வயது முதலே பொம்மை கார்கள் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களையும், சிறு சிறு மின் கருவிகளையும் 'அக்கு வேறு ஆணி வேறாக' பிரித்துப் போட்டு ஆராய்ந்து மீண்டும் அதனை பொருத்தி வைத்து இயக்கி பார்ப்பதில் அலாதி ஆனந்தம் காண்பவராக இருந்துள்ளார்.

    இந்த வகையில்தான் சுல்தான் அப்துல்காதரின் கவனம் தனது சைக்கிள் மீதும் ஏற்பட்டுள்ளது. குறைந்த செலவில் அந்த சைக்கிளை பேட்டரியில் இயங்கும் மொபட் போல மாற்ற வேண்டும் என்ற ஆசை அவருக்கு தோன்றியுள்ளது. அவ்வப்போது தனது பெற்றோரிடம் இருந்து கிடைக்கும் பணத்தை சேமித்து தனது கனவு சைக்கிளுக்காக தேவைப்படும் பேட்டரி, மோட்டார் மற்றும் உதிரி பாகங்களை வாங்கி சேர்த்துள்ளார். பின்னர் அவற்றையெல்லாம் சைக்கிளில் பொருத்திப் பார்த்து அவ்வப்போது பரிசோதனையை நிகழ்த்தி வந்துள்ளார்.

    இந்த முயற்சியில் பல கட்ட இடர்பாடுகளை சந்தித்து சந்தித்து நிறைவாக அவர் எட்டியுள்ளதுதான் சாதனை. இப்போது இலகுவான சைக்கிள் பேட்டரி மொபட் காயல்பட்டினத்தில் பலராலும் பாராட்டப்படும் வாகனமாக மாறி உள்ளது. பட்டனை அழுத்தி 'ஸ்டார்ட்' செய்து திருகினால் 'ரெக்க கட்டி பறக்குதய்யா சுல்தானோட சைக்கிள்'. 2 மணி நேரம் 'சார்ஜ்' செய்தால் 14 கிலோமீட்டர் தொலைவிற்கு பயணிக்க முடிகிறது. மணிக்கு 40 கிலோமீட்டர் தூர வேகம்.

    தேவைப்பட்டால் சாதாரணமாக 'பெடல்' செய்தும் பயணிக்கலாம். கூடுதலாக பேட்டரி இணைப்புடன் கூடிய எல்.இ.டி. ஹெட்லைட் வசதியும், தானியங்கி லாக் சிஸ்டமும் உள்ளன. இவை தவிர இந்த வண்டி எங்கே செல்கிறது என்பதை காட்டுவதற்கான ஜி.பி.எஸ் கருவியும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த நவீன சைக்கிளை ஓட்டுவதற்கு லைசன்ஸ் தேவையில்லை. எவ்விதத்திலும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத இந்த சைக்கிளைப் பற்றிய பரபரப்பான பேச்சு காயல்பட்டினம் பகுதியில் உலவி வருகிறது.

    இது பற்றி சுல்தான் அப்துல்காதர் பயின்று வரும் பள்ளியின் தலைமை ஆசிரியரான அப்துல்காதர் கூறியதாவது:-

    எங்கள் மாணவன் சுல்தான் அப்துல்காதரின் இந்த சாதனையை கண்டு வியந்தோம். பள்ளியின் நிர்வாகிகளான வாவு மஸ்னவி, வாவு நெய்னா ஆகியோர் இந்த முயற்சிக்கு பாராட்டுதலை தெரிவித்ததோடு, இந்த 'சைக்கிள் மொபட்' வாகனத்தை இன்னும் மேம்படுத்த என்னென்ன உபகரணங்கள் தேவையோ அவற்றை எல்லாம் வாங்கித் தந்து உதவுவதாக கூறியுள்ளனர். மாணவனின் தேர்வு காலம் முடிந்த பிறகு கூடுதலான சைக்கிள் மொபட்டுகளை தயாரிக்கலாமா என்பது பற்றியும் யோசித்து வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ஆக ஒரு சாதாரண சைக்கிளை ரூ.10 ஆயிரம் செலவில் எளிய ரக மோட்டார் வாகனமாக மாற்றி காட்டி சாதனை புரிந்துள்ளார் பள்ளி மாணவரான சுல்தான் அப்துல்காதர். இவரை காயல்பட்டினம் நகராட்சி தலைவர் முத்து முகம்மது உள்ளிட்ட பிரமுகர்கள் பாராட்டியுள்ளனர். காயல்பட்டினத்தில் அரசின் இலவச சைக்கிள்களை பெற்றுள்ள மாணவர்களுக்கும் இதுபோன்று தங்கள் சைக்கிளையும் மதிப்பு கூட்டி மொபட் போல் மாற்றி அதில் பயணிக்கும் ஆசை பெருகி வருகிறது. தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு துறைகளின் அதிகாரிகள் இந்த மாணவனின் சாதனை முயற்சியை பாராட்டி ஊக்குவிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

    • தொடர்ந்து வரும் நாட்களிலும் பதிவுகள் அதிகரிக்கும் என்பதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
    • அதிக பட்சமாக ரூ.217 கோடி வருவாய் ஈட்டப்பட்டு சாதனை படைக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    பத்திரப் பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலா சாமி வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பொதுவாக ஆண்டு தோறும் தைப்பொங்கலுக்கு பிந்தைய நாட்களில் அதிக அளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறும். இதையடுத்து, வருகிற 31-ந் தேதி வரை பதிவுக்கான டோக்கன்களை கூடுதலாக வழங்கும்படி சார்பதிவாளர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அந்த வகையில், போதிய அளவில் தினசரி கூடுதல் டோக்கன்கள் வழங்கப்பட்டு, பதிவுகள் நடைபெற்று வருகின்றன.

    கடந்த 22-ந் தேதி, ஒரேநாளில் தமிழகம் முழுவதும் 21,004 பத்திரப் பதிவுகள் நடைபெற்று ரூ.168.83 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. தொடர்ந்து வரும் நாட்களிலும் பதிவுகள் அதிகரிக்கும் என்பதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    இந்நிலையில், நேற்று முன்தினம் (24-ந்தேதி) பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 26 ஆயிரம் பத்திரப்பதிவுகள் நடைபெற்றதுடன், அதிக பட்சமாக ரூ.217 கோடி வருவாய் ஈட்டப்பட்டு சாதனை படைக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • தென்மேற்கு பருவமழை காலத்தில் அதாவது ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் சீசன் களைகட்டும்.
    • உணவு பாதுகாப்பு அதிகாரி நாக சுப்பிரமணியன் குற்றாலம் அருவிக்கரை பகுதிகளில் திடீரென ஆய்வுகளை மேற்கொண்டார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்கிவரும் குற்றாலம் அருவிகளில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டினரும் வந்து ஆர்வமுடன் குளித்து மகிழ்வர்.

    இங்கு தென்மேற்கு பருவமழை காலத்தில் அதாவது ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் சீசன் களைகட்டும். இருப்பினும் தற்பொழுது அருவிகளில் கொட்டும் நீரில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களும் ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்து வந்தனர்.

    இந்நிலையில் குற்றாலம் பகுதிகளில் உணவு மற்றும் தின்பண்டங்கள் விற்பனை செய்யும் கடைகள் அதிகளவில் உள்ளன. அதில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வாங்கி உண்டு மகிழ்வர். சுற்றுலா பயணிகளுக்கு தரம் இல்லாத உணவு பொருட்களை சிலர் விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரி நாக சுப்பிரமணியன் குற்றாலம் அருவிக்கரை பகுதிகளில் திடீரென ஆய்வுகளை மேற்கொண்டார்.

    அப்போது கெட்டுப்போன வாழைப்பழ சிப்ஸ் 665 கிலோ மற்றும் பேரிச்சம்பழம் 152 கிலோ, செயற்கை கலர் சேர்க்கப்பட்ட அல்வா 420 கிலோ, தடைசெய்யப்பட்ட 35 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவை அங்குள்ள 2 கடைகளில் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் பினாயில் ஊற்றி அவை அழிக்கப்பட்டது. சமையலறை பகுதி சுகாதாரமற்ற நிலையில் இருந்ததால் அதற்கும் அபராதம் ரூ.18 ஆயிரம் விதிக்கப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. 

    • அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலை தத்ரூபமாக வரைந்துள்ளார்.
    • சந்திரயான்-3 போன்ற பல அரிய ஓவியங்களை ஏற்கனவே வரைந்துள்ளார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தை சேர்ந்தவர் வடதா ராகுல் பட்நாயக் (வயது 35) ஓவியக் கலைஞரான இவர் ஒரு மென்மையான மா இலையில் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலை தத்ரூபமாக வரைந்துள்ளார்.

    அதில் ஒரு பகுதியில் ராமர் மற்றும் சீதை மறுபுறம் அனுமான் உருவங்கள் உள்ளன.

    இது ஒரு புகைப்படம் போல தத்ரூபமாக காட்சியளிக்கிறது. 4 மணி நேரம் உன்னிப்பாக முயற்சி செய்து இந்த படத்தை வரைந்தார். இதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

    வரலாற்று சிறப்புமிக்க ராமர் கோவில் திறக்கப்படுவதால் தனது பக்தியை வெளிப்படுத்தும் நோக்கமாக இதனை வரைந்ததாக அவர் கூறியுள்ளார்.

    இவர் அரிசி மற்றும் பறவைகளின் இறகுகளில் ஓவியங்கள் வரைந்துள்ளார். சீனிவாசா திருக்கல்யாணம், ராமர் பட்டாபிஷேகம், சுதந்திர போராட்ட வீரர்கள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள், சந்திரயான்-3 போன்ற பல அரிய ஓவியங்களை ஏற்கனவே வரைந்துள்ளார்.

    • இந்திய மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
    • மெட்ரோ ரெயில்களில் ஒப்பிடும் போது இதுவே மிக நீளமான 'யு' கர்டர் ஸ்பான் ஆகும்.

    இந்திய மெட்ரோ ரெயில் கட்டுமானத்தில் முதன்முதலாக புதுமையான புல்லர் ஆக்சில் முறையைப் பயன்படுத்தி சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் சாதனை படைத்துள்ளது.

    நேரு நகர் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான உயர்மட்ட வழித்தடத்தில் மேம்பட்ட கிரேன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 20 மீட்டர் உயரத்திற்கு 30 மீட்டர் யு கர்டரைக் கொண்டு செல்வதற்கும், அமைப்பதற்கும் மேம்பட்ட புல்லர் ஆக்சில் அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளார்.

    இதுகுறித்து இந்திய மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

    அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 3-ல் நேரு நகர் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான உயர்மட்ட வழித்தடத்தில் இந்திய மெட்ரோ திட்டங்களில், முதன்முறையாக மேம்பட்ட கிரேன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 20 மீ உயரத்திற்கு 30 மீ யு கர்டரைக் கொண்டு செல்வதற்கும், அமைப்பதற்கும் மேம்பட்ட புல்லர் ஆக்சில் அமைப்பை அறிமுகப்படுத்தி, சென்னை மெட்ரோ ரெயில் மைல்கல்லில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையை எட்டியுள்ளது. இத்திட்டத்திற்கான ஒப்பந்தம் லார்சன் & டூப்ரோ நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. மற்ற மெட்ரோ ரெயில்களில் ஒப்பிடும் போது இதுவே மிக நீளமான 'யு' கர்டர் ஸ்பான் ஆகும்.

    பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த கனரக வாகனம் 12 அச்சுகளில் தலா 8 டயர்களுடன் மொத்தம் 96 டயர்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மெட்ரோ இரயில் கட்டுமானத்தில் U Girder பணிக்கு தேவையான தடையற்ற போக்குவரத்து, எடை விநியோகம் நிலைத்தன்மை மற்றும் நெகிழ்வுத்தன்மை போன்ற பணிகள் உறுதி செய்யப்படும்.

    சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மற்றும் லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் திட்ட குழுவினர் இணைந்து இந்த புல்லர் ஆக்சில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 30மீ நீளமுள்ள 185 மெட்ரிக் டன் எடை கொண்ட U-கர்டரைக் வெற்றிகரமாக நிறுவியுள்ளது.

    சென்னை மெட்ரோ இரயில் திட்டக் குழு இதுபோன்ற புதுமையான தீர்வுகளை கட்டுமான பணிகளில் பயன்படுத்துவதால், இந்திய மெட்ரோ துறையின் வரலாற்று மைல்கல் சாதனையை அடையாளப்படுத்துவது மட்டுமல்லாமல், சிக்கலான மற்றும் லட்சியத் திட்டங்களைத் துல்லியமாகவும் நிபுணத்துவத்துடனும் செயல்படுத்த பெரிதும் உதவுகிறது.

    ஒக்கியம்பேட்டை மற்றும் காரப்பாக்கம் இடையே முதல் நீளமான 'யு' கர்டர் ஸ்பான் இன்று (10.01.2024) அமைக்கப்பட்டது. சென்னை மெட்ரோ ரெயில்

    நிறுவனத்தின் திட்ட இயக்குநர் திரு. தி.அர்ச்சுனன், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், பொது ஆலோசகர்கள் மற்றும் லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இந்த நிகழ்வின் போது உடன் இருந்தனர்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    • 1978 -ம் ஆண்டு ‘இனிக்கும் இளமை’ என்ற படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.
    • வைதேகி காத்திருந்தாள் படம் விஜயகாந்த் திரை வாழ்வில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

    மனதில் என்ன தோன்றுகிறதோ?

    யாராக இருந்தாலும் வெளிப்படையாகவும் தைரியமாகவும் துணிந்து சொல்லக்கூடியவர் விஜயகாந்த். இதனால் அவர் இழந்தது அதிகம்.

    அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நியாயத்தின் பக்கம் இருந்து கொண்டு ஓங்கி குரல் கொடுத்து வந்தார் விஜயகாந்த்.

    அவரது சுபாவத்தை தான் நடிக்கும் படங்களிலும் வெளிப்படுத்தினார்.

    நாராயணன் விஜயராஜாக மதுரை திருமங்கலத்தில் பிறந்து சினிமா மீது கொண்டிருந்த ஆர்வத்தால் பத்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு தந்தையுடன் சேர்ந்து அவரது ரைஸ் மில் நிர்வாகத்தை கவனிக்க தொடங்கினார்.

    இதைத்தொடர்ந்து 1978 -ம் ஆண்டு 'இனிக்கும் இளமை' என்ற படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் அறிமுகமானார். அப்போது படத்தின் இயக்குனர் காஜா அவருக்கு விஜய காந்த் என்ற பெயரை சூட்டினார். 1979-ம் ஆண்டு அகல் விளக்கு என்ற படத்தில் நடித்தார்.

    அடுத்ததாக 1980-ம் ஆண்டு இவர் நடித்த தூரத்து இடி முழக்கம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. 1981-ம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்குனராக அறிமுகமாகி அவர் இயக்கிய முதல் படமான சட்டம் ஒரு இருட்டறை விஜய காந்த்துக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தது.

    இந்தப் படம் இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

    விஜயகாந்த் நடித்த கதாபாத்திரத்தில் இந்தி பதிப்பில் ரஜினியும், தெலுங்கு பதிப்பில் சிரஞ்சீவியும் நடித்திருந்தனர். அங்கும் படம் வெளியாகி வெற்றியை பெற்றது. எஸ்.ஏ.சந்திர சேகருடன் 17 படங்களில் விஜயகாந்த் நடித்திருக்கிறார்.

    அடுத்ததாக அவர் நடித்து வெளிவந்த வைதேகி காத்திருந்தாள் படம் விஜயகாந்த் திரை வாழ்வில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

    அம்மன் கோவில் கிழக்காலே, நினைவே ஒரு சங்கீதம், என் புருஷன் எனக்கு மட்டும்தான் போன்ற குடும்ப பாங்கான படங்களின் மூலம் பெண்களிடையே அதிக கவனத்தை ஈர்த்தார்.

    தொடர்ந்து பல படங்களில் நடித்து ரஜினி, கமல் ஆகியோருக்கு இடையே தனக்கென ஒரு தனி இடத்தை சினிமா துறையில் உருவாக்கினார்.

    விஜயகாந்த் படம் என்றாலே அதிரடி சண்டை படம் தான் என்று திரையரங்கிற்கு வரும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அப்படியே திருப்தி செய்தார்.

    சண்டை காட்சிகளில் சுவரில் காலை ஊன்றி கொண்டு சுற்றி சுற்றி எதிரிகளை பந்தாடும் காட்சிகளில் தனக்கென்று ஒரு தனி முத்திரையை பதித்தார்.

    அந்தக் காட்சிகள் விஜயகாந்தின் அடையாளச் சின்னமாகவே இதுவரை இருந்து வருகிறது. பல படங்களில் சண்டை காட்சிகளில் டூப் நடிகர்களை பயன்படுத்தாமல் அவரே துணிச்சலாக நடித்தார்.

    1984-ல் பதினெட்டு படங்களும், 1985-ல் பதினேழு படங்களும் நடித்து சாதனை செய்தார்.

    புரட்சிகரமான பல படங்களில் நடித்ததால் ரசிகர்களால் புரட்சி கலைஞர் என்ற பட்டம் விஜயகாந்துக்கு சூட்டப்பட்டது.

    தமிழ் மீது கொண்ட ஆர்வம் காரணமாக மற்ற மொழி படங்களில் நடிப்பதை திட்டவட்டமாக மறுத்து வந்தார். பல புதுமுக இயக்குனர்களை உருவாக்கிய பெருமை விஜயகாந்தை சேரும். அரவிந்தராஜ் இயக்கிய ஊமை விழிகள், ஆர்.கே.செல்வமணியின் புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன் என அவரால் அறி முகப்படுத்தப்பட்ட இயக்குனர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

    அவரது நடிப்பில் வெளிவந்த கேப்டன் பிரபாகரன் படம் நூறு நாட்கள் தாண்டி சாதனை படைத்தது. இதையொட்டி விஜயகாந்த் கேப்டன் என்று அனைத்து தரப்பினராலும் அழைக்கப்பட்டார்.

    ஊமை விழிகள், செந்தூரப்பூவே, புலன் விசாரணை போன்ற படங்களில் தன் வயதுக்கு அதிகமான கதாபாத்திரங்களில் தயங்காமல் நடித்துள்ளார்.

    விஜயகாந்த் 36 ஆண்டுகள் சினிமா உலகில் சகாப்தம் படைத்துள்ளார். இந்த 36 ஆண்டுகளில் அவர் 156 படங்களில் நடித்துள்ளார். 2015-ம் ஆண்டு அவரது மகன் சண்முகபாண்டியன் நடிப்பில் வெளிவந்த சகாப்தம் படமே அவரது கடைசி படம். அதில் விஜயகாந்த் கவுரவ தோற்றத்தில் நடித்து இருந்தார்.

    1979-ம் ஆண்டு முதல் சிறிய கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கிய விஜயகாந்த் அதன்பிறகு கதாநாயகன் ஆகி சினிமாவில் உச்சம் தொட்டார். சினிமா உலகம் உள்ள வரை விஜயகாந்தின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்.

    • உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன் வந்தனர்.
    • முதியவரின் இதயம் ஸ்ரீகாகுளம் ஜேம்ஸ் மருத்துவமனையில் எடுக்கப்பட்டது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் வனஸ்தலிபுரத்தை சேர்ந்த 11 வயது சிறுமி இதய நோயால் பாதிக்கப்பட்டார். அவருக்கு மாற்று இதயம் பொருத்தினால் மட்டுமே உயிர் வாழ முடியும் என்ற நிலை ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து திருப்பதி பத்மாவதி குழந்தைகள் இதய மையத்தில் இதயம் தானம் கேட்டு பதிவு செய்தனர். இந்த நிலையில் ஸ்ரீகா குளத்தை சேர்ந்த 50 வயது முதியவர் ஒருவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. அவரது உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன் வந்தனர்.

    இதனையடுத்து முதியவரின் இதயத்தை சிறுமிக்கு பொருத்த ஏற்பாடு செய்தனர். இதற்காக முதியவரின் இதயம் ஸ்ரீகாகுளம் ஜேம்ஸ் மருத்துவமனையில் எடுக்கப்பட்டது.

    அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் விசாகப்பட்டினத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் சிறப்பு விமான மூலம் திருப்பதி பத்மாவதி குழந்தைகள் இதய மைய ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு இதயமாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. இதன் மூலம் 11 வயது சிறுமி உயிர் பிழைத்தார்.

    இது இந்த ஆஸ்பத்திரியில் 10-வது வெற்றிகரமான இதய மாற்று அறுவை சிகிச்சை என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

    • எவரெஸ்ட், தெனாலி (வட அமெரிக்கா), கிளிமாஞ்சாரோ (ஆப்பிரிக்கா), எல்ப்ரஸ் (ஐரோப்பா) ஆகிய சிகரங்களில் ஏறி கொடி நாட்டி உள்ளார்.
    • முற்றிலும் பனி சூழ்ந்திருக்கும் அண்டார்டிகாவில் உள்ள மிக உயரமான சிகரமான வின்சனில் ஏற முடிவு செய்தார்.

    கேரளாவை சேர்ந்த ஷேக் ஹசன்கான் மாநில அரசில் பணியாற்றி வருகிறார். இவர் தனது ஓய்வு நாட்களில் உலகின் மிக உயர்ந்த மலை சிகரங்களில் ஏறி சாதனை படைப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

    அந்தவகையில் எவரெஸ்ட், தெனாலி (வட அமெரிக்கா), கிளிமாஞ்சாரோ (ஆப்பிரிக்கா), எல்ப்ரஸ் (ஐரோப்பா) ஆகிய சிகரங்களில் ஏறி கொடி நாட்டி உள்ளார்.

    இதன் தொடர்ச்சியாக முற்றிலும் பனி சூழ்ந்திருக்கும் அண்டார்டிகாவில் உள்ள மிக உயரமான சிகரமான வின்சனில் ஏற முடிவு செய்தார். இதற்காக அங்கு சென்ற ஷேக் ஹசன்கான், கடும் சவால்களை கடந்து வின்சன் சிகரத்தில் ஏறி இந்திய கொடியை பறக்க விட்டுள்ளார்.

    உறைய வைக்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் வின்சன் சிகரத்தில் இந்திய கொடியை பறக்கவிட்டு நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ள ஷேக் ஹசன்கானுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

    • தாய்-சேய் நட்பு மருத்துவமனை முயற்சியை செயல்படுத்திய முதல் மாநிலம் கேரளா.
    • வருகிற 31-ந்தேதிக்குள் இந்த பெயர் மாற்றத்தினை முடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் முதல்- மந்திரி மற்றும் மந்திரிகள் இணைந்து சென்று மக்களை சந்திக்கும் நவ கேரள சதஸ் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி மலப்புரம் மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் முதல்-மந்திரி பினராய் விஜயன் பங்கேற்று மக்களிடம் குறைகளை கேட்டார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-

    தாய்-சேய் நட்பு மருத்துவமனை முயற்சியை செயல்படுத்திய முதல் மாநிலம் கேரளா. மற்ற மாநிலங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை காட்டிலும் கூடுதல் சேவைகளை வழங்கி நாட்டிற்கு முன்னோடியாக நமது மாநிலம் திகழ்கிறது.

    சுகாதாரத்துறை முழுவதும் மாநில கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், சமீபத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர் என பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. வருகிற 31-ந்தேதிக்குள் இந்த பெயர் மாற்றத்தினை முடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. பெயர் மாற்றத்தின் மூலம், சுகாதாரத்துறையில் மாநிலத்தின் சாதனைகளுக்கான பெருமையை மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு திருட முயற்சிக்கிறது. இது ஆரோக்கியமான செயல் அல்ல.

    மேலும் கேரளா, கோ-பிராண்டிங்கை மேற்கொள்ளவில்லை என்று கூறி, பல்வேறு மானியங்கள், ஒதுக்கீடுகள் மற்றும் திட்டங்களில் மத்திய பங்கை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மாவட்ட விளையாட்டு போட்டியில் ரிதம் சிறப்பு பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
    • ஆசிரியை கிறிஸ்டி வரவேற்றார்.

    Virudhunagar News Rhythm Special School students achievement

    ராஜபாைளயம்

    உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள், விருதுநகர் மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் நடைபெற்றது. போட்டியில் சுமார் 200க்கும் மேற்பட்ட அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். போட்டியினை விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.

    இந்த போட்டியில் ராஜபாளையம் ரிதம் சிறப்பு பள்ளியை சேர்ந்த 5 மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றனர். மாணவி கனிமொழி 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடமும், நீளம் தாண்டுதலில் கவுரி முதலிடமும், மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட வர்களுக்கான கிரிக்கெட் பந்து எரிதலில் சுஹேல் முதலிடமும், மற்றும் தடை தாண்டி ஓடுதல் பெண்கள் பிரிவில் அமலா முதலிடமும், ஆண்கள் பிரிவில் நந்தகுமார் முதலிடம் வெற்றி பெற்றனர். மேலும் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஜீவிதா மூன்றாம் இடமும், ஓடி நீளம் தாண்டுதலில் ஆண்கள் பிரிவில். தீபக் மூன்றாம் இடமும், தடைகளை தாண்டி ஓடுதல் ஆண்கள் பிரிவில் சிவகுருநாதன் மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர்.

    போட்டியில் வென்ற மாணவர்களை ரிதம் சேரிடபிள் டிரஸ்ட் மேனேஜிங்டிரஸ்டி கதிரேசன், செகரட்டரி,பால்ராஜ் மற்றும் டிரஸ்டிகள் கோடியப்பன், ,கவுதமன், இளங்குமரன் ஆகியோர் பாராட்டினார்கள். முதல்வர் வெங்கட்டரமணன் வாழ்த்துரை வழங்கினார். ஆசிரியர் அருண் வெங்கடேஷ் நன்றி கூறினார்..முன்னதாக ஆசிரியை கிறிஸ்டி அனைவரையும் வரவேற்றார்..

    • 9 ஆண்டு கால முயற்சியில் தற்பொழுது வெற்றியும் கண்டுள்ளார்.
    • தற்பொழுது கொடைக்கானலில் விளையக்கூடிய குங்குமப்பூ காஷ்மீரை காட்டிலும் தரம் உயர்ந்ததாக உள்ளது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசி எனப்படும் கொடைக்கானல் மலைக்காய்கறிகள் விளைச்சலுக்கு அதிக பெயர் பெற்றது. இங்கு முக்கிய காய்கறிகளான உருளைக்கிழங்கு, பீட்ரூட், காலிபிளவர், பீன்ஸ், காரட், புரோக்கோலி போன்ற பல்வேறு வகையான காய்கள் பயிரிடப்பட்டு வருகிறது. உலக அளவில் கர்ப்பிணி பெண்கள் தங்கள் குழந்தைகள் சிவப்பாக பிறக்க குங்குமப்பூவை பாலில் கலந்து குடிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

    இந்த குங்குமப்பூ உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள நாடுகள் ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான். அடுத்து இந்தியாவில் நமது காஷ்மீர் மாநிலம் ஆகும். ஆனால் இங்கு உற்பத்தி செய்யப்படும் குங்குமப்பூ குறைந்த அளவில் உள்ளதால் ஆண்டுக்கு பல ஆயிரம் கிலோ வெளிநாட்டில் இருந்து வாங்கும் நிலை உள்ளது. தற்பொழுது இந்தியாவில் காஷ்மீருக்கு அடுத்தபடியாக மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொடைக்கானல் மேல் மலை கிராமமான கவுஞ்சி மற்றும் பூண்டி மலை கிராமங்களில் மூர்த்தி என்ற விவசாயி கடந்த 2014ம் ஆண்டு முதல் தொடர்ந்து முயற்சி செய்து காஷ்மீரிலிருந்து குங்குமப்பூ விதை கிழங்கு வாங்கி பசுமை குடில் அமைத்து விவசாயம் செய்தார். 9 ஆண்டு கால முயற்சியில் தற்பொழுது வெற்றியும் கண்டுள்ளார். தனது ஒரு ஏக்கர் நிலத்தில் குங்குமப்பூ பயிரிட்டு சாகுபடி செய்தார்.

    இது குறித்து அவர் கூறும்போது, இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் இதற்கான பயிற்சி மற்றும் அறிவுரைகளின்படி தனது முயற்சியை தொடர்ந்ததாக தெரிவித்தார். மேலும் காஷ்மீருக்கு அடுத்தபடியாக குங்குமப்பூ பயிரிட கொடைக்கானலில் சீதோஷ்ண நிலை மற்றும் குளிர் முக்கிய காரணமாக உள்ளது. ஒரு ஏக்கர் நிலத்தில் சுமார் ரூ.4 லட்சம் வரை வருவாய் ஈட்ட முடியும். ஒரு ஏக்கர் நிலத்தில் காய்கறிகள் பயிரிட்டால் சில ஆயிரங்கள் மட்டுமே கிடைக்கும். ஆனால் குங்குமப்பூ சாகுபடிக்கு 55 நாட்கள் முதல் 60 நாட்கள் போதுமானது. 15 கிலோ குங்குமப்பூ விதை கிழங்கு வாங்கி தற்பொழுது அதனை 40 கிலோவாக உருவாக்கி உள்ளேன். தற்பொழுது கொடைக்கானலில் விளையக்கூடிய குங்குமப்பூ காஷ்மீரை காட்டிலும் தரம் உயர்ந்ததாக உள்ளது. மேலும் கொடைக்கானலில் விளையும் குங்குமப்பூவுக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கிறது. இந்த புது முயற்சியை மற்ற விவசாயிகளும் மேற்கொள்ள வேண்டும் என்றார். 

    • முதல் நாளான நேற்று நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஏ.வி.பி. கல்வி குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.
    • சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர் பிரமோதினி மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் ஏ.வி.பி. கல்வி குழுமத்தில் படிக்கும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் பயனடையும் நோக்கில் உங்கள் கனவுகளை தேடி கண்டடையுங்கள் என்ற தலைப்பில் சிறப்பு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி காந்திநகர் ஏ.வி.பி. டிரஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் பள்ளி கலையரங்கில் 2 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாளான நேற்று நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஏ.வி.பி. கல்வி குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.

    பள்ளி அறக்கட்டளை பொருளாளர் லதா கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் டயானா வரவேற்றார். இதில் சென்னை ஐ.ஐ.டி.யை சேர்ந்த பகவதி, கோவை எஸ்.என்.எஸ். கலை அறிவியல் கல்லூரியை சேர்ந்த ஞானசேகரன் மற்றும் கோவையை சேர்ந்த அஸ்வின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினார்கள். நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்ட இஸ்ரோ விஞ்ஞானி பி.ஹெச்.எம்.தாருகேஷா நிருபர்களிடம் கூறியதாவது:-

    சந்திரயான்-3 வெற்றிக்குப் பின்னர் ஒட்டுமொத்த உலகத்தின் பார்வையும் இந்தியாவின் பக்கம் திரும்பி உள்ளது. அறிவியல் மற்றும் அதன் மூலம் மாணவர்களுக்கு ஏற்படும் நன்மையை பற்றியும், இந்த உலகத்திற்கு விஞ்ஞானிகளின் அவசியத்தை பற்றியும், இந்தியர்கள் ஏன் விஞ்ஞானி ஆக வேண்டும் என்பதை பற்றி பேச விரும்புகிறோம். ஆர்வமும் சவால்களும் நிறைந்த பல படிப்புகள் உள்ளன. அதில் ஒன்று தான் விண்வெளி ஆராய்ச்சி பொறியாளர் அல்லது விஞ்ஞானிக்கான படிப்பு.

    இந்தியாவின் லட்சிய சந்திர பயணமான சந்திரயான்-3 கடந்த ஆகஸ்டு மாதம் 23-ந்தேதி நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இது நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கான ஒரு மகத்தான சாதனையாகும். இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணமான ககன்யான் திட்டம். இந்திய விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் முதல் உள்நாட்டுப் பணி என்பதால் ககன்யான் முக்கியத்துவம் வாய்ந்தது. இது வெற்றி பெற்றால், விண்வெளிக்கு மனிதனை அனுப்பிய நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும்.

    ககன்யானின் வெற்றி விண்வெளி பயணங்களில் இன்னும் பல சோதனைகளுக்கு வழிவகுக்கும். இது தனது சொந்த விண்வெளி நிலையத்தை அமைக்கும் இந்தியாவின் கனவுக்கும் ஒரு பூரணம் கொடுக்கும். இந்திய விண்கலத்தின் மூலம் பூமியின் தாழ் வட்டப்பாதைக்கு மனிதர்களை அனுப்பி, அவர்களை பாதுகாப்பாக மீண்டும் பூமிக்கு அழைத்து வருவது தான் இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். இந்த விண்கலத்தில் 3 பேர் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்கான சோதனை ஓட்டங்கள் நடைபெற்று வருகின்றன.ககன்யான் என்பது முழுமையான தன்னாட்சி கொண்ட 3.7 டன் எடையுள்ள விண்கலம் ஆகும். இதில் மூன்று பேர் சுற்றுப்பாதைக்கு சென்று புவிக்கு திரும்பக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதில் திருமுருகன்பூண்டி ஏ.வி.பி. பள்ளி முதல்வர் பிரியா ராஜா, காந்திநகர் ஏ.வி.பி. சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர் பிரமோதினி மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    ×